Sunday, January 30, 2011

தன்னோடு தான் மட்டும்...


நீலவானம் நீளமாக
விரிந்தேதான் கிடந்தாலும்
நட்சத்திரக் கூட்டங்கள்
நவநவமாய் ஒளிர்ந்தாலும்
வானுலாவும் நில வென்னவோ
தன்னோடு தான் மட்டும்...

கருங்கடலோ பெருங்கடலாய்
பரந்தேதான் கிடந்தாலும்
கரையதுவும் கடலுக்கு
மிகஅருகில் இருந்தாலும்
கடல்பொங்கும் அலை யெல்லாம்
தன்னோடு தான் மட்டும்...

உறவெல்லாம் விதவிதமாய்
உலகெங்கும் இருந்தாலும்
கடமைகள் பலப்பலவாய்
காத்தேதான் கிடந்தாலும்
தனிமையிலே மனம் மட்டும்
தன்னோடு தான் மட்டும்...

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/slurve/457958786/

Sunday, January 23, 2011

மறக்கத் தெரியுமா?

“நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா”

கண்ணதாசனின் வரிகளின் அழகுக்கும் பொருளுக்கும் கேட்கணுமா? ஒவ்வொரு சராசரி மனிதனின் உணர்வுகளையும் உள்ளத்தின் போராட்டங்களையும் பாடலில் வைத்ததால்தானோ என்னவோ அவருடைய பாடல் வரிகள் அப்படியே மனசுக்குள் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகின்றன.

இன்பம், துன்பம், இரண்டும் இல்லாத மனித வாழ்க்கையே இருக்க முடியாது. ஆனா என்ன, சில பேருக்கு துன்பத்தோட dosage கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், சிலருக்கு கொஞ்சம் குறைவா இருக்கும், அவ்வளவுதான். ஆனாலும் வலி, வலிதானே.

ஒரு முறை மருத்துவமனைக்கு தாங்க முடியாத வலியோட போனேன். நேரா நிக்கக்கூட முடியாத அளவு வலி. அப்போ, “உங்க வலியை எப்படி rate பண்ணுவீங்க, 1-ல் இருந்து 10-க்குள்ள?” அப்படின்னு கேட்டாங்க. (மனுஷனோட நிலைமை தெரியாம நடத்தப்படற மருத்துவமனை formalities பற்றி எழுதப் புகுந்தா அதுவே ஒரு பதிவாயிடும்!) . பல்லக் கடிச்சுக்கிட்டு “10” அப்படின்னு சொன்னேன்!

இந்த மாதிரியான வலி தாங்கற சக்தி மனுஷனுக்கு மனுஷன் வேறுபடும். எனக்கு 10-ஆ இருக்கிறது இன்னொருத்தருக்கு 5-ஆ இருக்கலாம், வேற ஒருத்தருக்கு 7-ஆ இருக்கலாம்; எனக்கு 5-ஆக இருப்பது, இன்னொருத்தருக்கு 7-ஆகவும், வேற ஒருத்தருக்கு 10-ஆகவும் இருக்கலாம்…

அதே போலத்தான் துன்பங்களைத் தாங்கற சக்தியும் மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசப்படும்.

அலுவலகத்தில் சுறுசுறுப்பா வேகமா அதே சமயம் நல்லபடியா வேலைகளை முடிக்கிறவங்களுக்குத்தான் மேல மேல வேலை தந்துகிட்டே இருப்பாங்க. அதே போல துன்பப்படறவங்களுக்குத்தான் மேல மேல துன்பம் வருதோன்னு தோணும். ஏன்னா “அவள்தான் அதைத் தாங்கிக்கிட்டாளே… இதையும் தாங்கறளான்னு பார்க்கலாம்”, அப்படின்னே எல்லாம் நடக்கற மாதிரி இருக்கும்!

எப்படிப்பட்ட துன்பமா இருந்தா என்ன, 5-ஆ இருந்தாலும், 10-ஆ இருந்தாலும், துன்பம் துன்பம்தானே. அதைப் போய் யாருக்காச்சும் பிடிக்குமா? அதை மறக்கணும்னுதானே எல்லாரும் விரும்புவாங்க? (அப்பாடி! ஒரு வழியா தலைப்புக்கு வந்துட்டா, அப்படின்னு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது :)

மனித வாழ்க்கைக்கு மறதி அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காதுன்னு நினைக்கிறேன்.

ஆனா கஷ்டங்களை யாராலயும் சுலபமா மறக்க முடியறதில்லை. அப்படி மறக்கறதுக்கு என்ன செய்யணும்?

சில சமயம் ஒரு விஷயத்தை மறக்கணும்னு ரொம்ப பிரயத்தனப்பட்டோம்னா, அந்த விஷயம்தான் ரொம்ப நல்லா நினைவில் இருக்கும்! ஒரு விஷயத்தை சுலபமா மறக்கணும்னா அதை ‘உதாசீனப்’படுத்தணும், அதாவது ignore பண்ணனும் – அப்படின்னு திவாஜி ஒரு முறை சொன்னார்.

அது சரி.. ஆனா அப்படின்னா என்ன? எப்படி அதைச் செய்யறது?

ஆங்கிலத்தில் சில பிரயோகங்கள் அழகா இருக்கும். அதில் ஒண்ணுதான் “entertaining a thought” அப்படிங்கிறது. அதாவது ஒரு பொருளையோ ஒரு விஷயத்தையோ பற்றி நினைக்கும் போது, அதுக்கு கை, கால், கண்ணு, மூக்கு, வாய், எல்லாம் வச்சு இன்னும் பெரிசாக்கி பாக்கறது.

உதாரணத்துக்கு வெளிநாட்டு டூர் ஒண்ணு போகணும்னு உங்களுக்கு ரொம்ப நாளா ஆசைன்னு வச்சுக்குவோம். அதுக்கான திட்டம் எதுவும் போடலை, எப்ப போறீங்க, யாரோட போறீங்க, எவ்வளவு செலவாகும், எத்தனை நாள் விடுப்பு எடுக்கணும், ஒண்ணுமே தெரியாது. ஆனா அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கற்பனை மட்டும் விரிஞ்சுக்கிட்டே போகும். அங்க போகும்போது போடறதுக்கு எந்த மாதிரி உடைகள் வாங்கலாம், என்னென்ன இடங்களை பார்க்கலாம், அங்க போய் என்னென்ன பொருள் வாங்கலாம், இங்க உள்ளவங்களுக்கெல்லாம் பரிசுப் பொருள் என்ன வாங்கலாம், இப்படில்லாம்… இதைத்தான் அந்தக் காலத்துல நாங்க “ட்ரீம் அடிக்கிறது” அப்படின்னு சொல்லுவோம் :)

இதுவே ஒரு துயரம் தரும் நிகழ்ச்சி, நீங்க மறக்கணும்னு நினைக்கிற நிகழ்ச்சி, ஒண்ணு மனசில் வந்தது அப்படின்னு வைங்க… அப்ப என்ன ஆகும்? அதைப் பற்றி மனசில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு flashback ஓடும்… பிறகு அந்த சமயத்தில் நீங்க அனுபவிச்ச உணர்வுகளெல்லாம், வலிகளெல்லாம், மறுபடியும் ஏற்படும். அதை நினைக்க நினைக்க அந்த துன்பத்துக்கு காரணமானவர் மேல பழைய ஆத்திரம் மறுபடியும் வரலாம். உடனே அவரை இப்படித் திட்டணும், அப்படிக் கேள்வி கேட்கணும், இப்படி சண்டை போடணும்னு தோணலாம். அல்லது வருத்தம் மட்டுமே மேலோங்கி, அந்த வருத்தம், உங்களை எழுந்து எதுவுமே செய்ய விடாத மன அழுத்தத்தில் (depression) ஆழ்த்திடலாம்…

இது எதனால ஏற்பட்டது? அந்த துயர நிகழ்ச்சி மனதில் வந்ததுமே, அதை நீங்க ignore பண்ணாம entertain பண்ணியதால் ஏற்பட்டது!

அப்படின்னா அதை ignore பண்றதுக்கு என்ன செய்யணும்?

அந்த மாதிரி நினைவு மனசில் வரும்போது, அதைக் ‘கண்டுக்கக்’ கூடாது. “உன்னை யார் இப்போ இங்கே கூப்பிட்டா?” அப்படின்னு சொல்லி அதைத் தள்ளிடணும். குழந்தைங்க எதுக்காவது காரணமில்லாம அடம் பிடிச்சு அழும்போது, நாம கண்டுக்காம விட்டுட்டோம்னா, கொஞ்ச நேரத்தில் தானா நிறுத்திடுவாங்க. அதே போலத்தான் நம்ம மனசும். அடம் பிடிக்கிற குழந்தை!

அடம் பிடிக்கிற மனசை உதாசீனப்படுத்திட்டு, மத்த விஷயங்களில் அல்லது வேலைகளில் கவனத்தைச் செலுத்தணும். தோட்டத்துக்கு போய் தண்ணீர் ஊற்றலாம். பாதி படிச்சுட்டு வச்சிருக்கிற புத்தகத்தை எடுத்து படிக்கலாம். நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டு பேசலாம். ஷாப்பிங் போகலாம். சாக்லேட் சாப்பிடலாம் :) எதுவுமே இல்லையா, உங்களுக்குப் பிடிச்சதா, சந்தோஷம் தரக் கூடிய நினைவுகளை வலிய நினைச்சுப் பார்க்கலாம். அதைப் பற்றி ட்ரீம் அடிக்கலாம்! அதை விட்டுட்டு, துன்ப நினைவு பற்றியே விவரமாக நீங்களே ஞாபகப்படுத்திக்கிட்டு, அதைச் சுற்றியே எண்ணங்களை அமைச்சுக்கறதால, பிறகு நீங்களே அந்த பழைய உணர்வுச் சூழலிலேயே வசமா சிக்கிடறீங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்… ஆனா முயற்சி திருவினையாக்கும்!

இந்த மாதிரி, வேண்டாத நினைவுகள் வரும்போது ஒவ்வொரு முறையும் அதை conscious-ஆ உதாசீனப் படுத்தப் படுத்த, நாளடைவில் அவை தானா மறந்துடும். அப்படியே கொஞ்சம் நினைவிருந்தாலும், அதனுடைய தாக்கம் ரொம்பக் குறைச்சலாவேதான் இருக்கும்.

ஆக, நினைக்கத் தெரிந்த மனசுக்கு மறக்கவும் தெரியும். நாமதான் அதுக்கு சொல்லிக் குடுக்கறதில்லை!

எல்லோரும் நல்லா இருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Friday, January 14, 2011

பொங்குக சர்க்கரைப் பொங்கல்! தங்குக தித்திக்கும் இன்பம்!!

அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!!



சூரியனுக்கு...


ஆண்டாண்டு காலமாய் அகிலமெலாம் ஆள்பவனே!
நீண்டிருக்கும் ஒளிக்கரத்தால் நீள்நிலத்தை அணைப்பவனே!

தூண்டா மணிவிளக்காய் வானத்தில் ஒளிர்பவனே!

வேண்டாத உயிர்களுக்கும் வேண்டுவன தருபவனே!


உன்னன்பால் உலகெல்லாம் பயிர்காத்து வளர்க்கின்றாய்!

அதனாலே உலகத்தார் உயிர்காத்துப் பிழைக்கின்றார்!

சளைக்காமல் கிழக்கினிலே தினமும்நீ உதிக்கின்றாய்!

நாளை உண்டென்ற நம்பிக்கை அளிக்கின்றாய்!


அன்னையவள் கண்ணொளியாய் திகழ்கின்ற கதிரவனே!

இருளகற்றி ஒளியூட்டிப் பரிகின்ற பகலவனே!

புத்தரிசிப் பொங்கலிட்டு படைக்கின்றோம் உனக்காக!

பத்திரமாய்ப் பூவுலகைக் காத்திடுவாய் எமக்காக!!



**


உழவருக்கு...


ஆடிதேடி விதைவிதைத்து
அக்கறையாய் பார்த்துக்கொண்டு

ஓடிஓடி ஓய்வில்லாமல் உழைத்திடுவான் – உழவன்

கோடிக்கோடி மக்களுக்கு உணவிடுவான்


வானம்பார்த்த பூமியோடு

தானும்பார்த்து வாழ்ந்திடுவான்

நேரங்காலம் பார்க்காமல்

நித்தம்வேலை செய்திடுவான்


இயற்கைகொஞ்சம் ஒத்துழைத்தால்

இன்பம்மிகக் கொண்டிடுவான்

நிலமகளை குலமகளாய்

நெஞ்சில்வைத்துப் போற்றிடுவான்


உணவிட்டுக் காக்கின்ற
உழவருக்கு நன்றிசொல்வோம்
நெய்மணக்கும் பொங்கலிட்டு

நேசமுடன் நன்றிசொல்வோம்!



**


மாடுகளுக்கு...


மாடுபடும் பாட்டிலொரு பொருளிருக்கு
மாடுபோல ஒழைச்சிருந்தா பலனிருக்கு

பாலுமுதல் தோலுவரை அதுகொடுக்கும்

பொறுமையிலே பூமியப்போல் அதுஇருக்கும்!


ஏரிழுக்கும், பாரமெல்லாம் அதுசொமக்கும்
ஏறெடுத்தும் பார்க்காம அதுநடக்கும்

அடிமேல அடியடிச்சா மனம்பதைக்கும்

ஆதரவா இருந்தாக்க மனங்களிக்கும்!


வாழ்வெல்லாம் மனுசனுக்கே அதுஒழைக்கும் - அத
வாஞ்சையோட பாத்துகிட்டா வாழ்வினிக்கும்!

மாட்டுக்கொரு பொங்கமட்டும் போதாதுங்க

அன்னாடம் அன்புசெஞ்சு வாழ்வோமுங்க!



**


--கவிநயா

சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் அனுபவித்து பாடியிருப்பதையும் கேட்டு மகிழுங்கள்! தாத்தா, பாட்டிக்கு மனமார்ந்த நன்றிகள்!

Thursday, January 13, 2011

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


திருப்பள்ளியெழுச்சி - 10

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!



பொருள்:
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த பிரம்மாவும் வருந்துகின்றனர். நீயோ, உன்னுடைய பரந்த கருணையினால் எங்களை ஆட்கொள்ளவென இந்த புவியில் எழுந்தருளி எங்களை ஆட்கொள்ள வல்லவனாயிருக்கிறாய்! அரிதான இனிய அமுதத்தை ஒத்தவனே! பள்ளி எழுந்தருள்வாயாக!


இன்றுடன் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிவுகள் நிறைவு பெறுகின்றன. ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!!

Wednesday, January 12, 2011

களிதரு தேனே! கடலமுதே! கரும்பே!


திருப்பள்ளியெழுச்சி - 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!

வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்

எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!



பொருள்:
விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மேலான சிவபெருமானே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! உனக்கு பணி செய்யும் அடியவர்களை மண்ணுலகில் வந்து வாழச் செய்தவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்யும் அடியவர்களின் கண்களில் அகலாது நின்று, இன்பம் தருகின்ற இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பினும் இனியவனே! உன்னை வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! இந்த உலகத்தின் உயிராகிய எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Tuesday, January 11, 2011

மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!



திருப்பள்ளியெழுச்சி - 8

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரை திருமேனியும் காட்டித்

திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: என்னை ஆட் கொண்ட இனிமையான அமுதம் போன்ற சிவபெருமானே! அழகிய மெல்லிய விரல்களையுடைய பார்வதி தேவியுடன் அடியவர்களின் உள்ளங்களில் நிறைந்து அருள்பவனே! அனைத்துக்கும் முதலும், நடுவும், முடிவுமாய் நிற்பவன் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். (குருத்த மரத்தின் அடியில்) ஆசானாக வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! பள்ளி எழுந்தருள்வாயே!

Monday, January 10, 2011

இது அவன் திருவுரு; இவனே அவன்!


திருப்பள்ளியெழுச்சி - 7

அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்

மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்

திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையின் தலைவனே! பரம்பொருளின் சுவையானது பழச்சுவையோ, அமுதத்தின் சுவையோ, அறிந்து கொள்ள அரியதோ, அன்றி எளியதோ என்பதை தேவர்களும் அறிய மாட்டார்கள். அப்படி இருக்கையில், இதுவே அவர் திருவுருவம், அவரே இவர், என்று நாங்களும் அறிந்து கொள்ளும்படி, இந்த மண்ணுலகில் எழுந்தருளிக் காட்சி அளிப்பவனே! எங்களை உன் விருப்பம் போல ஆட்கொண்டு அருளிட, பள்ளி எழுந்தருள்வாயே!


படத்துக்கு நன்றி: http://www.tamilhindu.net/t1118-topic

Sunday, January 9, 2011

அணங்கின் மணவாளா!


திருப்பள்ளியெழுச்சி - 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்

வணங்குகின்றார், அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்:
உமாதேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் மெய்யடியார்கள், தங்கள் பந்தபாசங்களை துறந்து, உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்களும் தங்களின் இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பினை அறுத்து ஆட்கொண்டருளும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Saturday, January 8, 2011

சிந்தனைக்கும் அரியாய்!


திருப்பள்ளியெழுச்சி - 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!

சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு உன்னைப் போற்றிப் பாடியும் ஆடியும் மகிழ்வோரைக் கண்டிருக்கிறோமே அல்லாது, உன்னை உண்மையாகக் கண்டறிந்தவர் எவரென அறிந்ததில்லை. எம்பெருமானே! நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொண்டு அருள்வதற்காக, பள்ளி எழுந்தருள்வாயே!

Friday, January 7, 2011

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்


திருப்பள்ளியெழுச்சி - 4


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை எழுப்பியபடி ஒருபுறம் நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தோத்திரப்பாடல்களைப் பாடுவோரும் ஒருபுறம் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கையில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளுடன் உன்னுடைய பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் பெருக பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர்களுமாக சிலர் ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்கள் இருக்கையில், எளியவனான எனக்கும் அருள் செய்யும் என் இறைவனே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/

Thursday, January 6, 2011

யாவரும் அறிவரியாய், எமக்கு எளியாய்!



திருப்பள்ளியெழுச்சி - 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்குகின்றன. நட்சத்திரங்களின் ஒளி மங்கி, சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல இருக்கிறது. அழகிய கழல்களை அணிந்த உன் திருவடிகளை அன்போடு எனக்கு காட்டுவாயாக! தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/captain_don/368956096

Wednesday, January 5, 2011

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!


திருப்பள்ளியெழுச்சி - 2

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! அருணன் கிழக்கு திசையை அணுகி வந்து விட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற மலர்கள் மலர்ந்து விட் டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து ரீங்கரிக்கின்றன. அருளாகிய செல்வத்தை அளவின்றித் தருகின்ற ஆனந்த மலையை ஒத்தவனே! அலைகடலைப் போன்ற அருட்கடலே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/jamieanne/5092080665

Monday, January 3, 2011

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே!

தன்னை ஆட்கொண்ட, திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழியின் இறுதி 10 நாட்களுக்கு இட வேண்டும் என்று தோன்றியது. எல்லாம் வல்ல அவனை வணங்கி, இன்று தொடங்கலாம்...ஓம் நமசிவாய!



திருப்பள்ளியெழுச்சி - 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரியவென மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Sunday, January 2, 2011

நாமம் சொல்லிப் பாடுவோம்!

ஒரே ஒரு இறைவனுக்கு எத்தனை எத்தனை பெயர்கள். எத்தனை எத்தனை உருவங்கள். எத்தனை எத்தனை மதங்கள். அவனை அடையத்தான் எத்தனை எத்தனை வழிகள்.

ஒரே அளவு சட்டை எல்லாருக்கும் பத்தறதில்லை. ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு அளவு. வெவ்வேறு ரசனை. வெவ்வேறு குணம். இரட்டையராகவே பிறந்துட்டா கூட அவங்க ரெண்டு பேரும் எவ்வளவோ வேறுபட்டிருப்பதைப் பார்க்கிறோம். பலவிதமாக வேறுபட்டிருக்கும் பக்தர்களுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி இறைவனும் வளைஞ்சு கொடுக்கறான் அப்படிம்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஒரே ஒரு குழந்தை வச்சிருக்கவங்க என்ன செய்யறாங்க? அந்தக் குழந்தையைத்தான் ஆண்பிள்ளையாவும், பெண்பிள்ளையாவும், கிருஷ்ணனாகவும், ராதாவாகவும், முருகனாகவும், இப்படி பலவிதமா அலங்கரிச்சு சந்தோஷப்படறாங்க. அதே போல ஒரே ஒரு இறைவனைத்தான் நாமும் பலவிதமா பார்த்து சந்தோஷப்படறோம்.

நேரம் கிடைச்சா இதையும் படிச்சுப் பாருங்க...

கலியுகத்தில் இறைவனை அடைய மிகச் சிறந்த, சுலபமான வழி நாமஜெபமே என்று பல பெரியோர்களும் சொல்லியிருக்கிறாங்க. அப்பேர்ப்பட்ட இறைவனின் பல நாமங்களையும் உள்ளடக்கிய ஒரு குட்டி (பாப்பா) பாடல் உங்களுக்காக...

இறை நாமம் சொல்லி புதுவருடத்தைத் தொடங்குவோமே!


நாமந் தன்னை சொல்லுவோம்!
நாளும் துன்பம் வெல்லுவோம்!
காலன் வந்த போதிலும்
நாமம் சொல்லிப் பாடுவோம்!

விநாயகனின் நாமம் சொன்னால்
வினைக ளெல்லாம் விலகுமே!
வேலவனின் நாமம் சொன்னால்
வெற்றி வந்து சேருமே!

ராம நாமம் சொல்லிவந்தால்
ராம பாணம் காக்குமே!
கிருஷ்ணகிருஷ்ண என்று சொன்னால்
கேட்ட தெல்லாம் கிடைக்குமே!

நமசிவாய என்று சொன்னால்
நன்மை வந்து நிறையுமே!
நாராயணா என்று சொன்னால்
நல் வினைகள் விளையுமே!

அம்மாவென்று அன்பாய் சொன்னால்
அன்னை மனம் மகிழுமே!
சும்மாவேனும் சொன்னால் கூட
சொர்க்கம் வந்து சேருமே!

ஏசுநாமம் சொல்லி வந்தால்
ஏக்க மெல்லாம் தீருமே!
அல்லா வென்று சொல்லி வந்தால்
அல்லல் எல்லாம் மறையுமே!

கணந்தோறும் நாமம் சொன்னால்
கால மெல்லாம் காக்குமே!
இடைவிடாது நாமம் சொன்னால்
இப் பிறவி சிறக்குமே!



--கவிநயா

பௌளி ராகத்தில் இனிமையாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு மிக்க நன்றி.