Thursday, May 22, 2008

டாக்டர் இல்ல நர்சும் இல்ல, நானாப் பொறந்தேன்...


நேத்து சாயந்திரம் ஒரு குட்டிக் குருவிக் குஞ்சை எங்க வீட்டு முன்னாடி இருக்க தோட்டத்துல பார்த்தேன். பக்கத்துல ஒடஞ்ச முட்டை ஓடு! அப்பதான் வெளிய வந்திருந்தது போல. தன்னோட குட்டி வாயைத் திறந்து, "ஆவ், ஆவ்"னு கத்திட்டிருந்தது. அது கத்தறது அதுக்கே கேட்டிருக்காது :( அம்மாக் குருவி எங்க போச்சுன்னு தெரியல. குருவிக் குஞ்சால நடக்கவும் முடியல; பறக்கவும் முடியல; கத்தவும் முடியல. என்னதான் செய்யும், பாவம்? அம்மாவா வந்து அதைக் காப்பாத்தினாதான் உண்டு. எனக்கோ ரொம்பப் பாவமா இருந்தது. ஆனா அதுக்கு எப்படி உதவறதுன்னு தெரியல. பக்கத்திலேயே இருந்தா அம்மாக் குருவி பக்கத்தில வராதுன்னு நினைச்சு நகர்ந்துட்டேன்.

பேசத் தெரிஞ்சிருந்தா இப்படித்தான் அந்தக் குருவிக் குஞ்சு அதோட அம்மாகிட்ட சொல்லியிருக்கும்!


டாக்டர் இல்ல நர்சும் இல்ல
நானாப் பொறந்தேன்
செறகு இன்னும் மொளக்கல
ஒன்னத் தேடி அழுதேன்

காலிருந்தும் சக்தியில்ல
நடக்க முடியல
கண்ணிருந்தும் ஒன் எடத்த
பாக்க முடியல

கத்தி ஒன்னக் கூப்புடவும்
கொரலும் எழும்பல - நீதான்
வந்து என்னக் காப்பாத்தணும்
வேற வழியில்ல


காலைல போய்ப் பார்த்தப்ப அது இறந்து கெடந்தது :,((( இந்த மாதிரி சமயத்துல வேற என்ன செய்யலாம்? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க...

19 comments:

  1. இங்க கொஞ்சம் உபயோகமான தகவல்கள் இருக்கு... நீங்களும் பாருங்க:

    http://aviary.owls.com/baby_bird.html

    நன்றி, நாகு.

    ReplyDelete
  2. அடடா !
    அந்தக்குருவி பக்கத்திலே உக்காந்துகினு
    ஒரு தாத்தா பாடறாரு.
    பாட்டு சத்தம் கேட்கலியா ?
    குருவி சத்தம் கேட்கலியா ?
    இங்கே பாடிகினே இருந்ததே ?
    இப்பவும் பாருங்க அது கேட்டுகிட்டே கீது.
    நீங்களும் கொஞ்சம் கேளுங்க..
    http://www.youtube.com/watch?v=MmeQHgHLPKQ

    சுப்பு ரத்தினம்
    தஞ்சை.
    http://arthamullavalaipathivugal.blogspot.com
    http://meenasury.googlepages.com/home

    ReplyDelete
  3. என்ன சொல்றதுன்னே தெரியலே
    வலைப்பதிவுலே கடைசி வரியை படிக்குமுன்னே மெட்டு எழுதிவிட்டேன்.
    உங்கள் அனுமதி இல்லையேல் பாட்டினை டெலிட் செய்துவிடுகிறேன்.
    http://www.youtube.com/watch?v=MmeQHgHLPKQ


    சுப்பு ரத்தினம்
    தஞ்சை.
    http://arthamullavalaipathivugal.blogspot.com
    http://meenasury.googlepages.com/home

    ReplyDelete
  4. வாங்க ஐயா! உங்க ஆர்வமும் வேகமும் என்னை வியக்க வைக்கிறது :) எனக்கு மெத்த மகிழ்ச்சியே. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும்!

