Sunday, November 30, 2014

பாவனாகம்யா

‘கம்யா’ என்றால் ‘அடையத் தக்கவள்’ என்பது பொருளாம். ஒரு ஊருக்குப் போகப் பல வழிகள் இருப்பது போல், அம்பிகையை அடைவதற்கும் பல வழிகள் உண்டு.

பாவனா கம்யா – பாவனையால் அடையத் தக்கவள்
பக்தி கம்யா – பக்தியால் அடையத் தக்கவள்
தியான கம்யா – தியானத்தால் அடையத் தக்கவள்
ஞான கம்யா – ஞானத்தால் அடையத் தக்கவள்


என்று அவளை அடையப் பல வழிகளை வரிசைப் படுத்துகிறது, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

தியானத்தையும், ஞானத்தையும் காட்டிலும், என்னைப் போன்ற பாமரர்களுக்காகவே அம்மா, மற்ற இரண்டு வழிகளையும் தந்திருக்கிறாளோ என்று தோன்றும்… “ஆபால கோப விதிதா” அல்லவா, அவள்? எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள்… 


பக்தியும் பாவனையும் ஒன்றுக்கொன்று நிறைய தொடர்புடையவை. பக்தி அதிகரிக்க வேண்டுமானால் பாவனை அவசியம். பாவனை அதிகரிக்க வேண்டுமானால் பக்தி அவசியம். ஒன்றினால் மற்றொன்று மேலும் மேலும் வளரும், சிறப்புப் பெறும். இறைவனை நமக்கு ஏதோ ஒரு விதத்தில் உறவாகப் பாவிப்பதால், நமக்கும் அவனுக்குமான அன்பும் நெருக்கமும் அதிகமாகும்.

இறைவனை பல விதங்களில் பாவித்துக் கொள்ளலாம்…

சாந்த பாவம்:
உணர்வுகளுக்கும் இன்ப துன்பங்களுக்கும் வயப்படாமல், இறைவனையே நினைத்துக் கொண்டு அமைதியாக அன்பாக ஆனந்தமாக இருப்பது. மகாபாரதத்தின் பிதாமகர் பீஷ்மருடைய பக்தி சாந்த பாவத்தைச் சேர்ந்ததாம்.

சாந்த பாவம் என்பது அலட்டிக் கொள்ளாமல் (ரொம்ப ‘ஷோ’ காட்டாமல்), அமைதியாக பக்தி செய்வது.

பீமன், அர்ச்சுனன் செய்யும் சிவ பூஜை பற்றி ஒரு கதை சொல்வார்கள்:

அர்ச்சுனன் தினமும் முறைப்படி சிவபூஜை செய்பவன். அதனால் அவனுக்குத் தானே சிறந்த சிவபக்தன் என்ற எண்ணம் (கர்வம்) இருந்தது. ஒரு நாள் அவன் கைலாயத்திற்குச் செல்லும் போது வழியில் பல வித மலர்கள் மலை மலையாய்க் குவிந்திருந்ததைக் கண்டான். அதைப் பற்றி விசாரித்த போது, அவையெல்லாம் பீமன் சிவ பூஜை செய்த போது அர்ப்பணித்த மலர்கள் என்று அறிந்தான். ஆனால் அவனோ பீமன் பூஜையில் அமர்ந்து பார்த்ததே இல்லை. அப்படி இருக்க இது எப்படிச் சாத்தியம் என்று கிருஷ்ணனை விளக்கம் கேட்டான். கிருஷ்ணனும், பீமன் தன்னுடைய மானசீக பூஜையில், உலகில் பூக்கும் மலர்களையெல்லாம் சிவனுக்கு அர்ப்பணித்து விடுகிறான் என்று விளக்கமளித்தான்.

பீமனைப் போல மானசீகமாக, மனப்பூர்வமாக, வெளிப்பகட்டு இல்லாமல் ஈடுபாட்டுடன் செய்யும் பக்தியே சாந்த பக்தி எனலாம்.

