Sunday, September 13, 2009

சிட்டுப்போல் கண்ணுறங்கு...!



ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

என்செல்லமே கண்ணுறங்கு
சிட்டுப் போல் நீயுறங்கு
அன்னை நான் தாலாட்ட
அற்புதமே கண்ணுறங்கு

தண்ணிலவு தான் வீச
வெண்மேகம் தொட்டில் கட்ட
தென்றலது தவழ்ந்து வந்து
தேவனுனைத் தழுவி நிற்க
கண்ணே நீயுறங்கு
கற்பகமே கண்ணுறங்கு

எந்தன்கலி தீர்க்க வந்த
என்னுயிரே மன்னவனே
புன்னகையில் முகம்ஒளிர
பூப்போலக் கண்ணுறங்கு
பொன்போல நீயுறங்கு
பெட்டகமே கண்ணுறங்கு

சின்னத் தமிழ்ச் சொல்லெடுத்து
சித்திரம் போல் தான் கோத்து
முத்து மணிச் சொல்லெடுத்து
முல்லைப் பூப்போல் தான் கோத்து
வண்ணத் தமிழ்ச் சொல்லெடுத்து
வானவில் போல் தான் கோத்து
கன்னித் தமிழ்ச் சொல்கோத்து
கதைகள் சொல்ல வந்தாயோ

வள்ளுவனின் வழியினிலே
வாழ வைக்க வந்தவனோ
கம்பனவன் வழியில் வந்து
காவியங்கள் செய்பவனோ
பாரதியின் வழியில் வந்து
பாட்டிசைக்க வந்தவனோ
முத்தமிழின் காவலனோ
மூவுலகின் மன்னவனோ
செல்லமே நீயுறங்கு
சிட்டுப்போல் கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ


--கவிநயா

பி.கு. எப்பவும் இடற தாலாட்டு போல இல்லாம, இது நானே எழுதினதாக்கும் :)

தூளி படம் வல்லிம்மா வலைல இருந்து சுட்டேன். நன்றி அம்மா!

20 comments:

  1. //என்செல்லமே கண்ணுறங்கு
    சிட்டுப் போல் நீயுறங்கு
    அன்னை நான் தாலாட்ட
    அற்புதமே கண்ணுறங்கு//

    இதை ப‌டிக்க‌ ஆர‌ம்பிச்ச‌துமே லைட்டா தூக்க‌ம் வ‌ருதுங்க‌... நீங்க‌ளே வந்து நேர்ல‌ பாட‌ற‌ மாதிரி இருக்கு...

    //தண்ணிலவு தான் வீச
    வெண்மேகம் தொட்டில் கட்ட
    தென்றலது தவழ்ந்து வந்து
    தேவனுனைத் தழுவி நிற்க
    கண்ணே நீயுறங்கு
    கற்பகமே கண்ணுறங்கு//

    ஆஹா... இங்கே த‌மிழ் விளையாடுகிற‌தே...

    //எந்தன்கலி தீர்க்க வந்த
    என்னுயிரே மன்னவனே
    புன்னகையில் முகம்ஒளிர
    பூப்போலக் கண்ணுறங்கு
    பொன்போல நீயுறங்கு
    பெட்டகமே கண்ணுறங்கு//

    ந‌ல்லா இருக்கு கவிந‌யா...

    //வள்ளுவனின் வழியினிலே
    வாழ வைக்க வந்தவனோ
    கம்பனவன் வழியில் வந்து
    காவியங்கள் செய்பவனோ
    பாரதியின் வழியில் வந்து
    பாட்டிசைக்க வந்தவனோ
    முத்தமிழின் காவலனோ
    மூவுலகின் மன்னவனோ//

    ய‌ப்பா.. சான்ஸே இல்ல‌ங்க‌... ரொம்ப‌ அருமையா எழுதி இருக்கீங்க‌... வ‌ள்ளுவ‌ன், க‌ம்ப‌ன், பார‌தி என்று குறிப்பிட்டு, முத்த‌மிழின் காவ‌ல‌ன், மூவுல‌கின் ம‌ன்ன‌வ‌ன்னு எழுதி இருக்கீங்களே... கை குடுங்க‌... பாராட்டுக்க‌ள்...

    //பி.கு. எப்பவும் இடற தாலாட்டு போல இல்லாம, இது நானே எழுதினதாக்கும் :)//

    அதான்... ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு க‌வி...

    ReplyDelete
  2. //எந்தன்கலி தீர்க்க வந்த
    என்னுயிரே மன்னவனே
    புன்னகையில் முகம்ஒளிர
    பூப்போலக் கண்ணுறங்கு
    பொன்போல நீயுறங்கு
    பெட்டகமே கண்ணுறங்கு//


    அருமையான வரிகள் கவிநயா. மீண்டும் ஒரு அருமையான கவிதை.

    ReplyDelete
  3. மகளாய் இருந்தால்??? :))))))))))) நீண்ட கூந்தலில் வைச்ச குஞ்சலம் ஆடுவதைப் போல் ஆடி, ஆடி நடந்து வரும் பாருங்க, மனசை அள்ளும். தலையின் பூக்கள் சிரிப்பைப் போல் அதுவும் சிரிக்கும். கண்களே சந்திரனைப் போல ஒளி வீசும். மகளுக்கும் ஒரு தாலாட்டு வேண்டும். :)))))))))

    ReplyDelete
  4. வாங்க கோபி :) உங்கள் ரசனை மிக்க பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி :) ஆனா என்ன, நான் பாடினா தூக்கம் வராது, வர்ற தூக்கமும் ஓடிடும் :) வருகைக்கு மிக்க நன்றி கோபி.

    ReplyDelete
  5. //அருமையான வரிகள் கவிநயா. மீண்டும் ஒரு அருமையான கவிதை.//

    வாருங்கள் கைலாஷி. மிக்க நன்றி :)

    ReplyDelete
  6. //மகளாய் இருந்தால்??? :))))))))))) நீண்ட கூந்தலில் வைச்ச குஞ்சலம் ஆடுவதைப் போல் ஆடி, ஆடி நடந்து வரும் பாருங்க, மனசை அள்ளும். தலையின் பூக்கள் சிரிப்பைப் போல் அதுவும் சிரிக்கும். கண்களே சந்திரனைப் போல ஒளி வீசும்.//

    கிட்டத்தட்ட நீங்களே ஒரு கவிதை எழுதிட்டீங்களே... அப்படியே முடிச்சிடுங்க கீதாம்மா! :)

    //மகளுக்கும் ஒரு தாலாட்டு வேண்டும். :)))))))))//

    ஆகட்டும் அம்மா. மண்டபத்துல ஆர்டர் குடுத்தாச்! வந்தோன்ன சொல்றேன் :)))

    வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  7. //ஆஹா...அருமை!//

    மிக்க நன்றி மீனா!

    ReplyDelete
  8. இப்படி ஒரு அழகான ஆராரோ ஆரிராரோ பாட்டு பாடிய
    கவிதாயினி கவி நயாவுக்கு தமிழ் பல்கலைக்கழகம் ஒரு டாக்டரேட்
    தரவேண்டும்.

    பாட்டினைக்கேட்க யூ ட்யூப் செல்க:

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  9. //இப்படி ஒரு அழகான ஆராரோ ஆரிராரோ பாட்டு பாடிய
    கவிதாயினி கவி நயாவுக்கு தமிழ் பல்கலைக்கழகம் ஒரு டாக்டரேட்
    தரவேண்டும்.//

    ஆஹா, கிண்டல்தானே தாத்தா :)

    யூட்யூப்ல "pichuperan" போட்டு தேடி பார்த்தேன், கிடைக்கலை. சுட்டி வேணும்! நன்றி தாத்தா.

    ReplyDelete
  10. எத்தனை அழகான தாலாட்டு. வரிகளில் மயங்கிய படியே வாசித்து முடிக்கையில் வந்ததே தூக்கம்.

    அருமை. என் பாராட்டுக்கள் கவிநயா.

    ReplyDelete
  11. இன்னொமொரு ரத்தினம்.
    தாங்கீஸ்!

    ReplyDelete
  12. //எத்தனை அழகான தாலாட்டு. வரிகளில் மயங்கிய படியே வாசித்து முடிக்கையில் வந்ததே தூக்கம்.//

    பரவாயில்லை, வேற எதாவது வாசிக்கும்போது தூக்கம் வந்தாதான் கஷ்டம். இது தாலாட்டுதானே... :)

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  13. //இன்னொமொரு ரத்தினம்.
    தாங்கீஸ்!//

    ரத்தினச் சுருக்கமான ரசனைக்கு மிக்க நன்றி திவா! :)

    ReplyDelete
  14. சூப்பர் கவிதைங்க..

    அன்புடன்,
    அம்மு.

    ReplyDelete
  15. //சூப்பர் கவிதைங்க..//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அம்மு :)

    ReplyDelete
  16. அற்புதமான இந்த தாலாட்டு பாட்டு பாரம்பரிய ராகமான
    நீலாம்பரியில். மீனாட்சி பாட்டி பாடுகிறாள். கேளுங்கள்.
    http://menakasury.blogspot.com

    இதை முதலிலே ஒரு ஃபோல்க் மெட்டில் போட்டேன். அது
    அவ்வளவு நிலைத்து ரசிக்க முடியவில்லை. என்ன இருந்தாலும்
    தமிழ் இசைக்கு ஈடு இருக்க இயலுமா ?

    கவி நயாவின் நண்பர்கள் யாவரும் பாடி ரசிக்கவேண்டிய ஒன்று.
    கவின்யாவுக்கு மீனாட்சி பாட்டியின் ஆசிகள்.

    மீ.பா.

    ReplyDelete
  17. தாலாட்டு பாடிய தாய் அவளுக்கு நன்றி. :-)

    ReplyDelete
  18. //நீலாம்பரியில். மீனாட்சி பாட்டி பாடுகிறாள்.//

    கேட்டேன் பாட்டி, அலுவலகத்தில் தூக்கம் சொக்கிடுச்சு :)

    //கவின்யாவுக்கு மீனாட்சி பாட்டியின் ஆசிகள்.//

    மிக்க மகிழ்ச்சியுடன் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் நன்றிகளும்.

    ReplyDelete
  19. //தாலாட்டு பாடிய தாய் அவளுக்கு நன்றி. :-)//

    வருக குமரா. ரொம்ப நாளானாப்ல இருக்கு உங்களை பார்த்து :) வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)