    ReplyDelete
  5. முடிக்கையில் இப்படி சோகமா சொல்லிட்டீங்களே...
    :(
    போன வருடம் எங்கள் வீட்டின் முன் பகுதிக் கூரையின் உள்புறம் ஒரு குருவி கூடு கட்டி, அதில் மூன்று குஞ்சுகள் பிறந்தது, சில நாட்கள் இருந்தது. அவ்வப்போது அம்மா பறவை உணவு கொண்டு வந்ததை பார்க்க முடிந்தது. இந்த வருடம் அந்த கூடு அப்படியே இருக்க, அதை ஒரு டவ் பறவை வந்து, மேலும் சில குச்சிகளை சேர்த்து கொஞ்சம் பெரிதாக கட்டிக்கொண்டு, அடை காத்துக் கொண்டிருந்தது. இது சில நாட்கள்தான் இருந்தது, அப்புறம் காணோம்! என்னவாயிற்று என்று தெரியவில்லை.

    சுப்புரத்தினம் ஐயா - பறவை சத்தமெல்லாம் பாட்டில் சேர்த்து, கலக்கி இருக்கிறாரு!

    ReplyDelete
  6. //முடிக்கையில் இப்படி சோகமா சொல்லிட்டீங்களே...//

    ஆமா ஜீவா :( நேத்து சாயந்திரம் அது helpless-ஆ இருக்கதப் பார்க்கும்போதே கவலையா இருந்தது; காலைல ரொம்ப நம்பிக்கையோட போனேன், இருக்காது, அம்மா கூட்டிப் போயிருக்கும்னு... ஆனா.... ஹ்ம்... :,(((

    //சுப்புரத்தினம் ஐயா - பறவை சத்தமெல்லாம் பாட்டில் சேர்த்து, கலக்கி இருக்கிறாரு!//

    ஆமா. எதிர்பார்க்கவே இல்லை! மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  7. அன்பின் கவிநயா,

    அதன் கூட்டினைத் தேடி அந்தக் குருவிக்குஞ்சினைக் கையால் தொடாமல் (பெரிய இலையொன்றால் அல்லது ஏதாவதொன்றால்) எடுத்து கூட்டினுள் வைத்திருக்கலாம்.ஏனெனில் மனித வாடையைத் தாய்ப்பறவை உணர்ந்தால் சிலவேளைகளில் தன்னோடு சேர்த்துக் கொள்வதில்லை.

    கூட்டினைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அவித்து,நன்கு மசிக்கப்பட்ட கிழங்கு ஒரு சிறு சோற்றுப்பருக்கை அளவு எடுத்து ஒரு டூத் பிக் மூலம் ஊட்டிவிட்டால் போதும்.பின் மிருதுவான துணியொன்றால் போர்த்தி வைக்கவேண்டும்.

    நடந்துவிட்டதற்காகக் கவலை வேண்டாம் சகோதரி.அதற்கு ஆயுள் அதிகமாக எழுதப்படவில்லை போலும்.

    ReplyDelete
  8. வாங்க பெரியவரே! உங்களுக்குத் தெரியாத விஷயமே இல்லைன்னு எனக்குத் தெரியும்; இருந்தாலும் இப்படியா! :)

    உண்மையில், என் அன்புத் தம்பி ரிஷான், இந்தப் பதிவை எழுதும்போது உங்கள நினைச்சுக்கிட்டேதான் எழுதினேன். ஒரு உயிர் கண் முன்னாடி போகும் போது ஏற்படற வலியோட வீர்யம் அசாதாரணமானது. அந்தச் சூழ்நிலை தினசரி நிகழ்வாகும்போது? :( அந்த நிலை விரைவில் மாற இறைவன் தான் அருள வேண்டும்.

    //அதற்கு ஆயுள் அதிகமாக எழுதப்படவில்லை போலும்.//

    ஆமாம், உலகத்தில் ரொம்ப கஷ்டப்படாம உடனே கடவுள்கிட்ட போயிடுச்சுன்னு நினைச்சா கொஞ்சம் சமாதானமா இருப்பது உண்மைதான். நன்றி, ரிஷான்!

    ReplyDelete
  9. உங்கள் பாடலைப்பற்றிய குறிப்பு
    http://arthamullavalaipathivugal.blogspot.com
    ல் வந்துள்ளது. வருக.
    தினேஷோட பாட்டி.
    தஞ்சை.

    ReplyDelete
  10. //இந்த மாதிரி சமயத்துல வேற என்ன செய்யலாம்? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க...//

    சிட்டுக் குருவிக்காகச் சில துளிக் கண்ணீர்..வேறென்ன முடியும். வருந்த வேண்டாம் முடிந்ததை எண்ணி.

    இனி ரிஷான் சொல்லியிருக்கும் அறிவுரையைப் பின் பற்றலாம் இதே சூழலைச் சந்திக்க நேர்ந்தால்..

    ReplyDelete
  11. //சிட்டுக் குருவிக்காகச் சில துளிக் கண்ணீர்..வேறென்ன முடியும். வருந்த வேண்டாம் முடிந்ததை எண்ணி.

    இனி ரிஷான் சொல்லியிருக்கும் அறிவுரையைப் பின் பற்றலாம் இதே சூழலைச் சந்திக்க நேர்ந்தால்..//

    வாங்க ராமலக்ஷ்மி. வருகைக்கும், ஆறுதலுக்கும் நன்றி :)

    ReplyDelete
  12. ரொம்ப அழகான பாட்டு ..
    ரிஷான் கூட்டைக்கண்டுபிடிக்க முடியலன்னான்னு ஆரம்பிச்சுஅவிச்சுன்ன வுடனே.. அடுத்த வரி படிக்கறதுக்குள்ள குருவியையோன்னு நினைச்சு பயந்து போயிட்டேன்.. :)

    ReplyDelete
  13. சிறிய உயிர்கள் இப்படிப் பிரியும்போது வருத்தமே மிஞ்சுகிறது. நாமென்ன அனிமல் ப்ளானட் காரங்கள ,உடனே முதலுதவி கொடுக்க. ஆனாலும் ரிஷான் பிரமாதமா அட்வைஸ் செய்திருக்காரு. நன்மை தரும்.

    ReplyDelete
  14. //ரொம்ப அழகான பாட்டு ..//

    நன்றி கயல்விழி!

    //ரிஷான் கூட்டைக்கண்டுபிடிக்க முடியலன்னான்னு ஆரம்பிச்சுஅவிச்சுன்ன வுடனே.. அடுத்த வரி படிக்கறதுக்குள்ள குருவியையோன்னு நினைச்சு பயந்து போயிட்டேன்.. :)//

    :))

    ReplyDelete
  15. //சிறிய உயிர்கள் இப்படிப் பிரியும்போது வருத்தமே மிஞ்சுகிறது.//

    //ரிஷான் பிரமாதமா அட்வைஸ் செய்திருக்காரு. நன்மை தரும்.//

    சரியாச் சொன்னீங்க. நன்றி, வல்லிம்மா.

    ReplyDelete
  16. என்னைப் பொறுத்த வரை மரணத்தில் சோகமில்லை. நீங்கள் இதை படிக்கும் இந்த நிமிடம் ஏதோ ஓர் இடத்தில் மரணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் அகன்று சிந்தித்தால் மரணம் நம்மை பாதிக்காது. ஆனால் அதற்கு தயார் ஆவது கடினம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  17. //என்னைப் பொறுத்த வரை மரணத்தில் சோகமில்லை. நீங்கள் இதை படிக்கும் இந்த நிமிடம் ஏதோ ஓர் இடத்தில் மரணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் அகன்று சிந்தித்தால் மரணம் நம்மை பாதிக்காது. ஆனால் அதற்கு தயார் ஆவது கடினம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.//

    உண்மைதான் ரமேஷ். இது உங்க மனப்பக்குவத்தையே காட்டுகிறது. (உங்க பதிவுகளிலிருந்தே தெரிஞ்சுகிட்டேன்). உங்ககிட்ட சின்ன வயசுலயே இருக்கு; ஆனா எல்லோருக்கும் வருவது கடினம். எனக்கு? வந்து வந்து போகும் :(

    ReplyDelete
  18. //:)//

    இந்தப் புன்னகை என்ன விலை :) வாசித்தமைக்கு நன்றி ரமேஷ்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)