Wednesday, December 30, 2015

மீண்டும் உலவ வந்தாச்!

வணக்கம். 

நலந்தானே? எம்புட்டு நாளாச்சு பாத்து! உங்களை எல்லாம் நினைச்சுக்கிட்டேதான் இருந்தேன், ஆனா  வரவே முடியலை... முதல் முதலா ஒரு மாணவிக்கு பரத நாட்டிய அரங்கேற்றம் செய்தேன்.  நேரமெல்லாம் அதுவே இழுத்துடுச்சு. இனிமேலாவது மாதம் ஓரிரு பதிவாவது இடணும்கிற எண்ணம் இருக்கு... பார்க்கலாம்....

அன்பின் உருவாய் அவள்* உருவம்
அவளின் வடிவாய் இவ்வுலகம்
அன்பே சங்கிலியாய்ப் பிணைக்கும்
அமைதி அதனுள் தவழ்ந்திருக்கும்

கோபம் தாபம் இங்கில்லை
கவலை கண்ணீரும் இல்லை
இன்பம் துன்பம் என்றில்லை
ஆனந்தம்ஒன்றே இதன் எல்லை

புதுசா விரியும் பூ வாசம்
மனசில் முளைக்கட்டும் புது நேசம்
புதுசாப் பிறக்குது புதுவருஷம், பல
தினுசா சிறக்கட்டும் அனைவருக்கும்!

--கவிநயா

*அவள்: அவள் வேறு யாருமில்லை, அகிலத்துக்கெல்லாம் அன்னை பராசக்திதான்!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு இனியதாகப் பிறக்கட்டும்! சிறக்கட்டும்!

Friday, September 4, 2015

வாராது வந்த மாமணி!

அனைவருக்கும் குட்டிக் கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்துகள்!

சுப்பு தாத்தா நெகிழ்ந்து மகிழ்ந்து பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்!



நானிலம் போற்றிட நாற்றிசை வாழ்த்திட
சின்னக் கண்ணன் பிறந்தான்

வானகம் போற்றிட வையகம் வாழ்த்திட
வண்ணக் கண்ணன் பிறந்தான்

செக்கச் சிவந்திட்ட செங்கமலம் போல
சின்னத் திரு வடிகள்

எட்டி உதைத்திட விட்டு விட்டு ஓடும்
முன்னைப் பழ வினைகள்

மொட்டு மலர்ந்தது போல விரிந்திடும்
பட்டுப் போன்ற இதழ்கள்

சிட்டுப் போல அவன் சிந்திடும் சிரிப்பில்
சொக்கி விடும் மனங்கள்

சுற்றி வருகின்ற சூரியனைப் போல
வட்டக் கரு விழிகள்

சுட்டு எரிக்கின்ற துன்பம் அத்தனையும்
சுட் டெரிக்கும் விழிகள்

ஆலிலைக் கண்ணன் தன் காலின் விரலினை
வாயில் ருசித் திருப்பான்

ஆயிர மாயிரம் பாயிரம் பாடிட
கேட்டு மகிழ்ந் திருப்பான்

ஆழி துயில்பவன் தாயின் மடியினில்
பிள்ளை யாகப் பிறந்தான்

வாழி வாழி யென்று நெஞ்சம் நெகிழ்ந்திட
வாழ்த்தி மகிழ்ந் திடுவோம்!



--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.motherszone.com/baby-names-meaning-lord-krishna/

Saturday, August 29, 2015

ஸ்ரீலக்ஷ்மி

ஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு வாழ்த்துகள்!
செந்தாமரைப் பூவில் செஞ்சூரியன் போல
சிரிக்கின்ற ஸ்ரீதேவியே!
கண் தாமரை கொண்டு கார்மேக மேனியனைக்
கவர்கின்ற ஸ்ரீகாந்தையே!

பாருலகம் காக்கின்ற பாற்கடல் மாதவனின்
மார்புறையும் ஸ்ரீபத்மையே!
ஓர்நெல்லிக் கனிக்காகப் பொற்கனிகளைப் பொழிந்த
கருணைமிகு ஸ்ரீகமலையே!

