Sunday, January 2, 2011

நாமம் சொல்லிப் பாடுவோம்!

ஒரே ஒரு இறைவனுக்கு எத்தனை எத்தனை பெயர்கள். எத்தனை எத்தனை உருவங்கள். எத்தனை எத்தனை மதங்கள். அவனை அடையத்தான் எத்தனை எத்தனை வழிகள்.

ஒரே அளவு சட்டை எல்லாருக்கும் பத்தறதில்லை. ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு அளவு. வெவ்வேறு ரசனை. வெவ்வேறு குணம். இரட்டையராகவே பிறந்துட்டா கூட அவங்க ரெண்டு பேரும் எவ்வளவோ வேறுபட்டிருப்பதைப் பார்க்கிறோம். பலவிதமாக வேறுபட்டிருக்கும் பக்தர்களுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி இறைவனும் வளைஞ்சு கொடுக்கறான் அப்படிம்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஒரே ஒரு குழந்தை வச்சிருக்கவங்க என்ன செய்யறாங்க? அந்தக் குழந்தையைத்தான் ஆண்பிள்ளையாவும், பெண்பிள்ளையாவும், கிருஷ்ணனாகவும், ராதாவாகவும், முருகனாகவும், இப்படி பலவிதமா அலங்கரிச்சு சந்தோஷப்படறாங்க. அதே போல ஒரே ஒரு இறைவனைத்தான் நாமும் பலவிதமா பார்த்து சந்தோஷப்படறோம்.

நேரம் கிடைச்சா இதையும் படிச்சுப் பாருங்க...

கலியுகத்தில் இறைவனை அடைய மிகச் சிறந்த, சுலபமான வழி நாமஜெபமே என்று பல பெரியோர்களும் சொல்லியிருக்கிறாங்க. அப்பேர்ப்பட்ட இறைவனின் பல நாமங்களையும் உள்ளடக்கிய ஒரு குட்டி (பாப்பா) பாடல் உங்களுக்காக...

இறை நாமம் சொல்லி புதுவருடத்தைத் தொடங்குவோமே!


நாமந் தன்னை சொல்லுவோம்!
நாளும் துன்பம் வெல்லுவோம்!
காலன் வந்த போதிலும்
நாமம் சொல்லிப் பாடுவோம்!

விநாயகனின் நாமம் சொன்னால்
வினைக ளெல்லாம் விலகுமே!
வேலவனின் நாமம் சொன்னால்
வெற்றி வந்து சேருமே!

ராம நாமம் சொல்லிவந்தால்
ராம பாணம் காக்குமே!
கிருஷ்ணகிருஷ்ண என்று சொன்னால்
கேட்ட தெல்லாம் கிடைக்குமே!

நமசிவாய என்று சொன்னால்
நன்மை வந்து நிறையுமே!
நாராயணா என்று சொன்னால்
நல் வினைகள் விளையுமே!

அம்மாவென்று அன்பாய் சொன்னால்
அன்னை மனம் மகிழுமே!
சும்மாவேனும் சொன்னால் கூட
சொர்க்கம் வந்து சேருமே!

ஏசுநாமம் சொல்லி வந்தால்
ஏக்க மெல்லாம் தீருமே!
அல்லா வென்று சொல்லி வந்தால்
அல்லல் எல்லாம் மறையுமே!

கணந்தோறும் நாமம் சொன்னால்
கால மெல்லாம் காக்குமே!
இடைவிடாது நாமம் சொன்னால்
இப் பிறவி சிறக்குமே!



--கவிநயா

பௌளி ராகத்தில் இனிமையாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு மிக்க நன்றி.

6 comments:

  1. ராம நாமம் சொல்ல ஒரு இன்ஸ்பெயரிங்
    கவிதையா !!
    ப்ரமாதம்.
    அதுவும் பௌளி ராகத்திலே...
    ஸ்ரீமன் நாராயண ..ஸ்ரீமன் நாராயண என்று துவங்கும் பாட்டு
    கேட்டிருக்கிறீகள் அல்லவா ! அதே மெட்டு, அதே ராகம்.
    இன்னும் சற்று நேரத்தில்.
    எனது வலையில்.
    ராம நாம ஜெப‌ம்
    உதடுகளில் அல்ல,
    உள்ளத்தோடு
    உறவாடட்டும்.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  2. வருடத்தை இறை நாமத்துடன்
    துவக்குவோம்.

    அருமையான‌
    அழகான‌
    அனைவருக்குமான‌ பாடலைத் தந்த‌
    தங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //ராம நாம ஜெப‌ம்
    உதடுகளில் அல்ல,
    உள்ளத்தோடு
    உறவாடட்டும்.//

    அதுதானே வேண்டும் :)

    நீங்கள் இனிமையாகப் பாடியதை இடுகையில் இணைத்து விட்டேன் தாத்தா.

    மனப்பூர்வமான நன்றிகள் உங்களுக்கு.

    ReplyDelete
  4. //அருமையான‌
    அழகான‌
    அனைவருக்குமான‌ பாடலைத் தந்த‌
    தங்களுக்கு வாழ்த்துகள்//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், திகழ்.

    ReplyDelete
  5. பாப்பா பாட்டு!னு போட்டு தக்குடுவை வரவெச்சுட்டேளே!!..:) ராமகிருஷ்ணரோட வார்த்தைகள் மிகவும் ரசிக்க வைத்தது அக்கா!!..;)

    ReplyDelete
  6. தக்குடுவின் வரவு கண்டு மகிழ்ச்சி :) நன்றி தக்குடு.

    //ராமகிருஷ்ணரோட வார்த்தைகள் மிகவும் ரசிக்க வைத்தது அக்கா!!..;)//

    சுட்டி கொடுத்திருக்கேனே, அதை படிச்சுதானே சொல்றீங்க :) ஏன்னா இந்த பதிவில் நானே சில உதாரணங்களை அளந்து விட்டிருக்கேன்... :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)