Wednesday, December 31, 2014

புத்தாண்டு வேண்டுதல்!

அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!



ன்பால் நிறைந்த நெஞ்சம்

ண்டவனிடத்தில் தஞ்சம்

யல்பில் குழந்தை உள்ளம்

யப் பெருகும் இன்பம்

லகம் அனைத்தும் உறவு

க்கம் உயிரின் மூச்சு

தையும் தாங்கும் இதயம்

தம் இல்லா உதயம்

யம் இல்லா பக்தி

ரு முகமான தியானம்

யா எறும்பாய் உழைப்பு

வை சொன்ன அறம்

அமைதி நிறைந்த வாழ்வு!



--கவிநயா

Monday, December 29, 2014

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி...


ஏரார்ந்த கண்ணி - 4

பூதனை இறந்த செய்தி கேட்டான்
பூவைப் பூநிறக் கண்ணனின் மாமன்!
சகடாசுரனைச் சடுதியில் அழைத்தான்
சின்னக் கண்ணனைக் கொல்லப் பணித்தான்!

கோகுலம் நோக்கிச் சகடனும் விரைந்தான்
குழந்தைக் கிருஷ்ணனைத் தேடி அலைந்தான்!
சாய்ந்து நின்றதோர் வண்டியின் அடியில்
தொட்டிலில் துயின்ற குழந்தையைக் கண்டான்!

வண்டிச் சக்கரம் புகுந்தான் அரக்கன்
வண்ணக் கண்ணனைக் கொல்லத் துணிந்தான்!
அறியாக் குழந்தை போலே பரமன்
அழுதான் சின்னக் கைகால் உதைத்து!

சற்றே பிஞ்சுக் காலை நீட்டி
சகடந்தன்னை எட்டி உதைத்தான்!
சடசடவென்று முறிந்தது வண்டி
திருவடி பட்டுச் சகடனும் ஒழிந்தான்!

பூந்தளிர்ப் பாதமும் கொஞ்சம் வலித்ததோ!
தீங்குரலெடுத்து அழுதான் கண்ணன்!
ஓடி வந்தாள் அன்னை யசோதை!
சிதறிக் கிடந்த வண்டியைக் கண்டாள்!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா


படத்துக்கு நன்றி: மாதவிப் பந்தல்

Monday, December 22, 2014

பூதனை வதம்

ஏரார்ந்த கண்ணி - 3


தொட்டிலிலே தானிருந்தான்
தூமலர் போல் துயின்றிருந்தான்
கட்டித் தயிர் கடைந்த பின்னே
எட்டிப் பார்த்தால் காணவில்லை!

உள்ளம் பதை பதைக்க
ஊனுயிரும் உருகி நிற்க
கண்ணில் நீர் வழிய
கண்ண முகம் தேடுகின்றாள்…

சின்னக் குரலொன்று
சிணுங்கும் குரல் கேட்கிறது
திண்ணையின் மீதிருந்து
கண்ணன் குரல் கேட்கிறது!

ஆவலுடன் விரைந்திட்டாள்
அன்பு முகம் கண்டு விட்டாள்!
ஆனால் அவன் அருகில்?
அரக்கி ஒருத்தியன்றோ
அசையாமல் கிடக்கின்றாள்?!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா

ஏரார்ந்த கண்ணி - 1
ஏரார்ந்த கண்ணி - 2

படத்திற்கு நன்றி: http://vidyasury.com/2014/08/krishna-janmashtami.html

Tuesday, December 16, 2014

கண்ணன் பிறந்தான்!

ஏரார்ந்த கண்ணி - 2

கரு நீலத் தாமரையோ தொட்டிலிலே முளைத்தது!
தாய் விழிகள் திறக்கையிலே தாமரையோ சிரித்தது!

இருப்பதென்ன கனவுலகோ?
பார்ப்பதென்ன கற்பனையோ?
பிறந்த குழந்தை அழாமல்
அறிந்தவர் போல் சிரிக்கிறதே!
திறந்து விரியும் பொக்கை வாயில்
சொர்க்கமெல்லாம் தெரிகிறதே!
ஆயர்குல ராணிக்கு என்றுமில்லா ஐயங்கள்!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை,
ஆயர்குல இரத்தினத்தை,
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.stephen-knapp.com/krishna_print_onehundredseventynine.htm

Monday, December 15, 2014

ஆண்டவனை ஆண்டவள்

ஏரார்ந்த கண்ணி - 1


மார்கழித் திங்கள்...

ஆண்டாள், அவள் ஆண்டவனை.
நம்மையும் இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறாள் அப்பாவை, தம் திருப்பாவை மூலம்.

மார்கழி பிறந்தாலே மனசுக்குள் ஒரு உற்சாகம் வந்து விடுகிறது. ஆண்டாளுடன் கண்ணனும், மாணிக்க வாசகருடன் நமசிவாயமும் வந்து விடுகிறார்கள். மாதம் முழுவதும் அவர்களுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் இருப்பது போலத் தோன்றும்.

