Sunday, May 31, 2009

புது வகை பட்டாம்பூச்சி !




பட்டாம்பூச்சியில் பல வகை இருக்கே, தெரியுமா, உங்களுக்கு? அச்சோ, அறிவியல் பாடமொண்ணும் இல்லீங்க! சொல்றேன் கேளுங்க...

நம்ம தோட்டத்துல பறந்து திரியற வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பத்தி உங்களுக்கே தெரியுமே! அது ஒரு வகை. அப்புறம்.... நீங்க காதலில் விழுந்தவரா? ம்... அப்படின்னா உங்க மறுபாதியை பார்க்கிறப்பல்லாம்... இல்லை, இல்லை, நினைக்கிறப்ப கூட, வயத்துக்குள்ள படபடக்குமாமே, (எல்லாம் கேள்வி ஞானந்தாங்க :) அது ஒரு வகை. அப்புறம்... அழகான பெண்கள் அவங்க உள்ளம் கவர்ந்தவரை பார்க்கும் போது இமைகள்ல படபடக்குமே, அது ஒரு வகை... ம்... அப்புறம்... இன்னொண்ணு கூட இருக்குங்க - பசி காதை அடைக்கும் போது நம்ம கண்ல பறக்குமே, அதுவும் கூடத் தாங்க!

ஆனா இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு வலைப் பூவா பறக்கிற இந்த பட்டாம்பூச்சி முற்றிலும் புது வகை!

பட்டாம்பூச்சின்னு சொன்னதும் பட்டுப் புடவை நினைவு வராம இருக்காது (எனக்கு!). அதே போல பட்டுப் புடவை கட்டும் போதெல்லாம் பட்டாம்பூச்சியும் நினைவு வந்து வயத்துல சங்கடம் பண்ணும் :( பட்டு புடவை வாங்கியே ரொம்ப வருஷம் ஆச்சுது இப்போ. ஆனா இப்ப 'அஹிம்சை' பட்டுன்னு வருதாமே, பூச்சிகளை துன்புறுத்தாம செய்யற பட்டாம். அதை கேள்விப்பட்ட போது கொஞ்சம் ஆறுதல்!

நம்ம (வலை)பூவுக்கெல்லாம் பட்டாம்பூச்சி வரவே வராது, அப்படிங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோட இருந்தப்ப, அந்த நம்பிக்கையை அசைச்சுட்டாங்க ரெண்டு பேர்! ஒருத்தர் யூத் விகடன் புகழ் ராமலக்ஷ்மி. முத்துச்சரமா பதிவுகளை தந்து பெரும் வாசகர் வட்டத்தை சம்பாதிச்சு வச்சிருக்கிற இவங்களுக்கு அறிமுகம் தேவையில்லை :) அவங்க பட்டாம்பூச்சி விருதை பலருக்கும் பகிர்ந்து கொடுத்ததில், நானும் அடக்கம்.

இன்னொருத்தர், 'வண்ணப் பட கைலாஷி' அப்படின்னு நம்ம அ.உ.ஆ.சூ. அவர்களால அன்பா அழைக்கப்பட்டவர்தான். பல கோவில்களிலிருந்தும் படங்களை மிக சிரத்தையா சேகரிச்சு, தொகுத்து, தன் வலைப்பூக்கள்ல ஆன்மீக அன்பர்களின் மனம் குளிர வழங்கிட்டு வரார். அவர்தான் எனக்கும் இந்த பட்டாம்பூச்சி விருதை குடுத்திருக்கார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

இந்த விருது அநேகமா எல்லாரும் வாங்கிட்டாங்க, நான் நினைச்சிருக்க மூணு பேரும் இன்னும் வாங்கலைன்னு நினைக்கிறேன். பட்டாம்பூச்சி விருது பெறும் அதிர்ஷ்டசாலிகள் யாரெனில்...

அன்புத்தம்பி கோபி என்ற கோபிநாத். இவர் இப்பல்லாம் ரொம்ப எழுதலைன்னாலும், எழுதறப்ப கலக்கலா எழுதுவார். தொடர்ந்து இங்கே வந்து பொறுமையா (நான் எழுதறதைக் கூட) படிச்சு தவறாம பின்னூட்டம் இடறவங்கள்ல இவரும் ஒருத்தர்! அதுக்காகவே இவருக்கு விருது கொடுக்கலாம்! 'மழை' தொடர்ல, அக்கா குழந்தையின் மழலை பற்றி கவிதை போல எழுதியிருப்பார். ஆனா தொடர்தான் தொடராம நிக்குது. சீக்கிரம் எழுதுங்க கோபி!

அடுத்ததா... ஜெஸ்வந்தி. புத்தம் புது பதிவர். இவங்களோட "என்ன தவம் செய்தேன்" என்கிற கதையில் அழகான (மனசுள்ள) கதாநாயகனை அறிமுகப்படுத்தியிருக்காங்க. இயல்பான நடையில் அமைந்த இந்தக் கதை உண்மைக் கதைன்னு சொல்றாங்க! இவங்க பெயரும் எனக்கு பிடிச்சது :) தொடர்ந்து நிறைய படைப்புகளை தாங்க ஜெஸ்வந்தி!

last but not least... எங்க ஊர்க்காரர், சமீபத்தில் தமிழ்மண நட்சத்திரமா ஜொலித்த நாகு. இவரும் அருமையாய் எழுதுவார் என்பதோடு, பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் :) நான் நிறைய எழுத ஆரம்பிச்சதுக்கு இவரும் ஒரு காரணம். (ஐயோ பாவம், அவரை அடிக்கப் போகாதீங்க ப்ளீஸ் :) ஆரம்ப காலங்களில் ரொம்ப ஊக்குவித்தவர், இப்பல்லாம் ஒண்ணுமே விக்கிறதில்ல :( இருந்தாலும் என்றைக்கும் அவருக்கு மனமார்ந்த நன்றிகளுடன்...

மூவருக்கும் வாழ்த்துகள்!



நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

***

நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!

முதல் படத்துக்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/File:Cairns_birdwing_-_melbourne_zoo.jpg

Friday, May 22, 2009

என்னைக் கொஞ்சம் கவனிங்களேன்!

வணக்கம். நல்லா இருக்கீங்களா? ஹ்ம்... யாருடா இதுன்னு நீங்க புருவம் ஒசத்தி யோசிக்கிறது புரியுதுங்க. நான் வேற யாருமில்லை, நம்மூர்ல அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைஞ்சிருக்கிற குப்பைதான்! என்னைய வைக்கிற எடத்துல வச்சாதானே நீங்கள்லாம் நல்லா இருக்க முடியும்? அதுக்குதான் அந்தக் கேள்வி. நீங்க கூட "போட்டு வாங்கறது"ன்னு சொல்வீங்களே, அந்த ரகம்!

நம்ம ஊர்க்காரங்க அதிபுத்திசாலிங்கன்னு நமக்கெல்லாம் ரொம்பத்தான் பெருமை! ஆனா அதுக்குத் தகுந்தாப்ல நடந்துக்கதான் காணோம்.

மேல் நாடுகள்ல இப்பதான் புதுசா கண்டுபிடிச்ச மாதிரி "Reuse and Recycle" னு சொல்லி பிரசாரம் பண்ணிக்கிட்டிருக்காங்களே! ஆனா, நம்ம ஊர்லதான் ஆரம்பத்துல இருந்தே சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கிற வகையில இப்படில்லாம் பெயர் வைக்காமலேயே எல்லாத்தையும் reuse-ம், recycle-ம், பண்ணிக்கிட்டிருந்தீங்க.

காய்கறி வாங்க, மளிகை சாமான் வாங்க, இதுக்கெல்லாம் கையோட பையோ, கூடையோ எடுத்துக்கிட்டு போவீங்களே, நினைவிருக்கா? திரும்பத் திரும்ப பயன்படுத்தற பாத்திரம் பண்டங்கள், விருந்தாளி வந்தா வாழை இலையில சாப்பாடு, இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களை இப்ப மறந்துட்டீங்க! அப்பல்லாம் பூ வாங்கினாக் கூட, வாழை இலையில வச்சு நார்ல கட்டித்தான் தருவாங்க. இப்ப? எங்க பாத்தாலும் "carry bag"-ன் ஆட்சிதான்.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா, எதை எதைத்தான் மேல் நாட்டுக்காரங்ககிட்ட இருந்து காப்பி அடிக்கிறதுன்னு வரைமுறையே இல்லாம போச்சு. எங்கே போனாலும் ப்ளாஸ்டிக் டம்ளர்களும், தட்டுகளும், பைகளும், மற்ற குப்பைகளும் ரோடெல்லாம் இறைஞ்சு கிடக்கு.

குறைஞ்சது என்னை எனக்குரிய இடத்திலாவது வைங்க. குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துங்க. பல சமயங்கள்ல என்னை சரியான இடத்துல போடணும்னு நினைக்கிறவங்க கூட, குப்பைத் தொட்டி இல்லாததால, கண்ட இடத்துலதான் எறியறாங்க.

சில சின்ன கிராமங்கள்ல கூட "மக்கும் குப்பை", "மக்காத குப்பை"ன்னு போட்டு, தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டிகள் இருக்கு. மக்கள் அப்படில்லாம் பிரிச்சு போடறாங்களோ இல்லையோ, அப்படி ஒரு இடமாச்சும் இருக்கு. ஆனா சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல நிறைய பகுதிகள்ல அதுகூட இல்ல. பெரும்பாலும் காலி மனைகள்தான் குப்பைத் தொட்டிகளா இருக்கு. அந்த இடத்துல வீடு வந்தாச்சுன்னா அதுவும் போச்சு.

மேல் நாட்டிலிருந்து பல விஷயங்களையும் காப்பி அடிக்கிறவங்க, அவங்க குட்டிப் பிள்ளைங்க கூட குப்பைகளை உரிய இடத்துல எப்படி போடறாங்கன்னு மட்டும் ஏன் இன்னும் கத்துக்கல? அங்க, ஒரே ஒரு முறை மட்டும் பயன்படற "disposable" நிறைய பயன்படுத்தினாலும், அதை மாத்தற விதமா இப்ப பல முறைகளை கையாள்றாங்க; அப்படி இயலாத சமயம் அந்த பொருட்களை முறையா "recycle" பண்றாங்க. இந்த மாதிரி நல்ல விஷயங்களையும் நீங்க கத்துக்கலாமே?

பெரிய பெரிய விஷயமெல்லாம் செய்ய வேண்டியதுதான். ஆனா இதைப் போல அடிப்படை விஷயங்கள் முக்கியமில்லையா? இதைக் கவனிப்பார் யார்???

Monday, May 18, 2009

அம்மாவின் கல்யாணம், ஆனந்த வைபோகம்!


நலந்தானே?

வந்தாச்! ஒரு மாசம் நம்மூர் வெயில் வீணாகாம சுத்திட்டு!

புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைப் பயணம், சில மூத்த பதிவர்/அறிஞர்/களின் தரிசனம் கிடைச்சது, இதெல்லாம் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

எல்லாத்துக்கும் மேலா, என் அம்மாவுடைய கல்யாணம் பார்க்கக் கிடைச்சது! நான் மதுரை போன சமயம் சித்திரைத் திருவிழா நடந்துக்கிட்டிருந்தது. நமக்கெல்லாம் மீனாக்ஷி திருக்கல்யாணம் பார்க்கக் கிடைக்குமா என்ன, அப்படிங்கிற பெருமூச்சுதான் மனசுக்குள்ள. அது அவளுக்கு கேட்டிருச்சு போல. கொஞ்சமும் எதிர்பாரா விதமா திருக்கல்யாணம் பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு தானா வந்தது. அவ்வளவு பெரிய மேடையை முழுக்க முழுக்கப் பூவாலேயே அலங்கரிச்சிருந்தாங்க. திருமணத்துக்கு வருகை தந்த அவளோட அண்ணன், தம்பதி சமேதரா திருப்பரங்குன்றத்திலிருந்து வந்திருந்த குமரன், மற்றும் பொண்ணு, மாப்பிள்ளை அலங்காரங்களும், பார்க்கப் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி! பொண்ணுங்க ஒவ்வொருத்தருடைய கூந்தல் அலங்காரத்தையும் பார்க்கணுமே :)

இது 'உள்ளேன் ஐயா' பதிவுதான். வலையில முழுசா சிக்கறதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்னு நினைக்கிறேன். அன்பர்கள்/நண்பர்கள் பதிவெல்லாம் உடனே படிக்கலைன்னா கோச்சுக்காதீங்க! மெதுவா வர்றேன்...

அன்புடன்
கவிநயா