Friday, January 7, 2011

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்


திருப்பள்ளியெழுச்சி - 4


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை எழுப்பியபடி ஒருபுறம் நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தோத்திரப்பாடல்களைப் பாடுவோரும் ஒருபுறம் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கையில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளுடன் உன்னுடைய பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் பெருக பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர்களுமாக சிலர் ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்கள் இருக்கையில், எளியவனான எனக்கும் அருள் செய்யும் என் இறைவனே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/

2 comments:

  1. நன்றி கவிநயா. தொடருங்கள்.

    ReplyDelete
  2. வாங்க ராமலக்ஷ்மி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)