Sunday, April 8, 2012

ரௌத்திரம் பழகு!

ப்படின்னா என்னன்னு இப்பதான் இலேசா புரிய ஆரம்பிச்ச மாதிரி இருக்கு!

கோபப்பட வேண்டிய விஷயத்துக்கு சரியான நேரத்தில் கோபப்படறதும், தேவையில்லாத விஷயத்தை உடனடியா விட்டுத் தள்ளறதும் மிகவும் அவசியம். ஒருத்தர் நம்மை கேவலமா நடத்தும் போது கோபப்படுவதுதானே நியாயம்? கண் முன்னாடி அநீதி நடக்கும் போது அதை எதிர்ப்பதுதானே தர்மம்? அந்த மாதிரி சமயங்களில் அமைதியா இருந்தா அது கோழைத்தனம்தானே? அதைத்தான் ‘ரௌத்திரம் பழகு’ன்னு சொல்றான், பாரதி.

இதுவே நம்ம தினசரி வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்துதுன்னு பார்ப்போம்.

கோபம் என்பது இயல்பான உணர்வு மட்டுமில்லை; சமயத்தில் வாழ்க்கைக்குத் தேவையான உணர்வும் கூட. மற்ற எல்லாவற்றையும் போலவே அதையும் நம்ம கையாளத் தெரிஞ்சுக்கணும். எப்ப கோபப்படணும், எப்படி கோபப்படணும், யார்கிட்ட நம்ம கோபம் செல்லாது, அந்த மாதிரி சமயத்தில் நம்ம அதிருப்தியை எப்படி வெளிப்படுத்தணும், இதெல்லாம் தெரியணும்.

சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்

அப்படின்னு கேள்விப்பட்டிருக்கோம். பாரதி சொல்வதைப் பார்த்தா, கோபம் கூட அப்படித்தான் போலருக்கு. அதுவும் ஒரு மனப் பழக்கம் மாதிரிதான் தெரியுது.

பழக்கம் என்பது என்ன? நாம ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்யும் போது, அதுவும் நம் மனசறிஞ்சு (conscious-ஆக) செய்யும் போது, அது பழக்கமா மாறிடுது. அப்படி பழக்கமாக மாறும் அந்த செயல் நமக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச ஒரு செயலாகவும் ஆகுது. அது எப்படி ஆரம்பிக்குது, அதனோட முடிவு என்ன, நடுவில் உள்ள நெளிவு சுளிவுகள் என்ன, இதெல்லாம் ரொம்ப விவரமா நமக்கு புரிய ஆரம்பிக்குது.

எந்த ஒரு விஷயத்தையும் கத்துக்கிறவங்களுக்கு, பயிற்சி செய்யறவங்களுக்கு, இந்த நிலை நல்லாவே புரியும். பயிற்சி செய்யச் செய்ய, எதை எப்படி செய்தா என்ன ஆகும், அதனோட விளைவுகள் என்ன, நன்மைகள் என்ன, தீமைகள் என்ன, இப்படி எல்லாமே தெரிய ஆரம்பிக்கும்.

அதே போலத்தான் கோபமும். கோபம் வரும்போதே, நமக்கு கோபம் வருது என்ற உணர்வும், கோபமா இருக்கும் போது, நாம் கோபமா இருக்கோம், அப்படிங்கிற உணர்வும், அந்த சமயத்தில் நாம என்ன செய்யறோம், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என்கிற உணர்வும் இருந்துட்டா போதும், கோபம் ஓரளவு நம்ம பழக்கத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சுன்னு தெரிஞ்சுக்கலாம். தன்னைத்தானே வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சவங்களுக்கு இது ரொம்ப சுலபம் :)

ரௌத்திரம் பழகு’வதில் இரண்டு விதம் இருக்கு. ஒண்ணு, நிஜமாகவே கோபமா இருக்கும் போது, அதை எப்படி கையாள்றதுன்னு தெரியணும். இரண்டு, கோபம் இல்லாத போது கூட சில சமயம் கோபமா இருக்கற மாதிரி காட்டிக்க வேண்டி இருக்கும்; அதுவும் எப்படின்னு தெரியணும்.

