Sunday, December 26, 2010

கண்ணா நீ எங்கே?



கண்ணன் - என் காதலன்

எங்கே சென்றாயோ - கண்ணா
கொஞ்சம் வருவாயோ?
தேடி அலையும் தென்ற லுக்கு
தரிசனம் தருவாயோ?

வான வில்லின் நீலம் உனக்கே
வண்ணக் கண்ணா வா!
திரட்டி வைத்த வெண்ணை தின்ன
திருட்டுக் கண்ணா வா!

கோபி யரைக் கொஞ்சிப் பேச
கோகுலக் கண்ணா வா!
ஆயர் பாடி ஆவி னங்கள்
அழைக்கு துன்னை வா!

மயக்கும் குழலை இசைக்கும் கண்ணா
மயிலிற கோடே வா!
மண்ணைத் தின்ற மாயக் கண்ணா
என்னைக் காக்க வா, எந்தன் ஏக்கம் தீர்க்க வா!

--கவிநயா

அனைவருக்கும் மனம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்பே பெருகட்டும்! நலமே சூழட்டும்!!

Monday, December 20, 2010

கோவிந்தக் கிளி

கோவிந்தா… கோவிந்தா’

பிருந்தை உள்ளே நுழையும் போதே கிளியின் குரல்தான் அவளை வரவேற்கிறது.

வீட்டில் நிசப்தத்தின் ஆட்சி. பெரியாழ்வார் வீட்டில் இல்லை போலிருக்கிறது. கோதை என்ன செய்கிறாள்? ஒரு வேளை உறங்கிக் கொண்டிருக்கிறாளோ? இந்த எண்ணம் வந்தவுடன் தன் கொலுசுச் சத்தத்தை அடக்கிக் கொண்டு மெதுவாக அடி எடுத்து வைக்கிறாள். ஆனால், கிளியின் கூவலுக்கு எழாதவளா என் கொலுசுக்கு எழுந்திருக்கப் போகிறாள், என்று கூடவே தோன்றுகிறது.

அதோ… தரையில் துவண்ட கொடி போல் கிடக்கிறாள் கோதை. விழிகள் திறந்துதான் இருக்கின்றன. சரிதான்… அவள்தான் உண்பதையும் உறங்குவதையும் மறந்து எத்தனையோ காலமாகிறதே.

பக்கத்தில் போய் மெதுவாக அமர்கிறாள், தோழியின் மோனத்தைக் கலைக்க மனமில்லாமல். அவளைப் பார்க்கப் பார்க்க, கழிவிரக்கத்தால் கண்கள் கசிகின்றன, பிருந்தைக்கு. எப்படி ஆகி விட்டாள், என் தோழி!

சிவந்திருக்க வேண்டிய கன்னங்களுக்குப் பதில் உறக்கமிழந்த கண்கள் சிவந்திருக்கின்றன. வெளுத்திருக்க வேண்டிய கண்களுக்குப் பதில் முகமும் அதரங்களும் வெளிறிப் போய்க் கிடக்கின்றன. வசந்த கால மலரைப் போல் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தவள், இப்போது இலையுதிர் கால உதிர்ந்த சருகைப் போல் கிடக்கிறாள்.

கன்னத்தில் விழுந்து கண்களை மறைத்துக் கொண்டிருந்த கூந்தலைப் பரிவுடன் விலக்கி விடுகிறாள், பிருந்தை. அந்த ஸ்பரிசத்தில் கோதையின் கருவிழிகள் இலேசாக அசைகின்றன.

“யார் அது?..... ஓ…. வா… பிருந்தை”

அந்த வார்த்தைகளிலேயே களைத்து விட்டவள் போல் மீண்டும் மௌனமாகி விட்டாள் கோதை.

திரட்டி வைத்த வெண்ணெய் எதையும் உருக விடாமல் உடனடியாக உண்டு உண்டு, பேழை வயிறோனாய்* இருக்கும் அந்த நீலக் கண்ணன், இந்தப் பெண்ணை மட்டும் இப்படி இரக்கமில்லாமல் உருக விட்டு, இவள் பேதை வயிறை இப்படிக் காய வைத்து விட்டானே!

“கோபாலா… கோபாலா…” மறுபடியும் கொஞ்சுகிறது கிளி.


கைகளைத் தரையில் ஊன்றி, சற்றே நகர்ந்து தோழியின் மடியில் தலை வைத்துக் கொள்கிறாள் கோதை.

ஊன்றிய கைகளிலிருந்து வளையல்கள் தானாகக் கழன்று விழுகின்றன. அவற்றை எடுத்து தோழியின் கைகளில் மறுபடியும் போட்டு விடுகிறாள், பிருந்தை.

“பாரடி இந்தக் கிளியை… எப்போது பார்த்தாலும் அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறது…”, என்று தோழியிடம் முறையிடுகிறாள் கோதை, சின்னக் குழந்தையைப் போல.

“வேறு என்னடி செய்யும் பாவம்? நீதானே அவன் பெயர்களை மட்டுமே அதற்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்? உன் மேல்தான் தவறு!”

“ஆமாமடி. அவன் பெயரையே எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவலில் அப்படிச் செய்தேன். ஆனால் இப்போது அவன் பெயரைக் கேட்டாலே என் ஏக்கமும் துக்கமும் அதிகரிக்கிறதேடி…. என்ன செய்வேன்?”

“உலகளந்தான்… உலகளந்தான்” என்று அழைக்கிறது கிளி, இப்போது.

“ஏய் கிளியே… சற்று சும்மா இருக்க மாட்டாய்!”, பிருந்தைக்கே பொறுமை போய்விடும் போல் இருக்கிறது.

“என்றைக்கேனும் உணவு தராமல் இருந்து விட்டால், முறையிடுவதற்காக இப்படித்தான் அவனை அழைக்கும்.**

கிளி சிறகடித்து வந்து பிருந்தையின் தோளில் அமர்ந்து கொள்கிறது.

“என்னை விட இந்தக் கிளிதான் அவன் பெயரை அதிகம் சொல்லியிருக்கும் என்று தோன்றுகிறதடி”, என்றவள், “இந்தக் கண்ணன் இருக்கிறானே… அவன் சரியான கள்வனடி”, என்கிறாள், சம்பந்தமில்லாமல்.

“அதுதான் தெரிந்த செய்தியாயிற்றே… அதற்கென்னடி இப்போது?” என்கிறாள் பிருந்தை பேச்சை வளர்க்க எண்ணி. இந்த மட்டுமாவது கோதை மோனத்தைக் கலைத்து இந்த உலகிற்கு வந்தாளே என்று இருக்கிறது அவளுக்கு.

“மனிதர்களை விட அவனுக்கு மற்ற உயிர்களிடத்தில்தான் அதிகப் பற்று போலும் என்று சமயத்தில் தோன்றுகிறதடி”

“எப்படிச் சொல்கிறாய்?”

“ம்… பாரேன்… மாடு கன்றுகள் இறப்பதைப் பொறுக்க முடியாமல்தானே அவன் காளிங்கனைக் கொன்றான்?”

“ஆமாமடி”

“கஜேந்திரன் அழைத்தவுடன் நொடியும் தாமதிக்காது கருடனில் ஏறிக் கணத்தில் வந்து விட்டானே?”

“உண்மைதான்”

“ஆயர்பாடியில் ஆவினங்களைக் காப்பதற்காக தன் பிஞ்சு விரலில் குன்றைக் குடையாக எடுத்தவனல்லவா அவன்?”

“ம்…”

“அதனால்தான், நான் அழைத்தால் வராதவன், என் கிளியின் குரலைக் கேட்டாவது ஓடோடி வந்து விட மாட்டானா என்று ஏக்கமாக இருக்கிறதடி…”

“ஓஹோ... இப்போதல்லவா புரிகிறது, நீ இந்தப் பொல்லாத கிளியைச் சகித்துக் கொண்டிருப்பதன் காரணம்!”, ஆச்சரியத்தில் கண்கள் பெரிதாக விரிகின்றன, பிருந்தைக்கு.

“என்றுதான் வருவானோ என் கண்ணன்?” பெருமூச்சொன்று தப்பிச் செல்கிறது, கோதையிடமிருந்து.

“ஒரு வேளை நான் இப்படி உருகி உருகிக் கரைய வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம் போலும்... அவன் விருப்பப்படி இருப்பதுதானே என்னுடைய விருப்பமும்!”

இதைச் சொல்லும்போது இத்தனை நேரமும் சோகமாக இருந்த கோதையின் முகம், ஏதோவொன்று புரிந்து விட்டாற் போல சட்டென்று ஒளி பெற்று, சந்தோஷத்தில் பொலிகிறது.

**
*1ம் பத்து 4-ம் (பெரியாழ்வார்) திருமொழி
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

**12-ம் (நாச்சியார்) திருமொழி
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9

**

--கவிநயா

பி.கு.: சில நாட்களுக்கு முன் கண்ணன் பாட்டில் இட்டிருந்தேன். எனக்கே பிடித்த பதிவு என்பதாலும், மார்கழிக்குப் பொருத்தம் என்பதாலும், வாசகர் வட்டம் வேறு என்பதாலும், இங்கும் இடலாம் என்று தோன்றியது. ஏற்கனவே வாசித்தவர்கள், பொறுத்தருள்க!

Thursday, December 16, 2010

ஜெகம் புகழும் புண்ய கதை

ன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டாள் அவள். நம்பிக்கை அற்றுப் போய் விட்டது. சுற்றிலும் அப்பிக் கொண்ட இருளைக் கிழிக்கத் தகுந்த எந்த ஒளிக் கற்றையும் தென்படவில்லை. எப்பேர்ப்பட்டவள்! உலகத்தை எல்லாம் ஆளும் தேவி! மனிதப் பிறவி எடுத்ததால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்தவள். துன்பம் எல்லை மீறிய போது மனிதர்களைப் போலவே மனம் தடுமாறி விட்டாள். நம்பிக்கை இழந்து விட்டாள்.

இலங்கையில், அசோகவனத்தில், எத்தனை பேர் இருந்தாலும், அவள் மட்டும் தனிமையில். மனம் எப்போதும் ராமனிடத்தில்.

பத்து மாதங்கள்! பத்து மாதங்கள் பொறுத்தவள், இன்னும் இரண்டு மாதங்களே மீதம் இருக்கின்றன என்று உணர்கிற போது நம்பிக்கை நொறுங்கி விட்டது. இராவணனின் வற்புறுத்தலையும், அரக்கிகளின் கொடூரத்தையும் சகித்துக் கொண்டு இனியும் உயிர் தரித்துக் கொண்டிருக்க முடியாது என்று தோன்றி விட்டது.

நம்பிக்கை இழந்தது தன் நாயகன் மீதா, அல்லது தர்மத்தின் மீதா என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே அல்லவா?

சிம்சுபா விருட்சத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு தன் முடிவை செயல்படுத்தும் வழியை ஆலோசிக்கிறாள். கண்களில் கண்ணீர் மட்டும் வழியா விடில், தூசு படர்ந்த அழகான ஓவியம் மரத்தில் சாற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணும்படி எழில் படைத்தவள். ‘ராமா ராமா’ என்று அரற்றுகிறது நெஞ்சம்.

காவல் இருக்கும் அரக்கிகள் அயர்ந்திருக்கிறார்கள், இதுவே தருணம் என்று நினைக்கிறாள். அந்த நிமிடத்தில்தான் எதிர்பாராவிதமாக அவள் செவிகளில் அமிருத தாரை பாய்கிறது.

“ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம். அயோத்தியில் தசரதன் என்ற ராஜா ஆண்டு வந்தார். அவருக்கு மூன்று மனைவியர். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றார்கள். அதில் ஸ்ரீராமன் மூத்தவன். இளைய மனைவி கைகேயிக்குத் தந்த வரத்திற்காக தசரதர் ஸ்ரீராமனை பதினாலு வருடங்கள் காட்டிற்கு அனுப்ப நேர்ந்தது. அவருடன் இளவல் லக்ஷ்மணனும், மனைவி சீதையும் உடன் வந்தார்கள்…”

யாரோ மிக மதுரமான குரலில் நாதனின் சரிதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குரலில்தான் எத்தனை குழைவு; எத்தனை இனிமை; எத்தனை அன்பு! இந்த இலங்கையில் அவர் பெயரை, வரலாற்றை, இத்தனை அழகாகச் சொல்லுபவர்கள் யார்? அவர் மீது இத்தனை பிரியமும் பக்தியும் வைத்திருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்களா?

சுற்றும் முற்றும் பார்க்கிறாள். யாரும் தென்படவில்லை. ஒரு வேளை கனவு காண்கிறேனோ என்று எண்ணுகிறாள். அன்புக்குரியவனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரமையோ என்றும் தோன்றுகிறது. ஸ்ரீராமனைப் பற்றிக் கேட்பது இந்தக் காயம்பட்ட உள்ளத்துக்குத்தான் எவ்வளவு இதமாக இருக்கிறது!


பாலைவனத்தில் தாகத்தில் தவிப்பவனுக்கு எதிர்பாராமல் கிடைத்த குளிர்ந்த நீருற்றுப் போலவும், பலநாள் பட்டினி கிடந்தவனுக்குக் கிடைத்த விருந்தைப் போலவும், இருளில் வழிதெரியாத கானகத்தில் கிடைத்த கைவிளக்கு போலவும் இருக்கிறது. அவரைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. மேனியெங்கும் புளகமடைந்து மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.

இந்த பத்து மாதங்களில் இது போன்ற ஒரு சந்தோஷத்தை அனுபவித்ததில்லை. என் வாழ்நாளில் நான் மகிழ்ச்சியாக இருந்த காலமும் உண்டா என்றல்லவா அவளுக்கு சந்தேகமாக இருந்தது? சக்கரவர்த்தித் திருமகனின் சரிதை, அவள் மனதில் பழைய ஆனந்தமான நினைவுகளைப் புதிதாகப் புஷ்பிக்கச் செய்கிறது. இது கனவாகவே இருந்தால்தான் என்ன, அந்தக் கனவு நீடிக்கட்டும் என்று எண்ணுகிறாள்.

அந்தக் குரலும் தொடர்ந்து ஸ்ரீராமனின் வரலாற்றைச் சொல்கிறது. அவருடைய அற்புதமான குணநலன்களையும், நிகரில்லாத வீரத்தையும், அவருக்குத் தன் துணைவியின் மேல் இருக்கும் அளவில்லாத பிரேமையையும், அவளைத் தேடுவதற்கென அகிலமெங்கும் அவர் வானரங்களை ஏவியிருப்பது பற்றியும், இப்படி எல்லாவற்றையும் அந்தக் குரல் சொல்கிறது.

சீதா தேவி மறுபடியும் தேடிப் பார்க்கிறாள். தனக்கு இத்தகைய மகிழ்ச்சியைத் தந்தவர் யார் என்று. அப்போது அந்த சிம்சுபா விருட்சத்தின் கிளைகளுக்கு இடையில் மின்னல் கீற்றுப் போல் ஒரு சிறிய உருவம் தெரிகிறது. நன்றாகப் பார்க்கையில் அது ஒரு சிறிய வானரம் போல் இருக்கிறது. இந்த வானரமா இத்தனை நேரமும் என் நாயகனைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்லியிருக்கும்? இருக்காது என்று நினைக்கிறாள்.

