Sunday, October 4, 2009

காதல், கடவுள், அழகு, பணம்

இது ஒரு தொடர் பதிவு. காதல், கடவுள், அழகு, பணம், இவற்றை பற்றி நம் கருத்தை சொல்லணும் (இது பரவாயில்லை). பிறகு இன்னும் சில பேரை சொல்ல வைக்கணும் (இதான் கஷ்டம் :). அன்பால் என்னை மாட்டி விட்டவங்க, தோழி ஜெஸ்வந்தி.

காதல்





தமிழில் எனக்கு பிடித்த சில சொற்களில், தமிழ், அழகு, எழில், அன்பு, காதல், இவையெல்லாம் அடக்கம். காதல் பலவகைப் படும். ஆண் பெண் இடை இருக்கும் அன்பு மட்டுமேயா காதல்? சிலருக்கு படிப்பின் மேல் காதல். சிலருக்கு தொழிலின் மேல் காதல். சிலருக்கு தமிழின் மேல் காதல். சிலருக்கு கணினியின் மேல் காதல். சிலருக்கு ஏதேனும் ஒரு கலையின் மேல் காதல். இன்னும் சிலருக்கு கடவுள் மேல் காதல். ஏதோ ஒரு காதல் இல்லாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும். ஆதலினால் காதல் செய்வீர்! :)

கடவுள்




இவரை பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கேன். அன்பே சிவம், அதுவே கடவுள். இறைவனை நாம் எங்கெல்லாம் பார்க்கிறோமோ, எப்படியெல்லாம் பார்க்க விரும்புகிறோமோ, அப்படியே அவன் காட்சி அளிக்கிறான் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகள் அனைத்துக்கும் இறைவன் தவறாமல் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ யோகானந்தர். இறைவனின் வழிகளை புரிந்து கொள்ளுதல் சராசரி மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம். அதனால், எது நடந்தாலும் நம்பிக்கையை கைவிடாதிருப்பது நல்லது.

அழகு




அழகா இருக்கணும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனா இந்த அழகுக்காக ஒவ்வொருத்தரும் என்னென்ன செய்யறோம்? எல்லாத்தையும் விட ரொம்ப சுலபமான, செலவே இல்லாத வழி ஒண்ணு இருக்கு, தெரியுமா? வாங்க, சொல்றேன்!

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’. மனசு அழகா இருந்தாலே, முகத்திலும் அது தன்னால பளிச்சிடும். குட்டி பாப்பாவை பார்த்தா உடனே தூக்கி வச்சு கொஞ்ச தோணுது. அதே சமயம் புதுசா பார்க்கிற சிலரிடம் போய் ‘ஹலோ’ சொல்லக் கூட தயக்கமா இருக்கு. பெரியவர்களிடம் இல்லாத கவர்ச்சி சின்னக் குழந்தைகளிடம் இருக்கிறதே, ஏன்? ஏனென்றால், அவர்கள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அந்த காலத்தில் ரிஷிகளிடமெல்லாம் ‘தேஜஸ்’ ஒளி வீசியதாக சொல்வார்கள். ஏன் அப்படி? அவர்கள் உள்ளம் மாசில்லாமல் தூய்மையாக இருந்தது. யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை. மனம் எப்போதும் சமநிலையில் ஆனந்தமாக இருந்தது. அதுதான் காரணம். அதனால் நாமும் நம் மனசை சுத்தமா, கல்மிஷமில்லாம, குழந்தை மனசு போல வச்சுக்குவோம். மற்ற அழகெல்லாம் தன்னால வந்திடும்.

பணம்



மரத்தை பார்த்தா ஆசையா இருக்கில்ல? :) பணத்தை பற்றி என்ன சொல்றது? எல்லாருக்கும் தெரிஞ்சதையே சொல்றேன். (இது வரை வேறென்ன பண்ணேன்னு சொல்றீங்களா, அதுவும் சரிதான் :). பணம் நமக்கு முதலாளியா இருக்க கூடாது, நம்மதான் பணத்துக்கு முதலாளியா இருக்கணும். பணம் வாழ்க்கைக்கு தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிடாம பார்த்துக்கணும்.

***

என் வலையை இப்போ இவங்களுக்கு விரிச்சிருக்கேன்; மாட்டுவாங்களான்னுதான் தெரியல :)

கீதாம்மா
குமரன்
வல்லிம்மா

***

படங்களுக்கு நன்றி:
tulips - http://www.flickr.com/photos/krisdecurtis/412973107/sizes/m/
cute baby - http://www.warm103.com/Portals/1/Cute-Baby.jpg
kadavuL - http://www.spiritliferc.org/images/Praying%20Hands.jpg
money - http://www.boosttwitterfollowers.com/images/money_tree.jpg

16 comments:

  1. //ஆதலினால் காதல் செய்வீர்! :)//

    ரைட்:)!

    //எது நடந்தாலும் நம்பிக்கையை கைவிடாதிருப்பது நல்லது.//

    திருவார்த்தை.

    //குழந்தை மனசு போல வச்சுக்குவோம். மற்ற அழகெல்லாம் தன்னால வந்திடும்.//

    உண்மைதாங்க.

    //பணம் வாழ்க்கைக்கு தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிடாம பார்த்துக்கணும்.//

    அவசியமான கருத்து.

    உங்கள் பார்வையில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள் வழக்கம் போலவே. வாழ்த்துக்கள் கவிநயா!

    ReplyDelete
  2. க‌விந‌யாவை மாட்டி விட்ட‌ ஜெஸ்...

    என்னை அருணா மேடம் மாட்டி விட்ட போது, இவ்வளவு விரிவா நான் எழுதல...

    ஆனா, நீங்க ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க கவிநயா..

    ReplyDelete
  3. சிம்பிளா, அதே சமயம் அருமையாகச் சொல்லியிருக்கிங்கக்கா.

    ReplyDelete
  4. // ஏதோ ஒரு காதல் இல்லாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும். ஆதலினால் காதல் செய்வீர்! :) //

    அழகாகச் சொல்லி விட்டீர்கள் கவிநயா. எல்லாக் கருத்துக்களும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //ஏதோ ஒரு காதல் இல்லாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும். ஆதலினால் காதல் செய்வீர்! :)//

    சூப்பர் கவிதை கவி-க்கா! :)

    காதல் உனது!
    கடவுள் உனது!
    அழகு உனது!
    பணம் பலது!
    :)

    ReplyDelete
  6. நல்லா சொல்லியிருக்கிங்க ;)

    ReplyDelete
  7. //உங்கள் பார்வையில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள் வழக்கம் போலவே. வாழ்த்துக்கள் கவிநயா!//

    வழக்கம் போலவே நீங்களும் முதல் ஆளா வந்து வாழ்த்திட்டீங்க :) மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  8. //என்னை அருணா மேடம் மாட்டி விட்ட போது, இவ்வளவு விரிவா நான் எழுதல...//

    நீங்க நல்லா எழுதியிருந்தீங்களே, நான் தான் படிச்சேனே! :)

    //நீங்க ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க கவிநயா..//

    மிக்க நன்றி கோபி :)

    ReplyDelete
  9. //சிம்பிளா, அதே சமயம் அருமையாகச் சொல்லியிருக்கிங்கக்கா.//

    ரொம்ப நன்றி மௌலி!

    ReplyDelete
  10. //அழகாகச் சொல்லி விட்டீர்கள் கவிநயா. எல்லாக் கருத்துக்களும் அருமை. வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஜெஸ்வந்தி! பாசாகிட்டது குறித்து மகிழ்ச்சி :) வாய்ப்புக்கு நன்றி.

    ReplyDelete
  11. //:)//

    வாங்க ராதா. இந்த புன்னகை என்ன விலை? :)

    ReplyDelete
  12. //சூப்பர் கவிதை கவி-க்கா! :)//

    கவிதை? இந்த பதிவில் கவிதையே எழுதலையே? :)

    //காதல் உனது!
    கடவுள் உனது!
    அழகு உனது!
    பணம் பலது!//

    ஓ, இதை சொல்றீங்களா? ஆமாம்!

    வருகைக்கு நன்றி கண்ணா :)

    ReplyDelete
  13. //நல்லா சொல்லியிருக்கிங்க ;)//

    நன்றி கோபி. ரொம்ப நாளாச்சு பார்த்து? :)

    ReplyDelete
  14. ***
    //:)//
    வாங்க ராதா. இந்த புன்னகை என்ன விலை? :)
    ***
    அகத்தின் அழகு தான் இதன் விலை. :)
    என்னோடதா இல்லை அக்காவோடதானு நீங்களே முடிவு செய்யவும். :)

    ReplyDelete
  15. //என்னோடதா இல்லை அக்காவோடதானு நீங்களே முடிவு செய்யவும். :)//

    how sweet :) தம்பியோடதுன்னே வச்சுக்கறேன் :) மீள் வருகைக்கு நன்றி ராதா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)