ஒட்டிய தலை ஓட்டில் பிச்சையிட்டு சிவனைக்
காத்திட்ட ஸ்ரீபுத்தயே!
கட்டிய மன்னவனைக் கணமும் அகலாமலே
களிக்கின்ற ஸ்ரீசித்தயே!

ஓரெட்டு வடிவங்கள் கொண்டிந்த உலகிற்கு
ஒளியூட்டும் ஸ்ரீஸத்யையே!
ஈரெட்டு செல்வங்கள் ஈந்திடும் தேவியே
எமைக் காக்கும் ஸ்ரீலக்ஷ்மியே!



--கவிநயா

(ஒரு நாள் தாமதம். ஆனா அவ ஒண்ணும் சொல்ல மாட்டான்னு நம்பிக்கை)


Saturday, August 15, 2015

எங்கள் சிற்றில் சிதையேலே!

விளையாடப் போன குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், தந்தை. “என்ன ஆயிற்று, இன்றைக்கு, இன்னும் காணோமே இந்தப் பெண்ணை”, என்று எண்ணமிட்டபடி வாசலுக்கு வந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லாத் திசைகளிலும் பார்க்கிறார்.

அதோ! என்ன இது, கண்ணைக் கசக்கிக் கொண்டே வருகிறாற் போல் இருக்கிறது. அழுகிறாளா என்ன?

அவள் வாசலுக்கு வரும் முன் தானே விரைவாக அடியெடுத்து மகளிடம் செல்கிறார்.

“என்னம்மா கோதை? என்ன ஆயிற்று?” மகளை வாரிக் கைகளில் எடுத்து, அவள் கண்ணீரைத் துடைக்கிறார்.

“ம்…ம்..”, விசும்பிக் கொண்டே தந்தையில் தோளில் தலை சாய்த்துக் கொள்கிறாள், கோதை.

வீட்டிற்கு வந்து கை, கால், முகம் அலம்பி, குடிக்கத் தண்ணீர் கொடுத்து, மகளை ஆசுவாசப் படுத்துகிறார்.

“அப்பா… அப்பா… இன்றைக்கு என்ன ஆயிற்று தெரியுமா?”

“என்னம்மா ஆயிற்று? அதைத்தானே நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்”

“அப்பா, இன்றைக்கு நானும் என் தோழிகளும் மணலில் சிற்றில் கட்டி விளையாடினோம்… சரியாக அந்த நேரம் பார்த்து கண்ணன் வந்து விட்டனப்பா! வந்ததும் இல்லாமல் எங்கள் சிற்றிலை எல்லாம் கலைக்கத் தொடங்கி விட்டான்”

ஆயர்பாடிக் கண்ணன் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்தானா? பெரியாழ்வாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…
“ம்… அப்படியா? அதனால்தான் அழுது கொண்டே வந்தாயா?”

“ஆமாம் அப்பா. அவனிடம் எப்படியெல்லாம் கெஞ்சினோம் தெரியுமா?”

“………….”

“சிற்றில் கட்டுவது அப்படி ஒன்றும் சாதாரணமான வேலை இல்லை அப்பா.

ஆற்று மணலை அள்ளி வந்து கைகளாலேயே சலித்துச் சலித்து மிக மென்மையாக ஆக்கினோம். பிறகு தண்ணீர் தெளித்துப் பதமாக்கி, ஒவ்வொரு பகுதியையும் பார்த்துப் பார்த்து, முதுகு நோக, எவ்வளவு பொறுமையாகக் கட்டினோம் தெரியுமா அப்பா?

ஆனால் அங்கே கண்ணன் வந்து விட்டான். வந்தவன் தன் அழகுக் கண்களால் எங்கள் சிற்றில்களை ஒரு முறையேனும் பார்த்துப் பாராட்டுவான் என்று நினைத்தேன். அவன் என்னடாவென்றால் சிற்றில்களைக் கலைக்கத் தொடங்கி விட்டான்! இது நியாயமா அப்பா?”

“ஆம் அம்மா… சின்னஞ்சிறுமிகள் கட்டிய சிற்றில்களைக் கலைக்க அவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?”