அந்தச் சமயத்தில், சொல்ல முடியாத தேஜசுடன் ஒளி வீசிய அந்த வானரம், மரத்தினின்றும் மெதுவாகக் கீழே இறங்கி வந்து அவளைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறது.

**

இராமாயணத்தில் எனக்குப் பிடித்த கட்டங்களில் இதுவும் ஒன்று. அனுமன் சீதைக்காக ஸ்ரீராம சரித்திரத்தைச் சொல்வதும், அதைக்கேட்டு சீதை ஆனந்தப்படுவதும். அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் எனக்கும் எழுத ஆசை!

ஸ்ரீராம ஜெயம்.

வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பதிவு. 200-வது பதிவும்.

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.forumohalu.org/index.php?topic=1930.0

Sunday, December 12, 2010

எனக்கும்… ஒரு மயக்கம்…

எல்லாருக்கும் ஏதாவது ஒரு ‘மயக்கம்’ இருக்கும்தானே? அதாங்க…passion, அப்படின்னு சொல்றது…

என்னோட மயக்கங்கள் … எழுத்தும், நடனமும்தான்…

நடனத்தை விட எழுத்து ஒரு படி மேல்; ஏன்னா எப்ப வேணுமானாலும் எழுதலாமே!

எழுத்து எனக்கு ஒரு அந்தரங்கத் தோழி மாதிரி. அந்தக் காலத்தில் கடிதம் எழுதற பழக்கம் இருந்தப்போ, நீ…ள நீ…ள…மா கடிதங்கள் எழுதுவேன். பெற்றோருக்கு, தங்கைகளுக்கு, தோழிகளுக்கெல்லாம்… அதுக்கப்புறம் கடவுளுக்கும் நிறைய எழுதி இருக்கேன். திட்டி… திட்டிதான்!

யார் மேலயாவது ரொம்ப கோவமோ வருத்தமோ இருந்தா, அதைப் பற்றி மனசில் உள்ளதெல்லாம் கொட்டி எழுதிட்டு, பிறகு கிழிச்சுப் போட்டுருவேன்; மனசு அமைதியாயிடும். ஆனா அதெல்லாம் ச்சின்ன வயசில்… இப்ப அப்படில்லாம் அபரிமிதமா யார் மேலயும் வருத்தமோ கோவமோ வரதில்லை. அப்படியே தப்பித் தவறி வந்தாலும் நிலைக்காது. கொஞ்ச நேரத்தில் காணாம போயிடும். *touchwood*

சமயத்தில் தோணும், சே, யாரும் அவ்வளவா படிக்கிற மாதிரி கூட இல்லை (ராமலக்ஷ்மியைத் தவிர! – ஹி..ஹி.. தவறா நினைக்காதீங்க, சில சமயம் பின்னூட்டங்களைப் பார்த்து அப்படித் தோணும் :) - எதுக்கு எழுதிக்கிட்டிருக்கோம், அப்படின்னு மனசு தளர்ந்த நேரங்கள் உண்டு… ஆனா எது எப்படி இருந்தாலும் என்னால் எழுதாம இருக்க முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்; எழுதறது மற்றவங்களுக்காக மட்டும் இல்லை, எனக்காகவும்தான்னு புரியுது. அதனால வருத்தப்படறதில்லை, இப்போ.

இந்தச் சமயத்தில், இங்கே வருகை தந்து, பின்னூட்டம் இட்டோ, இடாமலேயோ வாசிப்பவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.

எழுதறவங்க எல்லார்கிட்டயுமே யாராச்சும் ஒருத்தராச்சும் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பாங்க: “எப்படி உங்களால இப்படி எழுத முடியது?” அப்படின்னு. ஆனா என்கிட்ட அப்படிக் கேட்டவங்களை விட “எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது?” அப்படின்னு கேட்டவங்க அதிகம்! அப்படின்னா நான் எழுதறது அந்த அழகில் இருக்குன்னு அர்த்தமா… தெரியல… :)

என்கிட்ட இருக்கறது ஒரே பதில்தான். “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு”. எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்தில் இதை அனுபவிச்சிருப்போம். ஒரு விஷயம் ரொம்பப் பிடிச்சிருக்குன்னா, அதைச் செய்யறதுக்கு எப்படியாச்சும் நேரம் கண்டு பிடிச்சிருவோம். அப்படித்தான் நானும்.

முக்கால்வாசி நான் ‘எழுதறதெ’ல்லாம் கார் ஓட்டும்போது... சமையல் பண்ணும்போது... ஏதாவது தனிமை கிடைக்கும்போது... மனசில் ஓடிக்கிட்டிருக்கதுக்கெல்லாம் அப்பதான் ஏதாச்சும் உருவம் கிடைக்கும். அந்த மாதிரி வார்த்தைகள் வந்து விழற போதெல்லாம், எழுதறது ரொம்ப சுலபமா இருக்கே… யார் வேணுமானாலும் எழுதலாமே, ஏன் எழுத மாட்டேங்கிறாங்கன்னு தோணும்.

ஆனா சில சமயம் கரு கிடைச்சாலும், அதைப்பற்றி எழுதியே ஆகணும்கிற ஆசை ஏகத்துக்கு இருந்தாலும், அதுக்கு உருவே கிடைக்காது! அப்பல்லாம் ரொம்ப frustrating-ஆ இருக்கும். அப்பதான், அட, ஆமா… எழுதறது அப்படி ஒண்ணும் சுலபமில்லை, அப்படின்னும் நினைச்சுக்குவேன்!

கரு கிடைச்ச ஒருசில விஷயங்களுக்கு உரு கிடைக்க, சில சமயம் மாதக் கணக்கில் கூட ஆகியிருக்கு! அதனாலதான் எழுதறதை பிரசவத்துக்கு ஒப்பிடறாங்க போல!

மனசில் இருக்கறதை கணினியில் ஏற்ற முக்கால்வாசி இராத்திரியில்தான் நேரம் கிடைக்கும்.

ஒரு விஷயத்தைப் பற்றி எழுதணும்னா அதைப் பற்றி நிறைய சிந்திக்கணும். தியானம்கிறது அதுதான்… ஒரே விஷயத்தைச் சுற்றி எண்ணங்களை அமைச்சுக்கறது. ஆனா அதுவும் ‘கிட்டத்தட்ட’தான் நடக்கும். அப்பவும் திடீர்னு சம்பந்தமே இல்லாத கிளைக்குத் தாவிரும், மனசு.

கவிதை எழுதறதை விட கதை எழுதறது கஷ்டம், என்னைப் பொறுத்த வரை. ஏன்னா, கதைக்கு பல விஷயங்களையும், உண்மைகளையும், தகவல்களையும் சேகரிக்கணும். ரொம்ப யோசிக்கணும். சும்மா இஷ்டத்துக்கு ‘கதை’ விட முடியாது :) அப்படி விட்டா தர்க்க ரீதியா (logical-ஆ) அது எப்படி நடக்கும், இது எப்படி நடக்கும், அப்படின்னு கேள்விகள் வந்துரும். ஆரம்பமும், முடிவும், கச்சிதமா அமையணும்… அப்புறம்… திரும்பப் படிச்சுப் பார்த்து, செப்பனிடணும். அதற்கெல்லாம் நிறைய்ய்ய்ய நேரம் வேணும். அதனாலேயே, பல முறை நல்ல கருக்கள் தோணியும் எழுதாமலேயே விட்டிருக்கேன்…

என் எழுத்துப் பயணம் பற்றி ஏற்கனவே இங்கே நிறைய சொல்லிட்டேன். கவிதைதான் முதலில் எழுத ஆரம்பிச்சேன்… பிறகு கவிதை, கதை, கட்டுரை, இப்படி ஒவ்வொரு வடிவமா எழுதிப் பார்த்தாச்சு. வயசு ஏற ஏற, மன நிலையும் மனப்போக்கும் மாற மாற, எழுதும் பொருளும், எழுதும் விதமும், வடிவமும் கூட மாறிக்கிட்டே இருக்கு… இதை என் அனுபவத்திலேயே நிதர்சனமா உணர்ந்துகிட்டு வரேன்.

சமீபமா இந்த வலைப்பூவை வாசிக்க ஆரம்பிச்சவங்க, நேரம் கிடைக்கையில் சில பழைய கவிதை, கதைகளையும் வாசிச்சுப் பாருங்க… உதாரணத்துக்கு சில:

கவிதைகள்: காணவில்லை, கைப்பைக் கனவுகள்
கதைகள்: இடுக்கண் வருங்கால்…, சிறகு முளைத்த சின்னப்பூ, காணாமல் போனவர்கள், சுண்டக்காயும் சுண்டைக்காய், …
குறுந்தொடர்: கண்ணனுக்குத் தந்த உள்ளம்

யார் கண்டா, உங்களுக்குப் பிடிச்சாலும் பிடிக்கலாம் :)

அது சரி என்னமோ எல்லாம் நீயே பண்ற மாதிரி ஒரேயடியா பீத்திக்கிறியே, அப்படின்னு உள்ள இருந்து ஒரு குரல் என்னைக் குட்டுது… சரிதானே…

“Thou workest thine own work; men only call it their own.” என்பது எனக்குப் பிடிச்ச வாசகம். “நாமெல்லாம் இயந்திரங்கள், நம்மை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் இறைவனிடம் இருக்கிறது” என்பார், ஸ்ரீராமகிருஷ்ணர். “ஆட்டி வைத்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்றார் கண்ணதாசன். அதனால் உங்களையும் என்னையும் ஆட்டி வைக்கிற, எழுத வைக்கிற, வாசிக்க வைக்கிற, என் அன்னை பராசக்திக்கு அனந்தகோடி வணக்கங்கள்.

அதெல்லாம் இருக்கட்டும்… இப்போ இந்த பதிவை வாசிச்சீங்களா இல்லையான்னு பார்க்க உங்களுக்கு ஒரு பரீட்சை!

உங்களையும் நிச்சயம் யாராச்சும் கேட்டிருப்பாங்க. “எப்படி இப்படில்லாம் எழுத முடியுது உங்களால?” அப்படின்னு. இல்லைன்னா, நான் கேட்கிறேன்னே வச்சுக்கோங்களேன்.

எனக்கு நிறையப் பேரை அப்படிக் கேட்கணும்னு ஆசை. நகைச்சுவையா எழுதறவங்க, புதுக் கவிதைகள் எழுதறவங்க, சமூக அக்கறையோட எழுதறவங்க, உருக உருக கதை எழுதறவங்க, ஆன்மீகத்தைக் கரைச்சுக் குடிச்சு, அதைப் பற்றி அற்புதமா எழுதறவங்க, மனோதத்துவக் கட்டுரைகள் எழுதறவங்க, ஒரு ரசிகனாக இருந்து எழுதறவங்க, தமிழ் இலக்கியங்களை ரசனையுடன், பொருளுடன் எழுதறவங்க, இப்படி எவ்வளவு பேர்! இதில் நீங்க யாருன்னு உங்களுக்கே தெரியும். சில பேர் பின்னூட்டங்கள் கூட பிரமாதமா எழுதுவாங்க. நானு அதுல ரொம்ப வீக்!

நீங்க என்ன பண்றீங்க… அந்தக் கேள்விக்குப் பதிலை, உங்களுடைய எழுத்து அனுபவத்தை, ஒரு தொடர் பதிவா, வாசகர்களோட பகிர்ந்துக்கறீங்க! எழுத்துன்னு இல்லை, உங்களுடைய எந்த ‘மயக்க’த்தைப் பற்றியும் எழுதலாம். உதாரணமா புகைப்படக் கலையில் வெளுத்து வாங்கறவங்க நிறையப்பேர் இருக்கீங்க; படம் வரையறது, சமையல், இப்படி எதுவா இருந்தாலும், அதில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது, உங்க அனுபவங்கள் என்ன, அப்படின்னு எழுதலாம்.

யாரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விரும்பலை. அதனால இந்தத் தொடரின் விதிகள் ரொம்ப சுலபம். நீங்க யாரையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும்:

உங்க அனுபவத்தை பதிவாக எழுதணும்.

தொடர் பதிவுன்னு குறிப்பிடணும்.

இந்தப் பதிவுடைய சுட்டி, அல்லது நீங்க யாருடைய பதிவின் காரணமாகத் தொடர ஆரம்பிக்கிறீங்களோ, அவங்களோட பதிவின் சுட்டிக்கு இணைப்பு குடுக்கணும்.

நீங்க தொடரக் காரணமாக இருந்தவரின் பின்னூட்டத்தில் உங்க பதிவைப் பற்றித் தெரியப்படுத்தணும்.

அம்புட்டுதான்.

இப்படி உங்க அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டா ரொம்ப சந்தோஷப் படுவேன்.

என் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றிகளுடன்…

இப்ப என்ன திடீர்னு, அப்படிங்கிறீங்களா? வேறொண்ணுமில்லை… இது 199-வது பதிவுங்க.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே' -தாயுமானவர்

அன்புடன்
கவிநயா

Sunday, December 5, 2010

என்ன நடக்குது இங்கே?

நாளைக்கு அலுவலகத்தில் முக்கியமான தலைகளோட ஒரு மீட்டிங் இருக்கு. கொஞ்சம் பார்க்கிற மாதிரி ட்ரஸ் பண்ணிக்கணும். நாளன்னிக்கு கோவில்ல பூஜைக்கு மாலை கட்டணும். கடைக்கு எழுதற லிஸ்ட்ல மறக்காம பூ எழுதணும். ஆங்! கடைக்கு போகும்போது ராத்திரி சாப்பிட ரெடி மேடா ஏதாச்சும் வாங்கிட்டு வந்துரலாமா? இல்லன்னா காலைல சீக்கிரம் எழுந்து என்னவாச்சும் சமைக்கணும். காய் என்ன இருக்குன்னு தெரியல. அச்சோ! அவங்களுக்கு குழந்தை பிறந்தாச்சுன்னு சொன்னாங்களே! எப்ப அவங்கள பார்க்க போலாம்? கடைக்கு போய் குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு போகணும். இன்னிக்குக் காலைல எழுந்திருக்கும் போது ஒரு அழகான கவிதை வரி வந்துச்சே, அது என்ன? சே, எவ்வளவு பொருத்தமான உவமையோட வார்த்தைகளும் கோர்வையா அழகா வந்து விழுந்துச்சு! இப்ப மறந்து தொலைச்சிருச்சே. என்ன பண்றது? வேலையில இருந்து வரும்போது காருக்கு பெட்ரோல் வேற போடணும். அப்புறம் டான்ஸ் க்ளாஸ் போகும் போது போட நேரம் இருக்காது. டான்ஸ் வேற ப்ராக்டிஸ் பண்ணனுமே. பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுக்கிற டான்ஸை வேற ஒரு தரமாவது ஆடிப் பார்க்கணும். எதுக்கும் காலைல சீக்கிரம் எழுந்திரிச்சாதான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் படம் நல்லாதான் இருந்தது. அதில் ரிப்போர்ட்டரா வந்த பொண்ணு பேரு என்ன? எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. புதுசு யாரையும் தெரியல. நாளைக்காச்சும் ஏதாச்சும் சமைச்சே ஆகணும். ரெண்டு நாளா பழசை வச்சே ஓட்டியாச்சு. என்ன பண்றது? சப்பாத்தி பண்ணலாமா? பில்லெல்லாம் வேற கவனிக்கணும். இராத்திரி ப்ளாக் போஸ்ட் பண்ண நேரமிருக்குமான்னு தெரியலையே?

“க்ர்ர்ர்ர்ரிங்”. அலாரம் அடிக்குது.

பத்து நிமிஷம் ஆயாச்சு!

இன்னிக்கு நம்ம ‘தியானம்’ பண்ணி முடிஞ்சாச்சு!

--கவிநயா

பி.கு. வேடிக்கையா சொன்னாலும், மனசு இப்படித்தான் அலைஞ்சுகிட்டே இருக்கு :( உங்களுக்கு?

Sunday, November 28, 2010

இன்றே கடைசி

ரு உறவினரிடமோ அல்லது நண்பரிடமோ ஏதோ ஒரு காரணத்துக்காக நாம ரொம்ப கோபப் படறோம், சண்டை போடறோம்னு வச்சுக்குவோம். கோபம் வந்தாதான் நமக்கு கண்ணு மண்ணு எதுவும் தெரியாதே... அவர் மனம் புண்படும்படி, கண்டபடி வார்த்தைகளைக் கொட்டிடறோம். அன்றைக்கு சாயந்திரமே அந்த நண்பர் எதனாலோ திடீர்னு மரணம் அடைஞ்சுட்டார்னு சேதி வருது. அப்ப நமக்கு எப்படி இருக்கும்! நம்ம மனசு படக் கூடிய பாட்டையும், அந்த குற்ற உணர்வு காலமெல்லாம் நீட்டிப்பதையும் தவிர்க்க முடியுமா?

முடியும், நாம நினைச்சா... அதாவது, முதல்லயே அப்படியெல்லாம் கட்டுப்பாடில்லாம நடந்துக்கறதை, பேசறதை, கோவப்படறதைத் தவிர்த்தா, அதனோட பின் விளைவுகளையும் தவிர்க்கலாம்.

மரணம்.

அதைப் பார்த்தாலே, அடுத்த சில நாட்களுக்கு நம் மனசில் ஒரு பாதிப்பு இருக்கும். அது நம்ம நடவடிக்கைகளிலும் தெரியும். அதுவும் நமக்கு கொஞ்சம் நெருங்கியவர்களுடையதுன்னா, கேட்கவே வேண்டாம். வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது, அநித்தியமானது, அப்படின்னு யாரோ ‘சுளீர்’னு மண்டையில் அடிச்சு சொல்லிட்டுப் போன மாதிரி இருக்கும்.

நாளைக்கே… இல்லையில்லை… இன்றைக்கே நமக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்? எத்தனை ஆசைகள், எத்தனை கோபங்கள், எத்தனை தாபங்கள், எத்தனை வருத்தங்கள், எல்லாம் குழம்பிய சேறு மாதிரி, நம்ம மனசின் அடியில் தங்கி விட்டவை. இவை எதுவுமே இல்லாம மனசு தெளிவா நிர்மலமான நீரோடை மாதிரி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!

ஆனா அது ஒரே நாளில் வரக் கூடிய விஷயமா என்ன? தினம் தினம் நம்மை, நம் செயல்களை, நம் உணர்வுகளை, நம் நினைவுகளை, இப்படி எல்லாத்தையும் நாமே கவனிச்சு, நம்மை நாமே பயிற்றுவிச்சுக்க வேண்டிய மிகப் பெரிய விஷயம் அது.

அந்தப் பெரிய விஷயத்தையும் கொஞ்சம் சுலபமா செய்ய ஒரு வழி இருக்கு… அது என்ன வழி?

ஒவ்வொரு நாளையும் இன்றே கடைசின்னு நினைச்சு வாழறதுதான் அது.

அப்படி நினைக்கிறதால என்ன ஆகும்? நாம செய்யற தினசரி வேலைகளை முழு மனசோட, முழு ஈடுபாட்டோட செய்வோம். நம்மைச் சுற்றி இருக்கறவங்ககிட்ட சுடுசொல்லே பேசாம, அன்பை மட்டுமே பகிர்ந்துக்குவோம். புறம் பேச மாட்டோம். நம் குடும்பத்தினர் நாம இல்லாம தவிக்கக் கூடாதுங்கிறதுக்காக அவங்களை பல விஷயங்களிலும் பழக்கப் படுத்துவோம். சாதாரணமா நாளைக்கு நாளைக்குன்னு ஒத்திப் போடற விஷயங்களை இன்றைக்கே செய்ய முயற்சிப்போம். இப்படி ஒவ்வொண்ணையும் கருத்தோட செய்யும்போது, எங்கே நிம்மதின்னு தேட வேண்டிய அவசியமே வராது. மனசு அமைதிப் பூங்காவாத்தான் இருக்கும்!

பிறக்கும் போது, நாம அழுதுகிட்டே பிறக்கறோம்; நம்மைச் சுத்தி இருக்கறவங்க சந்தோஷப்படறாங்க. ஆனா நாம இந்த உலகை விட்டுப் போகும் போது நம்மை சுத்தி இருக்கறவங்க எல்லாம் வருத்தப்படணும்; அந்த அளவுக்கு நம்ம வாழ்க்கையை வாழணும், என்பார் ஸ்ரீயோகானந்த பரமஹம்ஸர்.

தினமும் காலையில் இறைவனை நினைச்சு விபூதி பூசிக்கும் போது, வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நினைச்சுப் பார்த்து, இந்த விபூதியைப் போல இந்த உடலும் எந்த நிமிஷமும் சாம்பலாகலாம்னு உணர்ந்து, அதற்குத் தகுந்த மாதிரி நாம நடந்துக்கணும் என்பதற்காகத்தான் அந்த வழக்கத்தை ஏற்படுத்தினாங்க.

அதானல, இன்றே நமக்கு இறுதி நாளா இருக்கக்கூடும், அப்படின்னு மனசின் ஓரத்தில் போட்டு வச்சுக்கட்டு, தினசரி வாழ்க்கையை வாழ்வோம்!

Live one day at a time and make it a master piece! – எங்கேயோ படிச்சது; எனக்குப் பிடிச்சது :)

“Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.” – இது மகாத்மா காந்தி சொன்னது.

அன்பாய் வாழ்க! அமைதியாய் வாழ்க!
நன்றாய் வாழ்க! நீடுழி வாழ்க!


அன்புடன்,
கவிநயா

Sunday, November 21, 2010

பயணம்

ன்னும் நாலு நாள்தான் இருக்கு. கொண்டு போய்ச் சேர்க்கிறதுக்கு முன்னாடி இன்னும் ஏதாச்சும் வேணுமா, வாங்கணுமா, அப்படின்னு மனசுல ஓடிக்கிட்டிருந்தது. புது எடம், புது மனுஷங்க, பழக்க வழக்கமெல்லாமும் புதுசாத்தான் இருக்கும். நினைக்க நினைக்க கவலையும் அதிகமாகிக்கிட்டே வருது…

ஆனா என்ன செய்யறது, வேற வழியும் இல்லை. எல்லாம் சொல்லிக் குடுத்துதான் கொண்டுபோய் விடணும். விடறதுன்னு தீர்மானிச்சப்பவே பேசவும் தொடங்கிட்டோம். வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் இதைப் பத்திதான் பேச்சு. என்ன ஒண்ணே ஒண்ணு, இதப் பத்தி ஆரம்பிச்சாலே அவ மொகம் சுருங்கிரும். மனசு வாடிரும். தரையைப் பாத்துக்கிட்டே ஒண்ணுஞ் சொல்லாம ஒக்காந்திருப்பா. பெறகு, சொல்ல வந்ததை விட்டுப்புட்டு வேற என்னத்தையாவது சொல்லி, சமாளிச்சு… அப்பறம் மறுபடியும் சமயம் பார்த்து ரெண்டு வார்த்த சொல்லி…, இப்பிடித்தான் ஓடுது கொஞ்ச நாளா.

எம்பொண்டாட்டியும் அவ பங்குக்கு பேசத்தான் செய்யிறா. ஒவ்வொருத்தர் மனசும் ஒடம்பும் ஒவ்வொரு எடத்துல இருக்கு. அதான் ப்ரச்சனை.

**

ஆச்சு. இன்னிக்குதான் கொண்டு போய் விடணும். பத்து மணி வாகில வரச் சொல்லியிருக்காங்க. போக ஒன்றை மணி நேரமாகும். எட்டு மணிக்கே சாமானெல்லாம் வண்டில ஏத்தியாச்சு. வெளக்கேத்தி சாமி கும்புட்டாச்சு. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.

“போன புதுசுல கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கும். ஆனா உன் வயசுக்காரங்க நெறய பேரு இருப்பாங்க. அதனால அவங்கள ப்ரெண்டு புடிச்சுக்க. அங்க ரொம்ப நல்லா பாத்துக்குவாங்களாம். யாராச்சும் உன்கூடவே இருப்பாங்களாம். அதுனால பயமொண்ணுமில்ல. நாங்களும் இங்க பக்கத்துலதான இருக்கம். எதாச்சும் வேணும்னா, ஒரு போன் போட்டா ஓடி வந்திரப் போறம். உனக்கு வேண்டிய புத்தகம், துணிமணி, எல்லாம் எடுத்து வச்சாச்சு. நானு கண்டிப்பா ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் வந்து பாத்துக்கிறேன்... ஏ கமலா, நீயும் சொல்லேண்டி”

“ஆமாங்கத்தை. எங்க ரெண்டு பேருக்கும் ஒடம்பு நல்லாததாலதான ஒங்களை கவனிச்சுக்க முடியல? அங்க நல்லா பாத்துக்குவாங்க. கவலப் படாம போயிட்டு வாங்க. நாங்க அடிக்கடி வாரோம்”

முதியோர் இல்லத்துக்கு போகப் போகிற என் அம்மாவிடம் இருந்து எந்த பதிலும் இல்ல. சுருக்கங்களில் சிக்கிய கண்ணீர் சட்டென்று வழிய முடியாமல் வழி பார்த்துக் கொண்டிருக்கிறது.

--கவிநயா

Friday, November 19, 2010

அண்ணாமலையாய் அருள்பவன்!

அனைவருக்கும் திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!


அடிமுடி யில்லா அழலாகி
முதல்முடி வில்லா ஒளியாகி
கனலாய் கனன்று எழுந்தவனே!
தீயாய் திசைகள் அளந்தவனே!

கண்ணால் மதனை எரித்தவனே!
காதல் உமையை வரித்தவனே!
எண்ணும் மனதில் இனிப்பவனே!
ஏற்றம் யாவும் அளிப்பவனே!

விண்ணோர் போற்றிப் பணிபவனே!
மண்ணோர் வணங்க மகிழ்பவனே!
உண்ணா முலையுடன் உறைபவனே!
அண்ணா மலையாய் அருள்பவனே!

--கவிநயா

Saturday, November 13, 2010

கோலங்கள்

போன வாரம் எங்க ஊர் (ரிச்மண்ட்) கோவில் கும்பாபிஷேகம் விமரிசையா நடந்தது. அதற்காக சந்நிதிகளுக்கு முன்னால் நாங்க இட்ட கோலங்கள் இங்கே...

என் தங்கையின் யோசனைப்படி அரிசி மாவுடன் கொஞ்சம் மைதா மாவும் கலந்து இட்டோம்... அதனால லைட் கலர் தரையில் கோலம் கொஞ்சம் அடர்த்தியா தெரிஞ்சது.

கைவண்ணம்: சுபா, மீனா, லதா, வித்யா, செல்லம், மற்றும் நானு.






















கோலங்களுக்கு நன்றி:
http://mykolam.blogspot.com/2009/08/peacock-kolam.html
http://kolangal.kamalascorner.com/search/label/Peacock%20Kolangal
திருமதி.மெய்யம்மை அவர்களின் கோல புத்தகம் :)

Monday, November 8, 2010

சிறு துளி...

மழை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

குறிப்பா, அது மென்மையா பூப்போல விழும்போது அண்ணாந்து முகமெங்கும் அந்த துளிகளை வாங்கிக்கப் பிடிக்கும். சன்னல் வழியா மழையை மணிக்கணக்கா வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். பச்சைப் பசேல்னு செடிகொடியெல்லாம் புத்தம் புதுசா நிற்கிறதைப் பார்க்கப் பிடிக்கும். மழை நின்ன பிறகு மரத்துக்கு அடியில் நின்னுக்கிட்டு, எட்டற தூரத்தில் இருக்கிற கிளையைப் பிடிச்சுக் குலுக்கி, அந்தக் குட்டி மழையில் நனையப் பிடிக்கும். இப்படி எத்தனையோ 'பிடிக்கும்'கள். உங்களுக்கும்தானே? :)

(பிடிக்காதவைகளும் இருக்கு, ஆனா அதைப் பற்றி இப்ப என்ன? :)



குட்டிக் குட்டித் துளித் துளியாக
குனிந்து மண்ணில் வீழுது பார்!
அடுக் கடுக்காகப் புள்ளிகள் வைத்து
அழகாய்க் கோலம் போடுது பார்!

அடிக்கும் காற்றின் திசைக் கேற்ப
தானும் அசைந்து ஆடுது பார்!
இசையில் சிறந்த கலைஞரைப் போலே
இனிதாய்த் தாளம் போடுது பார்!

நேரம் கொஞ்சம் செல்லச் செல்ல
வேகம் இன்னும் கூடுது பார்!
சடசட சடவென சப்தம் எழுப்பி
செல்லக் கோபம் காட்டுது பார்!

செடிகொடியெல்லாம் குளிக்கச் செய்ய
பூவாய் மேலே சொரியுது பார்!
பூமியை நன்றாய்ச் சுத்தம் செய்து
புத்தம் புதிதாய் ஆக்குது பார்!

பயிர்களை யெல்லாம் செழிக்கச் செய்து
பசித்தவர்க் குணவு படைக்குது பார்!
நீர்நிலை யெல்லாம் நிரம்பச் செய்து
உயிர்களின் தாகம் தீர்க்குது பார்!

சிறுதுளி யாகத் தொடங்கிய போதும்
ஆறாய் குளமாய் ஆகுது பார்!
அதுபோல் சிறுகச் சேமித் தாலும்
அறிவும் பொருளும் பெருகும் பார்!!


--கவிநயா

பாப்பா பாட்டு எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நினைவுபடுத்திய கபீரன்பருக்கு நன்றி :)
படத்துக்கு, கூகுளாருக்கு நன்றி!

Tuesday, November 2, 2010

கற்றதனால் ஆய பயன்

வணக்கம்.

கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கபீரின் ஈரடிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அழகுத் தமிழில் மொழிபெயர்த்து, அதோடு வெல்லப்பாகு, ஏலம், முந்திரி, எல்லாம் சேர்த்து, சுவைக்கச் சுவைக்க நமக்கு அளிப்பவர், கபீரன்பர். அத்துடன் மட்டுமல்லாது, படம் வரைவதிலும், கவிதை எழுதுவதிலும், ஆன்மீகத்திலும், இப்படி பற்பலவற்றிலும் சிறந்த சகலகலாவல்லவர். கபீர் வலைப்பூவில் அவருடைய பதிவு எண்ணிக்கை 100-ஐ எட்டியதை முன்னிட்டு, சில பதிவர்களை சிறப்பு இடுகைகள் இடுவதற்கென விருந்துக்கு அழைத்திருக்கிறார். (நல்ல ஐடியாவா இருக்கில்ல! :) அந்த அதிர்ஷ்டம் எனக்கும் அடித்தது. நம்மால் முடியுமா என்று முதலில் கொஞ்சம் தயங்கினாலும், இறையருளால் ஒரு மாதிரி எழுதி விட்டேன் :) முதல் விருந்தினர் இடுகையை நம்ம கண்ணன் என்கிற கேயாரெஸ் இட்டிருந்தார். அடுத்ததாக இப்போது நம்முடையது... நேரம் கிடைக்கையில் படித்துப் பாருங்கள்...

அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா

Sunday, October 31, 2010

முடிவு

ன்னம்மா, இந்த நேரத்தில் இங்கே தனியா என்ன செய்யறே?”

வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருந்த ராதா, குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் முன்பின் பார்த்தறியாத பெண்மணி அவள் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.

அந்த சூழ்நிலைக்கு பொருந்தாமல் நல்ல அரக்குச் சிவப்புப் புடவையும், குங்குமப் பொட்டும், மல்லிகைப் பூவுமாய் இருந்தாள். அழகிய அவள் முகம் நிலவொளியில் ஜொலித்தது. அவள் வயது என்ன என்பதை ஊகிக்க முடியவில்லை.

“உங்களுக்கென்ன அதைப் பற்றி அக்கறை?” அடக்க இயலாத ஆத்திரத்துடன் புறப்பட்ட கேள்வி, அந்த மங்கையின் முகத்தைப் பார்த்ததும், வந்த சுவடு தெரியாமல் புறப்பட்ட இடத்துக்கே சென்று விட்டது. ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

அவர்களுக்கு வெகு அருகில், அடம் பிடிக்கும் குழந்தையைப் போல விடாமல் “ஹோ”வென்று இரைந்து கொண்டிருந்தது கடல். எத்தனை எத்தனை யுகங்களாக இப்படி அலையடித்துக் கொண்டிருக்க வேண்டும்! ஒரு நாளேனும், ஒரு கணமேனும் ஓய்ந்திருக்குமா? எப்படித்தான் ஓய்வில்லாமல் இருக்கிறதோ! எத்தனை வயதானாலும் அதே வேகத்துடன் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியம்! நினைத்துப் பார்த்தால் இப்படி எத்தனையோ அதிசயங்கள் இந்த உலகத்தில்! இப்படியெல்லாம் சம்பந்தமில்லாமல் சிந்தனை ஓடிற்று, ராதாவிற்கு.

“என்னம்மா சிந்தனை? இந்த ஏரியால எல்லாம் இத்தனை நேரத்துக்கு மேல பெண்பிள்ளைகள் தனியா இருக்கிறது ஆபத்து. வீட்டுக்கு போயிடம்மா. வீட்டில் உன்னைத் தேட மாட்டாங்களா?” கனிவுடன் ஒலித்தது அந்த பெண்ணின் குரல்.

“என்னைச் சொல்றீங்களே, நீங்க என்ன பண்றீங்க இங்கே?” மறுபடியும் கேட்க எண்ணியதைக் கேட்காமல் விழுங்கிக் கொண்டாள்.

“என்னை யாரும் தேட மாட்டாங்க அம்மா. நான் ஒரு அனாதை.”

‘நான் அப்படியொன்றும் பொய் சொல்லலை, இந்த நிமிஷத்தில் நான் அப்படி உணர்வது உண்மைதானே’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“தற்கொலை மிகப் பெரிய பாவம் மட்டுமில்லை, சுயநலமும் கூடத்தான்”, என்றாள் அந்தப் பெண்மணி.

ராதாவிற்கு தூக்கிவாரிப் போட்டது!

“என் மனதிலுள்ளது இவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்பது போல விழியகல அந்த பெண்மணியை பார்த்தாள்.

“இருக்கலாம். ஆனால் அவரவருக்கு துன்பம் வரும்போதுதான் தெரியும் அம்மா. அதற்குத் தகுந்தாற் போல நியாயங்களும் வேறுபடும்”

“வா. நடந்துகிட்டே பேசலாம். நல்லா இருட்டிப் போச்சு. இங்கே ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்”

அந்தப் பெண்மணியிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது. மறுத்துச் சொல்ல மனம் தூண்டினாலும், அதை சட்டை செய்யாமல் அவளுடன் கூட நடக்க ஆரம்பித்தாள்.

“சுந்தர காண்டம் படிச்சிருக்கியா?”

இது என்ன சம்பந்தமில்லாத கேள்வி என்பது போல அந்த பெண்ணை ஏறிட்டுப் பார்த்து விட்டு, “படிச்சிருக்கேன்”, என்று முணுமுணுத்தாள்.

“படிக்கும் போது ஏன் இதை படிக்கிறோம்னு உணர்ந்து படிச்சியா, சும்மா படிக்கணுமேன்னு படிச்சியா?”

கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் அந்தப் பெண்ணே தொடர்ந்தாள்:

“சீதை அசோகவனத்தில் தனியாக இருந்து சொல்லவொணாத துயரங்களை அனுபவிக்கும் காலம் அது. அதைப் படிக்கப் படிக்க, ஸ்ரீலக்ஷ்மியின் திரு அவதாரமான சீதையே இவ்வளவு துன்பம் அனுபவிச்சிருக்காளே, நம்முடைய துன்பமெல்லாம் எந்த மூலைக்குன்னு தோணும். அதனால படிக்கிறவங்களுக்கு துயரங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனப் பக்குவம் வரும். ஆஞ்சநேயர் தூது வருவதையும், சீதைக்கு ஆறுதல் சொல்வதையும் படிக்கையில், உயிரோடு இருந்தா நமக்கும் ஒரு நாள் துயரத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை வரும். அதனாலதான் வாழ்க்கையில் துன்பம் வரும்போது பெரியவங்க அதை படிக்கச் சொல்றாங்க.”

ராதாவிற்கு ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தது. அவள் மேலே யோசிக்கும் முன் அடுத்த கேள்விக் கணை வந்து விட்டது…

“சரி, சொல்லு… சீதையை விட உனக்கு அதிகமான கஷ்டம் வந்திடுச்சா?”

“ஆமாம் அம்மா. அவளைப் போலவே என் கணவனைப் பிரிய வேண்டிய நிலைமை எனக்கும்.”

அந்த மங்கைக்கு சிரிப்புதான் வந்தது. சீதாபிராட்டியுடன் தன் துயரத்தை ஒப்பிட்டுக் கொள்ளும் இந்தச் சிறுமியை என்ன செய்வது? தன் உணர்வுகளை நாடகத் தனமாக மிகைப் படுத்திச் சொல்வதில் இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை விருப்பம்?!

ராதாவிற்கு அன்றைக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பு நினைவில் ஓடியது.

“அண்ணி… நான் ரஞ்சனி பேசறேன். உங்களுக்கு ஒரு பேட் நியூஸ் அண்ணி.”

“இன்றைக்கு அண்ணாவுக்கு பொண்ணு பார்க்க போறாங்க. உங்களுக்கு 6 வருஷமா குழந்தை இல்லைன்னு காரணம் சொல்லி அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யறாங்க அம்மா”

அமிலத் திராவகத்தை காதில் ஊற்றியது போல் இருந்தது ராதாவிற்கு.

“ராதா, நீ வேணும்னா உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வாயேன். உன் தங்கச்சி கல்யாண வேலை நிறைய இருக்கும். கொஞ்சம் ஒத்தாசையா இருந்துட்டு வரலாமே”, என்ற மாமியாரின் கனிவுக்கு காரணம் இப்போதல்லவா தெரிகிறது?

“ரஞ்சனி, உங்க அண்ணா…”, என்று கேட்க ஆரம்பித்தவளை,

“அண்ணி, அம்மா வராங்க. நான் உங்களுக்கு போன் பண்றது தெரிஞ்சா என்னை பிச்சிடுவாங்க. பை”, அவள் பதிலுக்குக் காத்திராமல் ரஞ்சனி போனை வைத்து விட்டாள்.

இந்த விஷயமெல்லாம் கணவனுக்கு தெரியுமா என்று தெரிந்து கொள்ளத்தான் நினைத்தாள்.

“குழந்தையே பிறக்காவிட்டாலும் சரி, ராதா. உனக்கு நீயும் எனக்கு நானும்தான் குழந்தை”, என்று கனியக் கனியப் பேசிய கண்ணனா இப்படி? ஆனால், அவனுக்கு தெரியாமலா இத்தனையும் நடக்கும் என்ற முடிவுக்கு அவளே வந்து விட்டாள். இனி நான் வாழ்ந்து என்ன பயன், என்ற முடிவுக்கும்தான்!

“உன்னைப் போல சுயநலவாதிகள் நிறைய இருக்காங்க!” மறுபடியும் அந்தப் பெண்மணியின் குரல் அவளை உசுப்பியது.

ராதாவுக்கு கோபம் வந்து விட்டது!

“அம்மா! உங்களுக்கு என்னை முன்பின் தெரியாது. அதற்குள்ள என்னை எப்படி சுயநலவாதின்னு சொல்றீங்க?”

“ஏன்னா, அப்படிப்பட்டவங்கதான் தற்கொலை பண்ணிக்க துணிவாங்க. தனக்கு என்ன கிடைக்கலைன்னு பார்ப்பாங்க, ஆனால் மற்றவங்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்க மாட்டாங்க. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு… இந்த முடிவு எடுத்தியே, உன் அப்பா அம்மாவைப் பற்றியோ, அடுத்த மாசம் கல்யாணம் நடக்கவிருக்கிற உன் தங்கையைப் பற்றியோ, ஏன், உன் கணவனைப் பற்றியோ, ஒரு நிமிஷமாவது சிந்திச்சியா?”

அவள் சொல்வது எத்தனை உண்மை! தனக்கு என்ன பாதிப்பு, தான் எவ்வளவு துயரப்படப் போகிறோம், கணவனைப் பிரிய நேர்ந்தால் என்ன செய்வது, தன் வாழ்க்கை என்ன ஆகும், இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் அவள் கண்ணீருக்கும் முடிவிற்கும் காரணமாக இருந்தனவே தவிர, வேறு யாருடைய நினைப்பும் அவளுக்கு வரவே இல்லை! நினைத்துப் பார்க்கையில் அவளுக்கே வெட்கமாக இருந்தது.

“உன் கணவனை தொலைபேசியில் கூப்பிட்டு பேசணும்னு உனக்கு தோணவே இல்லையா?”

“அவருக்கு தெரியாமலா அம்மா, பொண்ணு பார்க்க போவாங்க?”

“இவ்வளவுதானா நீ உன்னவர் மேல வச்சிருக்க அன்பும் நம்பிக்கையும்?” என்று அவள் கேட்ட போது ராதாவிற்கு ‘சுருக்’கென்றது.

“ராதா… எந்த ஒரு பிரச்சனையையும் எத்தனையோ விதமா தீர்க்கலாம். நீ ரொம்ப முட்டாள்தனமான வழியை தேர்ந்தெடுத்திருக்கே. அவ்வளவுதான் சொல்லுவேன்!”

சிறிது நேரம் மௌனமாக நடந்தார்கள். ராதாவின் மனம் பல விஷயங்களையும் எண்ணி பரபரப்படைந்திருந்தது. கரையை நோக்கி நடந்து கொண்டிருந்ததையும், கிட்டத்தட்ட சாலையருகில் வந்து விட்டதையும் கூட அவள் உணரவில்லை.

வீட்டுக்கு போனதும் முதல் வேலையாக கண்ணனைக் கூப்பிட்டு பேச வேண்டும். நாம் செய்யவிருந்த காரியம் மட்டும் அவனுக்குத் தெரிய வந்தால்! இந்த பெண்மணி மட்டும் சரியான சமயத்தில் வந்து நம் கண்களைத் திறக்காமல் இருந்திருந்தால்! அடடா, அவர் பெயரைக் கூட இன்னும் கேட்கவில்லை, நன்றி கூடச் சொல்லவில்லை...

ராதாவிற்கு இந்த நினைப்பு வரவும், அந்தப் பெண்மணி வழியில் வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தவும், சரியாக இருந்தது. ஆட்டோக்காரருக்கு அம்மா வீட்டு விலாசத்தை சொன்னாள், ராதா.

ஏறிக் கொள்ளும் முன், “ரொம்ப நன்றி அம்மா” என்று சொல்லியவாறே விடைபெற்றுக் கொள்ளத் திரும்பினாள்.

ஆனால் அங்கே விரவிக் கிடந்த இரவு மட்டுமே அவளைப் பார்த்துப் புன்னகைத்தது.


--கவிநயா

Sunday, October 24, 2010

கண்ணாமூச்சி


மழைப்பெண் ஒருத்தி
கருமேகத் திரைக்குப்பின்
குறும்பாய் ஒளிந்திருக்க

விண்மீன் குழந்தைகள்
தங்கள் பங்குக்கு
வானெங்கும் மறைந்து கொள்ள

நீண்ட கதிர்களுடன்
ஒளிய வழியின்றி கதிரவன்
நாணத்தில் சிவந்திருக்க

இடிகள் ஒவ்வொன்றும்
மின்னல் விளக்கெடுத்து
விண்ணெங்கும் தேடி வர

உதவிக்குக் காற்றன்னை
தாவரங்கள் தம்மை
தலை கோதி அனுப்பித் தர

நீல மயில்கள் தங்கள்
தோகை விரித்தாடி
மழைப் பெண்ணைக் கவர எண்ண

அந்திப் பொழுதில் ஓர்
கண்ணாமுச்சி ஆட்டம்
அழகாய் நடக்கிறது...


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/danielmohr/4590740748/sizes/z/in/photostream/

Monday, October 18, 2010

இரத்த தானம் பண்ணப் போறீங்களா?

இரத்த தானம் பண்றது எனக்கு பிடிச்ச, திருப்தி தரும், விஷயம். ஆனா என்ன, பல முறை ஏதாவது ஒரு சோதனையில் தோத்துப் போய், பண்ணாமயே திரும்பி வந்திருக்கேன். அப்பல்லாம் ரொம்பவே சோ…கமா இருக்கும். ஆனா இந்த முறை வெற்றிகரமா பண்ணியாச்!

நீங்களும் தானம் பண்ண போயிட்டு என்னை மாதிரியே ஏமாந்து, ஏமாற்றி, திரும்பி வராம இருக்கணும்னா என்ன செய்யணும்? எப்படி நம்மை தயார் பண்ணிக்கணும்? பதிஞ்சு வச்சா, நானும் கொஞ்ச நாள் கழிச்சு திரும்பப் போகும்போது படிச்சுப் பார்த்துக்கலாம்ல? :)

முதல் விஷயம் இரும்புச் சத்து. அது நிறைய கிடைக்கறதுக்கு என்ன செய்யணும்?

நீங்க ‘கறி’ சாப்பிடறவரா இருந்தா கவலை இல்லை. ஆனா ‘காய்’கறி மட்டும் சாப்பிடறவரா இருந்தா கொஞ்சம் கவனமா சாப்பிடணும். dried beans அப்படின்னு சொல்லப்படற காய்ந்த பட்டாணி, கொண்டைக் கடலை, மொச்சை, இப்படிப்பட்டவைகளிலும், கீரை வகைகளிலும், broccoli போன்ற காய்கறிகளிலும், soy beans, tofu, இவைகளிலும், இரும்புச் சத்து நிறைய கிடைக்குமாம்.

