Sunday, August 28, 2011

எங்க ஊருக்கு வந்த ஐரீன்


எதிர்பார்த்துக் கொண்டிருந்த புயல் ஆரம்பித்து விட்டது. மிகவும் பாதுகாப்பாக, வீட்டுக்குள்ளிருந்த வண்ணம் சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உள்ளேயிருந்து பார்க்கையில் பயங்கரம் தெரியவில்லை. மாறாக, புயற்காற்று மிகவும் அழகு மிகுந்ததாக, ஆக்ரோஷம் நிறைந்ததாக, கண்ணகல வைப்பதாக, ‘அடேயப்பா!’ என்று அதிசயிக்க வைப்பதாக, மனசை மயக்குவதாகத்தான் இருக்கிறது.

மழை அடித்து ஊற்றுகிறது. வேகமாக வரும் காற்று, அந்த மழையை அப்படியே நாம் கைகளால் அல்லது துடுப்பால் தண்ணீரைத் தள்ளுவது போல் தள்ளிக் கொண்டே போகிறது. அந்தத் தண்ணீரால் பூமியைத் தொடக் கூட முடியவில்லை. அப்படியே காற்றோடு கை கோர்த்து பறந்து போவது போல் ஒரே ஓட்டம். அப்பாவும் பிள்ளையும் நடக்கும் போது, அப்பா கையை விட்டு விட்டுப் போய்விட நேர்ந்தால், ‘அப்பா, அப்பா’ என்று பிள்ளை பின்னாடியே ஓடுவது போல்தான் மழைத் தண்ணீரும் தரையில் கால் பாவாமலேயே காற்றோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடுகின்றன. இருக்கிற கைகளையெல்லாம் வான் நோக்கி விரித்துக் கொண்டு அந்த இறைவனை ‘இந்த க்ஷணமே வருகிறாயா, இல்லையா?’ என்று மிரட்டலாக இறைஞ்சுவது போல் இருக்கிறது. வராவிட்டால் தாமே அவனை எட்டிப் பிடித்து விட வேண்டுமென்ற எண்ணத்துடன், விண்ணைத் தொட்டு விடும் விடா முயற்சியுடன் இருப்பது போல் இருக்கிறது.

‘எத்தனை நாள்தான் ஒரே இடத்தில் நிற்பது? என்னை இடம் மாற்றி விடு’ என்று கேட்பது போலவும் இருக்கிறது.

இருக்கும் இடத்திலும் சிறக்க முடியாமல், வேறிடத்துக்கும் போக முடியாமல் அவதிப்படும் இரண்டுங்கெட்டானைப் போல, வேரைப் பிடுங்கிக் கொண்டு போகவும் முடியாமல், எட்டி வானத்தைத் தொடவும் முடியாமல் இந்த மரங்களெல்லாம் தவித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

நாம் இப்படி இங்கே உட்கார்ந்து புயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், வேறு யாருக்குமே எதுவும் ஆகாமல், எல்லோருமே நலமாக இருக்க வேண்டுமே, என்ற பிரார்த்தனையும் எழுகிறது. எங்கள் வீட்டுக்கு அருகிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன. அவற்றையும் அச்சத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

மின்சாரம் இல்லாமல் போனாலும் போய்விடும். மின்சாரம் இல்லா விட்டால் ஒரு தேநீர் கூடக் குடிக்க முடியாது. இந்த யோசனையுடனே அவசரமாக இரவுக்கு வேண்டியதை விரைவாகச் சமைக்கிறேன்.

மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கை விளக்கு, இப்படி எல்லாவற்றையும் எடுத்து கைக்கு எட்டிய தொலைவில், சட்டென்று எடுக்கும் விதமாக தயாராக வைக்கிறோம். ஆனால் எங்களுக்கு என்னவோ மின்சாரம் போகவில்லை. சில நண்பர்களுடன் தொலைபேசி, நலம் விசாரிக்கிறோம்.

வீட்டுக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டிருக்கின்றன. வீட்டிற்கு எதிர்ப்புறமாக.

இரவு முடிந்து விட்டது. புயல் கடந்து விட்டது. மறு நாள் விடிந்து விட்டது. காற்றும் மழையும் ஓய்ந்து, மிகப் பிரகாசமாக வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. நேற்றுதானா அத்தனை புயலும், மழையும், என்று வியக்கும்படி…

ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்களும், கிளைகளும், வீதியெல்லாம் பாய் விரித்திருந்த இலைகளும்தான், ‘ஆம், நேற்றுதான்… அதற்கு நாங்களே சாட்சி’ என்று பதிலளிக்கின்றன.

இன்னும் நின்று கொண்டிருக்கும் மரங்களெல்லாம், பெருந் தாண்டவம் ஆடி முடித்த களைப்புடன், தியானத்தில் ஆழ்ந்து விட்டதைப் போல அசையாமல் நிற்கின்றன.


--கவிநயா

22 comments:

  1. tooo vivid! "sarve bhavanthu sukhina:"praying god fr all of u there.

    ReplyDelete
  2. சிவனின் ருத்ர தாண்டவத்தை ரசிக்கிற
    அடியார்கள் போல் அல்லவா
    புயலின் உக்கிரத்தை ரசித்திருக்கிறீர்கள்
    நல்ல வேளை அதிக பாதிப்பில்லை எனச்
    செய்தி அறிந்தவுடன்தான் கொஞ்சம்
    நிம்மதி வந்தது
    நிலைமை விரைவில் சீரடைய வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. வந்துட்டுப் போயிட்டாளா ஐரீன்?

    ரொம்பப் படுத்தாமல் போனதுக்கு அவளுக்கொரு நன்றி.

    புயல்ன்னு சொன்னதும் எனக்கு ஃபிஜி நினைவு வந்துரும். வருசத்துக்கு ரெண்டு வருகை அங்கே:(

    ReplyDelete
  4. வந்த ஐரீன் போயிடுச்சா அக்கா...அனைவரும் நலம் தானே! ?

    ReplyDelete
  5. இருக்கும் இடத்திலும் சிறக்க முடியாமல், வேறிடத்துக்கும் போக முடியாமல் அவதிப்படும் இரண்டுங்கெட்டானைப் போல, வேரைப் பிடுங்கிக் கொண்டு போகவும் முடியாமல், எட்டி வானத்தைத் தொடவும் முடியாமல் இந்த மரங்களெல்லாம் தவித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. //

    என் வார்த்தைகளை நீங்க பிடுங்கிட்டீங்களோ?? இரண்டுங்கெட்டானாக இப்போ இப்படித் தான் தவிக்கிறேன். :(

    ReplyDelete
  6. ஐரீனின் அட்டகாசத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். கல்கி பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கடலில் சூறாவளியில் சிக்கிக் கொண்டு கடலின் சீற்றத்தை ரசிப்பதை விவரித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.

    சில நண்பர்கள் வீட்டில் மரங்கள் விழுந்திருந்தாலும், அனைவரும் நலமாக வீடுகளுக்கு சேதாரமில்லாமல் இருப்பது தெரிந்து மகிழ்ச்சி.

    //அப்பாவும் பிள்ளையும் நடக்கும் போது, அப்பா கையை விட்டு விட்டுப் போய்விட நேர்ந்தால், ‘அப்பா, அப்பா’ என்று பிள்ளை பின்னாடியே ஓடுவது போல்தான் மழைத் தண்ணீரும் தரையில் கால் பாவாமலேயே காற்றோடு ஓடிக் கொண்டிருக்கிறது. //

    Classic. கல்கி, வந்தியத் தேவனுடன் அப்பாவும் நினைவுக்கு வந்தார். :-)

    ReplyDelete
  7. //tooo vivid! "sarve bhavanthu sukhina:"praying god fr all of u there.//

    வாங்க லலிதாம்மா. பிரார்த்தனைக்கு நன்றி :)

    ReplyDelete
  8. //சிவனின் ருத்ர தாண்டவத்தை ரசிக்கிற
    அடியார்கள் போல் அல்லவா
    புயலின் உக்கிரத்தை ரசித்திருக்கிறீர்கள்//

    செய்யறதுக்கு வேற ஒண்ணுமில்லை. அதனால வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன் :)

    //நல்ல வேளை அதிக பாதிப்பில்லை எனச்
    செய்தி அறிந்தவுடன்தான் கொஞ்சம்
    நிம்மதி வந்தது
    நிலைமை விரைவில் சீரடைய வேண்டுகிறேன்//

    மிக்க நன்றி ரமணி.

    ReplyDelete
  9. //வந்துட்டுப் போயிட்டாளா ஐரீன்?

    ரொம்பப் படுத்தாமல் போனதுக்கு அவளுக்கொரு நன்றி.//

    ஆமாம் அம்மா. நானும் அவளுக்கு நன்றி சொல்லிக்கறேன் :)

    //புயல்ன்னு சொன்னதும் எனக்கு ஃபிஜி நினைவு வந்துரும். வருசத்துக்கு ரெண்டு வருகை அங்கே:(//

    :((( ம்... நம்மால ஒண்ணும் செய்ய முடியாத விஷயங்கள் இவை.

