வணக்கம். நல்லாருக்கீங்களா? ரொம்ப நாள் ஓய்வு குடுத்தாச்சில்ல! அதான் நீங்க என்னை மறந்து போறதுக்குள்ளே கொஞ்சமா தலையை காண்பிச்சுட்டு போலாம்னு... :)
தென்கச்சின்னா என்ன நினைவு வரும் உங்களுக்கு? கரெக்ட்! சமீபத்தில் அவருடைய 'தென்கச்சி பதில்கள்' அப்படிங்கிற புத்தகத்தை படிக்கிற வாய்ப்பு கிட்டியது. அதிலிருந்து சில கேள்வி பதில்கள் இங்கே...
'பல் போனால் சொல் போச்சு' என்கிறார்களே ஏன்?
பல் போகாமல் இருக்கும்போது கூடச் சொல் போய் விடுகிறதே... அது தெரியுமா உங்களுக்கு! வெற்றிலை பாக்குப் போடுக்கிறவர்களைத்தான் சொல்லுகிறேன். தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிட்டு 'ஸ்டாம்பு' வாங்கி வரச் சொல்லிப் பாருங்கள்... அவர் 'ஷாம்பு' தான் வாங்கி வருவார்!
அறிவாளி எப்போது முட்டாள் ஆகிறான்? முட்டாள் எப்போது அறிவாளி ஆகிறான்?
அறிவாளி தன்னை அறிவாளி என்று நினைக்கிற போதெல்லாம் முட்டாள் ஆகிறான்! முட்டாள் தன்னை முட்டாள் என்று உணர்கிற போதெல்லாம் அறிவாளி ஆகிறான்!
மதுவும் - மாதுவும் ஒன்றுதானே?
ஏதோ ஒன்றில் மயங்கியிருக்கிறீர்கள்... அதனால்தான் உங்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிகிறது. எனக்கு அப்படி இல்லை... எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது!
தென்கச்சி எந்த மாவட்டத்தில் இருக்கிறது? அந்த ஊரின் சிறப்பு அம்சம் என்ன?
உங்கள் ஊர் (கேள்வி கேட்டவர் ஸ்ரீரங்கம்) எந்த மாவட்டத்தில் இருக்கிறதோ அதே மாவட்டத்தில்தான் இருக்கிறது. அப்படியிருந்தும் கூட அது இன்னும் உங்களுக்கு எட்டாமல் இருக்கிறதே அதுதான் அதன் சிறப்பு அம்சம்!
விதி என்பது என்ன? விளக்கம் தருக.
ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, "தாயே" என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்! என்ன காரணம்?
இவன் 'தாயே' என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் 'நாயே' என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!
மறுக்க முடியாதது எது? மறைக்க முடியாதது எது? மறக்க முடியாதது எது?
தயாராக இருங்கள்... உங்களை கொஞ்சம் குழப்பப் போகிறேன்...
மறக்க முடியாததை மறுக்க முடியாது! மறுக்க முடியாததை மறைக்க முடியாது! மறைக்க முடியாததை மறக்க முடியாது!
ஒரு மனிதனை அடையாளப் படுத்துவது எது?
உண்ணவும் உறங்கவும் பிறந்தவை விலங்குகள்; எண்ணவும் இரங்கவும் பிறந்தவன் மனிதன் என்பது வாரியார் வாக்கு. இதை அளவுகோலாக வைத்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!
***
இப்போதைக்கு அம்புட்டுதான்! பிடிச்சிருந்தா சொல்லுங்க, இன்னும் கொஞ்சம் தட்டச்சி தாரேன்!
இந்த கேள்விகளுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருப்பீங்க என்பதையும் தெரிஞ்சுக்க ஆவல்!
அன்புடன்
கவிநயா
Sunday, November 8, 2009
நலந்தானே?
Thursday, October 15, 2009
தீபாவளி சிறப்புப் பதிவு - 2009
மத்தாப்பூ போலே மனங்கள் சிரிக்கட்டும்!
புத்தாடை அழகாய் பொலிந்து துலங்கட்டும்!
பட்சணங்கள் போலே வாழ்க்கை சுவைக்கட்டும்!
இக்கணமே எங்கும் இன்பம் நிறையட்டும்!
இந்த பதிவில் என்ன சிறப்புன்னு கேட்கறீங்களா? ஹும்... நான் சதங்காவுடைய தொடர் பதிவு வலையில் மாட்டிக்கிட்டதுதான் சிறப்பு! நான் கூட அவரை ஒரு முறை ஏதோ ஒரு தொடருக்கு அழைச்சதா நினைவு. அவர் அதுக்கு பதிவிட்டாரா இல்லையான்னே எனக்கு நினைவில்லை! உங்களுக்கு நினைவிருக்கா? :)
இது சிறப்பு பதிவு மட்டுமில்லாம ஒரு அவசரப் பதிவும் கூடத்தான். என்ன அவசரம்னு கடைசில சொல்றேன்!
இப்ப, கேள்விகள்:
1. உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
அச்சோ! 'கேள்விக்கென்ன பதில்?' படிச்சா என்னை பற்றிய பெரீய்ய குறிப்பே கிடைக்கும்ங்க! :)
2. தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?
ஹ்ம்.. அப்படில்லாம் ஒண்ணும் நினைவுக்கு வரலை! ஸாரி...
3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
ரிச்மண்டை விட்டா நமக்கு போக்கிடம் இல்லீங்க :)
4. தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
ரெண்டு மூணு வருடங்களுக்கு முன்பு வரை நண்பர் குடும்பங்களுடன் சேர்ந்து பட்டாசு, பலகாரங்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்ப எல்லாரும் ரொம்பவே பிசி ஆயாச்சு. தொலைபேசில தீபாவளி வாழ்த்து சொல்றதோட சரி. வீட்டில் பூஜை, சாப்பாட்டில் தினமும் சமைக்கிறதை விட கூட ரெண்டு சிறப்பு ஐட்டம் இருக்கும்.
5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
போன முறை ஊர்ல இருந்து வாங்கி கொண்டு வந்த புடவையெல்லாமே இன்னும் ரிலீஸ் பண்ணாம இருக்கு!
6. உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?
எல்லாமே நாளைக்குதான்! என்னன்னு இனிமேதான் யோசிக்கணும் :)
7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி.
8. தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?
அது அந்தந்த நாளை பொறுத்தது. போன வருஷம் அலுவலகம் போயாச்சு. இந்த முறை சனிக்கிழமை பூரா நடன வகுப்புகள் இருக்கு.
9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
நிறுவனங்களுக்குன்னு இல்லை; உறவினர்கள் மூலம் யாருக்காவது உதவி வேணும்னு தெரிஞ்சா செய்யறதுதான்.
10. நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ?
யாருமே மாட்ட மாட்டேங்கிறாங்களே. கூப்பிடறவங்கள்ல பாதி பேர் பதிவிடறதும் இல்லை. இப்போதைக்கு
ஆர்.கோபிக்கும், தோழி ஜெஸ்வந்திக்கும் வலை விரிக்கிறேன்! :)
இப்போ இந்த தொடருக்கான விதிமுறைகள்:
1. கேள்விகளுக்கு உங்கள் வலைத்தளத்தில் புதிய பதிவில் பதிலளியுங்கள்.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.
அன்புடன்
கவிநயா
பி.கு: அவசரத்தின் காரணம் - அடுத்த வாரம் தொடங்கி ஒரு சில நாட்கள் வலையுலகம் பக்கம் வருவது சிரமம். அதனால குறைஞ்சது ரெண்டு வாரங்களுக்கு பதிவுகள் இருக்காது. (பொழச்சு போங்க! :) கோபி(நாத்), உங்க அழைப்பு நினைவிருக்கு. திரும்பி வந்த பிறகு எழுதறேன்! இது தீபாவளி தொடர் என்பதால் அவசரமா இட்டாச்!
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/srivera/2799747313/sizes/m/
Wednesday, October 14, 2009
தேடியதும், கிடைத்ததும்...
யாருக்குதான் தேடல் இல்லை? எல்லாரும் எப்போதும் எதையோ ஒண்ணை தேடத்தான் செய்யறோம். இன்றைக்கு தற்செயலாக இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. சுப்பு தாத்தாவிற்குதான் நன்றி சொல்லணும். அவர் அம்மன் பாட்டில் நான் இட்ட பாடலை பாடி அனுப்பியிருந்தார், வழக்கம் போல். அதை கேட்கப்போன போதுதான் இந்த படத்தை பார்த்தேன்.
முந்தி இதே செய்தியை படிச்சிருக்கேன்னாலும், அன்னையின் குரலில் கேட்கும்போது உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருகியது உண்மை. ஒரு 'light bulb' பளீர்ன்னு ஒளி விட்டதும் உண்மை.
"All suffering is the sign that the surrender is not total"
எவ்வளவு எளிமையா சொல்லிட்டாங்க!
குடைந்து கொண்டிருந்த ஏதோ ஒன்றுக்கு விடை போல பரிசாக கிடைத்த இந்த செய்தியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில்...
அன்புடன்
கவிநயா
Sunday, October 11, 2009
பரீட்சை

விடிய விடிய விழித்தாலும்
விழி சிவக்கப் படித்தாலும்
பரீட்சை என்றாலே எனக்கு
பதட்டம் வந்து விடும்
பென்சில் களைச் சீவுவதும்
பேனாக் களை நிரப்புவதும்
ரப்பர் களைத் தேடுவதும்
ரிவிஷன் கள் செய்வதுமாய்
காலை எழுந்த நேரம் முதல்
கால் பாவாமல் பரபரத்தேன்
அதிகாலை அவதியிலும்
அடி வயிறு கலங்கையிலும்
கற்ற தெல்லாம் கருத்தில் நிற்க
படித்தது மட்டும் பரீட்சையில் வர
கண்கள் மூடி ஒரு நிமிடம்
கடவுளிடம் பேரம் செய்தேன்
ஷூவுக்குள் கால் திணித்து
புத்தகப் பை தூக்கி
சாப்பாடு சகிதமாக
ஸ்கூல் பஸ்ஸில் ஏறுகையில்...
"படித்த தெல்லாம் மறக்காதே
பார்த்து கவனமாய் எழுது
பெஸ்ட் ஆஃப் லக்"
என்று பரீட்சை எழுதும் பிள்ளையினை
வாழ்த்தி வழி அனுப்பி வைத்தேன்!!
--கவிநயா
பி.கு. முன்னொரு காலத்தில் எழுதிய கவிதை :) 'திண்ணை'யில் வந்ததோ... நினைவில்லை.
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/kelvinlee/2984508104/
Sunday, October 4, 2009
காதல், கடவுள், அழகு, பணம்
இது ஒரு தொடர் பதிவு. காதல், கடவுள், அழகு, பணம், இவற்றை பற்றி நம் கருத்தை சொல்லணும் (இது பரவாயில்லை). பிறகு இன்னும் சில பேரை சொல்ல வைக்கணும் (இதான் கஷ்டம் :). அன்பால் என்னை மாட்டி விட்டவங்க, தோழி ஜெஸ்வந்தி.
காதல்

தமிழில் எனக்கு பிடித்த சில சொற்களில், தமிழ், அழகு, எழில், அன்பு, காதல், இவையெல்லாம் அடக்கம். காதல் பலவகைப் படும். ஆண் பெண் இடை இருக்கும் அன்பு மட்டுமேயா காதல்? சிலருக்கு படிப்பின் மேல் காதல். சிலருக்கு தொழிலின் மேல் காதல். சிலருக்கு தமிழின் மேல் காதல். சிலருக்கு கணினியின் மேல் காதல். சிலருக்கு ஏதேனும் ஒரு கலையின் மேல் காதல். இன்னும் சிலருக்கு கடவுள் மேல் காதல். ஏதோ ஒரு காதல் இல்லாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும். ஆதலினால் காதல் செய்வீர்! :)
கடவுள்
இவரை பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கேன். அன்பே சிவம், அதுவே கடவுள். இறைவனை நாம் எங்கெல்லாம் பார்க்கிறோமோ, எப்படியெல்லாம் பார்க்க விரும்புகிறோமோ, அப்படியே அவன் காட்சி அளிக்கிறான் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகள் அனைத்துக்கும் இறைவன் தவறாமல் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ யோகானந்தர். இறைவனின் வழிகளை புரிந்து கொள்ளுதல் சராசரி மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம். அதனால், எது நடந்தாலும் நம்பிக்கையை கைவிடாதிருப்பது நல்லது.
அழகு
அழகா இருக்கணும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனா இந்த அழகுக்காக ஒவ்வொருத்தரும் என்னென்ன செய்யறோம்? எல்லாத்தையும் விட ரொம்ப சுலபமான, செலவே இல்லாத வழி ஒண்ணு இருக்கு, தெரியுமா? வாங்க, சொல்றேன்!
