Sunday, March 8, 2009

அழுதா அரும்புதிரும் ...

தாலாட்டு பாடி ரொம்ப நாளாச்சுல்ல? நெறய பேர் வீட்ல குட்டி பாப்பாஸ் வந்திருக்கிற, வரப்போகிற, இந்த சமயம், எல்லா பாப்பாஸ்க்கும் வாழ்த்து சொல்லிட்டு, ஒரு தாலாட்டும் பாடலாமா?




ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ

அழுதா அரும்புதிரும்
அண்ணாந்தா பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் - என் செல்வமகன்
வாய்திறந்தால் தேனொழுகும்

கண்ணே உறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
பொன்னே உறங்கு
பூமரத்தின் வண்டுறங்கு

தேனே திரவியமே
தெவிட்டாத செந்தேனே
கோனே குலவிளக்கே
கோமகனே கண்வளராய்

தேடக் கிடைக்க்காத
திரவியமே தேன்கடலே
பாடப் படிக்கவந்த
பாக்கியமே கண்வளராய்
வாடாத பூவே
தெள்ளமுதே கண்வளராய்
சீரார் பசுங்கிளியே
செல்வமே சீமானே
ஆரார் பசுங்கிளியே
அன்னமே கண்வளராய்

சந்திரரோ சூரியரோ
சந்திரமதி பாலகரோ
உமையாள் ஈன்றெடுத்த
சிவக்கொழுந்தே கண்வளராய்

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

கண்ணே உறங்கு
கானமயில் நீஉறங்கு
பொன்னே உறங்கு
பூமரத்து வண்டுறங்கு

மயிலே உறங்கு
மரகதமே கண்ணுறங்கு
குயிலே உறங்கு
குஞ்சரமே நீயுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

***


படத்துக்கு நன்றி: http://www.blogger.com/post-create.g?blogID=1582304199587288431

20 comments:

  1. படமும் பாடலும் அருமை கவிநயா.

    //அழுதா அரும்புதிரும்
    அண்ணாந்தா பொன்னுதிரும்
    சிரிச்சா முத்துதிரும் - என் செல்வமகன்
    வாய்திறந்தால் தேனொழுகும்//

    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. மிக அழகான பாடல் கவிக்கா....பாடி அதனையும் பதிவிடுங்களேன்.

    ReplyDelete
  3. அழகு ;)

    நன்றாக வந்திருக்கு...

    தாலாட்டுக்கு என்றே ஒரு தனி பதிவை எழுதிக்கிட்டு வராங்க ஒரு பதிவர் பெயர் மீனாமுத்து ;)

    போயி பாருங்கள்
    http://thalatu.blogspot.com/

    ;)

    ReplyDelete
  4. குட்டிப்பாப்பா, சோஓஓஓஓஓ க்யூட்,

    அழுதா அரும்பு மட்டுமா உதிரும்?? நம்ம ரத்தமும் தான்! அருமையான வரிகள்,
    என் செல்வ மகன் வாய் திறந்தால் தேனொழுகும்/

    ஜொள்ளு விடும் பாப்பா மனக்கண் முன்னால் வருதே! ஆஹா!!!!!!

    ReplyDelete
  5. அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா குழந்தை அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா, இந்த வரிகளும் குழந்தைகளின் அருமையும் நினைவில் ஆடுகின்றன. இந்த செல்வம் ஒன்றே போதுமே .

    ReplyDelete
  6. நீல மேக கண்ணா நீ
    நீ எனக்கு பொன்னாவாய்.

    கரு மாரி முகிலாவாய்
    கவி நயாவின் உளமாவாய்.


    பார்த்தோர் கண் படுமுன்னே நீ
    பார்க்குக்கு வந்துவிடு.
    காத்திருக்கும் பாட்டியின்
    தோள்களிலே தூங்கிவிடு.


    மீனாட்சி பாட்டி.
    http://ceebrospark.blogspot.com

    ReplyDelete
  7. //தாலாட்டுக்கு என்றே ஒரு தனி பதிவை எழுதிக்கிட்டு வராங்க ஒரு பதிவர் பெயர் மீனாமுத்து ;)//

    ஹா, ஹா, கோபி, இந்த மீனா கிட்டே அந்த மீனாவைப் பத்திச் சொல்றீங்களா?? ஹிஹிஹி, கொல்லன் பட்டறையில் ஊசி விக்க முடியாதே! :))))))))))))))

    ReplyDelete
  8. ஹை தாங்க்ஸ். சங்கரி பாப்பா வந்ததும் பாடிக்காட்டிடறேன்!

    ReplyDelete
  9. வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி :)

    ReplyDelete
  10. வாங்க மௌலி.

    //மிக அழகான பாடல் கவிக்கா....பாடி அதனையும் பதிவிடுங்களேன்.//

    ஆஹா, எவ்ளோ நம்பிக்கை என் மேல :) தாத்தா பாடிட்டாரு - கேளுங்க.

    ReplyDelete
  11. வாங்க கோபி. தாலாட்டு பாடற வயசாயிருச்சா உங்களுக்கு? :)

    //தாலாட்டுக்கு என்றே ஒரு தனி பதிவை எழுதிக்கிட்டு வராங்க ஒரு பதிவர் பெயர் மீனாமுத்து ;)//

    மீனாம்மாவை நல்லாவே தெரியுமே! :) அவங்களோட தாலாட்டு வலைப்பூவும் பார்த்திருக்கேன். இந்த தாலாட்டெல்லாம் எங்க ஊர்ப்பக்கம் வழிவழியா பாடறதுதான்... எனக்கு தெரிஞ்ச சிலதை நானும் பகிர்ந்துக்க ஆசைப்பட்டுதான் ஆரம்பிச்சேன் :)

    ReplyDelete
  12. //அழுதா அரும்பு மட்டுமா உதிரும்?? நம்ம ரத்தமும் தான்! //

    என்ன கீதாம்மா இப்படி சொல்லிட்டீங்க! :) ஆனா என் மகன் குழந்தையா இருக்கப்ப ஒரு முறை ஒரு ராத்திரி முழுக்க விடாம அழுதிருக்கான். கை மாத்தக்கூட யாரும் இல்ல. அப்ப எனக்கு அப்படிதான் இருந்தது!

    //குட்டிப்பாப்பா, சோஓஓஓஓஓ க்யூட்//

    :))

    ReplyDelete
  13. //இந்த செல்வம் ஒன்றே போதுமே .//

    ஆமாம் வல்லிம்மா. ரசனைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  14. //நீல மேக கண்ணா நீ
    நீ எனக்கு பொன்னாவாய்.

    கரு மாரி முகிலாவாய்
    கவி நயாவின் உளமாவாய்.//

    சூப்பர் பாட்டீ! தாத்தாவுடைய குரலில் தாலாட்டு கேட்டு பேரன் நல்லா தூங்கினானா? மிக்க நன்றி உங்கள் இருவருக்கும் :)

    ReplyDelete
  15. //ஹிஹிஹி, கொல்லன் பட்டறையில் ஊசி விக்க முடியாதே!//

    :)))

    ReplyDelete
  16. வாங்க திவா.

    //சங்கரி பாப்பா வந்ததும் பாடிக்காட்டிடறேன்!//

    ரொம்ப மகிழ்ச்சி :) அதோட பெண்குழந்தைகளுக்குன்னே தனியாவும் இருக்கு - இந்த தாலாட்டெல்லாமே பாருங்க...

    ReplyDelete
  17. //அழுதா அரும்பு மட்டுமா உதிரும்?? நம்ம ரத்தமும் தான்! //

    //என்ன கீதாம்மா இப்படி சொல்லிட்டீங்க! :) //

    mmmmm???தப்பாய்ப் புரிஞ்சுக்கிட்டீங்களோனு நினைக்கிறேன், பதில் கொடுத்திருக்கீங்களானு பார்க்க வந்தேன், என்னோட மனசிலே அப்போ நினைவுக்கு வந்த வரிகள்,

    "உன் கண்ணில் நீர் வழிந்தால்,
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி"
    அதை நினைச்சுட்டு எழுதினேன், நம்ம வழக்கப் படி, முழ நீளம் விளக்கி இருக்கணுமோ?? :))))))))))))))

    ReplyDelete
  18. அடக்கடவுளே! நல்ல வேளையாப்போச்சு போங்க. ஆனா நான் சொன்னதும் நிஜம்தான். இருந்துட்டு போகட்டும் :)

    //நம்ம வழக்கப் படி, முழ நீளம் விளக்கி இருக்கணுமோ?? :))))))))))))))//

    இனிமே எவ்வளவு நீளமா இருந்தாலும் விளக்கமாகவே சொல்லிடுங்கம்மா :)

    ReplyDelete
  19. \\கவிநயா said...
    வாங்க கோபி. தாலாட்டு பாடற வயசாயிருச்சா உங்களுக்கு? :)
    \\

    ஆகா!!! அப்படி இல்லை...பட் எந்த வயாசானலும் தாலாட்டு பாட்டு கேட்குற ஆசை இருக்கு ;)

    @ தலைவி

    \\ஹா, ஹா, கோபி, இந்த மீனா கிட்டே அந்த மீனாவைப் பத்திச் சொல்றீங்களா?? ஹிஹிஹி, கொல்லன் பட்டறையில் ஊசி விக்க முடியாதே! :))))))))))))))\\

    தலைவி ஒரு மாதிரி புரியுது ஆனா புரியல பட் பஞ்ச் எல்லாம் நல்லாயிருக்கு...எனக்கு தெரிஞ்சதை பகிர்ந்து கொண்டேன் அம்புட்டு தான் ;)))

    ReplyDelete
  20. //ஆகா!!! அப்படி இல்லை...பட் எந்த வயாசானலும் தாலாட்டு பாட்டு கேட்குற ஆசை இருக்கு ;)//

    ச்வீட் :) அப்படிதான் நினைச்சேன் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)