Sunday, November 9, 2008

காதல் கொஞ்ச(ம்)...

...கவிதை கொஞ்ச(ம்). தமிழுக்கே உரிய அழகான சில வார்த்தைகள்ல காதலும் ஒண்ணுன்னு எனக்குத் தோணும். காதல் இல்லாத கவிதை இருக்கலாம்; ஆனா கவிதை இல்லாத காதல் இருக்குமோ? அதொண்ணுமில்லங்க, சில அழகழகான காதல் கவிதைகளைப் படிச்சதும் எனக்கும் ஒரு ஆசை - காதல் கவிதை எழுதணும்னு. அப்படி எழுதினதுல ஒண்ணுதான் இது. ஆனா அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.



நினைவுகள்

சுட்டு விரலைக்
கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு நடக்கும்
குட்டிப் பிள்ளை போல
உன் நினைவுகளுடன்
உரிமையாய்க் கைகோர்த்தபடி
பயணிக்கிறது மனசு.
கோர்த்த மனம் வேர்த்தாலும்
நினைவுகள் நழுவுவதில்லை;
ஊர் போய்ச் சேர்ந்த பின்னும்
ஓருயிர் இரண்டாவதில்லை...

***

நேராக நடப்பதையே மறந்து விட்ட
செக்குமாடுகள் போல்
வேறெங்கும் செல்லாமல்
உன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றன
என் நினைவுகள்…

***

வானம் வெகுதொலைவில் இருந்தாலும்
மழைக்கரம் நீட்டி
பூமியைத் தழுவிக் கொள்வதைப் போல்
நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
நினைவுக்கரம் நீட்டி
உன்னைத் தன்னுடன் இறுக்கிக் கொள்கிறது
மனசு…


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/29643650@N04/2831493184/sizes/m/

23 comments:

  1. /வானம் வெகுதொலைவில் இருந்தாலும்
    மழைக்கரம் நீட்டி
    பூமியைத் தழுவிக் கொள்வதைப் போல்
    நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
    நினைவுக்கரம் நீட்டி
    உன்னைத் தன்னுடன் இறுக்கிக் கொள்கிறது
    மனசு…/

    அருமையான வரிகள்

    உருவகம் அருமை

    இந்த கவிதை படிக்கும்பொழது
    என் எழுதிய கவிதை நினைவிற்கு வருகிறது

    /
    நினைவு
    நதியில்
    நீந்தும்பொழது எல்லாம்
    நாம்
    நனைந்து விடுகிறோம்

    மனத்தில்
    மறுக்கமுடியாத
    மகாத்மாவும்
    மட்டுமல்ல
    இரக்கமற்ற
    இடி அமீனும்
    இதயத்தில்
    இடம் பிடித்துவிடுக்கின்றார்கள்
    இருக்கும்பொழது
    இல்லத்தாரிடம்
    எல்லோரிடமும்
    வெறுப்பை
    காட்டாதீர்கள்,அது
    நம் இறப்பிறகு பின்னும்
    கனலை கக்கும்

    நினைவு என்பது
    தீச்சுவலைப் போன்றது
    அதை
    அணைப்பது என்பது
    அவ்வளவு எளிதல்ல

    வேதனையைச் சுமந்து
    குடும்பத்தைப் பிரிந்து
    குதூகலத்தை மறந்து
    அகவை தொலைத்து
    அயல் மண்ணில் வாழும்
    ஊழியர்களின்
    உறவுகள் எல்லாம்
    நினைவுகள் தான்

    ஆம்
    நீங்காத
    நினைவுகள்
    இதயத்தில்
    இருக்கும் வரை
    தொலைவுகள் எல்லாம்
    தொடும் தூரத்தில் தான்

    /

    ReplyDelete
  2. காதல் கவிதை கவிநயா எழுதறாங்களேனு ஓடோடி வந்தேன். அங்கேயும் 'இறைவன்' பேர சொல்லி ஒரு 'க்' வச்சீட்டீங்க :))

    நல்லாயிருக்கு கவிதை.

