Friday, May 31, 2013

இது, அது, எது?

இன்றைக்கு வலைச்சரத்தில் கதம்பச்சரம்...வந்து நுகருங்கள்!

Thursday, May 30, 2013

Wednesday, May 29, 2013

சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்

வலைச்சரத்தில் இன்று சுவைச்சரம்... சாப்பிட வாங்க!

Tuesday, May 28, 2013

Monday, May 27, 2013

கதையும் கதை சார்ந்த பதிவுகளும்

வலைச்சரத்தில் இன்று கதைச்சரம்....

வாசிக்க வாருங்கள்!

Sunday, May 26, 2013

இந்த வாரம் வலைச்சரத்தில்...

இன்று முதல்...

நேரம் கிடைத்தால் அங்கே வாருங்களேன்...


அன்புடன்
கவிநயா

Monday, May 20, 2013

தாய்மை


(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது)


"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்?" தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை போல் மிகச் சாதாரணமாக வந்து விழும் கேள்வியைக் கேட்டவுடன் அவள் முகம் கோபத்தில் சிவக்கிறது.

தன் மக்களைக் கொன்ற தரும தேவனைக் கட்டிய கண்கள் வழியே காந்தாரி தேவி நோக்குகையில், அவள் கோபத்தினால் அவனுடைய கால் கட்டை விரல் வெந்து கருகி விட்டதாம். இப்போது மாலுவிற்கும் அந்த சக்தி இருந்திருந்தால், சந்தோஷின் முகத்திற்கும் அதே கதி ஏற்பட்டிருக்கும். அதற்கு அஞ்சியோ என்னவோ தன் கண்களைத் தழைத்துக் கொண்டு, பல்லைக் கடித்துக் கொண்டு, மௌனம் சாதிக்கிறாள்.

அதை உணர்ந்தது போல், "எத்தனை நாள் ஆறது, மாலு?", கொஞ்சம் கனிவுடன் வருகிறது அவன் கேள்வி இப்பொழுது. "45", அதற்கு மேலும் அந்த உரையாடலைத் தொடர விரும்பாதவளாய் அந்த இடத்தை விட்டு விலகுகிறாள்.

திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக நாள் தள்ளிப் போயிருக்கிறது. அம்மாவுக்கோ, மாமியாருக்கோ தெரிந்திருந்தால் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டாடியிருப்பார்கள், இந்நேரம். சந்தோஷும் மாலுவும் இவ்வளவு சஞ்சலப் படுவதற்குக் காரணம், இந்தக் கர்ப்பம் அவர்களின் "ஐந்து வருடத் திட்டத்"தில் இல்லாததுதான்.

அவள் எம்.பி.ஏ. முடிக்க இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போது குழந்தையைப் பெற்றுக் கொண்டு என்ன செய்வது? அவள் அம்மா எவ்வளவோ முறை சொல்லி விட்டார்: "பேசாம ஒரு புள்ளயப் பெத்து என் கையில குடுத்துட்டு நீ எவ்வளவு வேணுன்னாலும், படி. இதெல்லாம் நமக்கு வேணுங்கிற போது கிடைக்காதுடா. கிடைக்கிற போதே நம்மளா எடுத்துக்கிட்டாத்தான் உண்டு". ஆனால் இவளுக்கோ, குழந்தை என்று பெற்றுக் கொண்டால் அது தன்னிடம் தான் வளர வேண்டும் என்ற எண்ணம்.

பலவற்றையும் நினைத்துப் பார்க்கையில் மூளை குழம்பியதுதான் மிச்சம். சந்தோஷிடமிருந்தும் எதுவும் உதவி கிடைக்கிறாற்போல் தெரியவில்லை.

மறு நாள் தன் நெருங்கிய தோழி அனிதாவிடம் தன் பிரச்சினையைச் சொல்லிப் புலம்புகிறாள். "ஏய், அதெல்லாம் இருக்கட்டும், நீ முதல்ல இது கர்ப்பம் தானா என்னன்னு உறுதி பண்ணிக்கிட்டியா, இல்லயா?" இரண்டு குழந்தைகளைப் பெற்ற அனிதா கேட்கிறாள்.

