Sunday, August 30, 2009

நினைவுகள்...




உன்நினைவு மகரந்தங்களை
சேமித்து வைத்துக் கொண்டு
மலராமல் காத்திருக்கிறது
என் இதயத் தாமரை -
உன் வருகைக்கென.

--

இலக்கை அடைய எத்தனித்து,
முடியாமல்,
உன் நினைவுகளில்
தடுக்கித் தடுக்கி
விழுந்து கொண்டேயிருக்கிறது
மனசு.

--


நிலவொளியை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
சகோர பறவையைப் போல
உன் நினைவுகளை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
நான்.

--

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/leo-avelon/467505613/sizes/m/

Sunday, August 23, 2009

மலரும் மனமும்

“வாங்கக்கா… பூ பறிக்கவா?”, வெள்ளைச் சிரிப்புடன் கேட்ட உஷாவிடம், “ஆமா உஷா. நீ வேலை இருந்தா பாரு. நாம்பாட்டுக்கு பறிச்சிட்டு கெளம்பறேன்…”, என்றாள் சுந்தரி.

“ஆமாங்க்கா. அடுப்புல குக்கர் வச்சிருக்கேன். தோ வர்றேன்…”, சுவாதீனமாக சொல்லியபடி உள்ளே சென்று விட்டாள் உஷா.

தோட்டத்தில் முல்லைக் கொடிக்குப் பக்கத்தில் நிரந்தரமாக சாற்றி வைத்திருந்த ஏணியில் ஏறியும், கீழே நின்றும், பலவிதமாக எட்டி, முடிந்த அளவு பறித்து முடித்த பின், “வரேன் உஷா”, என்று குரல் கொடுத்தபடி கிளம்பிய போது, உஷாவின் ஐந்து வயது வாண்டு அக்ஷயா ஓடி வந்தது… “நானும் வரேன் ஆண்ட்டி”, என்று.

வீட்டுக்குள் இவள் நுழையும் போதே கணவன் குமாரும் நுழைந்தான். “ம்..ம்…”, என்று மூச்சை இழுத்து வாசனையை அனுபவித்தான்.

“நீங்க ட்ரஸ் மாத்துங்க. அதுக்குள்ள காஃபி போட்டுர்றேன்…”, பூவை மேசை மீது வைத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

இதற்குள் உஷாவின் வாண்டு அக்ஷயாவும், சுந்தரியின் வாண்டு மதுவும், வரவேற்பறை முழுக்க விளையாட்டு சாமான்களை கடை பரப்பியிருந்தார்கள். அறைக்குள் சென்று கணவனின் கையில் காஃபியை கொடுத்தாள்.

“பூ நெறய பூத்திருக்கு போலருக்கே…”, குமார் பேச்சுக் கொடுத்தான்.

“ஆமாங்க. கட்டறதுக்குள்ள விடிஞ்சிரும். அவ்ளோ இருக்கு”, குரலில் வெளிப்படையாக அலுப்பு தெரிந்தாலும், உள்ளூர இருந்த பெருமையும் சேர்ந்துதான் ஒலித்தது.

“உஷாகிட்ட கொஞ்சம் குடுத்திருக்கலாம்ல? நீயும் இத்தனை காலமா பறிக்கிற, அவங்களுக்கு ஒரு முறை கூட குடுக்கல. அவங்க ஏதும் நினைக்க மாட்டாங்களா?”

“நல்லாருக்கே… நாம வச்சு தண்ணி ஊத்தி கஷ்டப்பட்டு வளர்க்கிறது. நம்ம நேரம், கொடி பூரா காம்பவுண்டு சுவரை தாண்டி, பக்கத்து வீட்டுக்குள்ள போய் பூத்துக் குலுங்குது. எனக்கு பூன்னா உயிர்னு உங்களுக்கு தெரியாதா… அதெப்படி குடுப்பேன்?”

குமார் எதுவும் பதில் சொல்லும் முன் மது ஓடி வந்தது.

“அம்மா, என்னோட புது டாக்டர் செட் எங்கே? நானும் அக்ஷயாவும் விளையாட போறோம்”, என்றதும், உள்ளே இருந்த செட்டை எடுத்துக் கொடுத்து விட்டு அவளும் வந்து பூ தொடுக்க ஆரம்பித்தாள்.

பெரியவன் ட்யூஷன் போயிருக்கிறான். உஷாவுக்கு அக்ஷயாதான் பெரியவள். ஒன்றரை வயதில் இன்னொரு குட்டி பையன் இருக்கிறான், அவளுக்கு. அவள் கணவன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவதால், இரண்டு சின்னக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு திண்டாடுவாள். சுந்தரி அவ்வப்போது குழந்தையையும் பார்த்துக் கொள்வாள். “நீங்க இல்லைன்னா நான் என்ன செய்வேனோ தெரியலைக்கா”, என்பாள் உஷா, நன்றியுடன்.

திடீரென்று சப்தம் பெரிதாகவும், கவனம் சிதற, “என்ன சண்டை அங்கே?” என்று விசாரித்தாள்.

“ஆண்ட்டி, இனிமே நான் மதுவோட விளையாட மாட்டேன். அவ டாக்டர் செட்டை ஷேர் பண்ண மாட்டேங்கிறா. அவளே எப்பவும் டாக்டரா இருக்கா”, அழுகை கலந்த குரலில் குற்றப் பத்திரிகை வாசித்தாள், அக்ஷயா.

“மதூ! ஷேர் பண்ணிதான் விளையாடணும்னு தெரியாதா உனக்கு? அக்ஷயா உன் ப்ரெண்டுதானே? ஸ்டெதாஸ்கோப்பை அவகிட்ட குடு. அவ கொஞ்ச நேரம் டாக்டரா இருக்கட்டும்!”, கண்டிப்பான குரலில் அறிவித்தாள்.

“ஏம்மா, உஷா ஆண்ட்டியும் உன் ப்ரெண்டுதானே? நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே?”

பூ தொடுத்துக் கொண்டிருந்த கை அப்படியே உறைந்தது.

சுதாரித்துக் கொண்டு, “சரி.. சரி.. பெரிய மனுஷி மாதிரி என்கூட வாதம் பண்ணாம ஒழுங்கா ஷேர் பண்ணி விளையாடு… அம்மா வேலை முடிச்சதும் அக்ஷயாவை அவ வீட்டில் விட்டுட்டு வரலாம்…”, உறுத்தும் மனசுடன் விறுவிறுவென்று பூவைக் கட்டி முடித்தாள்.

அஷயாவை விடப் போகையில், உஷாவின் கையில் அந்த பூப்பந்தை வைத்த போது, அவள் முகம் பூவுடன் போட்டி போட்டுக் கொண்டு அதை விட அதிகமாய் மலர்ந்தது.

“அக்கா… எல்லாமே எனக்கா? இவ்வளவு கஷ்டப்பட்டு பறிச்சு, இவ்வளவு நேரம் கட்டி, எனக்கே கொடுத்திட்டீங்களே… உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? இந்தாங்க… நீங்க கொஞ்சமாவது வச்சுக்கோங்க”, சந்தோஷத்தில் படபடவென்று பேசிக் கொண்டே, பாதியை வெட்டி அவளிடமே கொடுத்தாள், உஷா.

தோழியின் கள்ளமில்லா உள்ளத்தை கண்டு கொஞ்சம் நாணினாலும்,
சுந்தரிக்கு பூவோடு மனசும் சேர்ந்து இன்றைக்கு அதிகமாகவே மணத்தது!


--கவிநயா

Wednesday, August 19, 2009

பிள்ளையாரே பிள்ளையாரே!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

விக்ன விநாயகன் வினைகளைத் தீர்க்கட்டும்!
நற்குண நாயகன் நானிலத்தைக் காக்கட்டும்!


பிள்ளையாரே பிள்ளையாரே - மிக
சுட்டித்தனம் கொண்ட எங்கள் பிள்ளையாரே!
பிள்ளையாரே பிள்ளையாரே - இந்த
பிள்ளைகளை காக்க வேணும் பிள்ளையாரே!

உலகத்தை சுற்றச் சொன்னால்
பெற்றவரை சுற்றிடுவாய்!
பாரதத்தை எழுதச் சொன்னால்
தந்தம்கொண்டு எழுதிடுவாய்!

அவல்பொரி கடலை யெல்லாம்
அளவின்றி தின்றிடுவாய்!
மோதகத்தைப் பார்த்து விட்டால்
மோகம்மிகக் கொண்டிடுவாய்!

பார்வ தியின் தலைமகனே!
பார்புகழும் கோமகனே!
கூர் மதியைக் கொண்டவனே!
கொஞ்சுதமிழ் நாயகனே!

மூஞ்சூறில் ஏறி வந்து
மூவுலகும் காப்பவனே!
நா மணக்க பாடுகிறோம்
நல்லவழி காட்டிடுவாய்!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.mazhalaigal.com/images/issues/mgl0903/im0903-06_pillaiyar.jpg

Sunday, August 16, 2009

கடவுளை பார்க்கணுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார், "யார் வேண்டுமானாலும் இறைவனைப் பார்க்கலாம், பேசலாம்", என்று. அதற்கு என்ன தகுதி வேணுமாம்? அவரே அதையும் சொல்லுவார் கேளுங்கள்...

முதலில் இறைவனை அறியணும் என்கிற ஏக்கம் வேணும்
பிறகு உள்ளத்தால் எல்லாவற்றையும் துறக்க வேணும்

உலக இன்பங்களில் சிறிதளவேனும் பற்று இருக்கும் வரை இறைவனைக் காண முடியாது என்கிறார். நூலில் ஒரு சின்ன பிசிறு இருந்தாலும் அதனை ஊசியில் கோர்க்க முடியாது. அதைப் போலத்தான் ஒரு சின்ன உலகப் பற்று இருந்தாலும் இறைவன் வர மாட்டான்.

தாய் ஒருத்தி அடுக்களையில் வேலையாக இருக்கிறாள். குழந்தையை சில விளையாட்டு சாமான்களுடன் விளையாட விட்டு விட்டு, தன் வேலையை கவனித்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையும் சிறிது நேரம் நன்றாக விளையாடுகிறது. பிறகு அம்மாவுக்காக அழ ஆரம்பிக்கிறது. தாய் குழந்தையின் குட்டி அக்காவை அனுப்பி வேடிக்கை காட்ட செய்கிறாள். கொஞ்சம் அமைதி ஆகிறது குழந்தை. திரும்பவும் அம்மா வேண்டுமென அழும் போது, குழந்தையின் அண்ணன் போய் அதனுடன் விளையாடுகிறான். மறுபடியும் கொஞ்சம் அமைதி ஆகிறது. பிறகு மறுபடியும் அழும் போது குழந்தையின் தந்தை பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இப்படி ஒவ்வொருவராக போகவும் அவர்களோடு விளையாடிக் கொண்டு அமைதி அடையும் குழந்தை, கடைசியில், அம்மாதான் வேண்டுமென அழத் தொடங்குகிறது. அந்த சமயத்தில் எந்த பொம்மையைக் கொடுத்தாலும் தூக்கி எறிகிறது. அக்கா, அண்ணா, அப்பா, என யாரிடமும் வராமல், முகம் சிவக்க விடாமல் அழுகிறது. அப்போதுதான் அதன் அம்மா, கை வேலையை அப்படியே போட்டு விட்டு ஓடோடி வருகிறாள். குழந்தையை வாரி அணைத்துக் கொள்கிறாள்.

அதே போலத்தான், இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் விளையாடுவதற்கு ஒவ்வொரு பொம்மையாக அனுப்பி கொண்டே இருக்கிறான். நாமும் பொம்மைகளில் லயித்துப் போய், அவனை மறந்து விட்டு, ஆட்டத்தில் குறியாக இருக்கிறோம். குழந்தை எப்படியாவது விளையாடும் வரை, சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று அம்மாவும் வருவதில்லை. நாம் விளையாட்டில் 'பிஸி'யாக இருக்கும் வரை இறைவனும் வருவதில்லை.

அதற்காக, எல்லாவற்றையும் துறந்து, இல்வாழ்க்கையையும் துறந்து துறவியாகச் சொல்லவில்லை, ஸ்ரீராமகிருஷ்ணர். உலக இன்பங்களில் நாட்டத்தை துறக்க வேண்டும் என்றே சொல்கிறார். 'கடமையை மட்டும் செய்; பலன்களில் பற்று வைக்காதே' என்கிற கீதை வாக்கியமும் இதைத்தான் குறிக்கிறது. நமக்கு எத்தனை வேலைகள், கடமைகள் இருந்தாலும், இறைவனை ஒரு கையால் பற்றிக் கொண்டு, அவனே நம்மை இயக்குபவன் என உணர்ந்து, மறு கையால் நம் கடமைகளை செய்ய வேண்டும்.

அந்தக் கால வீடுகளில் (எங்க ஊர்ப்பக்கம் இப்பவும்) பெரிய பெரிய தூண்கள் இருக்கும். (அவை அழுக்காகக் கூடாதென்று அழகாக சேலை வேறு கட்டி வைத்திருப்பார்கள் :). சின்ன வயதில் அந்த தூணைப் பிடித்துக் கொண்டு அதனைச் சுற்றி சுற்றி வருவது பிடித்தமான விளையாட்டு. அதைப் போலத்தான் இறைவனை பிடித்துக் கொண்டு, அவனை ஆதாரமாக வைத்துக் கொண்டு, நம் காரியங்களை செய்ய வேண்டும்.

சுலபமில்லைதான். அதற்கான முயற்சியும் பயிற்சியும் ஏக்கமும் பக்தியும் வர இறைவன் அருளட்டும்! கேளுங்கள்... கொடுக்கப்படும்!

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்.


அன்புடன்
கவிநயா

Friday, August 14, 2009

பாரதம் வாழியவே!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!


வாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே!
வாழிய எங்களின் மணித்திரு நாடு வாழிய வாழியவே!

கல்வியில் சிறந்தே கலைகளில் செறிந்தே பாரதம் வாழியவே!
அன்பினில் நிறைந்தே அகத்தினில் மலர்ந்தே வாழிய வாழியவே!

ஆல்விழு தெனவே அகிலம் தாங்கிட பாரதம் வாழியவே!
வேல்விழி மாதரும் சரிநிக ரெனவே வாழிய வாழியவே!

போரினை விடுத்தே பாரினைக் காத்திட பாரதம் வாழியவே!
வீரத் துடன்வி வேகமும் சேர்ந்திட வாழிய வாழியவே!

விஞ்ஞானத் துடன்மெய் ஞானமும்ஒளிர்ந்திட பாரதம் வாழியவே!
அஞ்ஞானம் எனும் இருளகற்றி என்றும் வாழிய வாழியவே!

கவிஞரும் கலைஞரும் அறிஞரும் போற்றிட பாரதம் வாழியவே!
புவியினர் யாவரும் புகழ்ந்திட மகிழ்ந்திட வாழிய வாழியவே!!


--கவிநயா

Thursday, August 13, 2009

குட்டிக் கவிதைப் பக்கம்

அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை எப்போதும்
கண்ணீரில் மிதப்பதாலோ?

***

பட்டப் பகலில்
சுற்றுப்புறம் பார்க்காமல்
கட்டிக் கொள்ளத் துடிக்கும்
புது மணக் கணவன் போல்
விடாமல் என்னைத் துரத்துகிறது
என்னுடைய பகல் தூக்கம்!

***

இன்பம் என்ன துன்பம் என்ன
இதுதான் உலக வாழ்க்கையடி
கண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு
பழகிப் போன பாஷையடி
எது வந்தாலும் எது போனாலும்
கலங்கா மனமே வேண்டுமடி
முயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்
வாழ்க்கை உந்தன் கையிலடி!

***

வண்ணம்பல குழைத்து வைத்து
வரிசையாகக் கோர்த் தெடுத்து
வாகாய் இழுத்து விட்டானோ?
வான வில்லாய் நட்டானோ?

***

நான் உன்னை அர்ச்சிக்கும் பூக்களை எல்லாம்
அவை உன் பாதம் தொடும் முன்னேயே
காற்று தட்டிச் சென்று விடுவதைப்
பார்க்கும் போதுதான் தோன்றியது –
என் வேண்டுதல்களும் இப்படித்தான்
உன்னை வந்து
சேராமலே போய்விடுகின்றனவோ என்று…

***

அறிவாயா என் ஆதங்கம்?
பரிவாயா உன் அன்பாலே?
வருவாயா என் கனவிலேனும்?
தருவாயா உன் தரிசனத்தை?

***

நடக்கும் நன்மை நம்பி விடு!
இறக்கும் துயரம் இயம்பி விடு!
கனக்கும் சுமையை இறக்கி விடு!
விடியல் காண விரைந்து விடு!

***

பேசும் உலகம் உன் பெயரை...
பாடும் என்றும் உன் புகழை...
நாடி வரும் நல் வாய்ப்புகளை
நழுவ விடாமல் நீ முடித்தால்!

***

மனம்…

மனம் கணமும் நில்லாது
நலம் எதுவும் சொல்லாது
மதுவைப் போல மயங்க வைக்கும்
தெளிவைத் தூரத் தள்ளி வைக்கும்
குரங்கைப் போலக் குதித்திருக்கும்
குழம்ப வைத்து மீன் பிடிக்கும்!

***

நட்சத்திரங்கள்

கோலமிடச் சென்ற பெண்
கோபம் கொண்டு சென்றதால்
அரைகுறையாய் நின்று போன
அழகான புள்ளிகள்!


--கவிநயா

(குட்டிக் கவிதைகளை இனி நீங்கள் வலைப்பூவின் வலது பக்கத்தில் வாசித்து மகிழலாம்)

Monday, August 10, 2009

விழுங்குதல்...

"கண்ணை மூடிக் கொண்டு
ஒரே மடக்கில் விழுங்கிவிடு"
முதன் முதலாய்
மாத்திரை விழுங்கியபோது
கிடைத்த அறிவுரை.

அன்று தொடங்கி
மாத்திரை மட்டுமன்றி
மற்றதும் விழுங்கக் கற்றாயிற்று.
கோபங்களை, தாபங்களை
அழுகைகளை, அவமானங்களை
இப்படி...

அதிகமாய் விழுங்குவதென்னவோ
வார்த்தைகளைத்தான்.

கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்
தாக்கிக் காயப்படுத்துகின்ற
பிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல
பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்
என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான்
விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்...

சப்தமில்லாமல்,
வேதனை காட்டாமல்,
முகஞ் சுளிக்காமல்,
ஊசிகளை விழுங்கும்
வாழைப்பழம் போல்...


--கவிநயா

Monday, August 3, 2009

விருது வாங்க வாரீகளா?

