Friday, January 14, 2011

பொங்குக சர்க்கரைப் பொங்கல்! தங்குக தித்திக்கும் இன்பம்!!

அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!!



சூரியனுக்கு...


ஆண்டாண்டு காலமாய் அகிலமெலாம் ஆள்பவனே!
நீண்டிருக்கும் ஒளிக்கரத்தால் நீள்நிலத்தை அணைப்பவனே!

தூண்டா மணிவிளக்காய் வானத்தில் ஒளிர்பவனே!

வேண்டாத உயிர்களுக்கும் வேண்டுவன தருபவனே!


உன்னன்பால் உலகெல்லாம் பயிர்காத்து வளர்க்கின்றாய்!

அதனாலே உலகத்தார் உயிர்காத்துப் பிழைக்கின்றார்!

சளைக்காமல் கிழக்கினிலே தினமும்நீ உதிக்கின்றாய்!

நாளை உண்டென்ற நம்பிக்கை அளிக்கின்றாய்!


அன்னையவள் கண்ணொளியாய் திகழ்கின்ற கதிரவனே!

இருளகற்றி ஒளியூட்டிப் பரிகின்ற பகலவனே!

புத்தரிசிப் பொங்கலிட்டு படைக்கின்றோம் உனக்காக!

பத்திரமாய்ப் பூவுலகைக் காத்திடுவாய் எமக்காக!!



**


உழவருக்கு...


ஆடிதேடி விதைவிதைத்து
அக்கறையாய் பார்த்துக்கொண்டு

ஓடிஓடி ஓய்வில்லாமல் உழைத்திடுவான் – உழவன்

கோடிக்கோடி மக்களுக்கு உணவிடுவான்


வானம்பார்த்த பூமியோடு

தானும்பார்த்து வாழ்ந்திடுவான்

நேரங்காலம் பார்க்காமல்

நித்தம்வேலை செய்திடுவான்


இயற்கைகொஞ்சம் ஒத்துழைத்தால்

இன்பம்மிகக் கொண்டிடுவான்

நிலமகளை குலமகளாய்

நெஞ்சில்வைத்துப் போற்றிடுவான்


உணவிட்டுக் காக்கின்ற
உழவருக்கு நன்றிசொல்வோம்
நெய்மணக்கும் பொங்கலிட்டு

நேசமுடன் நன்றிசொல்வோம்!



**


மாடுகளுக்கு...


மாடுபடும் பாட்டிலொரு பொருளிருக்கு
மாடுபோல ஒழைச்சிருந்தா பலனிருக்கு

பாலுமுதல் தோலுவரை அதுகொடுக்கும்

பொறுமையிலே பூமியப்போல் அதுஇருக்கும்!


ஏரிழுக்கும், பாரமெல்லாம் அதுசொமக்கும்
ஏறெடுத்தும் பார்க்காம அதுநடக்கும்

அடிமேல அடியடிச்சா மனம்பதைக்கும்

ஆதரவா இருந்தாக்க மனங்களிக்கும்!


வாழ்வெல்லாம் மனுசனுக்கே அதுஒழைக்கும் - அத
வாஞ்சையோட பாத்துகிட்டா வாழ்வினிக்கும்!

மாட்டுக்கொரு பொங்கமட்டும் போதாதுங்க

அன்னாடம் அன்புசெஞ்சு வாழ்வோமுங்க!



**


--கவிநயா

சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் அனுபவித்து பாடியிருப்பதையும் கேட்டு மகிழுங்கள்! தாத்தா, பாட்டிக்கு மனமார்ந்த நன்றிகள்!

25 comments:

  1. பொங்கல் பாடல் எல்லாமே சூபரோ சூபர்.
    இப்பவே போட்டுடறேன்.
    எல்லாருக்கும் பொங்கல்.
    பொங்கலோ பொங்கல்!!
    சுப்பு தாத்தா.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  2. இனிய கவிப் பொங்கல் வாழ்த்துக்கள்-க்கா! :)

    ReplyDelete
  3. பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா ;)

    ReplyDelete
  4. suriyan,uzhavan,maadu enru onnuvidaamal ellorudaiya contributionaiyum highlight panninathu rombananaana irukku.
    athilum maattaippaththi ninaiththaal raththakkanneer varathu.slaughterhouse ellaaththaiyum 'muthiya maattu illam'enru maaththa law konduvaranum enru oru wishful thinking.'maattukkoru ponga mattum pothaathunga;annaadam anbu vechchi vaazhvomunga'inthavari enmanaththai appadiye prathibalippathupol irukku.

    ReplyDelete
  5. 'maattukkoru pongamattum pothaathunga;annadam anbu senju vaazhvomunga'ithu miga arumaiyaana vari .slaughter house ellam 'muthi ya maattu illam'aaga maaranum .ithu en wishful thinking .

    ReplyDelete
  6. 'மாட்டுக்கோர் பொங்கமட்டும் போதாதுங்க.அன்னாடம் அன்பு செஞ்சு
    வாழுவோமுங்க'.இது ரொம்ம்ம்பவே நன்னா இருக்கு .ஸ்லாடர் இல்லங்கள்
    'முதிய மாட்டு இல்லங்கள் ' ஆகமாறணும் என்பது என் விஷ்புல் திங்கிங் .

    ReplyDelete
  7. சுப்பு தாத்தா, உங்க பின்னூட்டம் பார்த்த உடனேயே பொங்கல் பொங்கின மாதிரி ஆயிடுச்சு :) நீங்களும் பாட்டியும் சேர்ந்து பாடினதை வெகுவாக ரசித்தேன். நல்லா அனுபவிச்சு பாடியிருக்கீங்க! உழவர் பாட்டில் 'humming', மற்றும் மாடு பாட்டிற்கு 'ஐலசா' எல்லாம் போட்டு கலக்கிட்டீங்க! சூப்பர்! இடுகையில் இணைச்சிருக்கேன். பாட்டிக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. நன்றி கண்ணா! :)

    ReplyDelete
  9. கண்ணா, கோபி, உங்களுக்கும் மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்! (முதல்ல எழுதினப்பவே அதைச் சொல்ல மறந்துட்டேன் :( மன்னிச்சுக்கோங்க...)

    ReplyDelete
  10. வாங்க லலிதாம்மா. உங்க முதல் வருகை மகிழ்ச்சி தருகிறது. ரசனைக்கு மிக்க நன்றி. மாடு பற்றி நீங்க சொல்வது ரொம்ப உண்மை. சாலையில் மாடு, வண்டியிழுப்பதைக் கூட என்னால பார்க்க முடியாது... ரொம்ப கஷ்டமா இருக்கும்...

    //.ஸ்லாடர் இல்லங்கள்
    'முதிய மாட்டு இல்லங்கள் ' ஆகமாறணும் என்பது என் விஷ்புல் திங்கிங் .//

    ஹ்ம்.. அப்படி நடந்தா நல்லாதான் இருக்கும்...

    ReplyDelete
  11. இனிய பாடலுடன் பொங்கல் வாழ்த்து அருமை.

    உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சூரியனுக்கு நமஸ்காரம்.

    உழவருக்கு வணக்கம்.

    மாடுகளுக்கு நன்றி.

    பாடல்கள் மூன்றும் பரவசம்.

    பொங்கல் போனஸாக கூடவே சூரி சார், மீனாட்சி மேடம் பாடியதன் பகிர்வும்.

    அருமையான பொங்கல் பதிவுக்கு நன்றிகள் கவிநயா.

    ReplyDelete
  13. உங்களுக்கும்,தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்

    தமிழுடன்
    திகழ்

    ReplyDelete
  14. ஓட்டு மொத்த‌ப் பொங்க‌லையும் க‌ண்ட‌ ம‌ன‌ நிறைவு

    உங்க‌ளால்

    தைப் பொங்க‌ல்
    க‌விப் பொங்க‌லாய்ப்
    பொங்கி விட்ட‌து

    வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  15. வாங்க மாதேவி! வாழ்த்துக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  16. வாங்க ராமலக்ஷ்மி! பொங்கல் பரிசாக உங்களுக்குக் கிடைத்த தமிழ்மணம் பரிசையும் பார்த்தேன்... ரொம்ப சந்தோஷம் :) மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வாங்க திகழ்! 'தமிழுடன் திகழ்' - ரசித்தேன் :) மன நிறைவு கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வாங்க உழவன்! மிக்க நன்றி :)

    ReplyDelete
  19. ” கவிநயா” பெயர் பொருத்தமா அமைஞ்சிருக்கு... என்னமா எழுதறீங்க..!! அருமை..!!! கவிதை எழுதனும்கிற ஆர்வத்த எங்களுக்குள்ளயும் தூண்டிவிடறீங்க..

    ReplyDelete
  20. //” கவிநயா” பெயர் பொருத்தமா அமைஞ்சிருக்கு... என்னமா எழுதறீங்க..!! அருமை..!!! கவிதை எழுதனும்கிற ஆர்வத்த எங்களுக்குள்ளயும் தூண்டிவிடறீங்க..//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி, Srini! கவிதை எழுதினா சொல்லுங்க, கண்டிப்பா வந்து வாசிக்கிறேன்!

    ReplyDelete
  21. அருமையான பாடல்ங்க... கேக்கவும் அதை விட சூப்பர்... தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கு... நன்றி...

    ReplyDelete
  22. வாங்க அ.தங்கமணி! மிக்க நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)