"இன்னும் இல்ல. ஆனா எனக்கு இது வரை நாள் தள்ளினதே இல்லயே?" புரியாமல் கேட்கும் மாலுவைப் பார்த்துச் செல்லமாகத் தலையில் அடித்துக் கொள்கிறாள், அனிதா.

"மக்கு, மக்கு. அந்த ஒரு காரணத்தாலேயே அது கர்ப்பம்னு அர்த்தம் இல்ல. இன்னிக்கே டாக்டர்ட்ட போய்ச் செக் பண்ணிக்கோ".

மாலுவிற்கு என்னவோ எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும் அனுபவமுள்ள தோழியின் கட்டளையைச் சிரமேற் கொண்டு மருத்துவரைப் போய்ப் பார்த்து விட்டு வருகிறாள். ஒரு பக்கம் தான் அம்மாவாகும் கனவுகளில் தன்னை அறியாமலேயே அவள் உள்ளம் துள்ளுகிறது. இன்னொரு பக்கம் இன்னும் ஒரே ஒரு வருடம் மட்டும் கழிந்து விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக அம்மாவாகலாம் என்ற எண்ணமும் அடிக்கடி ஏற்படுகிறது.

அன்று மாலை அவள் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த தொலை பேசி அழைப்பு வருகிறது. "உங்க டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ்வா வந்திருக்குங்க, மாலதி. உங்களுக்கு வேற எந்தக் காரணத்தாலேயோதான் நாள் தள்ளிப் போயிருக்கு. இன்னும் இரண்டு நாள்ல உங்களுக்கு மாத விலக்கு வரலன்னா, மறுபடியும் என்னை வந்து பாருங்க", என்கிறார், டாக்டர்.

அவளுக்கு எதனாலோ அழுகை குமுறிக் கொண்டு வருகிறது.


-- கவிநயா



Monday, May 13, 2013

அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.


லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற அன்னையின் நாமங்கள்.

அந்தர் முகம் என்றால் உள் முகமாக. உள் நோக்கி.
பஹிர் முகம் என்றால் வெளி முகமாக. வெளி நோக்கி.

உள் நோக்கிய, ஒருமுகப் பட்ட மனதால் மட்டுமே அறியப்படுபவளாம், லலிதாம்பிகை.
வெளிப்புறத்தில் எங்கு, எப்படி நோக்கினாலும் நமக்குச் சிக்க மாட்டாளாம்.


அவளை நினைக்கும் போதும், பூஜிக்கும் போதும், ஒரு முகமாக அவளை நினைக்க வேண்டும்.  மனம் நிறைந்த அன்பு இருக்க வேண்டும். பக்தி இருக்க வேண்டும். அதல்லாமல், வெளி நோக்கிற்காக மட்டுமே, வெளிப் பகட்டிற்காக மட்டுமே அவளை பக்தி செய்வதாக பாவித்தால், அவளை அறிய முடியாது என்கிறது லலிதா சகஸ்ரநாமம். புற வெளிப்பாடுகள் அவளைப் பொறுத்த வரை அவசியம் இல்லாதவை. புறத்தில் எப்படி இருந்தாலும், மனதில் தூய்மையான பக்தி இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.

சில பேர் எக்கச்சக்கமாக பணத்தைச் செலவழித்து ஆடம்பரமாக ஹோமங்கள் செய்து, தான தருமங்கள் செய்வார்கள். ஆனால் அவர்கள் மனதில், “எவ்வளவு செய்கிறோம், எவ்வளவு நன்றாகச் செய்கிறோம்” என்ற எண்ணம் வந்து விட்டால், செய்தது அத்தனையும் வியர்த்தமாகி விடும். அதே சமயம், ஒரு சிறிய மலரால் பூசித்தாலும், அன்புடனும், அடக்கத்துடனும் அன்னைக்கு அர்ப்பணித்தால் அதிலேயே அவளுக்கு ப்ரீதி அதிகம் ஏற்படும்.

சிலர் தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்வார்கள். ஆனால் ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்களும் காதுகளும் மற்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருக்கும்; வாய் பேசிக் கொண்டே இருக்கும். “கொஞ்சம் அந்த அடுப்பை அணைச்சுடுங்களேன்…”, என்றும், “கண்ணா, ஃபோன் அடிக்குது பாரு… எடுத்து, அப்புறம் கூப்பிடறேன்னு சொல்லிடேன்…” என்றும் ஸ்லோகத்தோடு சேர்த்தே சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐம்புலன்களையும் அடக்கி (அல்லது முயற்சியாவது செய்து), உள்ளத்தை அவளிடம் திருப்பினால்தானே அவளை அடைய முடியும்?

மகாபாரதத்தில் பல உப கதைகள் உண்டு. அவற்றில் ஒன்று, ஒரு கீரிப் பிள்ளையின் கதை. நினைவிலிருந்து சொல்கிறேன், கதை ரொம்பச் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது; கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மகாபாரதப் போர் முடிந்த பிறகு தருமன் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்கிறான். அந்தக் காலத்தில் ராஜாக்கள் யாகங்கள் செய்து, அவை முடியும் தருவாயில் அளவில்லாமல் தான தருமங்கள் செய்வார்கள். அப்படி யாகம் முடியும் சமயத்தில், ஒரு கீரிப் பிள்ளை அங்கு வருகிறது.

அந்தக் கீரிப் பிள்ளை, பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. எப்படி என்றால், அதனுடைய ஒரு பக்க மேனி முழுவதும் தங்க மயமாக இருக்கிறது. மற்றொரு புறம் சாதாரணமாக, அதனுடைய நிறத்திலேயே இருக்கிறது. இந்த அதிசயக் கீரிப் பிள்ளையை எல்லோரும் அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்தக் கீரிப்பிள்ளை, யாக சாலை முற்றிலும் சுற்றி,  தானம் கொடுக்கையில் சிந்தியிருக்கும் தானியங்களிலும், மாவுகளிலும், மற்ற பொருட்களிலும், தன் உடம்பு முழுக்க படுமாறு புரண்டு எழுந்து வருகிறது. பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டு, ஒரு பெரிஞ் சிரிப்பு சிரிக்கிறது.

இத்தனை நேரம் இதனை வேடிக்கை பார்த்தவர்கள் என்னடா இது, இந்தக் கீரிப் பிள்ளை வித்தியாசமாக இருப்பதோடல்லாமல், மனிதர்களைப் போல சிரிக்க வேறு செய்கிறதே என்று அசந்து போய் விடுகிறார்கள்.

“ஏய், கீரிப் பிள்ளையே! எங்கள் யாக சாலைக்கு வந்தது மட்டுமல்லாமல் ஏன் இப்படி ஏளனமாகச் சிரிக்க வேறு செய்கிறாய்? ஏன் உன் உடல் ஒரு பக்கம் மட்டும் தங்க மயமாக இருக்கிறது?” என்று கேட்கிறார்கள்.

அதற்குப் பதிலாக அந்தக் கீரிப் பிள்ளை அனைவரது ஆச்சர்யத்துக்கும் நடுவில் மனிதர்களைப் போல் பேசவும் ஆரம்பிக்கிறது.

“சிறிது காலம் முன்பு, நான் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்த போது, ஒரு வீட்டில் நடந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள். அந்த வீட்டில், ஒரு பிராமணரும், அவர் மனைவியும், இளம் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்கள். அவர்கள் மிகவும் ஏழைகள். தினமும் உஞ்சவிருத்தி செய்து, அதில் கிடைப்பதை அன்றன்றைக்கு சமைத்து சாப்பிட்டு வந்தார்கள். இப்படி இருக்கையில், ஒரு நாள், சோதனையாக அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. கொஞ்சம் சோளம் மட்டுமே கிடைத்தது. அந்தக் குடும்பத் தலைவியும் அந்த சோளத்தை மாவாகத் திரித்து சாப்பிடுவதற்குத் தயார் செய்தாள். அந்த சோள மாவை, ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்து கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள்.

அந்த சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு ஒரு அதிதி வந்து சேர்ந்தார். நமக்கே இல்லை, இப்போது விருந்தாளி வேறா என்றெல்லாம் சங்கடப் படாமல், வந்தவரை மகிழ்வோடு வரவேற்றார்கள். அவர் மிகவும் பசியோடு வந்திருப்பதை அறிந்து, குடும்பத்தின் தலைவர் தன் பங்கு சோள மாவை அவருக்கு உண்பதற்கு அளித்தார். ஆனால் அதிதியின் பசிக்கு அது போதவில்லை. அதைக் கண்ட குடும்பத் தலைவி தன் பங்கையும் அவருக்கு அளித்தார். அப்படியும் அவர் பசி அடங்கவில்லை. அதன் பின் இளம் பிள்ளையும், பிறகு அவன் மனைவியும், இப்படி எல்லோருமே தங்கள் பங்கை அதிதிக்குக் கொடுத்து விட்டார்கள். அதன் பிறகே அவர் பசி ஒருவாறு தீர்ந்தது.

தங்கள் உணவை அவருக்குத் தந்த போது அவர்களில் யாருமே வேண்டா வெறுப்பாகத் தரவில்லை. அனைவருமே, மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும், மனமுவந்தும், தங்கள் பங்கை அவருக்குத் தந்தார்கள். அதன் பிறகு ஒரு தேவ விமானம் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றது. இதை நான் என் கண்களால் பார்த்தேன்”, என்ற கீரிப் பிள்ளை, “அப்போது அங்கு சிந்திக் கிடந்த சோள மாவில் நான் புரண்ட காரணத்தால் என் ஒரு பக்க உடம்பு முழுவதும் சுவர்ண மயமாகி விட்டது. அது முதல் நானும் இந்த உலகில் நடக்கும் எத்தனையோ யாகங்களுக்குச் சென்று பார்த்து விட்டேன், என் உடம்பின் மறுபாதியைச் சுவர்ணமயமாக்கும் தகுதி இது வரை எவர் செய்த தான தருமங்களுக்கும் இல்லை”, என்றதாம்!

உள்ளார்ந்த ஈடுபாட்டோடு, பலன் எதிர்பாராது செய்யும் செயலே சிறந்த பலன் அளிக்கும்.

ஸ்ரீ ராமானுஜரைப் பற்றியும் ஒரு செய்தி சொல்வார்கள். ஒரு முறை அவர் சீடர்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்தாராம். வழியில் சில சிறுவர்கள் ஒரு கல்லை எடுத்து அதை சுவாமியாகப் பாவித்து பூசைகள் செய்து, சிறிய மரக் குச்சிகளால் பல்லக்கு போல செய்து, அதில் அந்த சுவாமியை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தார்களாம். பிறகு பாவனையாகவே தீர்த்தம், பிரசாதம், எல்லாம் கொடுத்தார்களாம். அதனை ஸ்ரீ ராமானுஜரும் மிகுந்த பயபக்தியோடு பெற்றுக் கொண்டாராம். அவரோடு இருந்த சீடர்கள், “இந்தப் பிள்ளைகள் விளையாட்டுக்குச் செய்வதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களே?” என்று கேட்டார்களாம். “அவர்கள் விளையாட்டாகச் செய்தாலும், அவர்கள் பாவனையில் உள்ளார்ந்த அன்பும் பக்தியும் இருக்கிறது. அதனால்தான் ஏற்றுக் கொண்டேன்”, என்று பதிலளித்தாராம்.

இதனையே வாக்தேவதைகளும் லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்கிறார்கள்.

உள்ளன்போடு செய்யும் செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுவே இறைவனை மகிழ்விக்கும். இதற்கு உதாரணமாகப் பலப்பல அடியார்களின் சரித்திரங்கள் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், சபரித் தாயார், இப்படி எத்தனையெத்தனையோ.

அன்பே உருவான அன்னையை உள்ளார்ந்த அன்போடு உள்ளத்துள்ளே வைத்து வழிபட்டு, அவள் அருளைப் பெறுவோம்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

நன்றி: வல்லமை

படத்துக்கு நன்றி: http://mahasakthipeetam.wordpress.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/
 

Monday, May 6, 2013

திரை


“என்ன  வாழ்க்கை இது?” சலிப்பாக இருந்தது. சஞ்சலம் நிறைந்த மனது அங்குமிங்கும் அலை பாய்ந்தபடி இருந்தது. மனசைச் சமாதானப் படுத்துவதற்காக கோவிலுக்கு வந்தால், நான் வந்த நேரம் சரியாக திரை போட்டு விட்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் காத்திருந்து பார்க்கலாம் என்று எண்ணமிட்டபடி சுற்றுப் பிரகாரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். 

பூனை இருக்கிறதே... அது தன் கண்ணை மூடிக் கொண்டு, உலகமே இருண்டு விட்டது என்று நினைத்துக் கொள்ளுமாம். அதைப் போல கண்களை மூடியவுடன் மனசில் உள்ள துயரங்களும், சஞ்சலங்களும் விடை பெற்று விடுவதாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.  ஆனால், இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ தியானத்தில் ஆழ்ந்து விட்டதாக நினைத்துக் கொள்வார்கள். இந்த நினைப்பு வந்ததும், அந்த நிலையிலும், இதழ்களில் இலேசாகச் சின்னப் புன்னகை ஒன்று எட்டிப் பார்க்க எத்தனித்தது.

அதற்குள், “ஆன்ட்டி, ஏன் அழறீங்க?” என்று சின்னக் குரல் ஒன்று கேட்டது. அதே சமயம் சிறு கரம் ஒன்று என் கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்தது. அப்போதுதான் மனசின் புலம்பல் கண்ணீராகி விட்டிருந்ததையே உணர்ந்தவளாக, விழிகளைத் திறந்து பார்த்தேன். அழகிய சின்னஞ் சிறுமி ஒருத்தி என் அருகில் நின்று கொண்டிருந்தாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் 5 அல்லது 6 வயது இருக்கும்.

நான் கண்களைத் திறந்ததும், பல நாள் பழகியவளைப் போல சுவாதீனமாக என் மடியில் அமர்ந்து கொண்டாள்.

“ம்… எனக்கு யாருமே இல்ல, அதான் அழறேன்…”, என்று வேடிக்கையாகச் சமாளித்தபடி அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன். முன் பின் தெரியாத அந்த சின்னக் குழந்தையின் அக்கறை மேலும் கண்ணீரை வரவழைத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன், அவளோடு வந்திருப்பவர்கள் யாரென்று அறிவதற்காக. யாருமே இந்தக் குழந்தையைக் கவனிப்பதாகத் தெரியவில்லை.

“ஏன், உங்களுக்கு ஃப்ரண்டே இல்லையா?” என் மோவாயை அவளுடைய தளிர் விரல்களால் இலேசாகத் தொட்டபடி, இரக்கத்துடன் கேட்டாள்.

“இல்லையே…”, நானும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னேன். 

“உனக்கு?”

“எனக்கு... ம்... எனக்கு, அபி, காயத்ரி, சுந்தர்...", சின்ன விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி, "எனக்கு இவ்ளோ ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களே....", என்றாள்.

"அட... அவ்ளோ ப்ரெண்ட்ஸா? சரி... அதுல பெஸ்ட் ப்ரெண்டு யாரு உனக்கு?" என்றதும்,

"என் அம்மாதான் எனக்கு பெஸ்ட் ஃப்ரண்டு. உங்களுக்கும் அவங்களை ஃப்ரண்டா இருக்கச் சொல்றேன். சரியா? நீங்க அழாம இருக்கணும்!”

“பரவாயில்லையே… தாங்க்யூடா செல்லம்.”

மறுபடி சுற்றிலும் பார்த்தபடி, “உன் அம்மா எங்கே?” என்று கேட்டேன்.

“இங்கேதான் இருக்காங்க. வாங்க, காண்பிக்கிறேன்…” என் மடியிலிருந்து எழுந்தபடி, உரிமையுடன் என் கையைப் பிடித்து இழுத்தாள்.

வேறு வழியில்லாமல் நானும் அவளுடன் எழுந்தேன். இப்பேற்பட்ட சமத்துக் குழந்தையின் அம்மா யாரென்று பார்க்க எனக்கும் ஆவலாக இருந்தது.

“அதோ…. அம்மா!” என்றாள் குழந்தை.

அவள் கை காட்ட, சரியாக அந்த சமயத்தில் திரை விலக, “டாண், டாண்” என்று கண்டாமணி ஒலிக்க, அம்பாள் அடுக்குத் தீபத்தின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குப் பின் அந்தக் குழந்தையைக் கோவில் முழுக்கத் தேடியும், தென்படவில்லை.


--கவிநயா