Monday, July 27, 2015

வறுமையும் வசதியும்



ஒரு பணக்கார அப்பா இருந்தார். அவர் தன் மகனுக்கு எவ்வளவு வசதியான வாழ்க்கை அவனுக்கு வாய்த்திருக்கிறது என்றும், மக்கள் எவ்வளவு ஏழைகளாக இருக்க முடியும் என்றும், கண்கூடாகக் காட்ட விரும்பினார்.

“வா, நாம ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்”, என்று அவனை அழைத்துக் கொண்டு ஒரு ஏழை விவசாயியிடம் போனார். இரண்டு பேரும் அந்த விவசாயியின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கினார்கள்.

ஊருக்குத் திரும்பும் வழியில் அப்பா, மகனைக் கேட்டார்:

“நம்ம பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிற? என்ன கத்துக்கிட்ட?”, அப்படின்னு.


மகன் சொன்னான்: “அப்பா, இந்தப் பயணம் ரொம்ப பயனுள்ளதா இருந்தது. நான் நிறைய கத்துக்கிட்டேன்!”


மகன் சொன்னதைக் கேட்டு அப்பாவுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. அவர் நோக்கம் நிறைவேறி விட்டதே!


மகன் மேலும் சொன்னான்: “நம்ம வீட்டில் ஒரே ஒரு செல்ல நாய்க்குட்டி இருக்கு. அவங்க வீட்ல ஆடு, மாடு கோழி, எல்லாமே இருக்கு. நம்ம வீட்ல ஒரு சின்ன நீச்சல் குளம் இருக்கு. அவங்களுக்கு எங்கே முடியுதுன்னே தெரியாத அளவு பெரிய ஓடை இருக்கு. நம்ம வீட்டில் மின்சாரத்தால எரியற விளக்குகள் இருக்கு. அவங்களுக்கு வானமே கூரையா, கணக்கில்லாத நக்ஷத்திரங்களோட இருக்கு.


இதெல்லாம் பார்த்த பிறகுதான் நாம எவ்வளவு ஏழைன்னு தெரிஞ்சுக்கிட்டேன் அப்பா. புரிய வெச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி!” அப்படின்னானாம்.

அப்பா, கப்சிப்!


எல்லாமே பார்வையில் தானே இருக்கு?

எல்லோரும் நல்லாருக்கணும்!



அன்புடன்

கவிநயா



பி.கு. எங்கோ எப்போதோ ஆங்கிலத்தில் படித்ததைத் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன்.
படத்துக்கு நன்றி: கூகுளார்


Monday, July 20, 2015

ஒற்றை வரி - 4



ஆத்மாராமுக்கு மனைவி தேவி மமதாவின் மீது கொள்ளை ஆசை. அவரை விட்டு ஒரு நாள் கூட பிரிந்திருக்கச் சம்மதித்ததில்லை. அதனாலேயே திருமணமான பின் பல வருடங்களுக்கு அவர் மனைவி தன் தாய் வீட்டிற்குக் கூடப் போகவில்லை.

ஒரு சமயம் ஆத்மாராம் ஏதோ வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த போது தேவி மமதாவின் அன்னை உடல் நலம் குன்றியிருப்பதாகச் செய்தி வந்தது. அதன் காரணமாக அவர் பிறந்த வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. வெளியூர் சென்று மனைவியைக் காணும் ஆவலுடன் திரும்பி வந்த ஆத்மாராம், மனைவியைக் காணாமல் திகைத்தார்; பிறகு நடந்ததை அறிந்து கொண்டார். மனைவி இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை. உடனடியாக அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று விரும்பினார்.

அந்தச் சமயத்தில் இடியும் மின்னலுமாகப் பெருத்த மழை பெய்து கொண்டிருந்தது. அவர் மாமனார் வீட்டிற்குப் போக, பல மைல்கள் கடந்து, பிறகு ஆற்றையும் கடந்து செல்ல வேண்டும். நீண்ட தூரம் நடந்து வந்து விட்டார். ஆனால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எந்தப் படகுக் காரனும் அவரைக் கூட்டிச் செல்ல மறுத்து விட்டான். அப்பேர்ப்பட்ட நிலையிலும் மனைவியைக் காணும் ஆசையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதோ ஒரு கட்டையைப் பிடித்துக் கொண்டு எப்படியெப்படியோ சிரமப்பட்டு, அந்த வெள்ளத்தைக் கடந்து வந்து விட்டார். அந்த வீட்டின் மாடியிலிருந்து கயிறு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மனைவியை உடனடியாய் அவள் அறைக்குச் சென்று பார்த்து விடும் ஆசையில், அந்தக் கயிறைப் பிடித்துக் கொண்டு ஏறி விட்டார்.