சரி, இரும்புச் சத்து சோதனையில் தேறியாச்சு. அடுத்ததா இரத்தம் எடுக்கிறதுக்கு இரத்தக் குழாயை கண்டு பிடிச்சு அதில் ஊசியைச் செலுத்தணுமே. அதிலும் எனக்கு எப்போதும் பிரச்சனை. இரத்தக் குழாய், ஊசி முனையை விட ரொம்பச் சின்னதா இருக்கு, அப்படின்னு சொல்லிடுவாங்க. பல முறை குத்தி, இரண்டு கையையும் சல்லடைக் கண்ணாக்கி, அப்படியும் கிடைக்காம, இரத்தம் கொடுக்காமலேயே இரண்டு கையிலும் பெரீய்ய்ய்ய கட்டோடு திரும்பி வந்ததும் உண்டு.

அப்படி ஆகாம இருக்க என்ன செய்யணுமாம்? தண்ணீர் நிறைய குடிக்கணுமாம். எப்பவுமே எனக்கு தண்ணீர் குடிக்கிற பழக்கம் இல்லை. கஷ்டப்பட்டு நினைவு வச்சுக்கிட்டு குடிச்சாதான் உண்டு. சில பேர் இயல்பாகவே நிறைய குடிச்சிக்கிட்டே இருப்பாங்க. அப்படி இருந்தா பரவாயில்லை. சாதாரணமா ஒரு நாளைக்கு 8 (8-ounce) டம்ளர் தண்ணீர் குடிக்கணும் அப்படின்னு சொல்றாங்க. என்னை மாதிரி இருக்கிறவங்க நேரத்துக்கு மாத்திரை சாப்பிடறவங்களைப் போல தண்ணீர் குடிக்கவும் நேரம் வச்சுக்க வேண்டியதுதான்! அப்படி இருந்தா இந்த இரத்தக் குழாய் பிரச்சனை வராது.

முக்கியமா, இரத்தம் குடுக்கப் போற அன்னிக்கு நல்லா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்.

நமக்காக இதெல்லாம் செய்யலைன்னாலும், இரத்தம் கொடுக்கணும் என்கிறதுக்காக இதெல்லாம் செய்யும் போது நமக்கும் இந்த healthy habits வந்துடும்தானே?

சரி, எல்லாம் சரியாக நடந்து, இரத்தமும் குடுத்தாச்சு. இப்ப என்ன செய்யணும்?

இரத்தம் குடுத்த பிறகு இரத்த அழுத்தம் திடீர்னு குறையறதால, சில பேருக்கு படபடன்னு வரும், தலை சுத்தும், மயக்கம் வரும். அதனால உடனே கிளம்பணும்னு அவசரப்படக் கூடாது. அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து, அவங்க குடுக்கற பழச் சாறு, மற்றும் வேற ஏதாவது சாப்பிடக் கொடுத்தாங்கன்னா, வெட்கப் படாம அதைச் சாப்பிடணும். கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, எல்லாம் சரியா இருக்குன்னு தெரிஞ்ச பிறகுதான் கிளம்பணும். குறிப்பா இங்கேல்லாம் நாமே கார் ஓட்டிக்கிட்டு போய் வர வேண்டி இருக்கறதால, இந்த விஷயத்தில் கொஞ்சம் கூடவே கவனமா இருக்கணும்.

வீட்டுக்கு வந்த பிறகும், 5, 6 மணி நேரத்துக்கு கடினமான வேலைகள் செய்ய வேண்டாம். குறைஞ்சது, அன்னிக்கு பூராவும், அடுத்த நாளும், நல்ல சத்துள்ள சாப்பாடா சாப்பிடணும். மறுநாள் விரத நாள்னா, முதல் நாள் இரத்தம் கொடுக்கிறதைத் தவிர்ப்பது நல்லது.

அமெரிக்காவில் இருக்கறவங்கள்ல 37% மக்கள்தான் இரத்த தானத்துக்கு தகுதியானவங்களாம். அதிலும் 5% தான் வருஷா வருஷம் donate பண்றாங்களாம். அதனால இரத்தத்துக்கு எப்பவுமே தேவை இருந்துக்கிட்டே இருக்குன்னு சொல்றாங்க. ஒருத்தர் கொடுக்கற இரத்தத்தால 3 உயிர்களை காப்பற்ற முடியுமாம். அதனால நீங்க தகுதியானவரா இருந்தா, கண்டிப்பா தானம் பண்ணுங்க!

என்ன, கிளம்பிட்டீங்களா? All the Best!


அன்புடன்
கவிநயா

Thursday, October 14, 2010

ஆய கலைகளின் அரசி!

நவராத்திரி சிறப்புப் பதிவு.


ஆய கலைகளின் அரசியளாம் – அவள்
வேத முதல் வியளாம்
மாயஇருள் விலக்கி தூயஒளி நல்கும்
ஞான வடி வினளாம்

வெள்ளைக் கலை உடுத்தி
வீணை மடி இருத்தி
மின்னல் கொடியெனவே வீற்றிருப்பாள்
கன்னல் தமிழில் தொழ களித்திருப்பாள்

தென்றலைப் போல் நடைஎழிலாள்
தேறல்இசைக் கனி மொழியாள்
தேவியுன்றன் திருப்பதங்கள் சரணம்அம்மா
தெண்டனிட்டோம் உன்பதங்கள், வரணும்அம்மா!


--கவிநயா

Sunday, October 10, 2010

பங்கயம் அமர்ந்தவள்!

நவராத்திரி சிறப்புப் பதிவு.


தாமரைப் பூவினில் உதித்தவளாம்
தரணி யெல்லாம்தொழ முகிழ்த்தவளாம்
பாற்கடல் அலைகளில் பனிமலர்போல்
பார்ப்பவர் மயங்கிட பூத்தவளாம்!

மாலவன் மார்பினில் குடியிருப்பாள்
மன்னுயிர் பணிந்திட மகிழ்ந்திருப்பாள்
கோலஎழில் மிக திகழ்ந்திருப்பாள்
கொஞ்சிடும் குறுநகை புரிந்திருப்பாள்!

நான்கு கரங்களைக் கொண்டிருப்பாள்
நானிலம் நலம்பெற வரமளிப்பாள்
பாங்குடன் பங்கயம் அமர்ந்திருப்பாள்
பக்தரின் அன்பினில் களித்திருப்பாள்!!

--கவிநயா

Thursday, October 7, 2010

நீலநிறக் காளியம்மா!

நவராத்திரி சிறப்புப் பதிவு. அன்னையின் திருவடிகள் சரணம்.


நீலநிறக் காளியம்மா!
சூலங்கொண்டு வாடியம்மா!
தண்ணருளைப் பொழிகின்ற தாயே!
தரணியினைக் காத்திடவே வாயேன்!

கங்கெனவே இருகண்கள்
கயவர்களைக் கலக்கிவிடும்!
தொங்குகின்ற தீநாவோ
தீயவரைத் துரத்திவிடும்!
பதினெட்டுக் கரங்களுடன் தாயே!
பிள்ளைகளை அரவணைக்க வாயேன்!

கோரைப்பல் உடன்வந்து
கொடுவினைகள் களைந்துவிடும்!
விரிந்திருக்கும் கருங்கூந்தல்
வல்வினையை விரட்டிவிடும்!
பயங்கரியாய் உருக்கொண்ட தாயே!
பால்வெள்ளை உள்ளத்தில் வாயேன்!

தத்தகிட என்றாடி
தானவரை அழித்திடுவாய்!
தீம்தகிட என்றாடி
தீமைகளைப் பொசுக்கிடுவாய்!
திக்கெட்டும் சுழன்றாடும் தாயே!
தூவெள்ளை உள்ளத்தில் வாயேன்!


--கவிநயா

Tuesday, October 5, 2010

உங்களுக்கு எத்தனை அம்மா?



ஹையோ…. நீங்க நினைக்கிறாப்ல இது ஒண்ணும் வில்லங்கமான கேள்வி இல்லீங்க :) "அன்னை எத்தனை அன்னையோ" அப்படிங்கிற ஆன்மீகக் கேள்வியும் இல்லை!

அம்மான்னாலே ரொம்ப சிறப்பில்லையா? அம்மா-பிள்ளை உறவுக்கே தனி மதிப்பு; தனிச் சிறப்பு. பிள்ளைன்னா அதுல ஆம்புளப் புள்ள, பொம்பளப் புள்ள, எல்லாப் புள்ளையும் அடக்கம் :) எத்தனைதான் தவறு செஞ்சாலும் திரும்பத் திரும்ப மன்னிச்சு ஒரே மாதிரி அன்பு செலுத்த அம்மாவால் மட்டுமே முடியும்.

என்னைப் பொறுத்த வரை தன்னலமில்லாம, எதிர்பார்ப்பில்லாம, கலப்படமில்லாம, அன்பு செலுத்தறவங்க எல்லோருமே அம்மாதான்!

உதாரணத்துக்கு என் உயிர்த்தோழி. பல சமயங்களில் ஏன்தான் என் மேல இவ்ளோ அன்பு வச்சிருக்காங்களோ, இவங்களுக்கு நான் என்ன செய்திருக்கேன்னு நினைச்சு நினைச்சு வியப்பதுண்டு. அவங்க அளவு எனக்கு அவங்க மேல அன்பிருக்கான்னும் கேட்டுக்கறதுண்டு. அந்த அளவுக்கு என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவாங்க :) (touchwood!)

அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும். அதனாலதான் உங்களுக்கு எத்தனை அம்மான்னு கேட்டேன்!

சரி, எல்லா அம்மாவையும் சொல்லிட்டு, எல்லாருக்கும் அம்மாவை சொல்லாம விட்டுட்டேன்னா, அவ என்னை மன்னிக்கவே மாட்டா! குருவாய் திருவாய் உருவாய் அருவாய் திகழும் அவளைப் பற்றி சொல்லாம விட்டா எப்படி! இன்னும் சொல்லப் போனா அன்புக்கு ஏங்குபவர் யாராய் இருந்தாலும், ஏதோவொரு ரூபத்தில் வந்து அந்த அன்பை அள்ளித் தரும் அம்மா அவள்தானே! அவளை நவராத்திரிக்கு வரவேற்க உங்களைப் போலவே நானும் ஆயத்தமாகிக்கிட்டிருக்கேன்…

அனைவருக்கும் முன் கூட்டிய நவராத்திரி வாழ்த்துகள்!

அம்மா

தொப்புள் ‘கொடி’யை அறுத்தாலும்
தொடரும் உறவோ 'ஆலா'கும்
அம்மா என்ற ஒரு சொல்லில்
அன்(பு) ஆலயமே உருவாகும்

உதரத்தில் சுமப்பாள் சிலகாலம்
இதயத்தில் சுமப்பதோ பலகாலம்
குதறிடும் துன்பம் துளைத்தாலும்
கதறிடச் சுக(ம்)அவள் மடியாகும்

பதறும் மனமும் பதமாகும்
சிதறும் உணர்வும் சீராகும்
மதுரமாம் அவளின் மொழிகேட்டால்
கதிரொளி யாய்க்களி உருவாகும்!

--கவிநயா

பி.கு. இப்ப என்ன Mother’s Day கூட இல்லையே, ஒரே அம்மா புராணமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? அதாங்க, என் பெற்றோர் நேற்று ஊருக்கு போயிட்டாங்களா… அவங்களை ரெண்டு கண்ணிலும் தே…டி வருதா… அதுக்குத்தான் இந்த (புலம்பல்) பதிவு…


படம் இங்கேர்ந்து சுட்டேன்: http://www.jesus-christ-channel.com/mary-mother-of-jesus-christ.html

Monday, September 20, 2010

மனசு


வானம் போல விரிஞ்சிருக்கும்
வண்டு போலச் சுத்தி வரும்

கானங் கேட்டுக் கனிஞ்சிருக்கும்
கனவுக் குள்ள கத படிக்கும்

வெள் ளந்திப் புள்ள போல
சொல்லுக் கேக்க வாடிப் போகும்

மறுகி உருகி மாஞ்சு போகும்
மாத்துத் தேடி ஏங்கிப் போகும்

அன்பக் கண்டா அசந்து போகும்
ஆவல் மீற ஆட்டம் போடும்

காட்டு மல்லிப் பூவப் போல
காடும் மேடும் வாசம் வீசும்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: https://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_fotosource/

Monday, September 13, 2010

ஜலதோஷமும் சந்தோஷமும்


சந்தோஷம் என்பது பூமணம் போல. உங்ககிட்ட ஒரு கை மல்லிகைப்பூ இருக்குன்னு வைங்க, அதை நீங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறீங்க. அவங்க அதை வைக்கிற இடம் கமகமக்கும். பிறகு அதை அவங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறாங்க, இப்ப இன்னும் கொஞ்ச பேரோட இடம் மணமணக்கும்! இப்படியே உங்க பூவோட மணம் எவ்வளவு தூரத்துக்கு பரவுது பாருங்க.

சந்தோஷமும் அப்படித்தான். நீங்க கொஞ்சம் அடுத்தவங்களுக்கு குடுத்தா, அந்த சந்தோஷத்தில் அவங்க இன்னொருத்தவங்களுக்கு குடுப்பாங்க, அவங்க இன்னொருத்தங்களுக்கு, இப்படியே பரவும். மல்லிகைப் பூவாச்சும் ஒரு கட்டத்தில் தீர்ந்து போயிடும். ஆனா நாம பரப்பற சந்தோஷம் இருக்கே, அது இரட்டிப்பாகுமே தவிர, குறையாது.

அது சரி, ஒருத்தரை சந்தோஷப்படுத்த சுலபமான வழி எதுன்னு நினைக்கிறீங்க?

அவங்களைப் பாராட்டறதுதான்!

அன்னை தெரசா என்ன சொல்றாங்க பாருங்க –
“There is more hunger for love and appreciation in this world than for bread.”~ Mother Teresa

உங்களைப் பாராட்டினா உங்களுக்கு சந்தோஷமா இருக்காதா? நிச்சயமா இருக்கும். ஆனா, பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.

ஆனா பல சமயங்களில் நடப்பது என்ன? ஒருத்தர்கிட்ட காரியம் ஆகணும்கிறதுக்காக வலியப் போய் பொய்யான பாராட்டுக்களை அள்ளி விடறவங்கதான் அதிகமா இருக்காங்க.

அதோட மட்டுமில்லாம, பொதுவாகவே மற்றவங்களோட குறைகள்தான் நம் கண்ணில் அதிகம் படும்; நிறைகள் கண்ணில் படுவது அபூர்வம். அதனாலதான் நாம் மனதார பாராட்டுவதும் அபூர்வமா இருக்கு போல.

இப்படி செய்து பார்க்கலாம்… ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒருத்தரையாவது உண்மையா பாராட்டணும் அப்படின்னு வச்சுக்குவோம். அந்த ஒருத்தர், நம்ம குடும்பத்தில் ஒருத்தரா இருக்கலாம், அலுவலகத்தில் வேலை செய்கிறவரா இருக்கலாம், ஏன், காய்கறிக் கடைக்காரராகக் கூட இருக்கலாம். அன்றைக்கு முழுக்க நாம சந்திக்கக் கூடிய நபர்களில் யாராக வேணும்னாலும் இருக்கலாம்.

