Sunday, April 1, 2012

உங்களுக்கும் இப்படியெல்லாம் தோணுமா?

மீபத்தில் ‘ரீடர்ஸ் டைஜஸ்டி’ல் ஒரு கட்டுரை படிச்சேன். “Are you nuts?” அப்படிங்கிறது தலைப்பு.

சிலருக்கு சில வினோதமான பழக்கங்கள் இருக்கும். சாதாரண பழக்கம்தான்னு இந்தப் பக்கமும் சேர்க்க முடியாது, பைத்தியம்னு அந்தப் பக்கமும் சேர்க்க முடியாது. அப்படி ரெண்டுங்கெட்டானா இருக்கும். அதைப் போல பழக்கங்கள் இருக்கவங்களுக்கு, தன் மேலேயே சந்தேகம் வரும் – “நான் பைத்தியமோ?” அப்படின்னு. அந்த மாதிரி ஆளுங்கல்லாம் தங்களோட வித்தியாசமான பழக்கங்களை ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு எழுதி இருக்காங்க. அவங்க, அதை மனோதத்துவ நிபுணர்களிடம் காண்பிச்சு, கருத்து கேட்டு, அவங்க நிஜமாவே மருத்துவ உதவியை நாடணுமா, இல்லை கண்டுக்க வேண்டிய அளவுக்கு அது ஆபத்தான பழக்கம் இல்லையா, அப்படின்னு சொல்லி இருக்காங்க.

உதாரணத்துக்கு, ஒரு பொண்ணுக்கு, எதையாவது வாசிக்கும் போது முடியை விரலில் சுற்றி சுற்றி விளையாடுகிற பழக்கம் இருக்காம். படிக்கும் போது மட்டும். இது நாமளே அடிக்கடி பார்க்கிற பழக்கம்தான்.

இன்னொருத்தங்களுக்கு கார் ஓட்டும் போது தனக்கு சரிக்குச் சரியா (parallel – ஆ) பக்கத்து lane-ல கார் வர்றதைத் தாங்கவே முடியாதாம். அந்தக் காருக்கு முன்னாடி இல்லாட்டி பின்னாடிதான் போகணுமாம்.

ஒருத்தருக்கு பழையது எதையுமே தூக்கிப் போட மனசே வராதாம்.

இப்படிப் பல பழக்கங்கள், கேள்விகள், அவற்றுக்கு நிபுணர்களின் பதில்கள்.

இன்னொண்ணுதான் ரொம்ப வேடிக்கையா இருந்தது. ஒரு பெண்ணுக்கு, டிராயர்ல நிறைய spoons இருக்கும் போது, அதில் இருந்து ஒண்ணே ஒண்ணு தேர்ந்தெடுக்கிறதுன்னா ரொம்பக் கஷ்டப்படுவாங்களாம்! அப்படியே ரொம்பக் கஷ்டப்பட்டு எப்படியோ எடுத்துட்டாங்கன்னு வைங்க, அப்புறம் அவங்க எடுக்காம விட்ட மற்ற spoons-க்காக வருத்தப்படுவாங்களாம்! இது எப்படி இருக்கு?

எனக்கும் சில விஷயங்கள் இந்த மாதிரி தோணும். (அச்சோ, ஸ்பூன் விஷயத்தைச் சொல்லலைங்க!) எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சு சாப்பிடணும்? வயிற்றில் ஒரு zip இருந்தா எல்லாத்தையும் உள்ள போட்டு மூடிடாலாமேன்னு சின்னப் பிள்ளையா இருக்கும் போதே தோணியிருக்கு. வேறு சிலருக்கும் இதே மாதிரி தோணியிருக்குன்னு பிற்காலத்தில் தெரிஞ்சுக்கிட்டேன் :)

சில பேர் நம்ம பக்கத்தில் இருக்கும் போதே ரொம்ப ரொம்ப சத்தமா பேசுவாங்க. அந்தக்கால ரேடியோவில எல்லாம் திருகற மாதிரி volume பட்டன் இருக்குமே. அந்த மாதிரி கத்திப் பேசறவங்க தொண்டையில் ஒரு பட்டன் இருந்தா, வால்யூமைக் குறைக்கலாமேன்னு தோணும். அதே போல சிலர் மெதுவா பேசுவாங்க. அவங்களுக்கு வால்யூமை அதிகம் பண்ணனும். (ஹி..ஹி… எனக்கு சொல்லலை!)

சில பேர் மூச்சு விடக் கூட நேரம் எடுத்துக்காம, மத்தவங்களையும் பேச விடாம, நிறுத்தாம படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு ஒரு mute பட்டன் இருந்தா நல்லாருக்கும்!

தேவையில்லாம மத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைச்சு, வம்பு பேசறவங்களோட மூக்கு, அவங்க வம்பு பேசப் பேச, பினோக்கியோவுக்கு மாதிரி நீ……ளமா வளந்தா எப்படி இருக்கும்!

வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது சில விஷயங்களை வேற மாதிரி செய்திருக்கலாம்னு தோணும். ஒரு rewind பட்டன் இருந்தா, rewind பண்ணிட்டு திரும்பி வேணுங்கிற இடத்திலிருந்து ஆரம்பிக்கலாமேன்னு தோணும். (ஆனா, உண்மையில் அப்படி இருந்தா இன்னும்தான் கஷ்டம்தான்னும் தோணுது!).

இதைப் பற்றிப் பேசும் போது ஆங்கில படம் ஒண்ணு நினைவு வருது. அந்த ஹீரோவுக்கு அப்படித்தான், ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி சம்பவங்களா நடக்கும். காலைல எழுந்திருக்கும்போதே அவனுக்கு தெரிஞ்சிருக்கும், இன்னிக்கு யார் யாரைப் பார்ப்போம், என்னென்ன சாப்பிடுவோம், என்னென்ன நடக்கும், இப்படி ஒவ்வொரு சின்ன விஷயம் கூட தெரியும். அவனுக்கு அப்படியே முடியைப் பிச்சுக்கலாம் போல இருக்கும். ஒரே வாழ்க்கையை, அதுவும் அடுத்த நிமிஷம் இன்னது நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்ச வாழ்க்கையை தினம் தினம் வாழ யாருக்குத்தான் பிடிக்கும்?

பிறகுதான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியும். கண்ல தெரியற ஒவ்வொரு பிரச்சனையையும் அது வரைக்கும் கண்டுக்காம போயிக்கிட்டிருந்தவன், கொஞ்சம் நிதானிச்சு, தன்னைப் பற்றி மட்டும் யோசிக்கிறதை விட்டுட்டு, மற்றவங்களுக்கு உதவி செய்து, அவங்க பிரச்சனைகளை ஒவ்வொண்ணா தீர்த்து வைப்பான். பிறகு அவன் வாழ்க்கை பழையபடி ஆயிடும்.

இந்த மாதிரி சில ஆங்கிலப் படங்களில் கற்பனை அபாரமா இருக்கும். ரீவைண்ட்னு சொன்னதால நினைவு வந்தது.

நம்ம நாட்டைப் பற்றி நினைக்கும் போதும் ஆதங்கமா இருக்கும். எவ்வளவு குப்பைகள், நாடு முழுக்க. குப்பைன்னா கூட்டித் தள்ள முடியாத குப்பையைகளையும் சேர்த்துத்தான் சொல்றேன். கணினி மாதிரி இருந்தா, ctr+alt+del அமுக்கி, reboot பண்ணி, முதல்ல இருந்து சுத்தமா ஆரம்பிக்கலாமேன்னு தோணும்!

நேற்றுதான் எங்க ஊர்ல 10K ன்னு சொல்லி, மாரத்தான் ஓடறவங்க, நடக்கறவங்க, இவங்கல்லாம் கலந்துக்கற நிகழ்ச்சி. தோழிகளும், நானும், குடும்பத்தினரும், கலந்துகிட்டோம். கிட்டத்தட்ட 40000 பேராம். நம்மூர் திருவிழாக் கூட்டம் மாதிரி, எங்க பார்த்தாலும் தலைதான். நாங்க வந்த போது போக்குவரத்து (அதாங்க, சுத்தத் தமிழ்ல traffic!) ரொம்பவே அதிகமாயிடுச்சு. ரொம்ப நேரம் ஊர்ந்து வர வேண்டியதா இருந்தது மட்டுமில்லாம, காரை நிறுத்தவும் இடமே கிடைக்கலை! நேரம் வேற ஆகிக்கிட்டிருந்தது. அப்பதான், இந்த மாதிரி நேரங்கள்ல, அவசரத்துக்கு காரை மடிச்சு கைப்பையில் வச்சுக்கிட்டு போற மாதிரி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு தோணுச்சு!

காரை parallel park பண்ண வேண்டியிருக்கும் போது, முன்னாடியும் பின்னாடியும் மெதுவா மெதுவா நகத்தி கஷ்டப்படாம, அதை அப்படியே தூக்கி வைக்க முடிஞ்சா எவ்வளவு சுலபம்னு என் தோழிக்கு தோணுமாம்.

