Monday, March 28, 2011

வரமா, சாபமா?

‘நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்?’

கிட்டத்தட்ட எல்லோருக்குமே வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்கும். துன்பம் வரும்போது, இந்த உலகத்திலேயே நாம மட்டும் தான் இப்படி கஷ்டப்படறோம்னும், மற்றவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்கன்னும் தோணும். ஆனா, உண்மை அது இல்லை. எல்லோருக்குமே துன்பமும் இன்பமும் மாறி மாறி வந்துகிட்டுதான் இருக்கு. அவை வெளிப்படையா தெரியறதில்லை; அவ்வளவே.

ஒரு அம்மாவுக்கு 2 பசங்க. இரண்டாவது பிள்ளைக்கு உடம்பு சரியில்லை. வயிற்றுப் போக்கு. அதனால அவனுக்கு வெறும் கஞ்சிதான் குடுக்கறா. ஆனா மூத்த பிள்ளைக்கு எப்பவும் போல சாப்பாடு, மற்றதெல்லாம். இதனால இளையவனுக்கு அம்மா மேல கோவம். நம்ம அம்மாவுக்கு மூத்த பிள்ளைதான் செல்லப் பிள்ளை, நம்மை அவங்களுக்கு பிடிக்கறதே இல்லைன்னு நினைக்கிறான். விவரம் தெரிஞ்ச பிறகு அந்த பிள்ளைக்கு புரியும், அம்மா நமக்கு உடம்பு சரியில்லாதனால அப்படி செய்தாங்க, நமக்கு நல்லதுதான் செய்திருக்காங்க, அப்படின்னு.

இறைவனும் அதைப் போல நம் ஒவ்வொருத்தருக்கும் தேவையானதைத்தான் குடுக்கறான், அப்படின்னு சொல்லுவார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்கு தயார்படுத்தறான் இறைவன். அதுக்கு தகுந்தாப்போல அவங்கவங்களுக்கு வேண்டியதை குடுக்கறான். ஆனா நாம என்னடான்னா, இந்த கடவுளுக்கு என்னிடம் மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை, அப்படின்னு நினைக்கிறோம்.

அரவிந்த அன்னை சொல்றதைக் கேளுங்க: "The difficulties and mishaps are tests and must be considered as a Grace from the Lord - and then they will become so and lead you quickly to your goal." - The Mother [p-76, White Roses, Sixth Edition, 1999]

பாகவத்தில் எல்லாருக்குமே தெரிஞ்ச கதை ஒண்ணு உண்டு. முதலைகிட்ட மாட்டிக்கிட்ட யானையை காப்பாற்ற, இறைவன் ஓடோடி வந்த கதை… அந்த கதைக்கு முன்னோடியா இன்னொருரு குட்டிக் கதையும் இருக்கு…

அதாவது, அந்த யானை முன் ஜென்மத்தில் ஒரு ராஜாவா இருந்ததாம். அந்த ராஜாவுக்கு பக்தி அதிகமாம். அவர் ஒரு நாள் ரொம்ப பக்தியோட தன்னை மறந்து சாமி கும்பிட்டுக்கிட்டிருந்தாராம். அப்ப ஒரு முனிவர் அங்கே வந்தாராம். பூஜையில் முழுகியிருந்த ராஜா, அந்த முனிவரை பார்க்கவே இல்லையாம். தன்னை வேணும்னேதான் அந்த ராஜா கண்டுக்காம இருக்கார்னு நினைச்சு, அந்த முனிவருக்கு ரொம்ப கோவம் வந்திடுச்சாம். உடனே, “பிடி சாபம்’ னுட்டாராம். ‘யானையாப் போ’ன்னு சொல்லிட்டாராம்.

இந்த யானைதான் தண்ணி குடிக்க போன போது, ஒரு முதலை கிட்ட மாட்டிக்கிச்சு. கூட வந்த யானைகளால அதை காப்பாத்த முடியல. அதாலயும் தன்னையே காப்பத்திக்கவும் முடியல. அப்பதான் அதுக்கு தன் பூர்வ ஜென்ம நினைவும், தான் வச்சிருந்த பக்தியும் நினைவு வந்ததாம். உடனே ‘ஆதி மூலமே’ அது இறைவனை கூவி அழைச்சதாகவும், விஷ்ணு கருடன் மேல ஏறி, பறந்து வந்து அதை காப்பாற்றினதாகவும் கதை முடியும்.

(இதே போல முதலைக்கும் ஒரு கதை உண்டு)

இப்போ நாம நினைப்போம் அந்த ராஜா பாவம், சாமி கும்பிட்டதுக்கு இப்படி ஒரு தண்டனையான்னு. ஆனா உண்மை என்ன?