‘கோவம் வந்தா என்ன செய்யறேன்னு எனக்கே தெரியறதில்லை.’ அப்படின்னு பலரும் சொல்றதுண்டு. அப்ப என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அது என்னவோ தன் தவறு இல்லைங்கிறது போலவும், கோவத்தோட தவறுதான் என்கிறாப் போலவும் பேசுவோம். பல சமயங்களில் கோபத்தில் ஏதேனும் சொல்லிட்டு, அல்லது செய்துட்டு, பின்னாடி ஏகத்துக்கு வருத்தப்படறவங்களும் உண்டு.

கோபப்படும்போது நாம எவ்வளவுக்கெவ்வளவு conscious-ஆ, தன்னுணர்வோடு இருக்கோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம்ம கோபத்தை கட்டுப்பாட்டோட வெளிப்படுத்தலாம். மற்றவர்கள் மனமும் புண்படாமல், நாமே பின்னாடி வருத்தப்படும் அளவிலும் இல்லாமல். இது முதல் விதம்.

குறிப்பா குழந்தைகளிடம், நிஜமாவே கோபப்படக் கூடாது; ஆனா கோபமா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம். குழந்தைகளிடம்னு இல்லை, பல சந்தர்ப்பங்களுக்கும் அது பொருந்தும். உதாரணத்துக்கு, சில பேர் சாதுவா இருப்பாங்க, எல்லாத்துக்கும் சரி சரின்னு போவாங்க. மொத்தத்தில் ‘பிழைக்கத் தெரியாதவங்களா’ இருப்பாங்க (என்னை மாதிரி :). அவங்களை மற்ற ‘சாமர்த்தியசாலிகள்’ advantage எடுத்துக்க வாய்ப்பிருக்கு. அந்த மாதிரி நேரங்களில் கோபமா இருப்பது மாதிரி காட்டிக்கிறது, தற்காப்புக்கு உதவும். இது இரண்டாவது விதம்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன இந்தக் கதையைப் படிச்சா, இது சுலபமா புரியும்…

ஒரு காட்டுக்குள்ள ஒரு பொல்லாத பாம்பு இருந்துச்சு. யாரைப் பாத்தாலும் கடிச்சிரும். அந்த காடு வழியா போறதுக்கு பசங்கள்லாம் ரொம்ப பயப்படுவாங்க. அப்ப ஒரு நாள், ஒரு சாது அந்த காடு வழியா வந்தாரு. அதைப் பார்த்த பசங்க அவர்கிட்ட ஓடி வந்து, “அங்கே போகாதீங்க சாமீ. ஒரு பொல்லாத பாம்பு இருக்கு, அது உங்களைக் கடிச்சாலும் கடிச்சிரும்’னு சொன்னாங்க. அவர் அதைக் கண்டுக்காம, நடந்துகிட்டே இருந்தாரு. அவர்கிட்டதான் மந்திர சக்தியெல்லாம் இருக்கே. அந்த பாம்பு, அவரைப் பார்த்ததும் கடிக்க வந்திருச்சு. உடனே அவர் கண்ணை மூடிக்கிட்டு ஒரு மந்திரம் ஜெபிச்சார். அதுக்குக் கட்டுப்பட்டு, அதுவும் அடக்க ஒடுக்கமா அவர்கிட்ட வந்து நின்னுது.

‘நீ ஏன் இப்படி மக்களை பயப்படுத்தறே? உனக்கு நான் மந்திரோபதேசம் செய்யறேன். அதை நீ தினமும் பயிற்சி செய்தா, ‘நல்ல’ பாம்பா மாறிடுவே’, அப்படின்னு சொல்லி, அதுக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். பாம்பும், பணிவா அவரை வணங்கி அதைக் கேட்டுக்கிச்சு.

பிறகு அதை தினம் ஜெபிச்சிக்கிட்டே இருந்ததுல, அது ரொம்ப சாதுவான பாம்பாயிடுச்சு. அதைத் தெரிஞ்சுக்கிட்ட பசங்கள்லாம், இப்ப அதுகிட்ட பயமே இல்லாமப் போனதோட, மேற்கொண்டு அதை அடிச்சு துன்புறுத்த வேற ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பாம்புக்குதான் இப்ப பசங்களைப் பார்த்தாலே பயம்கிற அளவு ஆயிருச்சு.

ஒரு நாள், அந்த பாம்பை வாலைப் பிடிச்சு சுத்தி, குற்றுயிரும் குலைஉயிருமா நல்லா அடிச்சுப் போட்டுட்டாங்க. அதில் அந்த பாம்புக்கு நினைவே தப்பிப் போச்சு. ரொம்ப நேரம் கழிச்சு லேசா பிரக்ஞை வந்த போது, மெதுவா நகர்ந்து ஒரு வளைக்குள்ள போயிருச்சு. அதுல இருந்து பயந்துகிட்டு, இரை தேடக் கூட வெளியில் வராம, இப்பவோ அப்பவோன்னு இருந்தது.

