Sunday, October 28, 2012

மேகம்




நிறைந்த வெண்ணெய்த் தாழி ஒன்றை
நீலக் கண்ணன் உடைத்தானோ
நீல வானை அலங்கரிக்க
மேகம் என்று அழைத்தானோ!

பிஞ்சுப் பாதம் எங்கும் பதித்து
பஞ்சுப் பொதியாய் அமைத்தானோ
புல்லாங் குழலின் இசைக்குத் துணையாய்
மின்னல் இடியைப் படைத்தானோ!

காதல் கதிரவன் பார்வை கண்டு
நீயும் நாணிச் சிவந்தனையோ
அழகாய் வரைந்த ஓவியம் போலே
அற்புத வர்ணம் கொண்டனையோ!

நிர்மலமான மழலை நெஞ்சாய்
நீல வானம் நிறைத்தனையோ
நீரைக் கருவாய்ச் சுமந்து வந்து
நீள்நிலப் பசியைத் தணித்தனையோ!

ஊடல் கொண்ட தலைவி போலே
வதனம் கறுத்து வாடினையோ
கோபக் குமுறல் நீங்கும் வரையில்
கொட்டி தீர்ந்து ஓய்ந்தனையோ!

தாயை அணைக்கும் சேயைப் போலே
தரணியை முத்தம் இட்டனையோ
புலவர் பாடும் தமிழைப் போலே
பொங்கிப் பெருகிப் பொழிந்தனையோ!

-- கவிநயா


Friday, October 19, 2012

எழில் மிகு அலைமகள்

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!

நவராத்திரிக்கு துர்க்கை பாடல் இங்கே இட்டிருந்தேன், சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடித் தந்தார்... இப்போது மகாலக்ஷ்மிக்கான பாடல் இங்கேயே :) சுப்பு தாத்தா அடானாவில் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!


மதியொளி முகத்தினள் கதிரொளி நிறத்தினள்
தாமரைக் கரத்தினள் தங்கத்தின் குணத்தினள்!

அலைகடல் நடுவினில் அவதரித்தவள் அவள்
அரிதுயில் மாலவன் மனங்கவர் மனையவள்
விரிமலர் மீதினில் வீற்றிருப்பவள் அவள்
பரிகின்ற தாயென புவியினைக் காப்பவள்!

மரகத வண்ணனின் மார்பினில் உறைபவள்
மறைக ளெல்லாம் போற்றும் மங்கலப் பெண்ணவள்
கருவிழி இரண்டினால் உறுவினை அழிப்பவள்
கவிமழை யில்மகிழ்ந்து கனிமழை பொழிந்தவள்!


--கவிநயா

நன்றி: வல்லமை