எல்லாம் சரி, இதையெல்லாம் படிச்ச பிறகு உங்களுக்கு என்ன தோணுது? நாமே பரவாயில்லை போலருக்கேன்னு தோணுதா? ஹி…ஹி…

எல்லாரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

9 comments:

  1. வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது சில விஷயங்களை வேற மாதிரி செய்திருக்கலாம்னு தோணும். ஒரு rewind பட்டன் இருந்தா, rewind பண்ணிட்டு திரும்பி வேணுங்கிற இடத்திலிருந்து ஆரம்பிக்கலாமேன்னு தோணும். //

    ஏற்கெனவே செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். ஆனால் தப்பு செய்தோம்னு நினைவில் இருக்கணும். ரீவைண்ட் பண்ணறச்சே நினைவுகள் மாறாம இருக்கணும். :))))

    ReplyDelete
  2. வயித்துக்கு ஜிப்பு,கத்திப்பேசரவா தொண்டைக்கு ஒரு வால்யும் பட்டன்,

    மூச்சுவிடாம பேசரவாளுக்குஒரு ம்யுட் பட்டன்,வாழ்க்கையை த்

    திரும்பிப்பார்த்து சரி பண்ண ரீவைண்ட் பட்டன், மடிக்கபில் கார் .......

    எல்லாம் படித்து ரசிச்சி சிரிச்சேன்;இப்படியெல்லாம் எனக்குத்

    தோணியிருக்கான்னு நெனவில்லைன்னாலும் ரீவைண்ட் பண்ணப்ப ,

    என்வாயாடிமகள் ரெண்டுவயசுல கேட்டது இந்த வயசிலும்

    பசுமையா இருக்கு!:---



    ஜன்னல் க்ரில் தாண்டி உள்ளே வந்த வெய்யில், வீட்டுத்தரையில்

    போட்டிருந்த ஒளிக்கோலத்தைக் குழந்தை கையால் அள்ளிப்

    பிடிக்க ட்ரை பண்ணிண்டிருந்தா; நான் ரொம்ப ட்யுடிபுல் அம்மாவா,

    "இது சன் லைட்டு;(மேலே இருந்த பல்பைக்காட்டி)அந்தலைட்டு மாதிரி பெரிய லைட்டு;கையாலே புடிக்க முடியாது"

    ன்னு லெக்சர் பண்ணின்டிருந்தேன்;அதெல்லாம் அவளுக்கு

    புரிஞ்சிதாங்கறது வேற விஷயம் ;ஆனா அவ கேட்ட கேள்வி:

    "பெயிய லைத்துக்கு ஸுச்சு[ஸ்விட்ச்] எங்கக்கும்மா?"

    நான் கொளுத்தும் வெய்யில்ல நடக்க நேரும்போது அவளோட இந்த மழலை வார்த்தைகள் நெனவுக்கு வந்து சிரிச்சிக்குவேன் !

    ReplyDelete
  3. \\எல்லாம் சரி, இதையெல்லாம் படிச்ச பிறகு உங்களுக்கு என்ன தோணுது? நாமே பரவாயில்லை போலருக்கேன்னு தோணுதா?\\

    படிக்கும் போதே மனசுல வர காமெண்டு அப்படியே டைப் ஆகி publish ஆகிடனுன்னு தோணது ;-))

    ReplyDelete
  4. //ஏற்கெனவே செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். ஆனால் தப்பு செய்தோம்னு நினைவில் இருக்கணும். ரீவைண்ட் பண்ணறச்சே நினைவுகள் மாறாம இருக்கணும். :))))//

    அதுவும் சரிதான் கீதாம்மா :) வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  5. //"பெயிய லைத்துக்கு ஸுச்சு[ஸ்விட்ச்] எங்கக்கும்மா?"//

    ச்சோ ச்வீட் :) (அந்த ஸுச்சு உம்மாச்சிக்கிட்ட இருக்கு! :)

    உங்க சுட்டிப் பொண்ணோட கேள்வியை நானும் ரொம்ப ரசிச்சேன் லலிதாம்மா! நன்றி.

    ReplyDelete
  6. //படிக்கும் போதே மனசுல வர காமெண்டு அப்படியே டைப் ஆகி publish ஆகிடனுன்னு தோணது ;-))//

    ஹாஹா :) நன்றி கோபி :)

    ReplyDelete
  7. இப்போதைக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை...

    ReplyDelete
  8. //இப்போதைக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை...//

    நல்லதுங்க :) முதல் வருகைக்கு நன்றி கூடல் பாலா.

    ReplyDelete
  9. என்னமோ mute button வேணுமுன்னு எழுதி இருக்கீங்களே அது என்கூட பழகினதுக்கப்புறமா தோணினதா !? :))) மத்த வினோதமான பழக்கங்களை படிச்சப்ப கொஞ்சம் பயமா கூட இருந்தது.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)