Sunday, September 11, 2011

மொழி


பெற்றவளை அம்மா என்றுதான்
நானும் அழைத்தேன்
நீயும் அழைத்தாய்

அகர முதல எழுத்தெல்லாம்
அரிச் சுவடி தொடங்கித்தான்
நானும் படித்தேன்
நீயும் படித்தாய்

வானத்தின் நிறத்தை நீலம் என்பதாய்த்தான்
நானும் அறிந்தேன்
நீயும் அறிந்தாய்

வானவில் காண்கையில் அழகு என்றுதான்
நானும் ரசித்தேன்
நீயும் ரசித்தாய்

இருப்பினும்
கண்டத்தில் புறப்பட்ட
பொருளில்லாச் செருமல் போல்
நீ பேசுவன எனக்கும்
நான் பேசுவன உனக்கும்
புரியாமலே போவ தெப்படி?

--கவிநயா

9 comments:

  1. //கண்டத்தில் புறப்பட்ட
    பொருளில்லாச் செருமல் போல்//

    ஆம் அழகாய் சரியாய் சொன்னீர்கள்! கவிதைக்கு மிகப் பொருத்தமாக அந்தப்படமும்.

    ReplyDelete
  2. கவிதைக்கான நிழற்படம்
    கவிதையின் அடிக்கருத்தியலுக்கு
    மேலும் சிறப்பளிப்பதாக விளங்குகிறது.

    ReplyDelete
  3. //ஆம் அழகாய் சரியாய் சொன்னீர்கள்! கவிதைக்கு மிகப் பொருத்தமாக அந்தப்படமும்.//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  4. //நல்லதொரு சிந்தனை!!//

    //கவிதைக்கான நிழற்படம்
    கவிதையின் அடிக்கருத்தியலுக்கு
    மேலும் சிறப்பளிப்பதாக விளங்குகிறது.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, திரு.குணசீலன்.

    ReplyDelete
  5. இதுதான் 'பேசும் படம்'!

    கவிதையின் கருத்தை அழகாக பிரதிபலிக்கிறது!

    ReplyDelete
  6. //நீ பேசுவன எனக்கும்
    நான் பேசுவன உனக்கும்
    புரியாமலே போவ தெப்படி?//

    முதலில் ஒரு பின்னூட்டம் போட்டு நீக்கி விட்டேன். நீங்கள் சொல்வது ஒன்றாகவும், நான் அர்த்தப்படுத்திக் கொண்டது வேறாகவும் போயின் கவிதை மாதிரியே கதையாகிவிடும் என்கிற நினைப்பு தான்.

    அவரவர் கொள்ளும் கருத்து தான்
    அவரவரிடமிருந்து வெளிப்படுகிறது.
    ஒரு செயலின் விளைவாகவும் வினையாகவும் அந்த செயலுக்கே எதிரும் புதிருமாகக் கொள்ளும் எண்ணங்களாய் வெளிப்படும் கருத்துக்கள். இதனாலேயே ஒருவருக்கொருவர் புரிதலற்றுப் போகிறது. ஒரே மொழியாயினும் இந்த சாத்தியப்பாடு உண்டெனில், மொழி என்ன செய்யும், பாவம்?..

    இதைத் தானே நீங்களும் சொல்ல வந்தீர்கள்?..

    ReplyDelete
  7. //இதுதான் 'பேசும் படம்'!

    கவிதையின் கருத்தை அழகாக பிரதிபலிக்கிறது!//

    நன்றி லலிதாம்மா :)

    ReplyDelete
  8. //முதலில் ஒரு பின்னூட்டம் போட்டு நீக்கி விட்டேன். நீங்கள் சொல்வது ஒன்றாகவும், நான் அர்த்தப்படுத்திக் கொண்டது வேறாகவும் போயின் கவிதை மாதிரியே கதையாகிவிடும் என்கிற நினைப்பு தான்.//

    :)))


    //ஒரு செயலின் விளைவாகவும் வினையாகவும் அந்த செயலுக்கே எதிரும் புதிருமாகக் கொள்ளும் எண்ணங்களாய் வெளிப்படும் கருத்துக்கள். இதனாலேயே ஒருவருக்கொருவர் புரிதலற்றுப் போகிறது.//

    உண்மைதான் ஜீவி ஐயா. பல சமயங்களில் ஒரு விஷயத்தை ஒருவரின் கோணத்திலிருந்து மற்றவரால் பார்க்க முடிவதில்லை. வேறு எந்தத் திசையிலும் பார்க்க இயலாத கடிவாளம் இட்ட குதிரை போல். அதனால் ஏற்படும் வினைதான் இது. உங்கள் புரிதல் சரியே.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உங்களுக்கு :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)