அப்ப ஒரு நாள், அதே சாது அதே வழியா வந்தாரு. அங்கே இருந்த பசங்ககிட்ட பாம்பைப் பற்றி விசாரிச்சாரு. ‘அது எப்பவோ செத்துப் போச்சு’ன்னு சொன்னாங்க பசங்க. ஆனா அவர் அதை நம்பலை. மந்திரத்தோட சக்தியால அது சாகாதுன்னு அவருக்கு தெரிஞ்சிருந்தது. அவர் காட்டுக்குள்ள போயி, அதை கூப்பிட்டுப் பார்த்தார். குருநாதரோட குரலைக் கேட்டதால, அந்த பாம்பு மெல்ல வெளிய வந்து அவரை வணங்கிச்சு.

அதோட நிலைமையைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்ட சாது, ‘ஏன் இப்படி ஆயிட்டே?’ன்னு கேட்டாரு. பாம்புக்கு இதுக்குள்ள நடந்ததெல்லாம் மறந்து போயிருந்துச்சு. அதனால, ‘எனக்கு ஒண்ணும் இல்லையே சாமீ… நான் நல்லாத்தானே இருக்கேன்’ன்னு சொல்லுச்சு! சாது திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு, அதுக்கு லேசா நினைவு வந்தது. ‘பசங்க இப்படி பண்ணிட்டாங்க, ஆனா சின்னப் பிள்ளைங்கதானே தெரியாம பண்ணிட்டாங்க’ அப்படின்னு சமாதானம் வேற சொன்னது. அதுதான் இப்ப ‘நல்ல’ பாம்பா ஆயிருச்சே?

அதைக் கேட்ட சாது, ‘நான் உன்னை மற்றவர்களை கடிக்க வேண்டாம், துன்புறுத்த வேண்டாம்னு தானே சொன்னேன். உன்னை பிறர் துன்புறுத்தும் போது சீற வேண்டாம்னு சொல்லலையே? இவ்வளவு முட்டாளா இருக்கியே’ன்னு வருத்தப்பட்டாராம்.

ஒருத்தர் ஆன்மீகத்தில் ஈடுபட ஈடுபட, அவர் ‘சாது’வாக ஆகி விடுவார். மனநிலை சமன்பட்டுக்கிட்டே வரும்போது கோபம் போன்ற உணர்வுகள் குறைஞ்சிடறதும், அடியோட போயிடறதும், சகஜம். அந்த மாதிரி இருக்கவங்களை மற்றவங்க சுலபமா ஏமாத்த நிறைய வாய்ப்பிருக்கு. அதனாலதான் ஸ்ரீராமகிருஷ்ணர், “சாதுவா இருக்கலாம்; அதுக்காக முட்டாளா இருக்கணும்னு பொருள் இல்லை. தன்னைத்தானே காத்துக் கொள்ளத் தெரியணும்”, அப்படின்னு சொல்லுவார். அதை விளக்கத்தான் இந்தக் கதையைச் சொன்னார்.

தற்காப்பு கோபம்னா என்ன, ரௌத்திரம் பழகறதுன்னா என்ன, இதெல்லாம் பற்றி தெளிவா குழப்பிட்டேனா இப்போ?

ரௌத்திரம் பழகுங்க! சந்தோஷமா இருங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை

பி.கு.: ஊருக்குப் போறேன். மறுபடியும் ஒரு மாசத்துக்கு உங்களுக்கு விடுமுறை, என் பதிவுகளிலிருந்து :) அதுக்குன்னு ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்! திரும்பவும் வருவேன்!

Sunday, April 1, 2012

உங்களுக்கும் இப்படியெல்லாம் தோணுமா?

மீபத்தில் ‘ரீடர்ஸ் டைஜஸ்டி’ல் ஒரு கட்டுரை படிச்சேன். “Are you nuts?” அப்படிங்கிறது தலைப்பு.