“ ‘ஆதிமூலமே’ என்று அலறிய யானைக்காக பறந்தோடி வந்தவன் அல்லவா அப்பா? ஆனால் ஏன் இந்தச் சிறுமிகளிடம் மட்டும் அவனுக்கு அன்பு இல்லை?”

“அன்பே வடிவானவன் அம்மா, அவன். ஆனாலும் இந்தக் குறும்பு விளையாட்டுகள் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களைச் சிணுங்க வைத்து வேடிக்கை பார்க்கத்தான் அப்படிச் செய்திருப்பான்!”

“உண்மைதான் அப்பா. ஆனால் ஒன்று. அவன் என்னதான் இதைப் போல அநியாயம் செய்தாலும் ஏனோ அவனிடம் மட்டும் கோபமே வர மாட்டேனென்கிறது. அவன் என்ன செய்தாலும் அதில் ஏதோ மாயம் இருக்கிறதப்பா… அது நம்மை அப்படியே மதி மயங்கச் செய்து விடுகிறது; மந்திரம் போலக் கட்டிப் போட்டு விடுகிறது!

அதனால் அவன் செய்கையால் வருத்தம் ஏற்பட்டாலும் அவனைத் திட்டவே மனம் வரவில்லை அப்பா. எப்பேர்ப்பட்ட கள்வன் அவன்!” கண்ணன் மேல் கொண்ட அன்பைப் போலவே கோதையின் கண்களும் அகன்று விரிகின்றன.

“ம்… அப்புறம் என்னம்மா செய்தான் கண்ணன்?”

“சிற்றில்களைக் கலைத்ததோடல்லாமல் எங்களையும் எட்டிப் பிடிக்க வந்தான் அப்பா. நாங்கள் அவன் கைக்கு அகப்படாமல் ஓடினோம். உடனே அவன், என்னிடமிருந்தா தப்பி ஓடுகிறீர்கள், நான் யாரென்று தெரியுமா என்று கூறி, சங்கு சக்ரதாரியாக நின்றான் அப்பா!”

“என்ன!”, திகைத்து நிற்கிறார் பெரியாழ்வார்!

“யாருக்கும் எளிதில் கிடைக்காத அவன் தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது. ஆனாலும் நாங்கள் எங்கள் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. “நீ சங்குசக்ரதாரியாகவே இரு. ஆனால் எங்கள் மனம் இப்போது வருத்தத்தில் இருக்கிறது. மனம் வருத்தத்தில் இருக்கையில் கருப்பஞ்சாறும் கசக்கும். நீ எங்களை இப்போது என்ன சமாதானம் செய்தாலும் அது செல்லாது என்று சொல்லி விட்டோம் அப்பா”

“அப்படியா சொன்னீர்கள்?!”

“தெருவில் நின்று விளையாடினால் அவன் தொந்தரவு செய்கிறான் என்று நாங்கள் எல்லோரும் அருகிலிருந்த என் தோழி ஒருத்தியின் வீட்டினுள் புகுந்து, முற்றத்தில் ஒளிந்து கொண்டோம்.”

“கண்ணனிடமிருந்து ஒளிந்து கொள்வது இயலாத காரியம் அம்மா!”

“சரியாகச் சொன்னீர்கள் அப்பா! நாங்கள் அங்கிருக்கிறோம் என்பது அவனுக்கு எப்படித்தான் தெரிந்ததோ அவனுக்கு! அங்கும் வந்து விட்டான்! வந்ததோடு அல்லாமல் அவனுடைய அந்த அழகிய பூவை வண்ணம் விகசிக்க, செவ்விதழ்கள் கனிந்து நெளிய, மயிற்பீலி அசைந்தாட, கண்களில் குறும்பு கூத்தாட, எங்களை நோக்கி அப்படியொரு பேரெழிலான புன் முறுவல் செய்தான். நாங்கள் அதைப் பார்த்து அப்படியே மயங்கி விட்டோம்! அவன் முறுவலின் எழிலைக் கண்ட கண்களுக்கு வேறென்ன வேண்டும் அப்பா?” சொல்லும் போதே கோதையின் கண்கள் செருகி கனவு நிலைக்குப் போகின்றன.

“ம்…அப்புறம்?” அவள் சொல்லச் சொல்ல பெரியாழ்வாரின் கண்களின் முன்னேயும் காட்சிகள் விரிகின்றன. கண்ணனின் கனிமுகம் தெரிகிறது.

“ஆனால் அவன் அப்படியே எங்களை அணைக்க வந்த போது சட்டெனெ விலகி ஓடி வந்து விட்டோம். அக்கம் பக்கம் பார்த்தால் என்ன சொல்வார்கள் அப்பா? இந்தக் கண்ணனுக்கு ஒன்றுமே தெரியவில்லை!”, அதிருப்தியுடன் உதட்டைச் சுழிக்கிறாள் கோதை.

“சரிதானம்மா… அப்படியானால் இனி சிற்றில் கட்டி விளையாடாதீர்கள். வேறு விளையாட்டு ஏதேனும் விளையாடுங்கள்”

“என்னப்பா அப்படிச் சொல்லி விட்டீர்கள்? என் கண்ணன் வருவானென்றால், அவன் திருவடிகளால் கலைப்பானென்றால், அதற்காகவே எத்தனை சிற்றில்கள் வேண்டுமானாலும் கட்டிக் கொண்டே இருப்பேனே!”

“எதிர்பார்த்ததுதான்”, என்பது போல தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறார் பெரியாழ்வார்.


ஆடிப் பூர நாயகி ஆண்டாளின் திருவடிகளே சரணம்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா


 பி.கு.: நாச்சியார் திருமொழியில் இரண்டாம் திருமொழி பாடல்களை வைத்து எழுதியது.



Monday, August 3, 2015

நெகிழ வைத்த வாழ்த்து


ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாள் வந்தாலே பயமா இருக்கு இப்பல்லாம்! வயசு ஏறிக்கிட்டே போகுதில்ல, அதான். ஒரே ஒரு சின்ன ஆறுதல் என்னன்னா... எல்லாருக்குமே அப்படித்தானே? ஹி…ஹி…

இந்த வருடமும் என்னோட குடும்பத்தினர் மட்டுமல்லாம, எதிர்பாராத விதமா சில மாணவிகளிடமிருந்து, சில தோழிகளிடமிருந்து, இப்படியெல்லாம் வாழ்த்துகள் கிடைச்சது. (எதிர்பாராம கிடைச்சா சந்தோஷம். எதிர்பாராமா இருக்கறதால கிடைக்கலன்னா வருத்தமும் இல்லை! அதான் நம்ம பாலிஸி)

என்னோட அன்பான நாத்தனார் சொன்னதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. “அண்ணி உங்களுக்கு அத்தனை (சொல்ல மாட்டேனே!) வயசு இல்லை… உங்களுக்கு 18 வயசுதான் + அத்தனை வருஷ அனுபவம்”, அப்படின்னு! இது எப்படி இருக்கு!

எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச மாதிரி ஒரு வாழ்த்து லலிதாம்மாகிட்ட இருந்து, “அம்மன் பாட்டு” தளத்தில்: எதிர்பார்க்கவே இல்லை. அழுகையா வந்திருச்சு…

கவிநயத்தேனூறுந் தமிழ்ப்பாமலர் தூவி
சிவையே!செவ்வாய்தோறும் உனைப் பாடி உருகும்
ஆணிப்பொன்மகள் பிறந்த நன்னாளாம் இன்று
ஆடிபெருக்காய் நீ அருள்பெருக்கு அவள்மேல் !


கோடிகோடிச் செவ்வாய்கள் அவள் பார்க்க வேண்டும் !
 பாடலால் பக்தரைப் பரவசமாக்க வேண்டும்  !
பொங்கும் நல்வளத்தோடு அவள் வாழ வேண்டும் !
எங்கிருப்பினும் அவளை நீ காக்க வேண்டும் !


அன்புமகள் கவிநயாவுக்கு இனியபிறந்தநாள்  வாழ்த்துக்கள் !



அன்பைப் பொழிகிற அனைவரையும் அன்னையின் உருவாகவே காண்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா