Sunday, October 28, 2012

மேகம்




நிறைந்த வெண்ணெய்த் தாழி ஒன்றை
நீலக் கண்ணன் உடைத்தானோ
நீல வானை அலங்கரிக்க
மேகம் என்று அழைத்தானோ!

பிஞ்சுப் பாதம் எங்கும் பதித்து
பஞ்சுப் பொதியாய் அமைத்தானோ
புல்லாங் குழலின் இசைக்குத் துணையாய்
மின்னல் இடியைப் படைத்தானோ!

காதல் கதிரவன் பார்வை கண்டு
நீயும் நாணிச் சிவந்தனையோ
அழகாய் வரைந்த ஓவியம் போலே
அற்புத வர்ணம் கொண்டனையோ!

நிர்மலமான மழலை நெஞ்சாய்
நீல வானம் நிறைத்தனையோ
நீரைக் கருவாய்ச் சுமந்து வந்து
நீள்நிலப் பசியைத் தணித்தனையோ!

ஊடல் கொண்ட தலைவி போலே
வதனம் கறுத்து வாடினையோ
கோபக் குமுறல் நீங்கும் வரையில்
கொட்டி தீர்ந்து ஓய்ந்தனையோ!

தாயை அணைக்கும் சேயைப் போலே
தரணியை முத்தம் இட்டனையோ
புலவர் பாடும் தமிழைப் போலே
பொங்கிப் பெருகிப் பொழிந்தனையோ!

-- கவிநயா


6 comments:

  1. //நிறைந்த வெண்ணெய்த் தாழி ஒன்றை
    நீலக் கண்ணன் உடைத்தானோ
    நீல வானை அலங்கரிக்க
    மேகம் என்று அழைத்தானோ!

    பிஞ்சுப் பாதம் எங்கும் பதித்து
    பஞ்சுப் பொதியாய் அமைத்தானோ
    புல்லாங் குழலின் இசைக்குத் துணையாய்
    மின்னல் இடியைப் படைத்தானோ!//

    அழகாக ஆரம்பித்து அற்புதமாக முடித்திருக்கிறீர்கள். மேகங்களைப் பார்க்கையில் இனி இந்த வரிகள் நினைவுக்கு வரும். அருமை கவிநயா.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  2. ஒன்றை ஒன்று ஒப்பிட்டு அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் :)

      Delete
  3. வளமான கற்பனை; அந்தக் கற்பனை நிஜமானது போல நிறைந்த வெண்ணைய் தாழி உடைந்ததற்குப் பின்பு இங்கு இப்பொழுது மின்னல், இடி, மழை என்று
    நீள் நிலப் பசி தணிந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இல்லை? :) வெகு நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே அழைத்து வந்த மேகத்திற்கு நன்றி, ஜீவி ஐயா :)

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)