Monday, December 22, 2014

பூதனை வதம்

ஏரார்ந்த கண்ணி - 3


தொட்டிலிலே தானிருந்தான்
தூமலர் போல் துயின்றிருந்தான்
கட்டித் தயிர் கடைந்த பின்னே
எட்டிப் பார்த்தால் காணவில்லை!

உள்ளம் பதை பதைக்க
ஊனுயிரும் உருகி நிற்க
கண்ணில் நீர் வழிய
கண்ண முகம் தேடுகின்றாள்…

சின்னக் குரலொன்று
சிணுங்கும் குரல் கேட்கிறது
திண்ணையின் மீதிருந்து
கண்ணன் குரல் கேட்கிறது!

ஆவலுடன் விரைந்திட்டாள்
அன்பு முகம் கண்டு விட்டாள்!
ஆனால் அவன் அருகில்?
அரக்கி ஒருத்தியன்றோ
அசையாமல் கிடக்கின்றாள்?!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா

ஏரார்ந்த கண்ணி - 1
ஏரார்ந்த கண்ணி - 2

படத்திற்கு நன்றி: http://vidyasury.com/2014/08/krishna-janmashtami.html

3 comments:

  1. கண்ணன் “பேய்முலை நச்சுண்ட” கதை கவிதை வடிவில். அற்புதம்.

    ReplyDelete
  2. கவிதை அற்புதம்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)