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’. மனசு அழகா இருந்தாலே, முகத்திலும் அது தன்னால பளிச்சிடும். குட்டி பாப்பாவை பார்த்தா உடனே தூக்கி வச்சு கொஞ்ச தோணுது. அதே சமயம் புதுசா பார்க்கிற சிலரிடம் போய் ‘ஹலோ’ சொல்லக் கூட தயக்கமா இருக்கு. பெரியவர்களிடம் இல்லாத கவர்ச்சி சின்னக் குழந்தைகளிடம் இருக்கிறதே, ஏன்? ஏனென்றால், அவர்கள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அந்த காலத்தில் ரிஷிகளிடமெல்லாம் ‘தேஜஸ்’ ஒளி வீசியதாக சொல்வார்கள். ஏன் அப்படி? அவர்கள் உள்ளம் மாசில்லாமல் தூய்மையாக இருந்தது. யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை. மனம் எப்போதும் சமநிலையில் ஆனந்தமாக இருந்தது. அதுதான் காரணம். அதனால் நாமும் நம் மனசை சுத்தமா, கல்மிஷமில்லாம, குழந்தை மனசு போல வச்சுக்குவோம். மற்ற அழகெல்லாம் தன்னால வந்திடும்.
பணம்
மரத்தை பார்த்தா ஆசையா இருக்கில்ல? :) பணத்தை பற்றி என்ன சொல்றது? எல்லாருக்கும் தெரிஞ்சதையே சொல்றேன். (இது வரை வேறென்ன பண்ணேன்னு சொல்றீங்களா, அதுவும் சரிதான் :). பணம் நமக்கு முதலாளியா இருக்க கூடாது, நம்மதான் பணத்துக்கு முதலாளியா இருக்கணும். பணம் வாழ்க்கைக்கு தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிடாம பார்த்துக்கணும்.
***
என் வலையை இப்போ இவங்களுக்கு விரிச்சிருக்கேன்; மாட்டுவாங்களான்னுதான் தெரியல :)
கீதாம்மா
குமரன்
வல்லிம்மா
***
படங்களுக்கு நன்றி:
tulips - http://www.flickr.com/photos/krisdecurtis/412973107/sizes/m/
cute baby - http://www.warm103.com/Portals/1/Cute-Baby.jpg
kadavuL - http://www.spiritliferc.org/images/Praying%20Hands.jpg
money - http://www.boosttwitterfollowers.com/images/money_tree.jpg
Thursday, September 24, 2009
பால்வெள்ளை கமலத்தில்...
நவராத்திரி சிறப்பு பதிவு.
பால்வெள்ளை கமலத்தில் பனிமலர் கொடிபோலே
தேன்மொழியாள்அவள் வீற்றிருப்பாள்
வீணையிரு கரமேந்தி வேல்கள்இரு விழியேந்தி
கோலஎழில்வடிவுடையாள் கொலுவிருப்பாள்
வேதவடி வானவளாம் வேதனைகள் களைபவளாம்
நாதவடி வானவளாம் ஞானஒளி தருபவளாம்
நான்முகனின் நாயகியாய் நாவினிலே உறைபவளாம்
கோதகன்ற உள்ளமதை கோவிலென கொள்பவளாம்
நாடிவரும் நல்லவர்க்கு நலம்சேர்த் தருள்புரிவாள்
தேடிவரும் வினைகளைந்து கோடிசுகம் நல்கிடுவாள்
பாடிவரும் பக்தர்தம்மை பரிவுடன் பேணிடுவாள்
ஓடிவரும் தென்றலைப்போல் தேவிஅன்பு செய்திடுவாள்!
--கவிநயா
சுப்பு தாத்தா குரலில்... நன்றி தாத்தா!
Tuesday, September 22, 2009
பூமகளே பசும்பொன்னழகே !
நவராத்திரி சிறப்பு பதிவு.
திருமாலவனின் திருமார்பினிலே
சுடராய் ஒளியாய் இருப்பவளே!
திரைமாக் கடலை ததியாய் கடைய
மலராய் மகிழ்வாய் முகிழ்த்தவளே!
பகலினில் எத்தனை சூரியரோ என
பகலவன் மயங்கிடும் பேரெழிலே!
இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என
சந்திரன் மயங்கிடும் சுந்தரியே!
வண்டுகள் போலிரு கருவிழிகள் எழில்
மாதவன் மலர்முகம் சுற்றிடுமே!
செண்டுகள் போலிரு தளிர்க்கரங்கள் அந்த
மாயவன் திருவடி பற்றிடுமே!
பூமகளே பசும்பொன் னழகே இந்த
நானிலம் காத்திடும் நாயகியே!
வான்மகளே எங்கள் தேவதையே இந்த
மாநிலம் வணங்கிடும் வசுந்தரியே!
தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந்
தாமரைப் பதங்கள் சரணம் அம்மா!
தாமோ தரன்அவன் கொஞ்சுகின்ற பூந்
தாமரை வடிவே வரணும் அம்மா!!
--கவிநயா
ஷைலஜா அக்கா குரலில் - நன்றி அக்கா!
| SriLakshmi_song_su... |