எதிர்பாராமல் வந்து நின்ற கணவரைக் கண்டதும் அவர் மனைவி மிகுந்த வியப்படைந்தாள். இப்படிப்பட்ட மழையிலும் வெள்ளத்திலும் அவரால் எப்படி வர முடிந்தது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் மாடியிலிருந்த தன் அறைக்கு எப்படி வந்தார்? “உன்னைக் காண வேண்டும் என்ற ஆவலினால் பல இடர்களையும் எப்படியோ கடந்து வந்து விட்டேன். மாடியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பிடித்துத்தான் வந்தேன்”, என்று விளக்கினார் ஆத்மாராம்.

ஆனால் அப்படி எதுவும் கயிறு இல்லையே என்று சந்தேகித்த மனைவி, அங்கே சென்று பார்த்த போது,  நீளமான கொடிய விஷமுள்ள நாகம் அங்கே இருந்தது! அதைக் கூடக் காண இயலாத அளவு அவர் கண்களையும் அறிவையும் ஆசை மறைத்திருந்தது.

விவேகியான மமதா இவற்றையெல்லாம் கண்டு வேதனை அடைந்தாள்.  “விரைவில் மூப்படைந்து அழியப் போகும் இந்த உடலின் மீது கண்மூடித்தனமாக இத்தனை ஆசை வைப்பதைக் காட்டிலும், இந்த விருப்பத்தையும், சிரத்தையையும் இறைவன் மீது செலுத்தினால் இந்தப் பிறவிக் கடலினின்றும் விடுதலை கிட்டும்!”, என்றாள்.

அன்று மனைவி சொன்ன அந்த வார்த்தைகள்தான் ஆத்மாராமின் உலக வாழ்வை ஆன்மீக வாழ்வாக மாற்றியது. ஸ்ரீராமன் மீது அபரிமிதமான பக்தி கொண்டு பின்னாளில் துளசி ராமாயணத்தை அருளிய ஸ்ரீதுளசிதாசர்தான் அவர்.

ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்

பி.கு. இதைப் போல 'ஒற்றை வரி'யில் வாழ்வே மாறிய மகான்கள் இன்னும் நிறைய இருக்ககூடும். எனக்குத் தெரிந்தவர்களைப் பற்றி மட்டும் இங்கே எழுதினேன். எத்தனையெத்தனை மகான்களோ அவர்கள் அனைவரின் திருவடிகளிலும் பணிந்து வணங்குகிறேன்.


Monday, July 13, 2015

ஒற்றை வரி - 3


அகிலத்தின் நன்மைக்காக, கொடிய விஷத்தின் வீரியத்தைத் தன் கண்டத்தில் தாங்கிக் கொண்டான் சிவபெருமான். அவனுடைய அந்தக் கருணையை எண்ணி எண்ணி உருகி, அவனைத் “திருநீலகண்டம்”,  “திருநீலகண்டம்”, என்று வாய்க்கு வாய் போற்றிப் புகழ்ந்து கொண்டேயிருப்பார் அந்த நாயனார். அதனாலேயே அவர் பெயரும் திருநீலகண்டர் என்றே வழங்காலாயிற்று.

திருநீலகண்டர் குயவர் குலத்தைச் சேர்ந்தவர். தில்லைத் தலமே அவரது ஊர். திருவோடுகள் செய்வதே அவர் தொழிலாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு சிவனடியாருக்கேனும் இலவசமாகத் திருவோடு செய்து தருவார்.

மிகுந்த பக்தியுடையவராய் இருந்தாலும், அவருக்கும் மனைவியையன்றிப் பிற பெண்களை நாடுகிற விருப்பம் இருந்தது. இதனால் கற்புக்கரசியான அவர் மனைவி வேதனை கொண்டார். மனைவிக்கான எல்லாக் கடமைகளையும் செய்தவர், கணவர் தம்மை நெருங்க மட்டும் அனுமதிக்கவில்லை. அவர் ஊடல் கொண்டே அப்படிச் செய்கிறார் என்று எண்ணிய திருநீலகண்டர் அவர் கரங்களைப் பற்றி சமாதானம் செய்ய முயன்ற போது, பொறுமையை இழந்த மனைவியார், “இனி எம்மைத் தீண்டினால் திருநீலகண்டம்”, என்று இறைவன் மீது ஆணையிட்டுக் கூறி விட்டார்.

அவருடைய அழுத்தமான ஆணையைக் கேட்ட திருநீலகண்டர், இது விளையாட்டுப் பேச்சல்ல என்று உணர்ந்தார். ஒவ்வொரு நிமிடமும் நாவில் நின்றொலிக்கும் தன் நாயகனின் பெயரால் தன் மனைவி இட்ட ஆணையைச் சிரமேற்கொண்டார். இனி அவரை என்றும் தீண்டுவதில்லை என்று தெளிந்தார். அது மட்டுமின்றி, அவர் “எம்மை” என்றதால், இனி எந்தப் பெண்ணையுமே தீண்டுவதில்லை என்றும் உறுதி கொண்டார். அன்று முதல் அவர்கள் இருவரும் ஒரே குடிலுக்குள் வாழ்ந்த போதிலும், துறவியரைப் போல் தவ வாழ்வே மேற்கொண்டிருந்தனர். இப்படியாகக் காலம் கழிந்து, தம்பதியர் முதுமை அடைந்தனர்.

இந்த அதிசயத் தம்பதியரின் பக்தியின் பெருமையை, உலகுக்குப் பறைசாற்ற எண்ணினான், பரமன். சிவனடியார் போல வேடம் கொண்டு, ஒரு நாள் கையில் ஒரு திருவோட்டுடன் திருநீலகண்டரின் இல்லம் வந்தான். சிவனடியார்கள் என்றாலே பக்தியில் குழைந்து விடும் திருநீலகண்டர், இந்தச் சிவனடியாரையும் வரவேற்று அன்புடன் உபசரித்தார். அவர் வேண்டி வந்தது என்ன என்று விசாரித்தார்.

போலிச் சிவனடியாரும், கையிலிருந்த திருவோட்டைக் காட்டி, “இதைப் போலச் சிறப்புகள் கொண்ட திருவோடு, இந்த உலகிலேயே இல்லை. எத்தனை பொன்னும் மணியும் தந்தாலும் இதன் மதிப்பிற்கு ஈடாகாது. இது கற்பகத் தரு போன்றது. நான் பக்தித் தலங்களுக்கு யாத்திரை செல்ல இருக்கிறேன். விலை மதிப்பில்லாத இத்தகைய திருவோட்டை என்னுடன் எடுத்துச் செல்ல இயலாது. உன் நாணயத்தைப் பற்றியும், பக்தியைப் பற்றியும் கேள்வியுற்று, உன்னிடம் சிறிது காலத்திற்கு இந்தத் திருவோட்டைப் பாதுகாப்பாய் விட்டு வைக்கலாம் என்று எண்ணி வந்திருக்கிறேன்”, என்றார்.

திருநீலகண்டரும், “அதற்கென்ன ஐயா. உங்கள் திருவோட்டைப் பத்திரமாக வைத்திருந்து, நீங்கள் திரும்பி வந்து கேட்கும் போது தருகிறேன்”, என்றார். அதன்படியே அவரும் அவர் மனைவியும், திருவோட்டை உள்ளே எடுத்துச் சென்று பத்திரமாக வைத்தார்கள்.

சிறிது காலம் கழிந்த பின் அந்தச் சிவனடியார் மீண்டும் வந்தார். “திருநீலகண்டரே, இத்தனை காலம் என் திருவோட்டைப் பாதுகாப்பாய் வைத்திருந்தமைக்கு மிகவும் நன்றி. இப்போது அதனை நான் திரும்பப் பெற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்”, என்றார்.

சிவனடியாரை வணங்கி, “தங்கள் சித்தம், என் பாக்கியம்”, என்று உள்ளே சென்றார், திருநீலகண்டர். ஆனால், வைத்த இடத்தில் திருவோடு இருந்தால்தானே! அதைத் தான் அந்த வேடதாரி மாயம் செய்து மறைத்து விட்டானே! கணவனும், மனைவியும், பலவாறாகத் தேடியும் திருவோடு கிடைக்கவில்லை.

செய்தி கேட்டு பெருத்த கோபம் வந்து விட்டது சிவனடியாருக்கு. “என் திருவோட்டின் பெருமைகளை நான் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருந்த நீ, அதன் மீது ஆசை கொண்டு மறைத்து வைத்து விட்டு, இப்போது இல்லை என்கிறாய்”, என்று அபாண்டமாய் திருநீலகண்டர் மீது குற்றம் சாட்டினார், சிவனடியார்.

பதறிப் போன திருநீலகண்டர், பலவாறாக மன்னிப்புக் கேட்டார். 


“திருவோடு எப்படி மாயமாய் மறைந்தது என்று தெரியவில்லை. கோபம் வேண்டாம் ஐயா. உங்கள் திருவோட்டுக்குப் பதில் பொன்னாலேனும் திருவோடு செய்து தந்து விடுகிறேன்”, என்றார் திருநீலகண்டர்.

“முன்பே சொன்னேனே, பொன் ஓடும் என் ஓட்டுக்கு ஈடாகாது என்று. எனக்கு என் ஓடுதான் வேண்டும். ஒளித்து வைத்ததை மரியாதையாகக் கொண்டு வந்து கொடுத்து விடு”, என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் சிவனடியார்.

“ஐயா, என்னை நம்புங்கள். உங்கள் திருவோடு என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக அதைத் திருடும் எண்ணமே எனக்கு இல்லை”, அழமாட்டாக் குறையாகக் கூறினார், திருநீலகண்டர்.

“நீ கூறுவது உண்மையாயிருக்கும் பட்சத்தில், நீ உன் மகனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்; அப்போது உன்னை நம்புகிறேன்”, என்றார் சிவனடியார்.

“எனக்கு மகன் இல்லையே ஐயா”, என்றார் திருநீலகண்டர்.

“அப்படியெனில் உன் மனைவியின் கரத்தைப் பிடித்துச் சத்தியம் செய்”

அதற்குச் சாத்தியமே இல்லையென்று மறுத்து விட்டார், திருநீலகண்டர்.

வழக்கு தில்லை வாழ் அந்தணர்களின் திருச் சபைக்குச் சென்றது.

சிவனடியாரின் வழக்கைக் கேட்ட திருச்சபை, திருநீலகண்டரின் வாதத்தையும் கேட்டது. அவரும் தான் திருடவில்லை எனவும், திருவோடு மாயமாய் மறைந்ததே உண்மை எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

“அப்படியெனில் மனைவியின் கரம் பற்றி சத்தியம் செய்வதில் என்ன தயக்கம்?” என்றார் சிவனடியார்.

திருச்சபையும் அவர் கூற்றை ஆமோதித்தது. திருநீலகண்டரும், “நீங்கள் ஒப்புக் கொள்ளும்படி மனைவியுடன் நீரில் மூழ்குவேன்”, என்று சொல்லி, மனைவியை அழைத்து வந்தார். அனைவரும் திருப்புலீச்சரத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தை அடைந்தனர். திருநீலகண்டர் ஒரு மூங்கில் கழியை எடுத்து, ஒரு முனையைத் தான் பற்றிக் கொண்டு, மறுமுனையை மனைவியைப் பற்றிக் கொள்ளச் செய்தார்.

அந்தப் பொல்லாத சிவனடியார் விட்டு விடுவாரா? “இதை ஒப்புக் கொள்ளவே முடியாது. கரத்தைப் பற்றிக் கொண்டால்தான் ஒப்புக் கொள்ள முடியும்” என்றார் விடமுண்ட கண்டரான அந்த விடாக்கண்டர்.

அதன் பிறகு வேறு வழியின்றி தானும் தன் மனைவியும் இத்தனை வருடங்களாகக் கடைப்பிடித்து வரும் விரதத்தையும் அதன் காரணத்தையும் அங்கு நின்றிருந்தோர் அனைவரும் அறிய எடுத்துரைத்தார், திருநீலகண்டர். பிறகு கழியைப் பற்றியபடியே இருவரும் குளத்தில் மூழ்கினர்.

அவர்கள் இருவரும் நீரில் இருந்து எழுந்து பார்க்கையில் திருவோட்டைப் போலவே சிவனடியாரும் மாயமாக மறைந்து விட்டிருந்தார். முதுமை எய்திய தம்பதியராய் மூழ்கிய இருவரும் திரும்பிய இளமையுடன், இளமையின் பிரகாசத்துடன் எழுந்தனர். சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் அவர்களுக்கு தரிசனம் தந்தான். அவர்களின் பக்தியின் பெருமையையும், ஐம்புலன்களையும் வென்று அவர்கள் வாழ்ந்த தவவாழ்வின் பெருமையையும் போற்றி, இளமையின் பொலிவோடு அவர்கள் என்றென்றும் தம்முடனே இருக்க அருள் புரிந்தான்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா


படத்துக்கு நன்றி: கூகுளார்

Monday, July 6, 2015

ஒற்றை வரி - 2




நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைதான் அருணகிரிநாதரையும் தந்தது.

பிறந்தவுடனே தந்தையை இழந்தார். ஐந்து வயதிலேயே தாயையும் இழந்தார். அவருடைய அன்புச் சகோதரியே அவரை அருமையாக வளர்த்தார். அவர் கேட்டதையெல்லாம் இல்லையென்னாமல் கொடுத்தார். வேண்டாத பழக்கங்கள் அனைத்திற்கும் அருணகிரி அடிமையானார்.

திருமணம் செய்வித்தால் அவர் திருந்துவார் என்றெண்ணி அவருக்குத் திருமணமும் முடித்து வைத்தார், தமக்கை. அப்போதும் குடும்பத்தைப் புறக்கணித்து, கணிகையர் இல்லமே கதியென்றிருந்தார். அதற்கான பொருட்செலவிற்கெல்லாம் தமக்கையிடமே வருவார். உழைத்து ஈட்டிய பொருளனைத்தையும் தம்பியின் சுகங்களுக்கே தாரை வார்த்தார், அந்தத் தமக்கை. நாள் செல்லச் செல்ல குடும்பத்திலிருந்த நகைகளையும், மற்ற பொருட்களையுமே விற்றுத் தீர்க்க வேண்டி வந்தது. குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கி விட்டனர். அப்படியும் அருணகிரி திருந்தினாரில்லை.

வேண்டாத பழக்கங்கள் அனைத்தும், நாளடைவில் வேண்டாத வியாதிகளையும் கொண்டு வந்து சேர்த்தன. உடல் சோர்ந்தாலும் ஆசை என்னவோ விட்ட பாடில்லை. தமக்கையைப் பொருளுக்காகத் தொந்தரவு செய்வதும் நிற்கவில்லை. ஆனால் முன்பு பொருளுக்காக வந்த பெண்களும் இவருடைய நோயைக் கண்டு அச்சமுற்று அவரை ஒதுக்கித் தள்ளினர். அப்படியும் திருந்தினாரில்லை, அருணகிரி.

தம்பியின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த தமக்கையால் அவரது வேதனையைக் காணச் சகிக்கவில்லை. எந்தச் சகோதரியும் மனதாலும் நினைக்கத் துணியாத சொற்கள் தாள முடியாத வருத்தம் தந்த கோபத்துடன் அவரது திருவாயிலிருந்து வெளிப்பட்டன: “பெண்ணின் உடல்தான் உன்னை மகிழச் செய்யும் என்றால், இதோ நானும் பெண்தான்”, என்றார்.

கனவிலும் நினைக்கக் கூடாத அந்தக் கொடூரமான வார்த்தைகள் அருணகிரியின் நெஞ்சத்தைக் குத்திக் கிழித்தன. தாம் எத்தகையதொரு கீழான நிலைக்குச் சென்று விட்டோம் என்பதை அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்தார். வேதனையால் துடிதுடித்தார். தன்னைத் தானே வெறுத்தார். உயிர் துறப்பதே தனக்குச் சரியான தண்டனை என்று நினைத்தவர், நேராகத் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றார். கோபுரத்தின் உச்சியினின்றும் குதித்தார்.

என்னே கந்தனின் கருணை! வேலை ஏந்திய வேலன், அருணகிரியையும் ஏந்தினான். அவர் இன்னுயிரைக் காத்தான்; அவர் நாவில் செந்தமிழைச் சேர்த்தான்; தேனாறாய்த் திருப்புகழைப் பாயச் செய்தான்.

ஓம் சரவணபவாய நம:


எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா