Monday, January 5, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 12




12.


ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன், நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன், இவ்வானும் குவலயமும் எல்லோமும்,
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி,
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய, அணி குழல் மேல் வண்டு ஆர்ப்பப்,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொற்பாதம்
ஏத்தி, இருஞ்சுனை நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.


ஆர்த்த - நம்மைப் பிணித்துக் கட்டிய

பிறவித் துயர் கெட - பிறவியாகிய துன்பம் நீங்கும்படி

நாம் ஆர்த்தாடும் - நாம் எல்லாரும் மகிழ்ச்சியுடன் ஆராவரம் செய்து கொண்டாடும்

தீர்த்தன் - தூய்மையானவன்

நற்றில்லைச் சிற்றம்பலத்தே - புனிதமான தில்லை வெளியினில்

தீயாடும் கூத்தன் - இடக்கையில் அனல் ஏந்தி களிப்புடன் ஆடும் கூத்தன்

இவ்வானும் குவலயமும் எல்லோமும் - ஆகாயத்தையும், புவியையும், இன்னும் எல்லாப் பொருள்களையும்

காத்தும் படைத்தும் கரந்தும் - படைத்தும், காத்தும், ஒடுக்கியும்(மறைத்தும்)

விளையாடி - விளையாடும் சிவபெருமானே!

வார்த்தையும் பேசி - உன் புகழையும், நமசிவாய எனும் திருமந்திரத்தையும் ஓதிக் கொண்டே

வளை சிலம்ப - கைவளைகள் ஒலிக்கவும்

வார் கலைகள் -நீண்ட மேகலைகள்

ஆர்ப்பு அரவம் செய்ய - மிகவும் சலசலக்கவும்

அணி குழல் மேல் - மலரால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட கூந்தலின் மேல்

வண்டு ஆர்ப்ப - வண்டுகள் ரீங்காரம் செய்யவும்

பூத் திகழும் பொய்கை - தாமரை மலர்கள் விளங்குகின்ற தடாகத்தில்

குடைந்து - நீரைத் துளைத்து

உடையான் - நம்மை அடியவர்களாக உடைய சிவனது

பொற்பாதம் ஏத்தி - அழகிய திருவடிகளைப் போற்றி

இருஞ்சுனை நீர் ஆடு - பெரும் சுனை நீரில் நீராடுவோம்


நம்மைப் பிணித்துக் கட்டிய பிறவியாகிய துன்பம் நீங்கும்படி, நாம் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆராவரம் செய்து கொண்டாடும், தூய்மையானவனும், புனிதமான தில்லைவெளியினில் இடக்கையில் நெருப்பை ஏந்தி களிப்புடன் நடனமிடும் கூத்தனும், ஆகாயத்தையும், பூமியையும், இன்னும் எல்லாவற்றையும், படைத்தும் காத்தும் ஒடுக்கியும் விளையாடுபவனும், ஆகிய சிவபெருமானே! உன் புகழையும், நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தையும் ஓதிக் கொண்டே, கைவளைகள் ஒலிக்கவும், நீண்ட மேகலைகள் சலசலக்கவும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலின் மேல் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், தாமரை மலர்கள் விளங்குகின்ற தடாகத்தில், நீரைத் துளைத்து விளையாடி, நம்மை அடியவர்களாக உடைய சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி, பெரிய சுனை நீரில் நீராடுவோம்.


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: கூகுளார்

4 comments:

  1. //உன் புகழையும், நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தையும் ஓதிக் கொண்டே//

    இருப்போம்! நர்த்தன சுந்தரர் அருள் பெற்றிடுவோம்!

    நன்றி கவிநயா!

    ReplyDelete
  2. ஆர்த்த பிறவி எனத்துவங்கும் இப்பாடல் மோஹன ராகத்தில் விருத்தமாக‌
    பாட முயற்சிக்கப்பட்டுள்ளது.
    Please wait for another thirty minutes.

    யூ ட்யூப் சென்று PichuPeran
    என்று
    search
    செய்தால் சமீபத்தில் மேடம் கவினயா தமது பதிவிலிட்ட பாடல்களனைத்தையும்
    கேட்கலாம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. //இருப்போம்! நர்த்தன சுந்தரர் அருள் பெற்றிடுவோம்!//

    ஓம் நமசிவாய. நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  4. வாங்க சுப்பு தாத்தா. இன்னும் எல்லாம் கேட்கலை. கேட்டுட்டு வரேன். மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)