ஒவ்வொருத்தரையும் ‘இவங்களை எப்படி பாராட்டலாம்?’ என்கிற எண்ணத்தோட பார்க்கும் போது என்ன ஆகும்? நாம இது நாள் வரை அவங்ககிட்ட பார்த்திருக்காத பல நல்ல விஷயங்கள் நம் கண்ணில் பட ஆரம்பிக்கும். அப்படி ஆகும்போது, அவங்களோட குறைகள் நம் பார்வையிலிருந்து மறைய ஆரம்பிச்சிடும்.

எவ்வளவு நல்ல விஷயம் பாருங்க அது! எங்கேயும் எப்பவும் நல்லதை மட்டுமே பார்க்கப் பழகுவது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி ஒரு நல்ல விஷயத்தை எடுத்து, நீங்க ஒருத்தரை மனதார பாராட்டினீங்கன்னு வைங்க! அந்த சந்தோஷத்தில் அவர் இன்னொருவரிடம் அன்பாக நடந்து கொள்வார்; வேறொருவரை பாராட்டுவார், பிறகு அவங்க தங்களுடைய மகிழ்ச்சியை இன்னும் சிலரிடம் கொடுப்பாங்க… நீங்க ஆரம்பிச்ச சந்தோஷம் இப்படியே பரவிக்கிட்டேதானே போகும்!

அட, பாராட்ட எதுவும் கிடைக்கலையா, அன்பா ஒரு சில வார்த்தைகள். அதுவும் முடியலையா, கனிவா ஒரு புன்னகை, இப்படி ஏதாவது…

ஆக மொத்தம், ஜலதோஷம் போல சந்தோஷமும் ஒரு தொற்று வியாதிதான்!
(அப்பாடி, தலைப்பு வந்திருச்சா?)

பரப்புவோமா? :)

இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி: முகஸ்துதி பண்றது, காக்கா பிடிக்கிறது அப்படிங்கிற பிரயோகங்கள் எப்படி வந்தது?

அன்புடன்
கவிநயா

பி.கு.: படத்துக்கு நன்றி: தினமலர்

Friday, September 10, 2010

கணேச பஞ்சரத்னம்

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திருநாள் நல்வாழ்த்துகள்!

கணேச பஞ்சரத்னம் எனக்கு பிடித்த ஸ்லோகங்களில் ஒன்று. எம்.எஸ் அம்மாவின் குரலில்... (யூட்யூபில் இட்டவருக்கு நன்றி)





முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்


விக்கினங்களை தீர்த்தருளும் விநாயகனின் திருப்பதங்கள் சரணம்.


அன்புடன்
கவிநயா

Wednesday, September 1, 2010

கண்ணனைக் கண்டீரா?

செல்லக் குட்டிக் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

அவனோட பிறந்த நாளுக்கு ஏதாச்சும் எழுதணும்னு ஆசை, ஆனால் நேரம் கிடைக்கலை :( அதனால முன்னாடி கண்ணன் பாட்டு வலைப்பூவில் இட்ட கவிதை இப்போ இங்கேயும்...




கண்ணன் - என் குழந்தை

புல்லாங் குழலை ஊதும் என்றன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
இரவு பகலாய்த் தேடுகிறேன்
இன்னமும் என்னிடம் சிக்கவில்லை!

நில்லாமல் சுற்றும் புவிபோலே – ஓய்
வில்லாமல் ஊரைச் சுற்றிடுவான்;
உறிமேல் பானை கண்டுவிட்டால்
பறிமுதல் உடனே செய்திடுவான்!

பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாசாங்கு பலவும் புரிந்திடுவான்;
இத்தரை மீதில் இவனேதான்
இலக்கணம் போல நடந்து கொள்வான்!

கரிய விழிகளை விரித்து அதில்
கண்ணீரோடு நின்றிடுவான்;
பாவம் என்று விட்டு விட்டால்
மீதம் இன்றி தின்றிடுவான்!

உருட்டி மிரட்டி கட்டி வைத்தால்
உரலையும் இழுத்துச் சென்றிடுவான்!
தறிகெட் டலையும் கன்றினைப் போல்
திரியும் கண்ணனைக் கண்டீரா?

கன்னக் குழியில் குறும்பிருக்கும்
வன்னப் பீலி அசைந்தாடும்
தின்ன வெண்ணெய் எல்லாமே
திகட்டா இதழைச் சுவைத்திருக்கும்!

காதணி வதனம் கொஞ்சி நிற்கும்
மாமணி மார்பில் தவழ்ந்திருக்கும்
கிண்கிணி கொலுசு மணிகளெல்லாம் - அவன்
பாதங்கள் தொட்டு மகிழ்ந்திருக்கும்!

குழலில் குயிலும் மயங்கி நிற்கும்
குரலில் குழலே ஒலித்திருக்கும்
மடுவின் நடுவே மலர் போலே - அவன்
முகமே மனதில் மலர்ந்திருக்கும்

புல்லாங் குழலை ஊதும் என்றன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
என்றன் ஏக்கம் அறிவீரா?
அவனைக் கண்டால் சொல்வீரா?

--கவிநயா

Friday, August 20, 2010

வருவாய் வருவாய் வரலக்ஷ்மி!

அனைவருக்கும் வரலக்ஷ்மி நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகள்.




வருவாய் வருவாய் வரலக்ஷ்மி
தருவாய் தருவாய் வரம் லக்ஷ்மி

ஆழியில் அலைகளில் உதித்தவளே - எங்கள்
ஊழ்வினை அழித்து காப்பவளே
செல்வங்கள் அனைத்துக்கும் அரசியளே – உன்னை
சொல்கொண்டு பாடிட மகிழ்பவளே

எட்டென நின்று அருள் புரிவாய் - நீ
எட்டாப் பொருளையும் தந்திடுவாய்
உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
விட்டு விடாமல் காத்திடுவாய்!


--கவிநயா

Thursday, July 22, 2010

வர வேணும்!

ஆடி வெள்ளி சிறப்பு பதிவு



சின்ன மணி சிலம்பொலிக்க
வெள்ளி மணி பரல்சிரிக்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் – வந்து
கட்டி முத்தம் ஒன் றெனக்கு தர வேணும்

நீண்ட பின்னல் தானசைய
நீள் நிலமும் சேர்ந்தசைய
நித்திலமே நீ ஓடி வர வேணும் – வந்து
நித்தம் கொள்ளை அன் பெனக்கு தர வேணும்

முத்து மணி நகையாட
முத்து நகை இதழாட
சித்திரமே நீ ஓடி வர வேணும் – வந்து
சித்த மெல்லாம் நிறைந் தருளைத் தர வேணும்

கா தணிகள் தான்குலுங்க
கை வளைக ளும்சிணுங்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் - வந்து
கன்னல் மொழி இன் னமுதம் தர வேணும்

பன்னிப் பன்னி நான் பாட
பண்ணில் உன்னைத் தினம் பாட
பொன்மணியே கொலு சொலிக்க வர வேணும் – வந்து
பண் ணமர்ந்து இன் னருளைத் தர வேணும்

--கவிநயா

Saturday, July 17, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள் - 3

(3)

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

ஆல்ஸைமர்ஸ். (தமிழில் அல்சிமர்).

டாக்டர் ஓரளவு கோடி காட்டுகையிலேயே நான் இந்த நோயைப் பற்றி முடிந்த போதெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன். முதலிலேயே ஓரளவு அதைப் பற்றி அறிந்திருந்த போதிலும், மேலும் படிக்கப் படிக்க இது எவ்வளவு கொடுமையான நோய் இது என்று புரிய ஆரம்பித்தது.

"நான்" என்று எவற்றையெல்லாம் வைத்து நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோமோ அவற்றையெல்லாம் நம் கண் முன்னேயே சிறிது சிறிதாகக் கொள்ளையடித்து விடும் கள்வன்; நம் தனித்துவத்தை நலுங்காமல் பறித்துக் கொள்ளும் அரக்கன்; நம் நினைவுகளையும், குழந்தைகளையும், சொந்தங்களையும், நமக்கே இல்லாமல் செய்து விடும் கொடுங்கோலன்; என்பதெல்லாம் இந்த நோயைப் பற்றிப் படிக்கும் போது தெளிவாகியது.

இருந்தாலும் மனிதர்களுக்கே இயல்பான "நமக்கெல்லாம் அது வராது", என்ற முட்டாள்தனமான நம்பிக்கையும், நப்பாசையும் எனக்கும் இருந்தது, இன்று காலை வரையில். ஆசை நிராசையான பிறகு, "ஏன் எனக்குப் போய் வர வேண்டும்?" என்ற கேள்வியை விட என் மகளுக்கு நான் கொடுக்கப் போகும் துன்பங்களும், அவற்றைத் தடுக்க இயலாத என் கையாலாகாத நிலைமையையும் நினைத்துத்தான் மறுகுகிறது மனசு.

நிலைமை ரொம்ப மோசமாக ஆவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகுமாம், டாக்டர் சொன்னார். இருந்தாலும் இப்போதே நான் மஞ்சுவிற்குக் கொடுக்கும் சிரமங்கள் அதிகமாகத் தோன்றுகிறது. உதவிக்கென்று வந்து விட்டு, பெரும் உபத்திரவமாக அல்லவா மாறிக் கொண்டிருக்கிறேன்?

சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்வதும், அடிக்கடி பல பொருட்களையும் மறந்து வைத்து விடுவதும், பழக்கமான இடங்களிலேயே வழி தவறித் தொலைந்து போவதும்... மஞ்சுவும், மாப்பிள்ளையும் கண்ணைப் போலத்தான் பார்த்துக் கொள்வார்கள். அதற்காக அவர்களாலும் எவ்வளவு நாளைக்கு முடியும்? யோசிக்க யோசிக்கத் தலை சுற்றியது. பெரு மூச்சுடன் எழுந்து படுக்கச் சென்றேன்.

ஒரு வாரம் ஓடி விட்டது. அதற்குள் பல விஷயங்களையும் யோசித்து, சில முடிவுகளுக்கு வந்திருந்தேன்.

என் பெயரில் இருக்கும் வீட்டையும், மற்றவைகளையும் நினைவு இருக்கும் போதே மஞ்சு பெயருக்கு மாற்றி விடுவது. என்னுடைய மறதிக்கு மருந்தாக வழக்கமாகப் போகும் இடங்களுக்கும், அங்கிருந்து வீட்டிற்கும், வரும் வழிகளை எழுதி எப்போதும் என்னுடன் வைத்துக் கொள்வது. என் பெயரையும், அட்ரஸையும் எந்நேரமும் என்னுடன் வைத்துக் கொள்வது. முடிந்த வரை மஞ்சுவுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பது. நிலைமை மோசமானால் சேர்த்து விட, இப்போதே ஒரு நர்ஸிங் ஹோம் பார்த்து வைப்பது.

இப்படியான சில முடிவுகளுக்கு வந்த பின் சற்றே அமைதியானாற் போல் இருந்தது மனசு.

அன்று சனிக்கிழமை. வழக்கம் போலக் குளித்து, பூஜை முடித்து, சமையலறையில் நுழைந்தேன். "பாட்டி, எனக்கு இன்னிக்குக் கேசரி பண்ணித் தர்றியா?" அம்முக்குட்டி வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

சனி, ஞாயிறில் அவள் கேட்பதைச் செய்து கொடுப்பது என் வழக்கம். "கேசரிதானே, செஞ்சு தரேண்டா கண்ணா", குனிந்து அவளை அணைத்து முத்தமிட்டேன்.

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் என் பின்னாலேயே சுற்றிக் கொண்டு, சளசளவென்று ஏதாவது கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பாள், அம்முக் குட்டி. இதையெல்லாம் அனுபவிக்க இன்னும் எவ்வளவு நாளைக்கு எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ?

சே, இந்தக் கண்ணீர் வேறு நேரம் காலம் தெரியாமல் வந்து விடுகிறது. ரவையையும், சீனியையும் வெளியே எடுத்த வண்ணம், கண்ணீரை உள்ளிழுக்க முயன்றேன்.

"பாட்டீ, ஏன் அழற?" இந்தக் குட்டியிடமிருந்து தப்பவே முடியாது; கண்ணீருக்கிடையே பெருமிதப் புன்னகை விரிந்தது, இப்போது.

"இங்க வா, சொல்றேன்" அவளை அழைத்து என் மடியில் அமர்த்திக் கொண்டேன்.

"அம்மு, அன்னிக்கு ஒரு நாள், நாம ஒரு நர்ஸிங் ஹோம் போனோமே, ஞாபகம் இருக்கா?"

"ஓ. இருக்கே. நீ கூட உன் •ப்ரெண்ட ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன்னியே?"

அந்த நர்ஸிங் ஹோமுக்குப் போனது மறக்க முடியாத நிகழ்ச்சியாகி விட்டது (இப்போதைக்கு).

அங்கு எதிர்பாரா விதமாக என்னுடன் வேலை செய்த ஒரு தோழியைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன். எதிர்பார்த்தபடி, அவளுக்கு என்னைத் தெரியவில்லை. அவளுக்கு ஆல்ஸைமர்ஸ் முற்றிய நிலையில் இருந்தது.

ஏழைக் குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்து, தம்பி, தங்கைகளுக்காகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாளைக் கழித்து விட்டிருந்தாள். இந்த வியாதி இருப்பது தெரிந்த பிறகு, தனியாக வாழ முடியாத நிலை வரும் முன்னர் அவளே அந்த நர்ஸிங் ஹோமில் சேர்ந்து கொண்டு விட்டிருக்கிறாள். அவளைப் பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை என்று அவளுடைய நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வந்தால் மட்டும் அவளுக்குத் தெரியவா போகிறது என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் யாராவது வந்தால்தானே அவளை நன்கு பார்த்துக் கொள்கிறார்களா, வசதிகள் நன்றாக இருக்கிறதா என்பதெல்லாம் கவனிக்க முடியும்?அவள் நிலைமையை நினைத்து ரொம்ப வருத்தமாக இருந்தது. நாமாவது நினைவு இருக்கும் வரை அவளைப் போய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

"ஆமா. ரொம்ப நாளக்கி முன்னாடி, அந்தப் பாட்டி எனக்கு ரொம்ப ஃப்ரெண்டா இருந்தாங்க. ஆனா அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கப்புறம் எல்லாரையும் மறந்துட்டாங்க. என்னையும் அவங்களுக்கு ஞாபகமே இல்ல. அதே மாதிரிதான் எனக்கும் ஆகப் போகுதுன்னு டாக்டர் சொன்னாருல்லையா? அதனால இன்னும் கொஞ்ச நாளக்கப்புறம் உன்னயும், அம்மாவையும் கூட எனக்கு மறந்து போயிடுண்டா, கண்ணா", சொல்லும் போதே குரல் கம்மியது, எனக்கு.

என்னுடைய நிலைமை பற்றி அவளுக்குத் தேவையான அளவு சொல்லி இருக்கிறாள், மஞ்சு.

"பாட்டீ, உனக்கு என்னை மறந்து போனா என்ன, எனக்கு உன்னை ஞாபகம் இருக்குமே?"

பளிச்சென்று கேட்ட அம்முக்குட்டியை அப்படியே அணைத்து உச்சி முகர்ந்தேன்.

நான் மறந்தாலும், என்னை மறந்து விடாத உறவுகளைத் தந்த வரை, இறைவனுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும் என்பதை ஒரு நொடியில் உணர்த்தி விட்டாள் அல்லவா என் அம்முக்குட்டி?


