Sunday, March 6, 2011

அவள் வருவாளா?

(1)

“தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்”

கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்டுக்கிட்டிருக்கு. சலங்கை கட்டி ஆடாத குறைதான். ஆனா மனசுக்குள்ள மானசீக ஆட்டம் அது பாட்டுக்கு நடக்குது.

திடீர்னு நிஜமாகவே சலங்கை சத்தம் கேட்குது, அவளுக்கு. அட்சர சுத்தமா, இம்மியும் பிசகாம ரெண்டு கால்கள் ஜதி போடற ஒலி! சட்டுன்னு கண்ணைத் திறந்து பாக்கறா. அத்தனை பெரிய நடன மண்டபத்துல, அவளைத் தவிர யாருமே இல்லை. பாட்டு முடியவும், சலங்கை சத்தமும் நின்னுடுது. ஒண்ணும் புரியாம, மறுபடியும் சாய்வு நாற்காலில சாஞ்சு கண்ண மூடிக்கிறா.

திடீர்னு ஏதோ தோணவும், மறுபடியும் எழுந்து, அதே பாட்டை ஓட விடறா. முதல் கோர்வை வரும்போது மீண்டும் சலங்கை சத்தம். இப்போ அவளால் ஆவலை கட்டுப் படுத்த முடியல. சிரமத்தோட நாற்காலியில் இருந்து எழுந்து குட்டையா போயிட்ட ஒரு காலை தாங்கித் தாங்கி அந்த மண்டபத்தை விட்டு வெளில வர்றா. பக்கத்தில் சின்ன சின்னதா இருக்கிற அறைகளை ஒவ்வொண்ணா பார்த்துக்கிட்டே வரா.

இதோ… இப்ப சத்தம் ரொம்ப பக்கத்தில் கேட்குதே… இலேசா ஒருக்களிச்சிருந்த அந்த கதவை திறக்கவும், சலங்கை சத்தம் சட்டுன்னு நின்னுடுது. அந்த அறைக்குள்ள…


ஒரு அழகான குட்டி பொண்ணு! மிஞ்சி மிஞ்சி போனா 9 அல்லது 10 வயசுதான் இருக்கும். தங்க விக்கிரகம் மாதிரி பளிச்சுன்னு அப்படி ஒரு அழகு! அவளை உட்கார வச்சு இன்னிக்கெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம்!

பச்சை பட்டு பாவாடையும், அரக்கு சிவப்பில் சட்டையுமா… இடுப்பில் ஒட்டியாணம். கன்னம் ரெண்டையும் லேசா தொட்டும் தொடாம காதில் தொங்கற ஜிமிக்கி. ஒத்தையா நடு வகிட்டுல ஒரு நெத்திச் சுட்டி. அந்த நேர்த்தியான சிமிழ் மாதிரியான மூக்கில் ஒரு குட்டி மூக்குத்தி வேற. அவளோட சின்ன சிவப்பு உதட்டை லேசா முத்தமிடற மாதிரி ஒரு புல்லாக்கு. குஞ்சலம் வச்சு பின்னின நீள ஜடை. தலை நிறைய மல்லிகைப் பூ. அதையும் யாரோ அவளுக்கு அழகா ரசனையோட வச்சு விட்டிருக்காங்க.

இப்படி மொத்தத்துல ஒரு நடன நிகழ்ச்சிக்கு தயாரா வந்திருந்தாப்போல இருக்கா, அந்த குட்டி பொண்ணு! அவளைப் பார்த்த சுந்தரி ஆச்சர்யமான அதிர்ச்சியில இருந்து மீள கொஞ்ச நேரம் ஆகுது.

ஒரு வேளை என்னுடைய மாணவிகளில் ஒருத்தியா இருக்குமோ? நடனம் கத்துக் குடுக்கறதை நிறுத்தி ஒரு வருஷம் ஆகப் போகுது. சின்ன பிள்ளங்க சீக்கிரம் வளர்ந்துடுவாங்களே… அவங்கள்ல ஒருத்தியோ? அப்படியும் இப்படியும் நினைவை பொரட்டி பாக்கறா. ஆனா இந்த முகம் மறக்கக் கூடிய முகமா என்ன? இப்படி ஒரு முகத்தை பார்த்திருந்தா மறந்திருக்கவே வாய்ப்பே இல்லை!

“யாரும்மா நீ? எப்படி உள்ள வந்தே?” கொஞ்சம் கண்டிப்பாவே கேக்கறா.

கொஞ்சமும் எதிர்பார்க்காத விதமா சட்டுன்னு அவ காலை தொட்டு கும்பிடறா அந்த குட்டி.

“வணக்கம்மா. என்னை மன்னிச்சிடுங்க. இங்கே தினம் பாட்டு சத்தம் கேட்கும். ஒரு நாளாச்சும் உள்ள வந்து பாக்கணும்னு ஆசையா இருந்தது.. இன்னிக்கு கதவு லேசா திறந்திருந்ததா… அதான்…”, தலையை குனிஞ்சிக்கிட்டே தனக்கே கேட்காத குரலில் பயந்துக்கிட்டே சொன்னா அவ.

“அப்படியா… சரி… உம் பேரென்னம்மா? உனக்கு பரதம் தெரியுமா?”, சுந்தரியோட குரல் இப்போ லேசா தணிஞ்சிருக்கு.

“என் பேர் சிவகாமசுந்தரி அம்மா. சிவகாமின்னு கூப்பிடுவாங்க. கொஞ்சம் நடனம் கத்துக்கிட்டது உண்டு அம்மா. நான் உங்ககிட்ட கத்துக்கணும்னு எனக்கும் எங்க அம்மாவுக்கும் ரொம்ப ஆசை.”

சிவகாமி முகத்தில் இப்ப சின்னதா புன்னகை கூட எட்டி பாக்குது…சுந்தரி முகத்திலும்தான்…

“என்கிட்ட போயி கத்துக்கணுமாமே…” அப்படின்னு கூடவே ஒரு பெருமூச்சும்..

பிறகு சுதாரிச்சுக்கிட்டு சொல்றா,

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா! என் பேரும் உன் பேரேதான். சிவகாமசுந்தரி! ஒரே ஒரு வித்தியாசம்…என்னை சுந்தரின்னு கூப்பிடுவாங்க…”

என்றதும் அந்த குட்டி பொண்ணு முகத்தில் சந்தோஷம் தண்டவமாடுது.

“ஹைய்யா… உங்களுக்கும் எனக்கும் ஒரே பேரு!” ரெண்டு கையையும் சேர்த்து பலமாக தட்டிக்கிட்டு, கூடவே ரெண்டு குதி குதிக்கிறா!

அவ சந்தோஷம் சுந்தரியையும் தொத்திக்க, அவளும் வாய் விட்டு சிரிக்கிறா… இப்படி சிரிச்சு எவ்வளவு நாள் ஆச்சு, அப்படிங்கிற நினைப்பும் கூடவே…


--கவிநயா

(தொடரும்)

படத்துக்கு நன்றி: http://www.4to40.com/coloring_designs_patterns

3 comments:

  1. துவக்கம் மிகப் பெரிதாக எதிர்பார்க்க வைக்கிறது
    அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இரு சிவகாம சுந்தரிகளும் சந்தித்துக் கொண்ட ஆரம்பம் அழகு கவிநயா. தொடரக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ரமணி, ராமலக்ஷ்மி! சிறுகதைதான், ஆனா கொஞ்சம் வளர்ந்துடுச்சு... எதிர்பார்ப்புகளை குறைச்சுக்கறது நல்லது :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)