Sunday, November 21, 2010

பயணம்

ன்னும் நாலு நாள்தான் இருக்கு. கொண்டு போய்ச் சேர்க்கிறதுக்கு முன்னாடி இன்னும் ஏதாச்சும் வேணுமா, வாங்கணுமா, அப்படின்னு மனசுல ஓடிக்கிட்டிருந்தது. புது எடம், புது மனுஷங்க, பழக்க வழக்கமெல்லாமும் புதுசாத்தான் இருக்கும். நினைக்க நினைக்க கவலையும் அதிகமாகிக்கிட்டே வருது…

ஆனா என்ன செய்யறது, வேற வழியும் இல்லை. எல்லாம் சொல்லிக் குடுத்துதான் கொண்டுபோய் விடணும். விடறதுன்னு தீர்மானிச்சப்பவே பேசவும் தொடங்கிட்டோம். வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் இதைப் பத்திதான் பேச்சு. என்ன ஒண்ணே ஒண்ணு, இதப் பத்தி ஆரம்பிச்சாலே அவ மொகம் சுருங்கிரும். மனசு வாடிரும். தரையைப் பாத்துக்கிட்டே ஒண்ணுஞ் சொல்லாம ஒக்காந்திருப்பா. பெறகு, சொல்ல வந்ததை விட்டுப்புட்டு வேற என்னத்தையாவது சொல்லி, சமாளிச்சு… அப்பறம் மறுபடியும் சமயம் பார்த்து ரெண்டு வார்த்த சொல்லி…, இப்பிடித்தான் ஓடுது கொஞ்ச நாளா.

எம்பொண்டாட்டியும் அவ பங்குக்கு பேசத்தான் செய்யிறா. ஒவ்வொருத்தர் மனசும் ஒடம்பும் ஒவ்வொரு எடத்துல இருக்கு. அதான் ப்ரச்சனை.

**

ஆச்சு. இன்னிக்குதான் கொண்டு போய் விடணும். பத்து மணி வாகில வரச் சொல்லியிருக்காங்க. போக ஒன்றை மணி நேரமாகும். எட்டு மணிக்கே சாமானெல்லாம் வண்டில ஏத்தியாச்சு. வெளக்கேத்தி சாமி கும்புட்டாச்சு. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.

“போன புதுசுல கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கும். ஆனா உன் வயசுக்காரங்க நெறய பேரு இருப்பாங்க. அதனால அவங்கள ப்ரெண்டு புடிச்சுக்க. அங்க ரொம்ப நல்லா பாத்துக்குவாங்களாம். யாராச்சும் உன்கூடவே இருப்பாங்களாம். அதுனால பயமொண்ணுமில்ல. நாங்களும் இங்க பக்கத்துலதான இருக்கம். எதாச்சும் வேணும்னா, ஒரு போன் போட்டா ஓடி வந்திரப் போறம். உனக்கு வேண்டிய புத்தகம், துணிமணி, எல்லாம் எடுத்து வச்சாச்சு. நானு கண்டிப்பா ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் வந்து பாத்துக்கிறேன்... ஏ கமலா, நீயும் சொல்லேண்டி”

“ஆமாங்கத்தை. எங்க ரெண்டு பேருக்கும் ஒடம்பு நல்லாததாலதான ஒங்களை கவனிச்சுக்க முடியல? அங்க நல்லா பாத்துக்குவாங்க. கவலப் படாம போயிட்டு வாங்க. நாங்க அடிக்கடி வாரோம்”

முதியோர் இல்லத்துக்கு போகப் போகிற என் அம்மாவிடம் இருந்து எந்த பதிலும் இல்ல. சுருக்கங்களில் சிக்கிய கண்ணீர் சட்டென்று வழிய முடியாமல் வழி பார்த்துக் கொண்டிருக்கிறது.

--கவிநயா

8 comments:

  1. ஒரு பிரபல எழுத்தாளரின் புதினம் ஒன்று இதே விஷயத்தை நிலைக்களனாகக் கொண்டு செல்கிறது. அடுத்து எனது எழுத்தாளர் பற்றிய பதிவு அவரைப் பற்றித் தான்.புதுப்பார்வை. பல புதுத் தகவல்கள். நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.

    ReplyDelete
  2. //கலக்கம்:(!//

    ஆம் :(

    வாசிப்புக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  3. //அடுத்து எனது எழுத்தாளர் பற்றிய பதிவு அவரைப் பற்றித் தான்.புதுப்பார்வை. பல புதுத் தகவல்கள். நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.//

    நிச்சயம் வாசிக்கிறேன் ஜீவி ஐயா.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. நடக்கிற நிஜத்தை அப்படியே எடுத்துச் சொல்லிவிட்டு இதை கதை என்று ஏன் சொல்கிறீர்கள்?
    இன்றைக்கு, உலகத்தில் பணம் இரு க்கிறது. பெற்றோர்கள் தனது வாழ் நாளில் பார்த்திராத‌
    செல்வத்தை அவர்கள் குழந்தைகள் சம்பாதிக்கிறார்கள்.
    அந்தக் குழந்தைகளும் பெற்றோர்களுக்காக எத்தனை வேண்டுமானாலும் செலவு செய்யத்
    தயாராய் இருக்கிறார்கள்.
    ஆனால், இன்றைய தேதியில் வயதான பெற்றோர்கள் எதிர்பார்க்கும் ஆதரவு இல்லை.
    எத்தனை கஷ்டமானாலும் தாம் தான் தமது பெற்றோர்களைப் பேணி வளர்க்கவேண்டும்
    என்ற மனோபாவம் குறைந்து கொண்டே வருகிறது.

    முதியோர் இல்லம் தான் புகலிடம் என்ற நிலை வரத்தான் செய்கிறது.

    எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும், ( இறந்து போனால், உங்களது மத, ஜாதி
    ச்ம்பிரதாயங்களுக்கு ஒப்புதலான காரியங்களையும் சேர்த்து ) செய்துவிடுகிறோம் என்று உத்திரவாதம்
    தரும் முதியோர் இல்லங்களின் விளம்பரங்கள் தான் இன்று அதிகமாக காணப்படுகிறது.

    அது சரி, சென்னையில் நல்ல முதியோர் இல்லம் எது ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. வாங்க சுப்பு தாத்தா. நீங்கள் சொல்வது அத்தனையும் வருத்தம் தரும் உண்மை :(((

    //அது சரி, சென்னையில் நல்ல முதியோர் இல்லம் எது ?//

    எனக்கும் தெரியாதே...

    ReplyDelete
  6. // திவா said...

    அடப்பாவமே!//

    :(((

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)