(நிறைவு பெற்றது)

-- கவிநயா

Thursday, July 15, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள் - 2

(2)

முதல் பகுதி

வசதி இல்லாததாலும், பெண் பிள்ளைக்குப் படிப்பு அவசியமில்லை என்று என் பெற்றோர் நம்பியதாலும், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்ததே பெரிய விஷயமாய் இருந்தது.

தமக்கை இருவருக்கும் திருமணம் முடிந்த பின் எனக்கும் திருமணம் முடிந்தது. எனக்கு வாய்த்தவர் தங்கமானவராய் இருந்தார். அந்தக் காலத்திலேயே வரதட்சிணை வாங்காமல் என்னை ஏற்றுக் கொண்ட என் கணவரின் குடும்பம், என் குடும்பமாக மாற ரொம்ப நாள் ஆகவில்லை.

நான்கு வருடங்களில் மஞ்சுவைப் பெற்றெடுத்தேன். என்னைப் போன்ற வாழ்வு யாருக்குக் கிடைக்கும் என்று இறுமாந்திருந்த வேளையில்தான் கண் பட்டாற் போல் அது நடந்தது; விபத்து ஒன்றில் சிக்கிய என் கணவர் கோமாவில் வீழ்ந்தார்.

அந்த ஒரு வருடமும் நரகம்தான். வயது சென்ற மாமனார், மாமியாருடனும், கைக்குழந்தையுடனும், நான் பட்ட மனக் கஷ்டத்திற்கும், பணக் கஷ்டத்திற்கும் அளவே இல்லை.

அருமைக் கணவர் பிழைப்பாரா என்று தெரியாமல், பிழைக்க வேண்டுமே என்று வேண்டியபடி சொந்தக் காலிலும் நிற்க முடியாமல் நான் பட்ட அவஸ்தையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு வருடம் கழிந்த பின் என் கணவர் மற்றுமொரு முறை கண் திறக்காமலேயே இந்த உலகத்தை நீத்தார்.

அதன் பிறகு நானும் பலருடைய உதவியுடனும், பல விதமான சிரமங்களுக்கிடையில் பட்டம் படித்தேன். வேலைக்குப் போனேன். கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்தை அறிந்து கொண்டேன். மஞ்சுவிற்கும் முடிந்த அளவு கற்றுக் கொடுத்தேன்.

இன்ஞினியரிங் படித்தாள். இப்போது காலேஜில் லெக்சரராக இருந்தபடி பி.எச்.டி. செய்கிறாள். இதற்கிடையில் அவள் விரும்பியவனுக்கே திருமணமும் முடித்தேன்.

அவளுக்குக் குழந்தை உண்டான போதுதான், "அத்தை, நீங்க எதுக்கு இன்னமும் வேலை செஞ்சுக்கிட்டு தனியா இருக்கணும்? எங்களோடயே தங்கிடுங்க. எங்களுக்கும் உதவியா இருக்கும்", என்று மாப்பிள்ளையே வற்புறுத்திய போது மறுக்க முடியவில்லை.

வாலன்ட்டரி ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டு இங்கேயே வந்து விட்டேன். சம்பந்திமாரும் நல்லவர்களாக இருந்ததால், அவர்களிடமிருந்தும் இந்த ஏற்பாட்டிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

இப்போது சமீப காலமாகத்தான் கொஞ்சம் பிரச்சினைகள் ஆரம்பம். எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தால், ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொடுத்து, "இப்போதாவது என்னை நினைத்துக் கொள்", என்பார் போலும், கடவுள். அப்படித்தான் எனக்கும் இப்போது மறதியைக் கொடுத்து விட்டார்.

சமையல் சாமான்களிலிருந்து எல்லாவற்றையும் கை தவறி வைத்து விட்டு மணிக் கணக்கில் தேடுவது வழக்கமாகி விட்டது, எனக்கு. சில சமயம் என்ன தேடுகிறேன் என்பதே மறந்து விடும்!

ஒரு முறை என்னிடமிருந்த வீட்டுச் சாவியை எங்கோ வைத்து விட்டேன். அம்முக்குட்டியை ஸ்கூலில் இருந்து கூட்டி வர நேரம் ஆகி விட்டது. சாவியைத் தேடிக் கொண்டிருக்க நேரமில்லை. பரவாயில்லை என்று கதவை இழுத்துச் சார்த்திக் கொண்டு போய் விட்டேன்.

திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொண்டது. மஞ்சுவோ, மாப்பிள்ளையோ வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். வேறு வழியில்லாமல் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டி மஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். அவளோ அப்போதுதான் ஒரு வகுப்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். உடனே வர முடியாத நிலைமை. அதனால் அவள் வரும் வரை நாங்கள் அதிகம் பழக்கமில்லாத அந்தப் பக்கத்து வீட்டில் இருக்க வேண்டி வந்து விட்டது.

மஞ்சு அன்றைக்கு என்னிடம் ரொம்பவே பொறுமை இழந்து விட்டாள். பக்கத்து வீட்டிலும் யாரும் இல்லாதிருந்திருந்தால், அன்றைக்கு அம்முக்குட்டியும் அவ்வளவு நேரமும் மழையிலேயே அல்லவா நனைய வேண்டி இருந்திருக்கும்?

மஞ்சு கோபித்துக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை. வேடிக்கை என்னவென்றால், திரும்பி வந்து பார்க்கும்போது சாவி நான் எப்போதும் வைக்கும் இடத்திலேயேதான் இருந்தது. சரி, ஏதோ வயதாகி விட்டதால் கூடவே வரும் மறதி என்று என்னைத் தேற்றிக் கொண்டு, இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மற்றொரு முறை அப்படித்தான், ஒரு வெள்ளிக் கிழமை மாலை வழக்கம் போல் எங்கள் தெரு முனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அன்றைக்கு ஏதோ விசேஷ பூஜை இருந்தபடியால் திரும்பும் போது இருட்டி விட்டது. நேரமாகி விட்டதே என்று எண்ணியபடி நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டேன்.

பத்து நிமிடங்களில் வந்து சேர வேண்டிய வீடு எங்கே போயிற்று? நாற் புறமும் சுற்றிச் சுற்றி ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே, இப்போது கொஞ்சம் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். எந்த வீட்டைப் பார்த்தாலும் புதிதாக இருப்பது போல் இருந்தது. பீதி மனதைக் கவ்வ, கலவரம் வயிற்றைக் கவ்வியது.

பதட்டப்படாதே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட வண்ணம், எங்கள் வீடு இருக்கும் தெரு பெயர் என்ன என்று யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம். சுத்தமாக நினைவில் இல்லை. வருடக் கணக்காகப் போகும் வழிதான். என்ன ஆயிற்று எனக்கு?

எவ்வளவு நேரம் அந்த இருட்டில் சுற்றினேனோ, ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாமல் கால்கள் பின்னியது. திடீரென்று என் அருகில் ஒரு கார் வந்து நின்றது. மஞ்சுவும் மாப்பிள்ளையும். அந்த நிமிடத்தில் கடவுளையே பார்த்த மாதிரி அப்படி ஒரு நிம்மதியாய் இருந்தது, எனக்கு…

ஆனால் எல்லாம் மஞ்சுவின் குரலைக் கேட்கும் வரைதான். "அம்மா, உங்கள எங்கெல்லாம் தேடறது?" அவள் குரலில் இருந்தது வருத்தமா, கோபமா?

மறு நாள் முதல் ஆரம்பித்தது, டாக்டர் விஜயம். இன்று காலைதான் எனக்கு என்ன பிரச்சினை என்று முடிவாகச் சொன்னார் டாக்டர்.


(தொடரும்)

Wednesday, July 14, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள்

(1)

நட்சத்திரக் குழந்தைகள் எல்லாம் என்ன காரணத்தாலோ வானப் பள்ளிக்கு மட்டம் போட்டு விட, வானம் வெறுமையாகக் காட்சி அளித்தது, என் மனசைப் போல.

நேற்றுப் பெய்த மழையில் சின்னக் குட்டையாகத் தேங்கியிருந்த தண்ணீரில் பிரதிபலித்த நிலவின் பிம்பத்தை, "ப்ளக்" என்று குதித்த தவளை ஒன்று கலைத்து விட்டுச் சென்றது.

மெல்லிய கொலுசுச் சத்தம் என் பின்னால் ஒலித்தது. மஞ்சுதான். மௌனமாக என் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

எத்தனையோ வருடங்களாக எங்கள் இருவரின் வம்புகளுக்கும், அரட்டைகளுக்கும், பிரச்சினைகளுக்கும், தீர்வுகளுக்கும் சாட்சியாக இருந்து வரும் நிலவு, இன்று எங்கள் அயர்ச்சி மிகுந்த மௌனத்தையும், அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் கழிந்த பின்னர், என் அருகில் நெருங்கி வாகாக அமர்ந்து கொண்ட மஞ்சு, என் மடியில் தலை வைத்து முகம் புதைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் சூடாக என் புடவையை நனைத்தது மஞ்சுவின் கண்ணீர்.

வாஞ்சையுடன் அவள் முகத்தில் விழுந்த கூந்தலை விலக்கி விட்டுக் கண்களைத் துடைத்து விட்டேன். ஆனால் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இதோ என் மடியில் படுத்து குழந்தையாய்க் கண்ணீர் விடுகிறாளே மஞ்சு, அவள் அப்படி ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. அவளுக்கே ஏழு வயதில் தங்கப் பதுமை மாதிரி ஒரு மகள் இருக்கிறாள். இருந்தாலும், என் பெண்ணை நான் சரியாக வளர்க்கவில்லையோ என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

நானும், அவளும், ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழப் பழகி விட்டோம். பெண்ணும் மாப்பிள்ளையும் எவ்வளவுதான் சொன்ன போதிலும், நான் அவர்களுடன் வந்து இருக்கச் சம்மதித்தது பெரிய தவறு. ஆனால் அதைக் காலம் கடந்த பின் உணர்ந்து என்ன பயன்? கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த என் செல்வ மகளுக்கு என் இறுதிக் காலத்தில் சிரமத்தையும் துன்பத்தையும்தான் தரப் போகிறேன் என்பது என்னவோ உறுதியாகி விட்டது.

இன்று காலையில் டாக்டர் சொன்னதெல்லாம் கனவு போல இருக்கிறது; ஆனால் கனவில்லை என்று என் மடியில் இறங்கும் மஞ்சுவின் கண்ணீர் அறிவிக்கிறது.

அப்படித்தான் இருக்க வேண்டும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு அடுக்கடுக்காய் வந்த துன்பங்களைச் சகிக்க முடியாமல், "இறைவா, இந்த இருண்ட காலங்கள் எல்லாம் கனவாகப் போய் விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்", என்று மனம் நொந்து வேண்டிக் கொண்டிருக்கையில், வானில் போய்க் கொண்டிருந்த எந்தத் தேவனோ, "ததாஸ்து", சொல்லி இருக்க வேண்டும்.

என் அம்மா நான் சிறுமியாய் இருந்த போது சொல்லி இருக்கிறார். நினைவுகள் எல்லாம் எப்போதும் நல்லதாகவே இருக்க வேண்டுமாம்; ஏனென்றால் வானத்தில் உலவும் தேவர்கள் எப்போதாவது "ததாஸ்து" என்று சொன்னால், அந்த சமயத்தில் நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அது அப்படியே பலித்து விடுமாம்.

"ஏம்மா மஞ்சு, நீ வேண்ணா உள்ள போய் படுத்துக்கோ. நாளைக்கு ஏதோ ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குன்னியே?", என்றேன். காலேஜில் லெக்சரராக இருக்கிறாள். மடியிலேயே தலை அசைந்தது, "கொஞ்ச நேரம் ஆகட்டும்மா".

அவள் முகத்தைத் திருப்பி, நெற்றியில் முத்தமிட்டேன். மென்மையாக விரல்களால் கூந்தலை வருடி விட்டேன். அழுகை சற்றே அடங்கினாற் போல இருந்தது. சிறு வயதில் இருந்தே அப்படித்தான், எவ்வளவுதான் அழுகையும், ஆத்திரமும் இருந்தாலும், என் கை பட்டவுடன் அமைதியாகி விடுவாள்.

"மஞ்சு, உள்ள போய் படுத்துக்கிறியா? காலைல காலேஜுக்குப் போகணுமே?" என்றேன்.

விருட்டென்று தலை நிமிர்ந்து, "என்னம்மா நீங்க, இப்பத்தானே கேட்டீங்க..." என்று ஆரம்பித்தவள், சட்டென்று அவளே மௌனமானாள்.

"ஆமா, இப்பத்தானே கேட்டேன். ஸாரிடா", என்னும் போது என் கண்கள் குளம் கட்டின.

"அம்மா, ப்ளீஸ்...", என்றவள், என்னை இறுகக் கட்டி, கன்னத்தில் முத்தமிட்டாள்.

"சரிம்மா, நீங்களும் வாங்க, படுக்கலாம்", என்று எழுந்தாள்.

"இல்லடா, நீ போ. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்"

"சீக்கிரமா வந்துடுங்க, குட் நைட்"


(தொடரும்)

Friday, July 9, 2010

தனிமை



மலரைத் தொலைத்த இதழாக
வானைத் தொலைத்த நிலவாக
வேரைத் தொலைத்த விழுதாக
என்னைத் தொலைத்தது என்மனது

காற்றில் அலையும் இலையாக
கரை சேராத அலையாக
கனவில் சிக்கிய நினைவாக
கனலில் சிக்கிய தென்மனது

மனிதர்கள் இல்லை; மனங்கள் இல்லை;
உயிர்கள் இல்லை; உணர்வும் இல்லை;
எதுவும் இல்லா ஓரிடத்தில்
தனியாய்த் தீவாய் என்மனது

மனதின் மயக்கம் கலைந்திடுமோ?
மூடிய பனிஇனி விலகிடுமோ?
கண்கள் ஒளியைய்க் கண்டிடுமோ?
கண்ணீர்தான் கடல் சேர்ந்திடுமோ?


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/_f1guy68_/1643679095/sizes/m/

Monday, July 5, 2010

அமைதி




தகிக்கின்ற பூமி
கொதிக்கின்ற பாதை
வெறிக்கின்ற கதிரவன்
எரிக்கின்ற பார்வை

முத்துமுத் தெனவே
முளைத்து முகிழ்த்திடும்
சொத்துக்கள் சேர்ந்தென்னை
சோர்ந்திட வைத்திடும்

ஆயாசம் மேலும் கூடும்
ஆகாயம் போலே நீளும்
நெஞ்சுக்குள் தீயை மூட்டி
நினைவுக்குள் கங்காய்க் காய்க்கும்

முட்களே பாதை போடும்
வலிகளே வாழ்க்கை ஆகும்
கண்ணீரே காயம் ஆற்றும்
குருதியே தாகம் தீர்க்கும்

உள்ளுக்குள் உறையும் நேசம்
உயிரெல்லாம் வாசம் வீசும்
வெந்தாலும் வேதனை இல்லை
குளிர்ந்தாலும் குதூகலம் இல்லை

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.southshoreyoganetwork.com/db4/00355/southshoreyoganetwork.com/_uimages/lotuspose.bmp

Wednesday, June 30, 2010

ரசமோ ரசம்!

ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 3

முதல் பகுதி: இங்கே; இரண்டாம் பகுதி: இங்கே



ரசம்னு சொன்னவுடனே பருப்பு ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், இந்த ரச வகைகள் பத்திப் பேசப் போறோம்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா, மன்னிச்சுக்கோங்க :) இன்னிக்கு நாம பரதத்தில் உள்ள நவரசங்களைப் பத்திதான் பார்க்கப் போறோம்!

‘ரசம்’ என்பது என்ன? நடனம் ஆடுபவர் வெளிப்படுத்தும் பாவங்கள், பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகளே ரசம் அப்படின்னு நாட்டிய சாஸ்திரம் சொல்லுது. ரசனை, ரசிகர், இந்த சொற்களோடு தொடர்பு படுத்திப் பார்த்தா தெரியும்...

சினிமா பார்க்கும்போது எத்தனை பேர் கைக்குட்டையால கலங்கின கண்ணை துடைச்சிருக்கீங்க! வில்லனை பார்க்கும்போது நாமே திரைக்குள்ள போய் ரெண்டு போடு போடலாம்கிற மாதிரி கோவம் வந்திருக்கா? :) எல்லாம் சுபமா முடியும் போது ‘அப்பாடி’ன்னு மனசு நிறைவா, சந்தோஷமா உணர்ந்ததுண்டா?

அதே போலத்தான் இதுவும். நடனமாடுபவர் மிகவும் திறமையானவராய் இருக்கும் பட்சத்தில் அவர் வெளிப்படுத்தும் பாவங்கள் கண்டிப்பா பார்ப்பவர்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவரச பாவங்கள் என்பது தென்னிந்திய நடனங்களுக்கே, குறிப்பா பரதத்துக்கே உரிய சிறப்பு. மற்ற நடனங்கள் பார்த்தீங்கன்னா, வெறும் உடலை, கைகால்களை மட்டுமே பயன்படுத்துவாங்க. ஆனா பரதத்திலும், பிற தென்னிந்திய பாரம்பரிய நடனங்களிலும்தான், கதை சொல்லும் உத்தியும், அதன் காரணமா பலவித உணர்வுகளை முகபாவத்தாலும், முத்திரைகளாலும் வெளிப்படுத்துவதும் இருக்கு.

அன்றாட வாழ்க்கையில் நாம அனுபவிக்கும் பலவிதமான மன நிலைகளைத்தான் விதவிதமான முகபாவங்களாக பரதத்தில் வெளிப்படுத்தறாங்க. நாட்டிய சாஸ்திரத்தில் இந்த மாதிரியான உணர்வுகளை ஒன்பது விதமா வகைப்படுத்தி இருக்காங்க.

சிருங்காரம் –

சிருங்காரம் என்றால் அழகு. மனிதனுக்கு அழகு எது? அன்பு. அன்பில் பலவகை இருக்கு. ஆண், பெண்ணுக்கிடையேயான காதல், தாய், பிள்ளைக்கிடையேயான அன்பு, குரு, சிஷ்யர்களுக்கிடையிலான அன்பு, முக்கியமாக, இறைவனிடம் பக்தன் காட்டும் அன்பு, இப்படி…

ஏனோ சிருங்காரம்னா காதல் மட்டுமேங்கிற மாதிரிதான் இப்போதைய புரிதல் இருக்கு. இது தவறு. நாட்டியமே ஆன்மீகத்துக்கு மிக நெருக்கமானது, அதுவும் இறைவனை அடைய உதவுகிற ஒரு யோகம் தான்! அதனால இறைவனிடம் காட்டும் அன்புதான் இங்கே தலையாயது. அஷ்டபதியில் கோபியர்கள் கண்ணனிடம் காட்டும் அன்பு வெறும் காதல் மட்டும் இல்லை. அது மிகவும் மேலான ஒரு நிலைப்பட்ட பக்தி. சிருங்காரம் பற்றி இப்படி சொல்வது நான் இல்லை, திருமதி. பாலசரஸ்வதி, திரு. தனஞ்சயன், இந்த மாதிரியான நாட்டிய ஜாம்பவான்கள்தான் இப்படி சொல்லி இருக்காங்க.

இதன் காரணமாத்தான் சிருங்காரத்தை ரசங்களில் முதன்மையானதாக சொல்றாங்க. (‘king of rasas’)

ரௌத்ரம் –

கோபத்தை பல விதமா வெளிப்படுத்துவதுதான் ரௌத்ரம். கோபம் வராதவங்கன்னு யாராவது உண்டா? விசுவாமித்திரர், துர்வாசர், இவங்களைப் போன்ற முனிவர்களுக்கே மூக்குக்கு மேல கோவம் வருமாம்! அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எந்த மூலைக்கு?

அதனால மிக சுலபமா யாருமே வெளிப்படுத்த முடியற உணர்வு இதுதான் :) உங்களையும் சேர்த்துத்தான்!

ராட்சதர்களைக் காட்டும் போதோ, அல்லது தெய்வம் அரக்கர்களை அழிக்கையில் ஏற்படும் ஆங்காரத்தைக் காட்டும் போதோ, அல்லது இயற்கையின் சீற்றத்தைக் காட்டும் போதோ, இந்த மாதிரி சமயங்களில் இந்த ரசம் பயன்படுகிறது. நடராஜர் ஆடும் பலவிதமான தாண்டவங்களில், அவர் அழிக்கும் கடவுளாக ஆடும் தாண்டவத்தை, ‘ருத்ர தாண்டவம்’ அப்படின்னுதானே சொல்றாங்க…

வீரம் –

தன்னம்பிக்கை, தைரியம், ஆண்மை, உறுதி, இந்த மாதிரியான மனநிலைகளை வெளிப்படுத்தறதுதான் வீரம் என்பது. வீரம் என்பதை உடலுடைய தோரணையிலேயே காட்டலாம். அதை சரியா செய்யலைன்னா அதுவே ‘ஹாஸ்ய’ ரசமாயிடும் அப்படிங்கிறார், திரு. தனஞ்செயன் :)

வீரம்னு சொன்ன உடனே வில்லேந்திய ஸ்ரீ ராமன் தான் என் நினைவுக்கு வருவான்….

பீபஸ்தம் –

பீபஸ்தம்னா அருவருப்பு. எதையாவது பார்க்கும் போது “ஐயய்ய…ச்சீ..ச்சீ” அப்படின்னு முகம் சுளிக்க வைக்கிற உணர்வு. அதை நினைச்சாலே உமட்டுதுன்னு சொல்றோம்ல, அந்த உணர்வை வெளிப்படுத்தற பாவம்தான் இது.

ஹாஸ்யம் –

சந்தோஷம், சிரிப்பு. நகைச்சுவை. இப்படி இதையெல்லாம் வெளிப்படுத்தறதுதான் ஹாஸ்யம். தோழியுடன் கிண்டல் பண்ணி விளையாடறபோதோ, அல்லது குட்டிக் கிருஷ்ணனோட குறும்புகளைப் பற்றிச் சொல்லும் போதோ, இந்த ரசம் பயன்படும்.

கருணா –

கருணை. இரக்கத்தால் ஏற்படுகிற அன்பு. ஒருவருடைய துன்பத்தைப் பார்த்து நமக்கு ஏற்படும் இரக்க உணர்வு. மனிதர்கள் படும் துன்பத்தைக் கண்டு புத்தருக்கு ஏற்பட்டது கருணை. அதனால தான் அந்த துன்பத்துக்கு காரணம் என்ன என்று கண்டு பிடித்துச் சொன்னார். தேவர்கள் மகிஷனால் பட்ட துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு இரங்கி, அவர்களைக் காக்க வந்தாள், தேவி.

அத்புதம் –

அற்புதம். அதிசயம். ஆச்சர்யம். எதிர்பாராத ஒன்றை பார்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, அல்லது அதிர்ச்சி, இரண்டையுமே இதனால் வெளிப்படுத்தலாம்.

பயம் –

இதைப் பற்றி சொல்லாமலேயே தெரியுமே… கருங்கும்னு இருக்கிற இருட்டில் தனியாப் போகும்போதோ, சிங்கம், புலிகிட்ட மாட்டிக்கும் போதோ, தீயவற்றைக் கண்டு ஓடி ஒளியும்போதோ, இப்படி பல இடங்களில் ‘பயம்’ ‘காட்டலாம்’ :)

சாந்தம் –

சாந்தம் என்பது அமைதி. இன்பமோ துன்பமோ எதுவுமற்ற அமைதியான மனநிலை. போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்ற போது இந்த நிலையைத்தான் அடைந்தார். பரதமும் ஆன்மீகமுக் கைகோர்த்துச் செல்வதால், வெவ்வேறு ரசங்களையும் அனுபவித்தப் பின், அலை ஓய்ந்தாற்போல அனைத்தும் ஓய்ந்து, இறைவனை அடைகையில் ஏற்படும் மிகவும் உயர்வான மனநிலை இது.

எந்த விதமான உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதால் இதை நவரசங்களில் ஒன்றாக சொல்லக் கூடாது என்ற சர்ச்சை இருக்கிறது. இருந்தாலும் நாட்டிய சாஸ்திரத்தின் படி, முதல் 8 ரசங்களையும் தந்தவர் பிரம்மா என்றும், சாந்தம் என்கிற ஒன்பதாவது ரசத்தை நாட்டிய சாஸ்திரத்தை எழுதிய பரத முனிவரே சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலே படத்தில் இருப்பது இதுதான்...

***

அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங்க? சொல்லுங்க பார்க்கலாம்... :)



அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி:http://www.carolinejariwala.com/paintings_03-05/images/navarasa_hasya.jpg

Sunday, June 6, 2010

நம்பிக்கை



இருளடைந்த கானகத்தே
இலக்கின்றி அலைந்திடினும்

திசைதெரியாப் பாதையிலே
வழிமறந்து தொலைந்திடினும்

துயர்சூழ்ந்த வாழ்க்கையினால்
மனம்துவளும் வேளையிலும்

சிற்றெறும்புப் புற்றினுள்ளும்
சூரியஒளி புகுவதுபோல்

சின்னஞ்சிறு நீர்த்துளிகள்
பெரியவெள்ளம் ஆவதுபோல்

மூங்கில்வழி நுழைந்துகாற்று
இனியகீதம் இசைப்பதுபோல்

சிறியஎழில் அகல்விளக்கு
கரும்இருளை விரட்டுதல்போல்

நம்பிக்கைசிறி திருந்துவிட்டால்
நானிலமும் வென்றிடலாம்!

--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/notreallyunique/2634711906/sizes/m/

Tuesday, June 1, 2010

சாப்பிடத் தெரியுமா, உங்களுக்கு?

சின்னப் பிள்ளையில் யாரையாச்சும் கிண்டல் பண்றதுன்னா, “உனக்கு என்னதான் தெரியும், நல்லா சாப்பிட மட்டும் தான் தெரியும்”, அப்படின்னு சொல்றது உண்டு. ஆனா உண்மையில், நல்லா, ஒழுங்கா, சாப்பிட தெரிஞ்சவங்க ரொம்ப குறைவுன்னே தோணுது. அதை சரியா செய்தாலே நம்மை எந்த நோயும் அண்டாது!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அப்படின்னு சொல்வாங்க… ஏதாவது ஒரு வியாதி வந்து துன்பப் படும்போதுதான் அதனுடைய உண்மையான பொருள் புரியுது இல்லையா, ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பதைப் போல.

நாம ஆரோக்கியமா இல்லைன்னா, நாம மட்டும் கஷ்டப்படறதில்லை. நம்மை சேர்ந்தவங்களும் நமக்காக, நம்மோட சேர்ந்து பலவிதங்களில் சிரமப்படறாங்க. பல முதியோர்கள் பலவிதமா கஷ்டப்படறதையும், உறவினர்களால கூட பார்த்துக்க முடியாத அளவு துன்பப்படறதையும் பல இடங்களில் பார்க்கிறோம். வாழவும் முடியாம, சாகவும் முடியாம… எப்படிப்பட்ட வேதனை!

வயசு ஆக ஆகத்தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும் போல இருக்கு. பல விஷயங்கள் நம்ம கையில் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும் நம்மால முடிஞ்ச வரைக்கும் முடிஞ்ச விஷயங்களை பண்றதுதானே நமக்கு நல்லது?



பாதி வியாதி உணவினால்தான் வருது. உணவில் இருக்கும் கிருமிகளை பத்தி மட்டும் சொல்லலை; உணவின் அளவு, சாப்பிடற நேரம், சாப்பிடற விதம், இப்படி எத்தனையோ காரணங்கள். ஏதாவது ஒண்ணு பிடிச்சிருந்ததுன்னா, அதை அளவே இல்லாம சாப்பிடறோம். பசிக்குதோ பசிக்கலையோ, எல்லா வேளையும் மூச்சு முட்ட சாப்பிடறவங்களும் இருக்காங்க.

‘உணவே மருந்து’ அப்படிங்கிறார் ஒருத்தர். எப்படி?

• உணவு, நீர், உறக்கம், மூணும் அளவோட இருக்கணும்
• ஒரு முறை சாப்பிட்டது நல்லா ஜீரணமாகி, பசித்த பிறகுதான் அடுத்த முறை சாப்பிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்கிறவற்றையும் அளவோடுதான் சாப்பிடணும்
• சுவையா இருக்கேன்னு மிதமிஞ்சி சாப்பிடவே கூடாது

இதெல்லாம் நான் சொல்லலைங்க! வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்க வள்ளுவப் பெருந்தகைதான் இதையும் சொல்லி இருக்கார், ‘மருந்து’ என்கிற அதிகாரத்தில்.

விருந்துன்னா போதும், பலரும் எழுந்திருக்கவே முடியாத அளவு சாப்பிடுவோம்! யாராவது கை கொடுத்து தூக்கி விடணும்! அதனாலதான் இப்பல்லாம் தரையில் பந்தி வைக்காம, மேசை நாற்காலி போடறாங்களோ என்னவோ :)

ஆரொக்கியமா இருக்கணும்னா, அரை வயிறு நிரம்பற அளவுதான் சாப்பிடணும், கால் வயிறு தண்ணீர் குடிக்கணும், கால் வயிறு காலியாதான் இருக்கணும், அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன்…

மண்ணோடு மண்ணாப் போகப் போகிற உடம்பைப் பற்றி எதுக்காக இவ்வளவு கவலைப் படணும், அப்படின்னு தோணுதில்ல? எனக்கும் அப்படித்தான் தோணும்.. முந்தில்லாம்.

உடல் நலத்தை யாரும் அலட்சியப் படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு உரிய கடமைகளை நிறைவேற்றவாவது, உடல் நலத்தை கவனிச்சுக்கணும். ஆன்மீகத்தில் இருக்கிறவங்க கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. திருமூலர் சொல்லுவார்:

உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!

இறைவன் உறையும் உடலை எப்படி அலட்சியப்படுத்த முடியும்? அரிதாகக் கிடைக்கிற மனிதப் பிறவியை தவற விட்டு விட்டால் அவனை அடைவது எப்படி?

இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கடமை இருக்கு. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? (பேப்பர் பேனா இருந்தா போதும்னு சொல்லாதீங்க :)

இனிமேல் சாப்பிடறதுக்கு முன்னாடி, இதையெல்லாம் நினைவில் வச்சுக்குவோம். சரிதானே?

அனைவரும் அளவோடு உண்டு ஆரோக்கியமாய் வாழ, மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.thirumurugan.in/2007/06/delicious-pictures-of-indian-food.html