சிலருக்கு சில வினோதமான பழக்கங்கள் இருக்கும். சாதாரண பழக்கம்தான்னு இந்தப் பக்கமும் சேர்க்க முடியாது, பைத்தியம்னு அந்தப் பக்கமும் சேர்க்க முடியாது. அப்படி ரெண்டுங்கெட்டானா இருக்கும். அதைப் போல பழக்கங்கள் இருக்கவங்களுக்கு, தன் மேலேயே சந்தேகம் வரும் – “நான் பைத்தியமோ?” அப்படின்னு. அந்த மாதிரி ஆளுங்கல்லாம் தங்களோட வித்தியாசமான பழக்கங்களை ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு எழுதி இருக்காங்க. அவங்க, அதை மனோதத்துவ நிபுணர்களிடம் காண்பிச்சு, கருத்து கேட்டு, அவங்க நிஜமாவே மருத்துவ உதவியை நாடணுமா, இல்லை கண்டுக்க வேண்டிய அளவுக்கு அது ஆபத்தான பழக்கம் இல்லையா, அப்படின்னு சொல்லி இருக்காங்க.

உதாரணத்துக்கு, ஒரு பொண்ணுக்கு, எதையாவது வாசிக்கும் போது முடியை விரலில் சுற்றி சுற்றி விளையாடுகிற பழக்கம் இருக்காம். படிக்கும் போது மட்டும். இது நாமளே அடிக்கடி பார்க்கிற பழக்கம்தான்.

இன்னொருத்தங்களுக்கு கார் ஓட்டும் போது தனக்கு சரிக்குச் சரியா (parallel – ஆ) பக்கத்து lane-ல கார் வர்றதைத் தாங்கவே முடியாதாம். அந்தக் காருக்கு முன்னாடி இல்லாட்டி பின்னாடிதான் போகணுமாம்.

ஒருத்தருக்கு பழையது எதையுமே தூக்கிப் போட மனசே வராதாம்.

இப்படிப் பல பழக்கங்கள், கேள்விகள், அவற்றுக்கு நிபுணர்களின் பதில்கள்.

இன்னொண்ணுதான் ரொம்ப வேடிக்கையா இருந்தது. ஒரு பெண்ணுக்கு, டிராயர்ல நிறைய spoons இருக்கும் போது, அதில் இருந்து ஒண்ணே ஒண்ணு தேர்ந்தெடுக்கிறதுன்னா ரொம்பக் கஷ்டப்படுவாங்களாம்! அப்படியே ரொம்பக் கஷ்டப்பட்டு எப்படியோ எடுத்துட்டாங்கன்னு வைங்க, அப்புறம் அவங்க எடுக்காம விட்ட மற்ற spoons-க்காக வருத்தப்படுவாங்களாம்! இது எப்படி இருக்கு?

எனக்கும் சில விஷயங்கள் இந்த மாதிரி தோணும். (அச்சோ, ஸ்பூன் விஷயத்தைச் சொல்லலைங்க!) எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சு சாப்பிடணும்? வயிற்றில் ஒரு zip இருந்தா எல்லாத்தையும் உள்ள போட்டு மூடிடாலாமேன்னு சின்னப் பிள்ளையா இருக்கும் போதே தோணியிருக்கு. வேறு சிலருக்கும் இதே மாதிரி தோணியிருக்குன்னு பிற்காலத்தில் தெரிஞ்சுக்கிட்டேன் :)

சில பேர் நம்ம பக்கத்தில் இருக்கும் போதே ரொம்ப ரொம்ப சத்தமா பேசுவாங்க. அந்தக்கால ரேடியோவில எல்லாம் திருகற மாதிரி volume பட்டன் இருக்குமே. அந்த மாதிரி கத்திப் பேசறவங்க தொண்டையில் ஒரு பட்டன் இருந்தா, வால்யூமைக் குறைக்கலாமேன்னு தோணும். அதே போல சிலர் மெதுவா பேசுவாங்க. அவங்களுக்கு வால்யூமை அதிகம் பண்ணனும். (ஹி..ஹி… எனக்கு சொல்லலை!)

சில பேர் மூச்சு விடக் கூட நேரம் எடுத்துக்காம, மத்தவங்களையும் பேச விடாம, நிறுத்தாம படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு ஒரு mute பட்டன் இருந்தா நல்லாருக்கும்!

தேவையில்லாம மத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைச்சு, வம்பு பேசறவங்களோட மூக்கு, அவங்க வம்பு பேசப் பேச, பினோக்கியோவுக்கு மாதிரி நீ……ளமா வளந்தா எப்படி இருக்கும்!

வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது சில விஷயங்களை வேற மாதிரி செய்திருக்கலாம்னு தோணும். ஒரு rewind பட்டன் இருந்தா, rewind பண்ணிட்டு திரும்பி வேணுங்கிற இடத்திலிருந்து ஆரம்பிக்கலாமேன்னு தோணும். (ஆனா, உண்மையில் அப்படி இருந்தா இன்னும்தான் கஷ்டம்தான்னும் தோணுது!).

இதைப் பற்றிப் பேசும் போது ஆங்கில படம் ஒண்ணு நினைவு வருது. அந்த ஹீரோவுக்கு அப்படித்தான், ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி சம்பவங்களா நடக்கும். காலைல எழுந்திருக்கும்போதே அவனுக்கு தெரிஞ்சிருக்கும், இன்னிக்கு யார் யாரைப் பார்ப்போம், என்னென்ன சாப்பிடுவோம், என்னென்ன நடக்கும், இப்படி ஒவ்வொரு சின்ன விஷயம் கூட தெரியும். அவனுக்கு அப்படியே முடியைப் பிச்சுக்கலாம் போல இருக்கும். ஒரே வாழ்க்கையை, அதுவும் அடுத்த நிமிஷம் இன்னது நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்ச வாழ்க்கையை தினம் தினம் வாழ யாருக்குத்தான் பிடிக்கும்?

பிறகுதான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியும். கண்ல தெரியற ஒவ்வொரு பிரச்சனையையும் அது வரைக்கும் கண்டுக்காம போயிக்கிட்டிருந்தவன், கொஞ்சம் நிதானிச்சு, தன்னைப் பற்றி மட்டும் யோசிக்கிறதை விட்டுட்டு, மற்றவங்களுக்கு உதவி செய்து, அவங்க பிரச்சனைகளை ஒவ்வொண்ணா தீர்த்து வைப்பான். பிறகு அவன் வாழ்க்கை பழையபடி ஆயிடும்.

இந்த மாதிரி சில ஆங்கிலப் படங்களில் கற்பனை அபாரமா இருக்கும். ரீவைண்ட்னு சொன்னதால நினைவு வந்தது.

நம்ம நாட்டைப் பற்றி நினைக்கும் போதும் ஆதங்கமா இருக்கும். எவ்வளவு குப்பைகள், நாடு முழுக்க. குப்பைன்னா கூட்டித் தள்ள முடியாத குப்பையைகளையும் சேர்த்துத்தான் சொல்றேன். கணினி மாதிரி இருந்தா, ctr+alt+del அமுக்கி, reboot பண்ணி, முதல்ல இருந்து சுத்தமா ஆரம்பிக்கலாமேன்னு தோணும்!

நேற்றுதான் எங்க ஊர்ல 10K ன்னு சொல்லி, மாரத்தான் ஓடறவங்க, நடக்கறவங்க, இவங்கல்லாம் கலந்துக்கற நிகழ்ச்சி. தோழிகளும், நானும், குடும்பத்தினரும், கலந்துகிட்டோம். கிட்டத்தட்ட 40000 பேராம். நம்மூர் திருவிழாக் கூட்டம் மாதிரி, எங்க பார்த்தாலும் தலைதான். நாங்க வந்த போது போக்குவரத்து (அதாங்க, சுத்தத் தமிழ்ல traffic!) ரொம்பவே அதிகமாயிடுச்சு. ரொம்ப நேரம் ஊர்ந்து வர வேண்டியதா இருந்தது மட்டுமில்லாம, காரை நிறுத்தவும் இடமே கிடைக்கலை! நேரம் வேற ஆகிக்கிட்டிருந்தது. அப்பதான், இந்த மாதிரி நேரங்கள்ல, அவசரத்துக்கு காரை மடிச்சு கைப்பையில் வச்சுக்கிட்டு போற மாதிரி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு தோணுச்சு!

காரை parallel park பண்ண வேண்டியிருக்கும் போது, முன்னாடியும் பின்னாடியும் மெதுவா மெதுவா நகத்தி கஷ்டப்படாம, அதை அப்படியே தூக்கி வைக்க முடிஞ்சா எவ்வளவு சுலபம்னு என் தோழிக்கு தோணுமாம்.

எல்லாம் சரி, இதையெல்லாம் படிச்ச பிறகு உங்களுக்கு என்ன தோணுது? நாமே பரவாயில்லை போலருக்கேன்னு தோணுதா? ஹி…ஹி…

எல்லாரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா