Sunday, March 22, 2009

பின்னல்



'அம்மா, அம்மா
என் முடியை உன் போல்
நீளமாக வளர்த்துக்கவா ?'

உற்சாகத் துள்ளலுடன்
ஓடி வந்த மகளைக் கண்டு
நினைவுகள் சற்றே
நகர்ந்தன பின்னோக்கி -

நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
நன்றாக ஊற விட்டு
சிகைக்காய்த் தூளெடுத்து
சிகையெங்கும் பரவ விட்டு
வாசனைப் பொடி போட்டு
வாகாக அலசி விட்டு
சாம்பிராணிப் புகை போட்டு
சந்தனம் போல் மணக்க விட்டு
பாசமுடன் விரல்களினால்
பட்டுப் போல் கோதி விட்டு
அழகாக வகிடெடுத்து
அளவாகப் பிரித்தெடுத்து
அம்மா இடும் பின்னலில்தான்
அம்மம்மா எத்தனை ரகம்!

ஆயிரங் கால் பின்னல்
அழகான ஒற்றைப் பின்னல்
பள்ளிக் கென்றே பக்குவமாய்
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
பின்னாலே பாலம் கட்டும்
பாரமில்லா சைக்கிள் பின்னல்
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
குஞ்சலம் வைத்த பின்னல்...

அம்மாவின் கைத்திறனை
அருமையுடன் நினைத்தபடி
தன் முகத்தைப் பார்த்திருந்த
தளிர் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்:

'வேண்டாம் கண்ணம்மா.
பாப் வெட்டிக் கொண்டால்தான்
பராமரிக்க சுலபம் ', என்று!


--கவிநயா

2004-ல் 'திண்ணை'யில் வெளி வந்தது.

படத்துக்கு நன்றி: http://www.thehindujobs.com/thehindu/mp/2003/04/23/stories/2003042300030200.htm

28 comments:

  1. :-) :-) :-)

    \\'வேண்டாம் கண்ணம்மா.
    பாப் வெட்டிக் கொண்டால்தான்
    பராமரிக்க சுலபம் ', என்று! \\

    ஒரு வேளை அந்த அம்மாவுக்கு தெரிந்த பின்னல்கள் எல்லாம் இந்த அம்மாவுக்கு தெரியவில்லையோ!! ;)

    ReplyDelete
  2. //ஆயிரங் கால் பின்னல்
    அழகான ஒற்றைப் பின்னல்
    பள்ளிக் கென்றே பக்குவமாய்
    மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
    பின்னாலே பாலம் கட்டும்
    பாரமில்லா சைக்கிள் பின்னல்
    கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
    குஞ்சலம் வைத்த பின்னல்...//

    எல்லாப் பின்னலும் பின்னிக் கொண்டிருக்கேன். கூடவே மணிபர்ஸ் பின்னல் என்ற ஒன்றும் உண்டு. அதோட பிச்சோடா, முத்துப் பின்னல், வங்கிப் பின்னல், பிரெஞ்ச் நாட், என்று வித, விதமாய். பூத்தைத்துக் கொண்டு அதோட பள்ளிக்குப் போன அனுபவங்களும் உண்டு.

    //அம்மாவின் கைத்திறனை
    அருமையுடன் நினைத்தபடி
    தன் முகத்தைப் பார்த்திருந்த
    தளிர் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்:

    'வேண்டாம் கண்ணம்மா.
    பாப் வெட்டிக் கொண்டால்தான்
    பராமரிக்க சுலபம் ', என்று! //

    யதார்த்தம், இன்றைக்கு இது தான் பெரும்பாலான வீடுகளில் நடக்கிறது. கோபி சொன்னதும் சரியே, ஒருவேளை அம்மாவுக்குத் தெரியவில்லையோ?? வேலைக்குப் போகும் அம்மாவாய் இருந்தால் கஷ்டம் தானே? :((((

    ReplyDelete
  3. //நினைவுகள் சற்றே
    நகர்ந்தன பின்னோக்கி //

    எனக்கும்...

    //நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
    நன்றாக ஊற விட்டு
    சிகைக்காய்த் தூளெடுத்து
    சிகையெங்கும் பரவ விட்டு
    வாசனைப் பொடி போட்டு
    வாகாக அலசி விட்டு
    சாம்பிராணிப் புகை போட்டு
    சந்தனம் போல் மணக்க விட்டு
    பாசமுடன் விரல்களினால்
    பட்டுப் போல் கோதி விட்டு
    அழகாக வகிடெடுத்து
    அளவாகப் பிரித்தெடுத்து
    அம்மா இடும் பின்னலில்தான்
    அம்மம்மா எத்தனை ரகம்!//

    ஆமாப்பா ஆமாம் போயிற்று அந்தக் காலம்.

    //பாப் வெட்டிக் கொண்டால்தான்
    பராமரிக்க சுலபம்//

    என்று அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்ல நமக்கு நாமே சொல்லிக் கொண்டு விதவிதமாய் அன்று அம்மா பின்னலிட்ட கூந்தலை.. இப்போ சின்னதாய் அடர்தியின்றி போன கூந்தலை.. ஆதங்கமாய் தடவ வைத்து விட்டது கவிதை.

    ReplyDelete
  4. மிக மிக யதார்த்தமான கவிதையொன்று. காலத்தின் கரங்களுக்குள் நாம் தொலைத்த பால்யத்தை நினைவுறுத்தி, பின்னலின் முடிச்சென இட்டது அபாரம் சகோதரி. தொடருங்கள் !

    ReplyDelete
  5. //சாம்பிராணிப் புகை போட்டு
    சந்தனம் போல் மணக்க விட்டு//

    அதெப்படி?:-))

    //'வேண்டாம் கண்ணம்மா.
    பாப் வெட்டிக் கொண்டால்தான்
    பராமரிக்க சுலபம் ', என்று! //

    ஹும்! எப்படி இருந்த பாரம்பரியமெல்லாம் காணாம போச்சு! :-(

    ReplyDelete
  6. " எத்தனை ரகம் !! அம்மம்மா எத்தனை ரகம் !!"

    " என்னடா ! தாத்தா ஒரேடியா இன்னிக்கு குதிச்சு குதிச்சு பாடறாரு ! எலே பிச்சை ! தாத்தாவுக்கு
    சாமி, கீமி வந்துடுச்சான்னு ஓடிப்போய் பாரு. "

    தாத்தா தனக்குள்ளே :


    ஹூம் ! அத்தனையும் இன்றைக்கு பாடல்களிலே தான் !

    இன்றைய பெண்கள் சமுதாயம் தலையை வாரிக்கொள்வதற்குக்கூட நேரம் இல்லைமையால்
    திணறுகிறதே !

    பரவாயில்லை. நவராத்திரி, நோம்பு, போன்ற ப்ண்டிகைகள் அன்று பாரம்பரிய தலை அலங்காரங்கள்
    அட் லீஸ்ட் தமது குழந்தைகளுக்குச் செய்து மகிழும்போதுதான் நம் உள்ளம் பரவசமடைகிறது.

    பேரன் வருகிறான்.

    " ஏ தாத்தா ! சும்மா வள வளான்னு பேசிகினே இருக்காதே ! பாட்டு படிச்சயா !

    ஓ படிச்சேனே !

    எங்கருக்கு ?

    அதான் ! தாத்தாவோட பிளாக்கிலே இருக்கு
    மேனகாசூரி ப்ளாக்ஸ்பாட் காம்.

    தாத்தா ! நீ முதல்லே காமா இரு.
    "
    சரி பேரா..

    subbu thatha.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  7. //ஒரு வேளை அந்த அம்மாவுக்கு தெரிந்த பின்னல்கள் எல்லாம் இந்த அம்மாவுக்கு தெரியவில்லையோ!! ;)//

    அப்படியும் இருக்க நிறையவே வாய்ப்பிருக்கு, கோபி :) வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. //எல்லாப் பின்னலும் பின்னிக் கொண்டிருக்கேன். கூடவே மணிபர்ஸ் பின்னல் என்ற ஒன்றும் உண்டு. அதோட பிச்சோடா, முத்துப் பின்னல், வங்கிப் பின்னல், பிரெஞ்ச் நாட், என்று வித, விதமாய். பூத்தைத்துக் கொண்டு அதோட பள்ளிக்குப் போன அனுபவங்களும் உண்டு.//

    ஆஹா, ஆமாம் கீதாம்மா.ஆனா, முத்துப் பின்னல், வங்கிப் பின்னல்லாம் தெரியாது.. பூ தைச்சுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். பூ வெச்சுக்கவும்தான் :) ஊருக்கு வரும்போதெல்லாம் தலையில முடியை விட பூதான் அதிகம் இருக்கும்!

    //வேலைக்குப் போகும் அம்மாவாய் இருந்தால் கஷ்டம் தானே? :((((//

    அதுவும்தான். அதோடு நான் பார்த்த வரை, சிறுவயதில் நீளக் கூந்தலுக்கு ஆசைப்படும் சிறுமிகள், பெரியவர்களாகும்போது குட்டை கூந்தலையே விரும்பறாங்க :(

    ReplyDelete
  9. //என்று அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்ல நமக்கு நாமே சொல்லிக் கொண்டு விதவிதமாய் அன்று அம்மா பின்னலிட்ட கூந்தலை.. இப்போ சின்னதாய் அடர்தியின்றி போன கூந்தலை.. ஆதங்கமாய் தடவ வைத்து விட்டது கவிதை.//

    நல்லா சொன்னீங்க ராமலக்ஷ்மி.ரொம்பவே சோகமான விஷயம் :(

    ReplyDelete
  10. //மிக மிக யதார்த்தமான கவிதையொன்று. காலத்தின் கரங்களுக்குள் நாம் தொலைத்த பால்யத்தை நினைவுறுத்தி, பின்னலின் முடிச்சென இட்டது அபாரம் சகோதரி. தொடருங்கள் !//

    வருக ரிஷு. ரொம்ப நாளாச்சு பார்த்து... மிக்க நன்றி.

    ReplyDelete
  11. //அதெப்படி?:-))//

    வாங்க தி.வா. இந்த வரி தட்டச்சும்போது உங்க நினைவு வந்ததே! உங்களுக்கு ஆயுசு இருநூறு :) கவிதைகள்ல இப்படி நேரடி போருள் பார்க்கக் கூடாது! சந்தனம் மாதிரி கமகமன்னு வாசனையா இருந்ததுன்னு எடுத்துக்கணும் :) சரியா? :)

    //ஹும்! எப்படி இருந்த பாரம்பரியமெல்லாம் காணாம போச்சு! :-(//

    ஆமாம், என்ன செய்யலாம்? :(

    ReplyDelete
  12. //பரவாயில்லை. நவராத்திரி, நோம்பு, போன்ற ப்ண்டிகைகள் அன்று பாரம்பரிய தலை அலங்காரங்கள்
    அட் லீஸ்ட் தமது குழந்தைகளுக்குச் செய்து மகிழும்போதுதான் நம் உள்ளம் பரவசமடைகிறது.//

    வாங்க சுப்பு தாத்தா. நீங்க சொல்வது உண்மைதான்; அதையாவது தொடரணும். நீங்க பாடினதையும் கேட்டு மகிழ்ந்தேன் :) மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  13. //ஆஹா, ஆமாம் கீதாம்மா.ஆனா, முத்துப் பின்னல், வங்கிப் பின்னல்லாம் தெரியாது.. பூ தைச்சுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.//

    இப்போவும் பின்னிக்கும் ஒரே பின்னல் ஆத்துப் பின்னல், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு அதைத் தானே பின்னிக்கிறோம்? அதை விட்டுட்டீங்க நீங்களும், எனக்கும் மறந்துடுச்சு, இன்னிக்குக் காலம்பர தலைக்குக் குளிச்சுப் பின்னிக்கும்போது நினைப்பு வருது!

    ReplyDelete
  14. அப்புறம் போற போக்கிலே கொஞ்சம் வம்பு,

    சாம்பிராணிப் புகை போட்ட தலைக்கு மணம் உண்டு, அதுவும் சின்னக் குழந்தைக்குப் பயத்த மாவும், கஸ்தூரி மஞ்சள்பொடியும் தேய்த்துப் போட்டுக் குளிப்பாட்டி சாம்பிராணியும் காட்டிவிட்டுக் குழந்தையைக் கைகளில் எடுத்துக் கொஞ்சினால், அம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆ அந்த மணமும், அது தரும் சுகமும்!!!!

    ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவர்கள்(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) சாம்பிராணிப் புகை மட்டுமில்லாமல், எண்ணெய்க் குளியலையையும் தடா போட்டு விடுகின்றார்கள். :((((((((((

    ReplyDelete
  15. //வாங்க தி.வா. இந்த வரி தட்டச்சும்போது உங்க நினைவு வந்ததே!//
    ஆஹா!

    // உங்களுக்கு ஆயுசு இருநூறு :)//
    ஏன் இந்த கொ.வெ? :-))))

    // கவிதைகள்ல இப்படி நேரடி போருள் பார்க்கக் கூடாது! //
    பாடம்.
    //சந்தனம் மாதிரி கமகமன்னு வாசனையா இருந்ததுன்னு எடுத்துக்கணும் :) சரியா? :)//

    எடுத்துக்கலாம். ஆனா ஆயிரம் பொற்காசுகள் கிடையாது. சரியா?

    //ஹும்! எப்படி இருந்த பாரம்பரியமெல்லாம் காணாம போச்சு! :-(//

    ஆமாம், என்ன செய்யலாம்? :(//

    ரிவைவ்! கோடை விடுமுறையிலே பின்னல் க்ளாஸ் எடுத்து பாருங்க!

    ReplyDelete
  16. பின்னல்களில் பலவகைகளைப் பின்னி எடுத்து விட்டீர்கள்!
    கவிதைக்கு பொய் அழகு என்பார்கள்..
    இந்த கவிதைக்கு பொய் போலுமாம் மெய்யும் அழகாகத் தெரிகிறது..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. ம்ம்ம்ம் ஆத்துப் பின்னலைப் பத்தி எழுதின பின்னூட்டம் எங்கே போச்சு?? வேதாளம் முழுங்கிடுச்சோ? :))))))

    ReplyDelete
  18. //இப்போவும் பின்னிக்கும் ஒரே பின்னல் ஆத்துப் பின்னல், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு அதைத் தானே பின்னிக்கிறோம்? அதை விட்டுட்டீங்க நீங்களும், எனக்கும் மறந்துடுச்சு, இன்னிக்குக் காலம்பர தலைக்குக் குளிச்சுப் பின்னிக்கும்போது நினைப்பு வருது!//

    ஆமாம் கீதாம்மா :) எனக்குப் பிடிச்சதும் கூட :)

    ReplyDelete
  19. //ஏன் இந்த கொ.வெ? :-))))//

    அருமையான வாழ்த்தை இப்படி சொல்லலாமா? :)

    //எடுத்துக்கலாம். ஆனா ஆயிரம் பொற்காசுகள் கிடையாது. சரியா?//

    சரி. போனாப் போகட்டும் :)

    //ரிவைவ்! கோடை விடுமுறையிலே பின்னல் க்ளாஸ் எடுத்து பாருங்க!//

    ம்... சரிதான். சங்கரி பாப்பா கொஞ்சம் வளர்ந்த பிறகு முயற்சிக்கலாமா? :)

    ReplyDelete
  20. //பின்னல்களில் பலவகைகளைப் பின்னி எடுத்து விட்டீர்கள்!//

    வாங்க ஜீவி ஐயா. ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி :) வருகைக்கு மிக்க நன்றியும்.

    ReplyDelete
  21. //சாம்பிராணிப் புகை போட்ட தலைக்கு மணம் உண்டு, அதுவும் சின்னக் குழந்தைக்குப் பயத்த மாவும், கஸ்தூரி மஞ்சள்பொடியும் தேய்த்துப் போட்டுக் குளிப்பாட்டி சாம்பிராணியும் காட்டிவிட்டுக் குழந்தையைக் கைகளில் எடுத்துக் கொஞ்சினால், அம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆ அந்த மணமும், அது தரும் சுகமும்!!!!//

    ஆஹா, படிக்கும்போதே மணக்குதே...! :)

    //ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவர்கள்(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) சாம்பிராணிப் புகை மட்டுமில்லாமல், எண்ணெய்க் குளியலையையும் தடா போட்டு விடுகின்றார்கள். :((((((((((//

    ஆமாம், அந்தக் கால நல்ல விஷயங்களெல்லாம் இப்படிதான் பாதி காணாம போயிடுது :(

    ReplyDelete
  22. //ம்ம்ம்ம் ஆத்துப் பின்னலைப் பத்தி எழுதின பின்னூட்டம் எங்கே போச்சு?? வேதாளம் முழுங்கிடுச்சோ? :))))))//

    நாந்தான் அந்த வேதாளம்! :) மன்னிச்சுக்கோங்க. ரெண்டு மூணு மடல் ஒண்ணா இருந்ததுல விட்டு போச்சு. நீங்க சொல்லலைன்னா கவனிச்சிருக்க மாட்டேன். நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  23. //2004-ல் 'திண்ணை'யில் வெளி வந்தது.//

    அப்ப நீங்களும் எழுத்தாளரா? எப்ப அச்சு ஊடகத்திற்குப் போறீங்க? :-)

    ReplyDelete
  24. வருக குமரா.

    //அப்ப நீங்களும் எழுத்தாளரா?//

    ஆமாம், அப்ப, இப்ப, எப்பவும் எழுத்தாளர்தான் :) யாரும் படிச்சாலும் படிக்கலைன்னாலும் ஏதாச்சும் எழுதிக்கிட்டிருப்பேன் :)

    //எப்ப அச்சு ஊடகத்திற்குப் போறீங்க? :-)//

    தகுதி இருக்கான்னு தெரியல... அதெல்லாம் யோசிக்கிறதும் இல்ல :)

    ReplyDelete
  25. //s u p e r//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி, தமிழ் நெஞ்சம்.

    ReplyDelete
  26. /*ஆயிரங் கால் பின்னல்
    அழகான ஒற்றைப் பின்னல்
    பள்ளிக் கென்றே பக்குவமாய்
    மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
    பின்னாலே பாலம் கட்டும்
    பாரமில்லா சைக்கிள் பின்னல்
    கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
    குஞ்சலம் வைத்த பின்னல்...*/
    தலைக்கு குளித்த அன்று
    தளர்வாக கட்டிய
    தண்ணீர் பின்னல்...

    ம்.. நினைக்க வைத்தது பின்னல்களை...

    /*//பாப் வெட்டிக் கொண்டால்தான்
    பராமரிக்க சுலபம்//*/
    :-( என் மகளிடம் நான் கூறியது. ஆனால் நடனம் கற்றுக் கொள்வதால் அவள் ஆசிரியையின் கண்டிப்பால் இப்பொழுது அவளுக்கும் பின்னல்...

    ReplyDelete
  27. வாங்க அமுதா.

    //ஆனால் நடனம் கற்றுக் கொள்வதால் அவள் ஆசிரியையின் கண்டிப்பால் இப்பொழுது அவளுக்கும் பின்னல்...//

    அப்படியா... மிக்க மகிழ்ச்சி :)

    வருகைக்கு நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)