நவராத்திரி சமயத்திலும் அப்படித்தான். இந்த மாதிரியான பண்டிகைக் காலங்கள் முடியும் போது ஒரே ஏக்கமாக இருக்கும். ஏனென்றால் அந்த விசேஷ நாட்கள் முடிந்ததும், பழைய வேண்டாத எண்ணங்களும், பழக்கங்களும், காத்திருந்தாற் போல வந்து ஒட்டிக் கொண்டு விடும்.

அதே உணர்வுதான் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்கும் போதும்… என்னதான் அழுது அழுது சிரமப்பட்டு நடந்தாலும், அந்த அழுகையும் அவளிடமேதான் என்பதாலோ என்னவோ, நடந்து முடியும் போது எதையோ இழந்தாற் போல இருக்கும்.
ஏதோ சொல்ல வந்து விட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். மார்கழி மாதமும் அதுவுமாக, திருப்பாவையில் (முடிந்தால் திருவெம்பாவையிலும்) பிடித்த சில வரிகளை எடுத்துக் கொண்டு உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாமா என்று தோன்றியது… “கூடியிருந்து குளிர்வதுதானே” திருப்பாவையின் சிறப்பு?

முதல் பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்:
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்”
“கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்”

“ஏரார்ந்த கண்ணி” என்பதற்கு, அழகான கண்களை உடைய யசோதை என்பதாகப் பொருள் சொல்வார்கள்.  அழகான கண்கள் மட்டுமல்ல, பொருத்தமான கண்களும் கூட. எதற்குப் பொருத்தமான கண்கள்? ஓங்கி உலகளந்த உத்தமன் குழந்தையாக அவளிடம் வந்த போது, அவனைப் பாராட்டிச் சீராட்டிப் பார்த்துக் கொள்வதற்கு அவள் கண்கள்தான் தகுதியுடையவையாக, பொருத்தமானவையாக இருந்தன.

யசோதைக்கு எப்படி அப்படிப்பட்ட அழகான கண்கள் அமைந்தனவாம்? குட்டிக் கிருஷ்ணன் பிறந்தது முதல், அவன் அழகையும், அவன் குறும்புகளையும், அவன் லீலைகளையும், பார்த்துப் பார்த்துக், கண்களை விரித்து விரித்து வியப்பாளாம். பெருமைப்படுவாளாம். சந்தோஷப்படுவாளாம். அதனால்தான் அவள் கண்கள் அவ்வளவு அழகான கண்களாக இருந்தனவாம். 

இப்படியும் ஓரிடத்தில் வாசித்தேன். எனக்குமே இந்த விளக்கம் பிடித்திருந்தது… யசோதை கண்ணனின் குறும்புகளையும், லீலைகளையும் விழி விரித்து வியப்பதான கவிதைகளை இனி அவ்வப்போது பார்க்கலாம்…

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

திருச்சிற்றம்பலம்.



அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்.



காதல் சொன்னானோ?

மார்கழி மாதத்திற்கு வந்தனம்! இந்த மாதம் முழுவதும் இறை நினைப்பில் திளைத்திருக்கலாம்.

அந்த மாயக் கண்ணனின் நினைவில் பிறந்த ஒரு கவிதை கண்ணன் பாட்டில்... நேரம் கிடைத்தால் வாசியுங்கள்...

அன்புடன்
கவிநயா


Monday, December 8, 2014

குங்குமம் தோழி இதழில்...

குங்குமம் தோழி இதழில் இந்த வாரம்... நேரம் கிடைச்சா பாருங்க.

(வலைப்பூவில் பதியலாமா வேண்டாமான்னு யோசனையா இருந்தது...'tooting my own horn' மாதிரி ஆயிடுமோ அப்படின்னு... பிறகு தொடர்ந்து வாசிக்கிற நண்பர்களுக்காக பகிரலாம்னு தோணுச்சு...)


அன்புடன்
கவிநயா

Thursday, December 4, 2014

அருள் மலை!

அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

எங்கள் ஊர்க் கோவிலில் திருகார்த்திகைத் தீபம்

எண்ணும் மனம் உறைந்தான்
எண்ணமெல்லாம் நிறைந்தான்
அண்ணா மலை அவன் தான்
அருள் மலையாய் வளர்ந்தான்!

உண்ணா முலைக் கெனத்தான்
தண்ணிலவாய்க் குளிர்ந்தான்
கண்ணுதலான் கனிந்தான்
தன்னில் சரி பாதி தந்தான்!

கேட்கும் வரம் அத்தனையும்
அள்ளி யள்ளித் தந்திடுவான்
ஓமென்றால் ஆமென்பான்
தா யென்றால் தாயுமாவான்!

அயன் அரி அறியாத
அடி முடி கொண்டவன்தான்
கள்ளமற்ற அன்புக் கென்றால்
கட்டுப்பட்டு வந்திடுவான்!


--கவிநயா