    ReplyDelete
  3. வாங்க திகழ்மிளிர். மிக்க நன்றி. உங்கள் அருமையான கவிதையைப் பகிர்ந்து கொண்டதற்கும். நினைவுகள்தாம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றன என்பதை அழகாகச் சொன்னீர்கள். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  4. //அங்கேயும் 'இறைவன்' பேர சொல்லி ஒரு 'க்' வச்சீட்டீங்க :))//

    ஹாஹா :D சதங்கா, இதைப் படிச்சோன்னா வாய்விட்டு சிரிச்சேன் :) என்ன பண்ண, என் வழக்கத்தை சொன்னேன். நீங்க யாரை வேணா நினைச்சுக்கோங்கன்னு முன்னாடியே சொல்லிட்டேனே :)

    இனி இடற காதல் கவிதைகள்ல இறைவன் பெயரைச் சொல்லல (மனசுக்குள்ள வச்சிக்கறேன் :) பயந்துகிட்டு வராம மட்டும் இருந்துராதீங்க :)

    ReplyDelete
  5. சதங்கா, நீங்க சொன்னதால, வச்ச 'க்'கை எடுத்துட்டேன் :)

    ReplyDelete
  6. நல்லாருக்கு கவிதை கவிநயா

    ReplyDelete
  7. //அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.//

    அழகா இருக்கு படத்திலிருக்கும் மலர்களைப் போலவே.

    //சுட்டு விரலைக்
    கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு நடக்கும்
    குட்டிப் பிள்ளை போல
    உன் நினைவுகளுடன்
    உரிமையாய்க் கைகோர்த்தபடி
    பயணிக்கிறது மனசு.//

    குறிப்பா இந்த மனதின் நினைவுகள் தெரியுது.. ரொம்ப ரொம்ப அழகாவே.

    ReplyDelete
  8. //நல்லாருக்கு கவிதை கவிநயா//

    அட ஷைலஜாக்காவா. வராதவங்க வந்திருக்கீங்க... நன்றி.

    ReplyDelete
  9. //அழகா இருக்கு படத்திலிருக்கும் மலர்களைப் போலவே.//

    ஆமால்ல? எனக்கும் பிடிச்ச படம் :) ரசித்தமைக்கு நன்றிகள் ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  10. வாங்க மௌலி.

    //நல்லாயிருக்குங்க.... :)//

    நன்றிங்க... :)

    ReplyDelete
  11. //சதங்கா, நீங்க சொன்னதால, வச்ச 'க்'கை எடுத்துட்டேன் :)//

    தவறா எடுத்துக்காதீங்க, மனசுல பட்டதை சொன்னேன்.

    ReplyDelete
  12. தவறா எடுத்துக்கறதுக்கு அதில் ஒண்ணுமே இல்லை சதங்கா. மீள்வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  13. //அதொண்ணுமில்லங்க//

    :) ஏதாவது இருந்தாலும் தப்பா நினைக்க மாட்டோங்க :)

    நல்ல கவிதைகள் கவிநயா. இரண்டாவது கவிதை மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  14. வாங்க ரமேஷ் :) நீங்க வேற... அந்த வயசெல்லாம் தாண்டிடுச்சு நமக்கு. I mean எனக்கு (ஆனா மனசுக்கு இல்லை :) ரெண்டாவதை யாருமே சொல்லலயேன்னு நினைச்சேன். நீங்க சொல்லீட்டிங்க. மிக்க நன்றி.

    ReplyDelete
  15. 1 & 3 ரொம்ப நல்லாயிருக்கு...கலக்குங்க அக்கா ;)))

    ReplyDelete
  16. வாங்க கோபி :) மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)

    ReplyDelete
  17. அட. நான் 'க்' இருக்கும்ன்னு தானே வந்தேன். ஏமாத்திட்டீங்களே. :-)

    ReplyDelete
  18. கவிநயா,
    //ஆனா அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.//

    அழகாகத்தான் இருக்கின்றது..நிஜமாவே சொல்லுங்கள்..இதுதான் உங்கள் முதல் காதல் கவிதையா சகோதரி ? :)

    ReplyDelete
  19. வாங்க குமரா. விட மாட்டீங்களே :) காதல் கவிதைகள்ல இறைவனைப் பொருத்திப் பார்க்கிறது என் வழக்கம்னு சொல்லியிருந்தேன். அதுக்குத்தான் சதங்கா 'க்' வச்சுட்டீங்களேன்னு சொல்லியிருந்தார் :)

    ReplyDelete
  20. வாங்க ரிஷு. என்ன வயசான காலத்துல என் ஞாபக சக்திக்கு சோதனையா? :) வலைப்பூ ஆரம்பிச்சப்போ என்று வருவான் னு ஒரு கவிதை இட்டிருந்தேனே, அதுவும் காதல் கவிதைதாம்ப்பா :)

    ReplyDelete
  21. அழகான கவிதைகள்.. :)

    ReplyDelete
  22. மிக்க நன்றி சரவணகுமார் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)