தாஸ்ய பாவம்:
இறைவனை எஜமானனாகவும், தன்னை அவனுடைய வேலைக்காரனாக, தொண்டனாக, அல்லது அடிமையாக பாவித்துக் கொள்ளுதல். ஸ்ரீ ஆஞ்சநேயருடைய பக்தி அப்படிப்பட்டது. ஸ்ரீராமனின் அடிபணிந்து அவர் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அப்பரும் அப்படிப்பட்ட சிவபக்தியே கொண்டிருந்ததாகச் சொல்வார்கள்.

தன்னைப் புல்லினும் கீழாகப் பாவித்துக் கொண்டு, இறைவனையே எல்லாமாகக் கொண்டு அவனுக்கு பணிவிடை செய்வதே தாஸ்ய பாவம்.

அனுமனுக்கு இராமன் என்றால் கொள்ளைப் பிரியம். முதல் முதலாக சுக்ரீவனுக்காக இராம லக்ஷ்மணர்களைப் பற்றி விசாரிக்கச் செல்லும் போதே, ஸ்ரீராமனிடம் அவனுக்கு இனம் புரியாத அன்பும், ஈர்ப்பும் ஏற்பட்டு விடுகின்றன. அது முதல் ஸ்ரீராமனே அவனுக்கு எல்லாம், இராம நாமமே அவனுக்குத் துணை என்றாகி விடுகிறது. 

இராமனுக்குச் சேவை செய்வதே தன் வாழ்வென்று வாழ்ந்தவன் அனுமன். அந்த அன்பில், சேவையில், எந்த வித சுயநல நோக்கமும் இல்லை. சுக்ரீவனும், விபீஷணனும் இராமனுடன் இருந்து, அவனுக்கு உதவிய பின், அவரவர் இராஜ்யத்தைப் பரிசாகப் பெற்றார்கள். ஆனால் அனுமன் மட்டுமே இராமனின் அருகில் இடம் பெற்றான். கோவில்கள் தோறும் அவனே இராமனின் காலடியில் கைகூப்பிய வண்ணம் அமர்ந்திருக்கின்றான். அவனுடைய பக்தி கூட கற்புடையது. இராமனைப் போலவே கிருஷ்ணனும் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்றாலும், அனுமனுக்கு இராமனைத் தவிர எவருமே பொருட்டல்ல. கிருஷ்ணனைக் குறித்துப் பேச்சு வந்த போது, “யார் அந்த கிருஷ்ணன்?” என்று கேட்டவன். அந்த அளவிற்கு ஸ்ரீராமனின் மேல் சற்றும் சஞ்சலமில்லாத ஒருமித்த பக்தியும் அளவற்ற அன்பும் கொண்டவன் அனுமன். அவனது பாவனை தாஸ்ய பாவனை.

சாக்ய பாவம்:
இறைவனைத் தன் நண்பனாகப் பாவித்து, தனக்குச் சரிசமமாக நடத்துவது. அர்ஜுனனும், குசேலரும் ஸ்ரீகிருஷ்ணரின் நண்பர்களாகத் திகழ்ந்ததைப் போல. நால்வரில் ஒருவரான சுந்தரர், சிவபெருமானை நெருங்கிய தோழனாகப் பாவித்தவர். தனக்காகத் தன் மனைவியிடம் சிவபெருமானையே தூதாக அனுப்பியவர்!

பரவை நாச்சியாரை மணந்து கொண்ட பின், சிவத் தலங்களைத் தரிசிக்கச் செல்லும் காலத்தில், விதிப்படி சங்கிலி நாச்சியாரிடமும் பிரேமை கொண்டார், சுந்தரர். இதை அறிந்த பரவையார் சுந்தரரிடம் ஊடல் கொண்டு விட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்காக, இறைவனின் உதவியை நாடிய சுந்தரர், அவரைத் தன் பிரியத்துக்குரிய நண்பராக எண்ணியபடியால், அவரையே பரவையாரிடம் தனக்காகத் தூது செல்லும்படி உரிமையுடன் பணித்தார்! அதற்கிசைந்த பெருமானும், ஒரு முறை அல்ல, இரு முறைகள் திருவடிகள் தேயத் தூது சென்றதைச் சுந்தரரின் வரலாறு கூறும்! அப்பேர்ப்பட்ட அன்பு அவருடையது!