அன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மானிக்கிறதுதான்! ஒவ்வொருத்தரும் நிறைய பேருக்கு பகிர்ந்தளிப்பதால், இதற்குள் எல்லாருமே வாங்கியிருப்பாங்கன்னு தோணுது. ஆணி ரொம்ப ரொம்ப அதிகமா இருப்பதால், மற்ற வலைப்பூக்களுக்கு போய் வாங்கியவங்க, வாங்காதவங்க யாருன்னு பார்க்கவும் முடியல. அதனால, மனசில் தோணறவங்களுக்கு இந்த விருதுகளை பகிர்ந்து அளிக்கிறேன். தவறா நினைக்காம அன்புடன் அங்கீகரிக்கணும்னு கேட்டுக்கறேன்.

முதலில் "This blogger is my best friend" விருது. இதனை எனக்கு அன்புடன் அளித்தவர், தோழி ஜெஸ்வந்தி. மிக்க நன்றி ஜெஸ்வந்தி!




இந்த விருதிற்கான விதிமுறைகள்:

1. நீங்கள் இதனை எத்தனை பேருக்கும் அனுப்பலாம்.
2. இதனுடன் பரிசு வேண்டுமானாலும் சேர்த்து அனுப்பலாம்.
3. நீங்கள் இவர்களை ஏன் தெரிவு செய்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாக சொல்லி விட வேண்டும் .
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப் படக் கூடாது. அப்படி நீக்குவதானால் உரிய விளக்கம் அளிக்கப் பட வேண்டும்.

நான் இந்த விருதினை அளிக்கும் நண்பர்கள்:

ராமலக்ஷ்மி - பதிவுலகிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தவறாமல் ஊக்கம் அளிப்பவர். சமூக அக்கறை கொண்ட இவரது எழுத்துகளும், இவருடைய புகைப்படங்களும், குறிப்பாக அவற்றுக்கு இவர் எழுதும் comments-ம் ரொம்ப பிடிக்கும்.
மதுரையம்பதி - இவருடைய பதிவுகள், கதைகள், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கான விளக்கங்கள் மிகவும் பிடிக்கும்.
கண்ணன் - இவர் ஒவ்வொரு பாடலையும், செய்தியையும், கருத்தையும், அலசி ஆராய்ந்து, உவமான உவமேயங்களுடன் சுவாரஸ்யமாக விளக்குவார். (இவரை கேயாரெஸ்-னு சொன்னாதான் நிறைய பேருக்கு தெரியும் :)
குமரன் - இவருடைய தமிழ் அறிவும், சமஸ்கிருத அறிவும், அவற்றைக் கொண்டு சங்கப் பாடல்கள், ஸ்லோகங்கள் முதற்கொண்டு அழகாய் விளக்கும் திறனும் என்னை வியக்க வைப்பவை.

அடுத்ததாக "Interesting Blog Award". எதிர்பாராவிதமாக தோழி அமுதாவிடம் இருந்து இந்த விருது கிடைத்தது :) நன்றி அமுதா!




இதனை குறைந்தது ஆறு பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம். (மற்றவங்க கோச்சுக்காதீங்கப்பா!)

கீதாம்மா - நடமாடும் கலைக் களஞ்சியம். சில பேருக்கு பாட்டீ; சில சமயம் பாப்பா :)
கபீரன்பன் அவர்கள் - ஒரு கருத்தை சொல்வதற்கு, அதற்கு பொருத்தமாக பல்வேறு செய்திகளை தொகுத்து வெகு அழகாக சொல்லுவார்.
கைலாஷி அவர்கள் - இவருடைய புகைப்படங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. கூடவே அழகான பொருத்தமான பாடல்களை இலக்கியங்களிலிருந்து எடுத்துத் தருவார்.
வல்லிம்மா - ரொம்ப ச்வீட்டானவர். முக்கியமான செய்திகளை இயல்பாக சொல்லி விடுவார்.
ஜீவி ஐயா - இவருடைய கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனசை அள்ளும் இயல்பான நடை. அழகான கதாபாத்திரங்கள்.
மீனா சங்கரன் - ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் நகைச்சுவையில் கலக்கும் எங்க ஊர் தோழி. இவர் பாடினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்.


அன்புடன்
கவிநயா