எந்த ஒரு ஜீவனும், முக்தி அடையறதுக்கு முந்தி எத்தனையோ பிறவிகள் எடுக்கணும். அந்த ராஜாவும் அப்படித்தான். அவர் ராஜாவாகவே இருந்திருந்தா, இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்திருக்கணுமோ… ஆனா அந்த முனிவர் கொடுத்த சாபத்தால், அவர் யானையாகப் பிறந்த உடனே, அதே பிறவியில் இறைவனை அறிய முடிஞ்சது; மோக்ஷம் கிடைச்சது. அதனால, அவருக்கு கிடைச்சது வரம்தானே? (இதுவும் ஒரு சுவாமிஜி சொன்னதுதான். பேர் மறந்துட்டேன்).

அதே போலத்தான். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பின்னணி இருக்கு; பொருள் இருக்கு; காரணம் இருக்கு; அதில் கண்டிப்பா ஒரு பாடமும் இருக்கு. அது என்னன்னு நமக்கு உடனே தெரியலைங்கிறதுக்காக அந்த நிகழ்வை நல்லதுன்னோ, கெட்டதுன்னோ, நாம நம் சிற்றறிவை வச்சு எப்படி முடிவு பண்ண முடியும்?

“There is something good in all seeming failures. You are not to see that now. Time will reveal it. Be patient.” இது சுவாமி சிவானந்தர் சொல்றது.

வரம் என்பது சாபத்தின் ரூபத்திலும் வரக் கூடும் அப்படின்னு நினைவு வச்சுக்கிட்டா, எத்தகைய துன்பம் வந்தாலும், தெய்வத்தின் துணையோட நாம அதை கடந்துரலாம்.

(அதே போல சாபமும் வரத்தின் வடிவில் வரக்கூடும். ‘Be careful what you wish for’ னு கேட்டிருப்பீங்களே. அதைப் பற்றி இன்னொரு முறை பேசலாம் :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

8 comments:

  1. அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் கவிநயா. மனதில் நிறுத்த வேண்டிய பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. சாபம் வரமாகவோ, வரம் சாபமாகவோ வரக்கூடும் என்பது அந்தந்த சமயத்தில் எவருக்குமே புரி படாத ஒரு விஷயம்.மனச்சமநிலையும் மனப்பக்குவமும் இருந்தால் சிவானந்தரவர்கள் சொல்வதுபோல் பொறுமையைக் கடைபிடிப்பது சுலபமாகும்.அந்தப்பக்குவத்தையும் அருள அவள் காலைத்தான் பிடிசசிக்கணும்!

    ReplyDelete
  3. \\ராமலக்ஷ்மி said...
    அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் கவிநயா. மனதில் நிறுத்த வேண்டிய பதிவு. நன்றி.\\

    அப்படியே வழிமொழிகிறேன் ;)

    ReplyDelete
  4. மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  5. நீங்க சொல்வது சரியே, லலிதாம்மா. துன்பத்தில் நடுவில் தத்தளிக்கையில் இப்படியெல்லாம் யோசனை ஓடாது. அதே சமயம் துன்பங்கள்தான் நாளடைவில் மனப் பக்குவத்தையும் பொறுமையும் அதிகரிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

    //அந்தப்பக்குவத்தையும் அருள அவள் காலைத்தான் பிடிசசிக்கணும்!//

    அதேதான்!

    நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  6. மிக்க நன்றி கோபி :)

    ReplyDelete
  7. எனது வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.தங்களை போன்றவர்களின் அன்பு தேற்றல் எங்கள் குடும்பத்துக்கு பக்க பலமாய் இருக்கும். தவிரவும் எதற்கு இப்படி ஆனது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் பெற்றதனைதும் அவன் பேறு என்று வாழ்கை தெளிவு பெற இந்த பதிவு உந்துதலாய் இருக்கிறது..வாசகர்கள் யாரும் தெரியாத காலத்தில் இதை patri நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.
    http://adithyasaravana.blogspot.com/2010/10/why-me.html

    ReplyDelete
  8. //தவிரவும் எதற்கு இப்படி ஆனது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் பெற்றதனைதும் அவன் பேறு என்று வாழ்கை தெளிவு பெற இந்த பதிவு உந்துதலாய் இருக்கிறது..//

    அதுதான் வேண்டும். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஆதித்யா. முதல் வருகைக்கும் நன்றி. உங்கள் பதிவிலும் பின்னூட்டியிருக்கிறேன்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)