வாத்ஸல்ய பாவம்:
இறைவனைத் தன் குழந்தையாகப் பாவித்து அன்பு செலுத்துதல். குட்டிக் கிருஷ்ணனை ஏதும் அறியாத குழந்தையாகவே நினைத்து அன்பைப் பொழிந்த யசோதையின் பாவம் வாத்ஸல்யம்.

சின்னக் குட்டிக் கிருஷ்ணன் மண்ணை அள்ளி உண்ட போது மிகுந்த கோபம் கொண்டு, அவனை வாயைத் திறக்கச் செய்தாள், யசோதை. அவனுடைய சிறிய திருவாயில், அகிலமே அடங்கியிருப்பதைப் பார்த்து மதி மயங்கி நின்று விட்டாள். அவள் குட்டிக் கிருஷ்ணன் பூதகியைக் கொன்றதை அறிவாள்; கள்ளச் சகடம் உதைத்ததை அறிவாள்; காளிங்கன் மீது நர்த்தனம் புரிந்ததை அறிவாள்… இப்படி அவன் லீலைகள் அனைத்தையும் அறிந்திருந்தாலும், அவன் ஆவினம் மேய்க்கக் கிளம்பும் போது, இல்லாத கவலையெல்லாம் அவளைப் பிடித்துக் கொள்ளும். “என் குட்டிக் கிருஷ்ணனுக்கு ஒன்றுமே தெரியாது… அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்”, என்று பலராமனிடம் படித்துப் படித்துச் சொல்லி அனுப்புவாள்.

மாதுர்ய பாவம்:
இறைவனைத் தன் தலைவனாகப் பாவித்துக் காதலில் திளைத்திருப்பது. பாவங்களிலேயே இதுவே உயர்ந்தது என்பார்கள். ஏனென்றால் மற்ற பாவனைகளில் பக்தன், இறைவனிடமிருந்து சிறிதேனும் விலகியே இருக்கிறான்; இறைவன் வேறு, தான் வேறு என்ற பாகுபாடு இருக்கிறது. ஆனால் மாதுர்ய பாவத்தில்தான் இறைவனத் தன் சரிபாதியாகப் பாவித்து, இரண்டறக் கலந்து விடும் நிலை ஏற்படுகிறது.

இதைப் பற்றிப் பேசும் போது பரதத்தில் சொல்லப்படும் நவரசங்களில் ஒரு ரசமான சிருங்கார ரசம் பற்றி நினைவு வருகிறது. சிருங்கார ரசத்தை ரசங்களுக்கெல்லாம் அரசன் என்பார்கள். பரதக் கலையில் முழு மனதுடன் ஈடுபடுகையில் இறைவனுடன் ஒன்றி விடும் நிலையை அடையலாம் என்பார்கள். சிருங்கார ரசம் மனிதர்களுக்கிடையேயான காதலைச் சித்தரிப்பதல்ல; இறைவனிடம் ஏற்படும் மேலான அன்பைச் சித்தரிக்கவே ஏற்பட்டது. அதனாலேயே அதற்கு ராஜ ரசம் என்ற பெயரும் ஏற்பட்டது. மாதுர்ய பாவத்தை அனுபவிக்கவே சிருங்கார ரசம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

மாதுர்ய பாவத்தினால் இறைவனை அடைந்தவர்கள் ஆண்டாள், மீரா, போன்றவர்கள். ஜெயதேவரின் சிருங்கார ரசம் ததும்பும் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மாணிக்கவாசகர் மாதுர்ய பாவத்தினால் இறைவனை அடைந்ததாகக் கூறுவார்கள்.

அபத்ய பாவம்:
பாவனைகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம், மேற்சொன்ன பாவனைகள் பற்றி மட்டுமே வாசித்திருக்கிறேன். அதனால், இறைவனைத் தாயாகவோ, தந்தையாகவோ கொள்வதற்கு எந்தப் பெயரும் இல்லையா, என்ற கேள்வி அடிமனசில் ஓடிக் கொண்டே இருந்தது. பாவனாகம்யா என்ற நாமத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு, அவளருளால் ஒரு நாள் ஸ்ரீ பரமாச்சார்யார் சொன்னதைப் படிக்க நேர்ந்தது. “தெய்வத்தைப் பல பாவங்களில் வழிபடுவதில் நாம் குழந்தையாகவும் தெய்வம் தாயாகவோ, அல்லது தந்தையாகவோ இருப்பதற்கு 'அபத்ய'பாவம் என்று பேர். ஞானஸம்பந்தர் அப்படிப் பாடினவர்தான்.” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லா வித பாவனைகளாலும் இறைவனை அனுபவித்து அறிந்தவர். அவற்றில் எதனைப் பின்பற்றினாலும், இறைவனை அடையலாம் என்று காட்டியவர். அப்பேர்ப்பட்ட பாவனையால் எளிதாக அடையத்தக்கவள் அம்மா என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.



அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!
 
அன்புடன்
கவிநயா

Monday, November 24, 2014

இயல்பு


தகதகவென ஜொலிக்கும் சூரியன்
குளுகுளுவென மிதக்கும் சந்திரன்
கலகலவென குதிக்கும் கடலலை
சிலுசிலுவென சிரிக்கும் தென்றல்...

சலசலவென ஓடும் ஆறு
படபடவெனப் பாயும் அருவி
கமகமவென மணக்கும் பூக்கள்
சநிதபவென ஒலிக்கும் பாக்கள்...

இவை இயல்பினில் மாறுவதில்லை
தம் கடமையில் தவறுவதில்லை
பிறர் புகழ்ச்சிக்கு ஏங்குவதில்லை
தம் துயரத்தில் துவளுவதில்லை...


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://hdw.eweb4.com/out/1058950.html

Monday, November 17, 2014

பொல்லாச் சிறகு!


 
ஒரு சுஃபி ஞானியும், அவருடைய சீடரும் நடந்து போயிட்டிக்கிருந்தாங்க. அன்றைக்குன்னு பார்த்து அப்படியொரு வெயில். அப்படியே உடம்பெல்லாம் எரியுது. சீடரால தாங்கவே முடியலை. ஆறா வழியற வியர்வையைத் துடைச்சுக்கிட்டே, “அப்பப்பா! இந்த வெயில் என்னமா சுட்டெரிக்குது!” அப்படின்னாரு. உடனே சுஃபி ஞானிக்கு கோபம் வந்திடுச்சு. “இறைவன் ஒவ்வொண்ணையும் ஏதோ ஒரு காரணத்தோடுதான் அமைச்சிருக்கான். அதெப்படி நீ இறைவனோட ஏற்பாட்டைக் குறை சொல்லலாம்?”, அப்படின்னு சொல்லி அந்தச் சீடனையே வேண்டான்னு அனுப்பிச்சிட்டாரு.


சன் தொ.கா.யில் வருகிற “ஆன்மீகக் கதைகளில்”, திரு.சிவகுமார் சொன்ன கதை இது.

இதே கருத்தை ஒட்டி சுகிசிவம் ஐயா அவர்கள் பேசறதையும் கேட்க நேர்ந்தது… ஔவைப் பாட்டியுடைய பாடல்கள்ல, “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி” அப்படிங்கிற பாட்டு ரொம்பப் பிரபலம். அந்தப் பாட்டைப் பற்றித்தான் சுகிசிவம் ஐயா கடுமையா விமர்சனம் செய்தாரு. அதெப்படி ஔவைப் பாட்டி வான்கோழியோட சிறகை “பொல்லாச் சிறகு” அப்படின்னு கிண்டலடிக்கலாம்? அதுக்கு இயற்கையா அமைஞ்சது அதுதான். அதுல அதனோட தப்பு என்ன இருக்கு? மயில் இறக்கையை விரிச்சு ஆடுதுன்னா, அது அதனோட இணையைக் கவர்றதுக்காக ஆடுது. அது என்ன மனுஷங்க சந்தோஷப்படட்டும்னா ஆடுது? வான் கோழியும், தன்னோட இணைக்காக தன் சிறகை விரிச்சு ஆடுது. அது என்ன மயிலைப் பார்த்து, அதே போல அழகா இருக்கணும்னா ஆடுது? அப்படின்னு பொரிஞ்சு தள்ளிட்டாரு.


அவர் சொல்ல வந்தது என்னன்னா, ஒருத்தரை எதுக்காச்சும் பாராட்டணும்னா, அவரைப் பாராட்டறதோட நிறுத்திக்கணும். அவரைப் பாராட்டணும்கிறதுக்காக, மத்தவங்களை மட்டந்தட்டறது சரியில்லை, அப்படிங்கிறதுதான்.


சுஃபி ஞானி கதையும், பொல்லாச் சிறகு விளக்கமும் வேற வேற கருத்துகளுக்காகச் சொல்லப்பட்டதுன்னாலும், எனக்கென்னவோ ரெண்டுமே ஒரே கருத்தை விளக்கற மாதிரி பட்டது… அதாவது கிட்டத்தட்ட சுஃபி ஞானி மாதிரியே சுகிசிவம் ஐயாவுக்கும் இறைவனோட (அல்லது இயற்கையோட) படைப்பைக் கிண்டல் பண்றது பிடிக்கலை!


உலகத்தில் உள்ள ஜடப் பொருட்களையும் மனுஷங்களையும், “என்னுடையது, என்னுடையது”ன்னு சொல்லிக் கொண்டாடறோம். அதனாலதான் அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா மனசு பதறிப் போயிடுது. அதே போல இறைவனையும், “இவன் என்னுடையவன்”ன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டா, மற்றதெல்லாமே “என் இறைவனுடையது”ன்னு ஆகிடும் தானே?


விவேகானந்தர் சொல்லுவார், “முதலில் இறைவனை நேசிக்கக் கற்றுக் கொள், பிறகு உலகத்தை நேசிப்பது தானாக நடக்கும்”, அப்படின்னு. அது இப்பதான் இலேசா புரியற மாதிரி இருக்கு…




எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்

கவிநயா


படத்துக்கு நன்றி... http://images.travelpod.com/tripwow/photos/ta-00cd-d3c4-16cc/one-friendly-peacock-at-the-bird-park-kuala-lumpur-malaysia+1152_12952380932-tpfil02aw-8497.jpg


Monday, November 3, 2014

சூரியனும், குகையும்

சூரியனும், குகையும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டார்கள். சூரியனுக்கு, குகை சொல்லுகின்ற இருள் என்றால் என்ன, குளிரான ஈரமான இடம் என்றால் என்ன, என்று புரியவில்லை. அதே போல் குகைக்கும் சூரியன் சொல்லுகின்ற ஒளி என்றால் என்ன, பளிச்சென்ற தெளிவான இடம் என்றால் என்ன, என்றும் புரியவில்லை. அதனால், இரண்டு பேரும் மற்றவர் இடங்களைச் சென்று பார்வையிடலாம் என்று தீர்மானித்தார்கள். 

குகை, சூரியன் இருக்குமிடத்திற்கு வந்தது. “ஆஹா, எவ்வளவு அருமையாக இருக்கிறது உன் இடம்! கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புதமாக இருக்கிறது! சரி… இப்போது நீ வந்து நான் இருக்கும் இடத்தைப் பார்”, என்றது. 

குகைக்கு வந்து பார்த்த சூரியன், “எனக்கு ஒன்றும் வித்தியாசமே தெரியவில்லையே!” என்றதாம்!

இதிலிருந்து என்ன தெரிகிறது? நீங்களே சொல்லுங்களேன்!


எல்லோரும் நல்லாருக்கணும்!
 
அன்புடன்
கவிநயா