Friday, April 11, 2008

அருவி

சப்தமே இல்லாமல்
இரகசியமாய்ப் பின்னால் வந்து
திடீரென்று கத்துகிற சிறுபிள்ளை போல்
சந்தடியில்லாமல் குறுகிச் சென்று விட்டு
சட்டென்று பெரும் இரைச்சலுடன் இறங்கி
ஆர்ப்பாட்டமாய் விரிகிறது அருவி...

மதங்கொண்ட இளங் களிற்றின்
கம்பீரப் பிளிறலுடன்-
கட்டுக் கடங்காமல் திமிறும் கன்றுக்குட்டியின்
உற்சாகத் துள்ளலுடன்-
சிவபெருமானின் சிரசினின்றும் பாய்ந்த
கங்கா தேவியின் கருவத்துடன்-
உலகத்தை யெல்லாம் ஒரே வீச்சில்
திருத்த முனைகின்ற
இள ரத்தத்தின் வேகத்துடன்-
பல நாட்கள் பிரிந்திருந்த பிள்ளையை
வாரி அணைக்க ஓடிவரும்
அன்னையின் ஆவலுடன்-

தடதட வென்று வந்து
தலை குப்புற விழுந்தாலும்
இளைப்பாறத் தாமதிக்காமல்
வெண்பற்கள் எல்லாம் விலாவரியாய்த் தெரிய
அட்டகாசமாய்ச் சிரித்தபடி...


--கவிநயா

4 comments:

  1. அருவி அருமையாக கொட்டியிருக்கிறது!

    ReplyDelete
  2. சமீபத்தில் எந்த அருவியைப் பார்த்தீர்கள்? சமீபத்தில் பார்க்காமலேயே இப்படி அழகாக எழுதினீர்கள் என்றால் உங்கள் கற்பனை இன்னும் அழகு.

    ReplyDelete
  3. அருமையான கவிதை. முடித்த விதமும் நன்றாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. நன்றி, ஜீவா, சதங்கா!

    இது என் கற்பனை அருவிதான், நாகு! :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)