    வருகைக்கு நன்றி துளசிம்மா.

    ReplyDelete
  10. //வந்த ஐரீன் போயிடுச்சா அக்கா...அனைவரும் நலம் தானே! ?//

    போயிடுச்சுப்பா. எல்லோரும் நலமே.

    வருகைக்கு நன்றி கோபி.

    ReplyDelete
  11. //என் வார்த்தைகளை நீங்க பிடுங்கிட்டீங்களோ?? இரண்டுங்கெட்டானாக இப்போ இப்படித் தான் தவிக்கிறேன். :(//

    ஹாஹா :) வாங்க கீதாம்மா. உங்களுக்கும் எனக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருப்பதாக எனக்கு தோணும். இதுவும் அப்படித்தான் போல. உண்மையில் என்னை மனசில் வச்சுதான் எழுதினேன்!

    வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  12. //சில நண்பர்கள் வீட்டில் மரங்கள் விழுந்திருந்தாலும், அனைவரும் நலமாக வீடுகளுக்கு சேதாரமில்லாமல் இருப்பது தெரிந்து மகிழ்ச்சி.//

    உண்மைதான் நாகு. எனக்கும்.

    //கல்கி பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கடலில் சூறாவளியில் சிக்கிக் கொண்டு கடலின் சீற்றத்தை ரசிப்பதை விவரித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.//

    ரசித்து வாசித்தமைக்கும், வெகு நாட்கள் கழித்து வருகை தந்தமைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  13. இயற்கையின் சீற்றத்தை மரங்களின் ஆட்டத்தை மழையின் வேகத்தை நானும் நின்று பார்ப்பேன் கண்கொட்டாமல் ஆனால் சற்று படபடப்போடு. நீங்கள் ரசித்து விவரித்த விதம் அழகு. வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் நின்று எதிர்கொள்ளச் சொல்கிற பதிவு.

    அனைவரும் நலமென அறிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. mudhlil kettathum migavum athirchi.Piragu romba paathippu illai enru therinthathum sarru aaruthal.
    puyalai parri ivvalavu alagaaga yaarum vivarikka mudiyaathu.
    Natarajan

    ReplyDelete
  15. //ஆனால் எங்களுக்கு என்னவோ மின்சாரம் போகவில்லை//

    இங்கு புயலும் இல்லை; மின்சாரமும் இல்லை :-)

    ReplyDelete
  16. //வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் நின்று எதிர்கொள்ளச் சொல்கிற பதிவு.//

    நீங்க சொன்னது பிடிச்சிருந்தது ராமலக்ஷ்மி.

    //அனைவரும் நலமென அறிந்ததில் மகிழ்ச்சி.//

    நீங்களும் நலமென அறிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி :)

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  17. //mudhlil kettathum migavum athirchi.Piragu romba paathippu illai enru therinthathum sarru aaruthal.
    puyalai parri ivvalavu alagaaga yaarum vivarikka mudiyaathu.
    Natarajan//

    மிக்க நன்றி திரு.நடராஜன் :)

    ReplyDelete
  18. வாங்க உழவன்.

    //இங்கு புயலும் இல்லை; மின்சாரமும் இல்லை :-)//

    உங்க ஆதங்கம் புரியுது. ஆனா என்ன செய்யறது? இங்குமே இந்த முறை நாங்க என்னவோ தப்பிச்சிட்டோமே தவிர, நாள் கணக்கா மின்சாரம், தண்ணீர், இதெல்லாம் இல்லாம நிறைய பேர் இருக்காங்க.

    வருகைக்கு நன்றி உழவன் :)

    ReplyDelete
  19. //"இந்த க்ஷனமே வருகிறாயா, இல்லையா''// ஆஹா ! அற்புதம் ! புயல் இந்த பதிவிற்காக உங்களுக்கு நன்றி சொல்லும்.

    ReplyDelete
  20. //ஆஹா ! அற்புதம் ! புயல் இந்த பதிவிற்காக உங்களுக்கு நன்றி சொல்லும்.//

    வாங்க தானைத் தலைவி! உங்கள் முதல் வருகையும், ரசனையும், மகிழ்ச்சி தருகிறது :) மிக்க நன்றி.

    ReplyDelete
  21. இரசித்தேன் தங்களின் எழுத்து ஒவியத்தை

    பாதிப்பில்லை என்பதே போதும்

    ReplyDelete
  22. //இரசித்தேன் தங்களின் எழுத்து ஒவியத்தை

    பாதிப்பில்லை என்பதே போதும்//

    வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி திகழ்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)